செவ்வாய், டிசம்பர் 29, 2009

குளவிக்கூடும் கொட்டும் குளவிகளும்

குளவிக்கூட்டைக் கலைத்திருக்கிறீர்களா?  கலைந்த கூட்டிலிருந்து கொதித்துப் பறந்து வரும் எண்ணற்ற குளவிகள் தங்கள் ஆத்திரம் தீர உங்களைக் கொட்டித் தீர்த்துவிடும்.

தேனீக்கூடுகளைக் கலைப்பவர்கள் பாதுகாப்புக் கவசம் அணிவது மட்டுமல்லாமல், தேனீக்கள் தாங்களே கூட்டிலிருந்து வெளியேறப் பக்குவமாய்ப் புகையூட்டிப் பிறகுதான் கூட்டை அணுகுவார்கள்.

அமெரிக்காவையும், இந்தியாவையும், இஸ்ரேலையும் தொடர்ந்து தாக்கி வரும் தீவிரவாதிகள் எனக்கு இந்தக் குளவிக்கூடுகளைத்தான் நினைவூட்டுகின்றனர்.

இஸ்ரேலும், இந்தியாவும், தீவிரவாதத் தாக்குதல்களைத் தத்தம் முறையில் தாங்கிக் கொள்கின்றன.

இஸ்ரேலிகள் "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்ற கொள்கை கொண்டவர்கள்.  அவர்கள் எதிரிகளும் அவ்வாறே.  தீவிரவாதத் தாக்குதல் ஒன்றுக்குப் பின் மிகுந்த மனவுரத்துடன் இஸ்ரேலிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர முயல்வதுடன் நிற்காமல், தங்களைத் தாக்கியவர்களைப் பழி வாங்க நடவடிக்கை எடுப்பார்கள். தங்களைத் தாக்கியவர்களுக்கும் தாங்கள் பட்ட அடி வலிக்க வேண்டும் என்ற உணர்வோடு, தீவிரவாதிகளின் கூட்டாளிகளையோ, அல்லது ஆதரவாளர்களையோ தாம் வாங்கிய அடியை விட பத்து பங்கு கூடுதலாக மொத்துவார்கள்.  இது இஸ்ரேலிகள் இயல்பு.

இந்தியாவோ புத்தர் தோன்றிய நாடு.  கொல்லாமையை வலியுறுத்தும் சமண மதத்தின் தாய்நாடு.  காந்தி பிறந்த நாடு.  ஆனாலும், பழிவாங்கும் உணர்வும், வெட்டி மடியும் பங்காளிச் சண்டை இயல்பும் யானை போல் மறக்காத நாடு.  தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் இந்தியர்களும் சற்றும் கலங்காமல் அன்றாட வாழ்க்கையைத் தொடர்வது ஒரு விதத்தில் வாழ்க்கையின் தேவையினால் என்றாலும் பாராட்டக் கூடிய பண்புதான்.  ஆனால் குளவிகள் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தால் யாருக்குத்தான் எரிச்சல் வராது?

ஒன்று குளவிக்கூட்டைக் கலைப்பதை நிறுத்த வேண்டும்.  அல்லது புகை போட்டுக் குளவிகளை வெளியேற்றியிருக்க வேண்டும்.  குறைந்தது பாதுகாப்புக் கவசமாவது அணிந்திருக்க வேண்டும்.  முடிந்தால் குளவிக் கொடுக்குகளைப் பிடுங்க வேண்டும்.

இவை எதுவுமே இந்தியாவில் நடக்காது.

குளவிகளும் தங்கள் கூட்டைக் கலைப்பவர்களைக் கொட்டுவதில்லை.  குறுக்கே வரும் யாராக இருந்தாலும், அவர்கள் குளவிக்கூட்டைக் கலைத்தவர்கள் என்று கருதிக் கொட்டித் தீர்த்துவிடும்.

