செவ்வாய், நவம்பர் 17, 2009

கூகிளின் காஷ்மீர் வரைபடமும், இந்தியா பாகிஸ்தான் இணையப் போரும்

இந்தியர்களும் பாகிஸ்தானிகளும் சண்டை போட்டுக் கொள்வது ஒன்றும் புதிதான செய்தியில்லை.சயாமீஸ் இரட்டையர்கள் போல் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டு பிறந்தாலும், உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய் என்று அடித்துக் கொள்வதும், பின்னர் பாலிவுட், கிரிக்கெட், பிரியாணி, பஞ்சாபி கஜல்கள் என்று கூடிக் குலாவிக் கொள்வதும் இன்று நேற்றல்ல, இந்த நாடுகள் பிறந்ததிலிருந்தே தொடரும் கதைதான்.

தென்னிந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்குப் பாகிஸ்தானியரோடு பழகும் வாய்ப்பு வெகு குறைவு. அதோடு, வட இந்தியர்களுக்கு, குறிப்பாக பஞ்சாபியர்களுக்குப் பாகிஸ்தானின் மேல் இருக்கும் ஆத்திரமும், ஆசையும் பொதுவாகத் தமிழர்களுக்கு இருக்காது. அதனால்தானோ என்னவோ, 1999 குடியரசு நாள் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தில், டெண்டுல்கரின் மட்டையடி வீச்சால் தோல்வியின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த பாகிஸ்தான் இந்தியாவை மடக்கித் தோற்கடித்த போது சென்னையின் 65,000 விசிறிகள் எழுந்து நின்று கை தட்டிப் பாராட்டினார்கள். உலகையே வியக்க வைத்த செய்தி அது.

நான் அமெரிக்காவுக்குப் பட்ட மேற்படிப்புக்குப் போனபோதுதான் வாழ்வில் முதல்முறையாக ஒரு பாகிஸ்தானியைச் சந்தித்தேன். முதலில் இந்தியர்களும் அவனும் முறைத்துக் கொண்டாலும், வெகு விரைவில் அவனும் பஞ்சாபி இந்தியர்களும் இழைந்த இழைச்சலை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. உணவு, உடை, மொழி, ரசனை என்று இவர்கள் இருவருக்குமே எந்த வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை. அவன் உருதுவில் பேசுவான், இவர்கள் இந்தியில் விடையளிப்பார்கள். நடுவில் இருந்த எனக்குத்தான் ஒரு மண்ணும் புரியவில்லை. இதைப் பற்றி இருவருமே கிண்டல் செய்து சிரிப்பார்கள். இவர்களுக்கு நான் தான் வெளிநாட்டவனாகத் தோன்றியிருக்க வேண்டும்.

பின்னர் கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலும், ஃபிரிமாண்ட்டிலும் பல பாகிஸ்தானியரோடு பழகும் வாய்ப்பு கிட்டியது. ஃபிரிமாண்டின் ஆர்டென்வுட் பகுதியை வார இறுதியில் பார்த்தால் கிட்டத்தட்ட மும்பை, தில்லி போல் இருக்கும். நூற்றுக் கணக்கான இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும், அவர்கள் நாட்டு உடைகளில் குழந்தை வண்டிகளோடு நடை பழகிக் கொண்டிருப்பார்கள். ஆர்டென்வுட் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் இந்தியர்கள்தாம். அண்டை நாடுகளாக இருந்து சண்டை போட்டுக் கொண்டவர்கள், ஃபிரிமாண்டில் சென்று அண்டை வீட்டு நண்பர்களாகப் பழகிக் கொண்டார்கள்.

இருந்தாலும், செ.கோ.தொ.கா. (அதாங்க செயற்கைக்கோள் தொலைக்காட்சி) இந்திய நிகழ்ச்சிகளைக் காட்டத் தொடங்குவதற்கு முன்னால், ஃபிரிமாண்ட் நாஸ் சினிமாவில் இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பைக் காட்டிய போது, ஃபிரிமாண்டே நடுங்கியது. பின்னிரவு நேரத்தில் நடந்த இந்தப் போட்டியின் போது இந்தியா, பாகிஸ்தான் விசிறிகள் கை கலப்பில் ஈடுபடுவார்களோ என்று நகரக்காவல் அஞ்சியது. அரங்கைச் சுற்றிக் கலவரக் கட்டுப்பாட்டுக் காவலர்கள், தீயணைப்புப் படை, கலவரம் நடந்தால் அதைப் படம் பிடிப்பதற்கு வந்த செய்தியாளர்கள் என்று ஒரே கூத்துதான்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே, அரங்கில் நுழைந்தவர்களுக்குக் கிரிக்கெட் ஆட்டம் சுவையாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு விளையாட்டு அரங்கில் இருந்து பார்ப்பது போன்ற ஒரு சுவையான அனுபவம். அன்றைக்குக் கலாட்டா ஏதும் நடந்தது என்றால் அதில் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒரே கட்சிதான் - ஊசிப் போன சமோசாவுக்கு இவ்வளவு அநியாய விலையா என்றுதான் கூக்குரல்! மற்றபடி, கலவரம் நடக்கும் என்று ஆவலோடு வந்த செய்தியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

இருந்தாலும், நாடாளுமன்றத்தில் குண்டு வீச்சு, மும்பையில் பங்குச் சந்தை, தொடர் வண்டி போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு, கார்கில் போர்முனை என்று பல நிகழ்ச்சிகள் பல உரசல்களுக்கு வித்திட்டன. போதாதற்கு, இந்து - முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பரப்புரைகள் அமெரிக்காவையும் எட்டி, இந்த உரசல்களால் பிளவுகளை ஏற்படுத்தின. பணியிடங்களிலும் இந்தப் பனிப்போர் தொடர்ந்தது. ஆனாலும் பாகிஸ்தானியர் நடத்திய கடைகளில் இந்தியர் கூட்டமும், இந்திய உணவகங்களில் பாகிஸ்தானியர் கூட்டமும் குறையவில்லை.

மீண்டும் சென்னைவாசியான பின்னால் பாகிஸ்தான் எங்கோ தொலைவில் இருக்கும் தொந்தரவு நாடாக மட்டுமே பொறுத்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. இருந்தாலும், அந்த 1999 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் வாசிம் அக்ரமின் மனைவி கவலைக்கிடமான நிலையில் சென்னையில் தரையிறங்கிய போது, பொதுவாகத் தமிழர்கள் அவருக்காக இரக்கப் பட்டார்களே ஒழிய, கருப்புக் கொடி காட்டவில்லை. அந்தச் சமயத்தில் தொப்புள் கொடி உறவுகள்கூட நாம் பாகிஸ்தானில் பிறந்திருந்தாலாவது இந்த "இந்தியத் தமிழர்கள்" நம் மீது இரக்கம் காட்டியிருப்பார்களோ என்று நினைத்திருப்பார்கள்.

நிற்க. அண்மைக்காலத்தில் கூகிள் வரைபடத்தில் காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம் இவற்றைத் தாறுமாறாகக் காட்டுகிறார்கள் என்று வலையில் கொதித்தார்கள் வழக்கமான இந்துத்துவ வட்டச் செயலாளர்கள். இந்திய வலைக்குள்ளே காஷ்மீர், அ.பி.யை உடைகோட்டிலும், சீன வலைக்குள்ளே அவை இந்தியாவுக்கு வெளியிலும் காட்டியது இவர்கள் இரத்தத்தைக் கொதிக்க வைத்தது.

இது இப்படி இருக்க, இன்றைய நியூ யார்க் டைம்ஸ் செய்தி இரத்தக் கொதிப்பைக் கூடுதலாக்கலாம்.

Google first tested a tool called Map Maker in India, where people immediately began tracing and labeling roads and buildings on top of satellite images provided by Google.


When Google released the tool more broadly last year, Faraz Ahmad, a 26-year-old programmer from Pakistan who lives in Glasgow, took one look at the map of India and decided he did not want to see his homeland out-mapped by its traditional rival. So he began mapping Pakistan in his free time, using information from friends, family and existing maps. Mr. Ahmad is now the top contributor to Map Maker, logging more than 41,000 changes.