"ஆறிலும் சாவு, நூறிலும் சாவு" என்று விதியை நம்பும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை அஞ்சாமல் தொடருவார்கள்.  மேட்டுக்குடிமக்கள் அமைதியாகத் தங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை வலியுறுத்துவார்கள்.  ஏதாவது மாற்றம் வரலாம்.

அமெரிக்கா அப்படியில்லை.

குளவிக்கூடுகளைக் கவலையில்லாமல் கலைப்பார்கள். ஏனென்றால் கொட்டு வாங்குவது வேறு யாராவதாக இருக்கும். அக்கம் பக்கத்தில் குளவிகள் கூடு கட்டாமல் பார்த்துக் கொள்வார்கள்.

இப்போதெல்லாம் குளவிகளும் உயர்நுட்ப வல்லமை பெற்று விட்டன.

விமானங்களை ஏவுகணையாக்கும் சிந்தனை பெற்று விட்டன.

குளவிக் கொட்டே வாங்கிப் பழக்கப் படாத அமெரிக்கர்களுக்கு தங்கள் நாட்டுக்குள்ளேயே வந்து தங்களைத் தாக்குபவது பெருத்த அதிர்ச்சியளித்திருக்கிறது.

இது "கண்ணுக்குக் கண்" என்ற கொள்கையை உதட்டளவில் நம்பாத நாடுதான் என்றாலும், செயல்முறையில் பழிவாங்கும் நாடுதான்.  "பழிக்குப் பழி" என்ற முறையில் இல்லாவிட்டாலும், அடுத்த தாக்குதலை மட்டுப் படுத்தவும் நிறுத்தவும் பயனுள்ள உத்தியாகவாவது எதிர்த்தாக்குதல் நடத்தும் நாடு இது.  கிறிஸ்துமஸ் அன்று நடந்த தாக்குதல் முயற்சிக்கு "ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்ற கிறிஸ்துவின் பாடத்தை நினைவில் கொண்டு அன்பினால் எதிரியைத் தன் வசப் படுத்தும் நாடல்ல அமெரிக்கா.

வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் சி.என்.என். போன்ற 24 மணி நேரச் செய்திமடைகளுக்கு இது மூட்டை மூட்டையாய் அவல் கொடுத்ததுபோல் ஆகிவிட்டது.  இதை எத்தனை கோணத்தில் காட்டிப் பயமுறுத்த முடியுமோ அத்தனையையும் செய்தாயிற்று.

முன்னாள் அதிபர் புஷ்ஷின் அமைச்சரவையிலிருந்து திருவாய் மலர்ந்தருளத் திருக்கூட்டத்தையும் கூட்டி வந்தாயிற்று.  டெட்ராய்ட் நகருக்கு உடனே விரையாமல் ஹாய்யாக ஹவாயில் விடுமுறையிலிருக்கும் அதிபர் ஒபாமாவுக்கும் ஒரு திருச்சாத்து சாத்தியாயிற்று.

தீவிரவாதியை எவன் விமானத்தில் விட்டான் என்பது யாருக்கும் புரியவில்லை.  அமெரிக்காவை நோக்கிப் பறந்து வரும் விமானங்களில் அண்மையில் பயணம் செய்பவர்களுக்கும் இது புதிர்தான்.  ஹாங் காங், சிங்கப்பூர், குவாலா லும்பூர், லண்டன், ஃபிரான்க்ஃபர்ட் என்று எந்த விமான நிலையமாக இருக்கட்டும், அமெரிக்கா நோக்கிச் செல்லும் பயணிகளுக்குத் தரும் சிறப்பு மரியாதையே தனிதான்.  ஒரு ஈ, கொசு கூடத் தப்பித்தவறி ஒரு சொட்டுத் தண்ணீரை விமானத்திற்குள் கொண்டு வர முடியாது.  குழந்தைகள் உணவுக்குப்பிகளைக் கூடப் பரிவில்லாமல் குப்பைக்கூடையில் எறிவார்கள்.  காலணிகளைக் கழற்றி விட வேண்டும்.  மேலே, கீழே, எல்லாம் தட்டிப் பார்த்து எலும்புகள் எத்தனை இருக்கின்றன என்று எண்ணிப் பார்த்துதான் வண்டியேற அனுமதிப்பார்கள்.

இத்தனையையும் மீறி, வெடி மருந்து, குழலூசி எல்லாவற்றையும் உள்ளாடையில் திணித்து எடுத்து வர விட்டிருப்பது வியப்பளிக்கிறது.  ஆனால், என்னென்ன கொண்டு வந்தான், எப்படிக் கொண்டு வந்தான், வெடித்தால் என்னாவாயிருக்கும், ஏன் வெடிப்பு வேலை செய்யவில்லை என்று விவரமாய் அலசி, தீவிரவாதிகளுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமா என்ன?

யாரோ பலர் எங்கெங்கேயோ கோட்டை விட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது.  தந்தையே மகனைக் காட்டிக் கொடுத்த பின்பும், பட்டப் படிப்பளித்த இங்கிலாந்தே நுழைமதியை மறுத்த பின்னரும், அப்படிப்பட்ட ஓர் ஆள் அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏற முடிவது யாரோ குறட்டை விட்டுக் கொண்டிருப்பதன் அடையாளம்.

இத்தனை ஆயிரம் பொதுமக்களை இத்தனை நாள் சித்திரவதைப் பரிசோதனை செய்த பின்பும், குழலூசியையும் வெடிமருந்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போனது இப்படிப்பட்ட சோதனைகளின் குறைகளைக் காட்டுகிறது.  தாக்குபவன் வேலை எளியது.  அவன் ஒரு ஓட்டையைத்தான் கண்டு பிடிக்க வேண்டும்.  தடுப்பவர்கள் வேலை கடினமானது.  எங்கெங்கெல்லாம் ஓட்டை இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இதற்குத் தீர்வுதான் என்ன?

அமெரிக்கர்கள், மேலும் சித்திரவதைப் படுத்தும் நுட்ப முறைகளைக் கண்டு பிடிப்பார்கள். தீவிரவாதியைத் தூண்டிய யேமன் நாட்டை ஒரு மொத்து மொத்துவார்கள்.  இவற்றால் மட்டும் தாக்குதல்களைத் தவிர்க்க முடியுமா?

தீவிரவாதிகள் குளவிகள் போல.  கொட்டுவதை நிறுத்த மாட்டார்கள்.

குளவிகளைக் கூட்டில் நிம்மதியாக இருக்க விட்டால், அவை ஏன் கொட்டப் போகின்றன?

குளவிக்கூட்டைக் கலைப்பதை நிறுத்த வேண்டும்.  செய்ய முடியுமா?

குளவிகளும், தங்கள் பழைய கூடுகள் மட்டுமல்லாமல், புதிய மரங்களிலும் கூடு கட்ட முயலும்.  அதைத் தடுக்க முடியுமா?

அதெல்லாம் வேண்டாம், குளவிகளைக் கூட்டோடு அழிக்க வேண்டும் என்று ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது.

குளவிகள் மட்டுமல்லாமல், கூடவே அப்பாவி மக்களும் அழியலாம் என்பதைப் பற்றி இந்தக் கும்பல் கவலைப்படாது.

"கண்ணுக்குக் கண்" என்ற ப்ழிவாங்கும் உணர்வினால் உலகமே பார்வையற்றுப் போகும் என்ற காந்தியாரின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது.

சனி, டிசம்பர் 05, 2009

கூவம் மணக்குமா?

கூவம் மணக்குமா?

"கூவம் மணக்கும்" என்ற வாக்குறுதியை 1967 தேர்தலுக்கு முன்னே தி.மு.க. கூட்டணி மக்கள் முன்னிடை வைத்தது. முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறிய தி.மு.க. சென்னையில் செய்த பெருமுயற்சிகளில் கூவத்தைத் தூய்மைப் படுத்துவதும் ஒன்று.