Maps are political, of course, and community-edited maps can set off conflicts. When Mr. Ahmad tried to work on the part of Kashmir that is administered by Pakistan, he found that Map Maker wouldn’t allow it. He said his contributions were finally accepted by the Map Maker team, which is led by engineers based in India, but only after a long e-mail exchange.


At his request, Google is now preventing further changes to the region, after people in India tried to make it part of their country, Mr. Ahmad said. “Whenever you have a Pakistani and an Indian doing something together, there is a political discussion or dispute.”


A Google spokeswoman, Elaine Filadelfo, said Google sometimes blocked changes to contentious areas “with an eye to avoiding back-and-forth editing.
நல்ல வேளை. கூகிள் இன்றைய எல்லை நிலையை உணர்ந்து யாரிடம் எந்தப் பகுதி இருக்கிறதோ அவர்களுக்கு விட்டுக் கொடுக்கவில்லை என்றால், இந்த வரைபடப் போர் எங்கே போயிருந்திருக்குமோ! இப்போது வலையில் உலை கொதிக்குமே ஒழிய வேறு ஏதும் நடக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

காஷ்மீரின் "ஆசாத் காஷ்மீர்" பகுதி பாகிஸ்தானிடமும், "அக்சாய் சின்" பகுதி சீனாவிடமும் இருக்கிறது என்பது இந்தியாவில் கிடைக்கும் வரைபடங்களை மட்டும் பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இமயத்தின் மேல் ஒரு விரைவு நெடுஞ்சாலை கட்டி வைத்திருக்கிறார்கள். இது இந்தியாவின் கையில் இல்லை. ஆனால் இதைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாமல் வைத்திருக்கிறார்கள். பூனை கண்ணை மூடிய கதைதான். அதே போல் சீனாக்காரர்களுக்கு அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டது என்பது தெரியாது. ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டோ!

திபெத் நாட்டைச் சீனர்கள் கைப்பற்றிய போதே இந்தியா உலகத்தோடு சேர்ந்து எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், இந்தியா அப்போது இந்தி-சீனி பாயி பாயி என்று மிகவும் இழைந்து கொண்டிருந்தது. சீனர்கள் படையெடுத்து இந்தியப் படைகளைப் படுதோல்விக்கு உள்ளாக்கி இந்தியாவை அவமானப் படுத்தும் வரை இந்த முட்டாள்தனமான நட்பு நீடித்துக் கொண்டிருந்தது. திபெத் தனி நாடாக இருந்தவரை, இந்தியாவுக்குத் தொல்லை இல்லை. ஒரு நட்பு நாடு வாசலில் இருந்தது. 1950களின் அன்றைய முட்டாள் தனத்துக்கு இன்றைய இந்தியா படும்பாடு பட வேண்டியிருக்கிறது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அன்று வடக்கில் நேருவின் காங்கிரஸ் செய்த அதே பிழையை இன்று அவர் குடும்பத்தாரின் காங்கிரஸ் தெற்கில் செய்துள்ளது. வடக்கே இமய நெடுஞ்சாலை. தெற்கே தமிழர்களைக் காவு கொடுத்து துறைமுகம் கட்டிக் கொண்டிருக்கிறது சீனா. இவர்களை வாசலில் வைத்துக் கொண்டு மாலத்தீவில் ஆழ்கடல் துறைமுகத்திலிருந்து கொண்டு சீனக் கடற்படையை வேவு பார்க்கப் போகிறதாம் இந்தியா. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்த கதைதான்.

1 கருத்து:

மறைமலை இலக்குவனார் சொன்னது…

நன்றி மணிவண்ணன்.ஒரு தொலைநோக்குச் சிந்தனை.
யார் கண்டார்?இந்தியாவின் மெத்தனப்போக்கால் ஒருநாள் இலங்கையிலிருந்துகொண்டுன்சீனா இந்தியவின் தெற்குப் பகுதியில்
தொல்லைகள் கொடுக்கலாம்.அப்போதும் கூட இந்தியா
தன் "கடும்"எச்சரிக்கைகளை அனுப்பிவிட்டு வாளா இருக்கலாம்.
கூடங்குளம் வேறு இருக்கிறது.
தமிழர்களைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்?