விந்தை என்னவென்றால், ஒரு காலத்தில் கூவமும், அடையாறும் சென்னைக்குக் குடிநீர் தந்த ஆறுகள். பக்கிங்காம் கால்வாய் சரக்குப் போக்குவரத்துக்கு முக்கியமான ஒரு நீர்வழி. பக்கிங்காம் கால்வாயின் மயிலாப்பூர்ப் பகுதியிலிருந்து அடையாற்றைக் கடந்து கஸ்தூர்பா நகர்பக்கத்தின் பகுதிக்குச் செல்வதற்காக வைத்திருந்த அடைப்புக் கதவுகளின் பெயரால்தான் அடையார் கேட் ஓட்டலுக்கு அந்தப் பெயர் வந்தது.

சென்னை முன்னொருகாலத்தில் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும், எண்ணற்ற நீர்நிலைகளையும் கொண்டு இயற்கை வளம் செழித்திருந்த பகுதியாக இருந்திருக்கிறது. இந்த நகரமயமாக்கல் சென்னையின் இயற்கை வளத்தை அழித்தது மட்டுமல்ல. மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் வெகுவாகக் குறைத்திருக்கிறது.

இப்போதெல்லாம், சென்னையில் ஓடும் இரண்டாவது ஆற்றுக்கும் கூவம் என்றுதான் பெயர். அடையாறு என்பது ஆற்றின் பெயர் என்பதே பலருக்குத் தெரியவில்லை. கூவம், பக்கிங்காம் கால்வாய், அடையாறு எல்லாமே சாக்கடைகளாகி விட்டன. கூவம் என்றாலே சாக்கடை என்ற பொருள் வந்து விட்டது.

அண்மையில் சென்னையின் பணக்காரப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப் படும் சென்னைப் படகுக் குழாம் (Chennai Boat Club) பகுதியில் இருக்கும் அண்ணா பல்கலைக் குழாமிலிருந்து அடையாற்றங்கரையைப் படம் எடுத்தேன். இங்கே நிலம் ஒரு கிரவுண்டுக்கு நாலு கோடியிலிருந்து பத்து கோடி வரை விலை பேசுகிறார்கள். அப்படிப் பட்ட இடத்தில் அடையாற்றின் கரை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இதோ பாருங்கள்:




மீண்டும் ஒரு முறை கூவத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார் துணை முதல்வர் ஸ்டாலின். சிங்கப்பூர் தன் மாசுபடிந்த ஆற்றைத் தூய்மைப்படுத்திய வெற்றியைப் பற்றி அறிந்து கொள்ள சிங்கப்பூர் சென்றிருந்த துணை முதல்வர், கூவத்தைத் தூய்மைப்படுத்திச் சுற்றுலா இடமாக மாற்றுவோம் என்று வாக்களித்திருக்கிறார். சென்னை முழுவதும் மேம்பாலம் கட்டிய இவர் இதை மட்டும் செய்தால், மாபெரும் சாதனையாளர் என்று சென்னை வரலாற்றில் இடம் பெறுவார்.

கூவத்தை மட்டுமல்ல, அடையாற்றையும், ஏன் பக்கிங்காம் கால்வாயையும் தூய்மைப் படுத்த வேண்டும்.  சென்னை போன்ற பெருநகருக்கு, குப்பையையும், கழிவுகளையும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் அகற்றத் தெரியவேண்டும்.   நினைத்தால் வழியுண்டு.

செய்ய வேண்டும்.  செய்யட்டும்.  அவர் முயற்சிக்கு நம் வாழ்த்துகள்.

வியாழன், டிசம்பர் 03, 2009

போபால் பெருங்கேடு - 25 ஆண்டுகள் கழித்து

போபால் பெருங்கேடு - 25 ஆண்டுகள் கழித்து

இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டாயிற்று. டிசம்பர் 2 நள்ளிரவுக்குப் பின்னர் ஊரே உறங்கிய பின்னர் போபால் நகரத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சுக்காற்று உலகையே குலுக்கிய பெருங்கேடு ஒன்றுக்குக் காரணமாகியது. 20,000 பேர் இறந்தனர். 600,000 பேருக்குமேல் நோயால் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் வெட்கக்கேடு என்னவென்றால், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த அழிவுக்குக் காரணமான குற்றவாளிகளுக்குத் தண்டனையில்லை. அதை விட வெட்கக்கேடு என்னவென்றால் இந்தப் பேரழிவால் நலிவுற்றவர்களுக்குக் கொடுத்த இழப்பீடு சராசரி 12,000 ரூபாய்.

ஓர் இந்திய உயிரின் விலை என்ன என்பதற்கு இந்தியாவின் உச்ச நீதி மன்றமே விடை கொடுத்து விட்டது. இறப்புக்கு இழப்பீடு 100,000 ரூபாய்தான். அதையும் கூட 2003ல் தான் தீர்ப்பு வழங்கினார்கள்.

மேலை நாடுகளில் அஸ்பெஸ்டாஸ் வழக்கு, புகையிலைப் புற்றுநோய் வழக்கு, அலாஸ்காவில் எக்சான் வால்டீசின் கல்நெய்ச் சிந்தல் வழக்கு இவற்றிற்கெல்லாம் வந்த இழப்பீடோடு ஒப்பிடும்போது இந்தியர்களின் உயிர் வெறும் 2,000 டாலர்கள் மட்டுமே! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இப்படியென்றால், உலகத்தின் நச்சுக் குப்பைகளை எல்லாம் ஏன் இந்தியாவில் வந்து கொட்ட மாட்டார்கள்?

கப்பல் உடைக்கும் தொழில் முதல், அஸ்பெஸ்டாஸ் கழிவுகளை அகற்றுவதுவரை உலகின் குப்பைக்கூடையாக இந்தியா மாறுவதற்கு இந்திய நீதிமன்றங்களும் ஆட்சியாளர்களும் இதை விடப் பெரிய விளம்பரத்தைக் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாது.

நம்மை நாமே இழிவு படுத்திக் கொண்டால், ஏன் உலகம் இந்தியர்களை மலிவாகப் பார்க்காது?

ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைத் திறந்தாலோ, தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்தாலோ போதும், எங்காவது யாராவது ஏதாவது ஒரு விபத்தில் இறந்திருப்பார்கள், குப்பையில் கிடக்கும் அவர்களது உடலைச் சற்றும் இரக்கம் இல்லாமல அப்படியே படம் பிடித்துப் போட்டிருப்பார்கள். அப்படிப் போடுவது நாகரீகமற்றது என்ற உணர்வு கூட இல்லாத குமுகாயம் இது.

2004 கிறிஸ்துமஸ் சுனாமியில் இறந்தவர்கள் உடல்களைக் குப்பைக் கூளங்கள் போல் கொட்டி வைத்திருந்ததையும், அவற்றை குப்பையைப் பெருக்கிக் குழியில் தள்ளுவது போல் தள்ளிப் புதைத்ததையும் பக்கம் பக்கமாக வண்ணப் படங்களில் வெளியிட்ட நாளேடுகளை நினைவிருக்கிறதா?

அந்த நேரத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் தலைவன் என்ற முறையில் என்னை அமெரிக்க ஊடகங்கள் பல கருத்துத் தெரிவிக்கக் கேட்டு வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுக்குத் தமிழக ஊடகங்களில் வெளியான படங்களைக் காட்டினோம். அவற்றைப் பார்த்து அதிர்ந்த அமெரிக்க ஊடகச் செய்தியாளர்கள், இது போன்ற அதிர்ச்சிதரும் படங்களை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காட்ட மாட்டோம் என்றனர்.

உண்மைதான்.

செப்டம்பர் 11 அன்று இடிந்து விழுந்த கட்டிடங்களில் இறந்தவர்களின் உடல்களை எந்த அமெரிக்க ஊடகமாவது காட்டியிருக்கிறதா? அப்படிக் காட்டியிருந்தால் இறந்தவர்களுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் மரியாதை காட்டத் தெரியாத அப்படிப் பட்ட ஊடங்களை அவற்றின் வாடிக்கையாளர்களே கண்டித்திருப்பார்கள்.

நாம் இங்கே இந்த ஊடகங்களை மட்டுமல்ல, அப்படிப் பட்ட படங்களை வெளியிடுவோரை ஆதரிக்கும் மக்களையும், "இதெல்லாம் சகஜமப்பா" என்று மெத்தனமாக விட்டுவிடும் போக்கையும் கூடக் குறை சொல்ல வேண்டும்.

1984ல் அடித்தட்டில், தன்னம்பிக்கை இல்லாமல், தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வந்த அமெரிக்கக் கம்பெனிகள் ஓடி விடுவார்களோ என்ற அச்சத்தோடு தம் மக்களையே காவு கொடுத்த இந்தியா, இப்போதாவது முதுகெலும்போடு எழுந்து நிற்குமா?

தன் மக்களையே பார்த்துக் கொள்ள வழியில்லாத இந்தியர்கள் அண்டை நாடுகளில் மக்கள் படும்பாடு குறித்து மட்டுமா கொதிக்கப் போகிறார்கள்?

செவ்வாய், டிசம்பர் 01, 2009

இணையப் பெருவெளியின் வெற்றி

இணையப் பெருவெளியின் வெற்றி

எழுத்தாளர் ஜெயமோகன் தன் தமிழ் இணைய அனுபவங்களைப் பற்றி "இணைய உலகமும் நானும்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை, நண்பர் செல்வன் தமிழமுதம் மடலாடற்குழுவுக்கு அனுப்பியிருந்ததைப் படித்தேன்.

ஜெயமோகனின் இணைய உலகக் கண்ணோட்டமே தனிதான்.

நண்பர் முத்துவின் முரசு அஞ்சல் இணையத்தமிழின் முன்னோடி. அதிலும், தமிழின் முதல் மடலாடற்குழுவான தமிழ்.நெட் முழுக்க முழுக்க முரசு அஞ்சலின் இணைமதிக் குறியீடுகளில் தொடங்கியது. பின்னர் த.கு.தரம் (TSCII) குறியீடு அமைப்பதற்கும் தமிழ்.நெட்தான் வழிவகுத்தது. மதுரைத்திட்டம் தமிழ்.நெட்டில்தான் தொடங்கியது. தமிழ் இணைய மாநாடுகளின் அமைப்பாளர்கள் பலரும் தமிழ்.நெட்டில்தான் சந்தித்தோம். தமிழ்.நெட்டின் பாலா பிள்ளை, முரசு அஞ்சல் முத்து நெடுமாறன், "மயிலை எழுத்துரு" "மதுரைத்திட்டம்" கல்யாணசுந்தரம், இவர்களோடு நாங்கள் பலரும் தமிழ்.நெட்டில் பல கருத்துகளை அலசினோம். நல்ல பல ஆக்கத் திட்டங்கள் அங்கே உருவாகின. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரை ஒருவர் மதித்தோம். முதன்முறையாக உலகத்தின் எல்லாக்கோடிகளிலிருந்தும் தமிழர்கள், தமிழ் மொழியில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கு தமிழ்.நெட் வழியமைத்தது. தமிழ் இணையத்தின் தாயகம் என்றால் தமிழ்.நெட்டைச் சொல்லலாம். அதிலிருந்து கிளைத்து வந்த எண்ணற்ற பல குழுக்களில் அறிஞர் ஜெயபாரதி அவர்களின் அகத்தியம் குழு குறிப்பிடத்தக்கது. அது ஒரு தமிழ்க் களஞ்சியமாகவே தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

ஏன், "மின் தமிழ்" நா. கண்ணன் கூட, தமிழ் மரபு அறக்கட்டளை உருவாவதற்கு முன்னர் தமிழ்.நெட்டில்தான் எழுதிக் கொண்டிருந்தார். அந்த அறிமுகத்தால்தான் அவருக்கு மலேசியாவில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் அறக்கட்டளைக்கு அமைச்சர் டத்தோ சாமிவேலு விதைப்பணம் கொடுத்தார். அப்போதும் கண்ணன் இணையத்தின் முகமூடித்தன்மையை, ஒரே ஆள் வெவ்வேறு முகங்களில் பங்கேற்றுக் கருத்தளிப்பதை இணையநாடகம் என்றுதான் போற்றினார். ஒருவரே பல அவதாரங்கள் எடுத்து இணைய அரங்கில் நடிக்க முடியும் என்ற இந்த அவதாரத்தன்மை இணையத்தின் கவர்ச்சிகளில் ஒன்று என்று உணர்ந்து தமிழில் எழுதியவர் எனக்குத் தெரிந்து அவர் மட்டுமே. அவரே பல முகமூடிப் புனைபெயர்களிலும் எழுதினார். "பெயரிலி" என்ற பெயரில் எழுதிய கவிஞர் ரமணியும், "கவிஞர் காசுமி சான்" என்ற பெயரில் எழுதிய கண்ணனும், முகமூடிகளைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இணையம் என்ற நாடகத்தில் உங்களுக்குப் பிடித்த பாத்திரத்தில் நடித்துக் கொள்ளுங்களேன் என்பது அவர்கள் கொள்கை.

தமிழ்நாட்டில் '90களில் இணையவசதி குறைவாக இருந்ததால், இந்தக் குழுக்களில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்கு சற்றுக் கூடுதலாகவே இருந்தது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் எதைச் சாதிக்க முடியும், எப்படிச் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் எங்கள் குறிக்கோள்களின் நேர்மையில் நம்பிக்கை கொண்டு நாங்கள் சில முயற்சிகளில் தடுக்கி விழுந்ததென்னவோ உண்மைதான்.

தமிழ் இணையத்தின் முன்னோடிகள் பலர் நுட்பியல் வல்லுநர்கள், பட்டதாரிகள், பெரும்பாலும் வெளிநாடுகளில் ஆங்கிலத்தில் இருந்த இணைய வளர்ச்சிகளைத் தமிழிலும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டவர்கள். இந்தத் தொழில்நுட்பங்கள் என்றாவது ஒரு நாள் எல்லாத் தமிழரையும் சென்றடையும், அப்போது அவர்கள் எப்படி இந்தத் தொழில்நுட்பங்களைப் புழங்குவார்கள் என்றும் சிந்தித்ததுண்டு. ஆனால், தொலைக்காட்சியைப் போலவே, இணையமும், பொழுதுபோக்குக்கும், வீண் வம்புக்கும், அரட்டைக்கும் வழி வகுக்கும் என்று எங்களில் பலர் எதிர்பார்த்தோம். இதில், ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஆனால், ஆங்கிலத்தில் புரிந்துள்ள பல பெரும் சாதனைகள் தமிழை இன்னும் எட்டாமல் உள்ளதற்குக் காரணம், இன்றைய தமிழ்ப் பண்பாடு என்றுதான் நான் சொல்லுவேன். ஊர் கூடித் தேர் இழுப்பதில் அமெரிக்கர்கள் வல்லவர்கள். அந்த ஒற்றுமை தமிழரிடத்தில் அவ்வளவு இல்லை. இணையத்தில் தமிழர் எண்ணிக்கை கூடக்கூட, பல் வேறு குழுக்கள் உருவாயின. தமிழ்நாட்டில் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கிய பல கருத்துகள் இணையத்தில்தான் வெளிப்படையாக வெடித்தன. இவற்றில் பல ஜெயமோகன் குறிப்பிடுவதுபோல் முகமூடிப் புனைபெயர்களில்தான் வந்தன. அந்த நிலை இன்னும் தொடர்கிறது. ஆனால், எல்லாப் புனைபெயர்களுமே பெரியாரியம், தமிழியம் சார்ந்தவர்களால் மட்டுமே செய்யப்பட்டது போன்ற கருத்து ஜெயமோகனின் கட்டுரையில் தெரிகிறது. அது அவரது அனுபவமாக மட்டும் இருக்கக்கூடும், ஏனென்றால் அன்றும் இன்றும், ஜெயமோகனின் கருத்துகள் வலதுசாரி, இந்துத்துவ சார்புடமை கொண்டதாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

திண்ணைக் களத்திலும், மன்ற மையத்திலும் (Forum Hub) அவரை வசை பாடினார்கள் என்று எழுதியுள்ளார். மன்ற மையத்தில் அவரோடு என் சொந்தப் பெயரிலேயெ வாதாடிய நினைவிருக்கிறது. அவர் வசை பாடினார்கள் என்று கூறும் நடை இன்றளவும் இணையத்தின் இயல்பு நடை. நேரில் பார்த்துப் பேசும்போது ஒருவரிடம் நாம் சொல்லத் தயங்குவதை, இணையத்தில் சொல்லத் தயங்குவதில்லை. அப்படியே சொல்வதிலும் இருக்கும் நாசூக்குத் தன்மை, எழுதுவதில், அதிலும் முகம் தெரியாத ஒருவருக்கு எழுதுவதில் இருப்பதில்லை. இதை ஆங்கிலத்திலும் பார்க்கலாம். வசையாளர்களும் இருந்தார்கள். ஆனால், எல்லா வாதங்களுமே வசைகள் என்று அவர் நினைத்திருந்தால் அது தவறு. மன்றமையத்தில் நாங்கள் அவரோடு புரிந்த வாதங்கள் வசைபாடுவது என்று அவர் நினைப்பது வியப்பளிக்கிறது.

அவர் மன்ற மையத்தில் நுழைந்த அதே நேரத்தில்தான் இரா. முருகனும், காஞ்சனா தாமோதரனும், எங்களில் பலரோடு பல கருத்துகளை அலசிக் கொண்டிருந்தார்கள். இணையத்தில் எப்படிக் கலந்துரையாடுவது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததுபோல் திரு. ஜெயமோகனுக்குத் தெரிந்திருக்கவில்லை. தன்னுடைய பேரறிவுக்கும், எழுத்தாற்றலுக்கும் பணியாமல் தன்னிடம் வாது புரிந்தவர்கள் அவர்களது தாழ்வுமனப்பான்மையால்தான் என்று ஜெயமோகன் அன்றும் இன்றும் தப்பாகத்தான் கணக்குப் போட்டிருக்கிறார்.

காரசாரமாக, வெளிப்படையாகப் பேசுவது இணையத்தின் பண்பாடு. அமெரிக்கப் பண்பாட்டிலும் ஒளிவு மறைவு இல்லாத அப்பட்டமான பேச்சு இருக்கும். அமெரிக்க வானொலியில், குறிப்பாக வலதுசாரி வானொலி அரசியல் அரட்டை நிகழ்ச்சிகளைக் கேட்டுப் பாருங்கள். அமெரிக்கர்கள் நிறுவிய இணையத்தின் பண்பாடு அமெரிக்கப் பண்பாட்டை எதிரொலிப்பதில் வியப்பென்ன! அப்படிப்பட்ட தமிழ் இணையத்தில் அன்னப்பறவை போல் செயலாற்றிய எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். இரா. முருகன், காஞ்சனா தாமோதரன், பி. ஏ. கிருஷ்ணன் போன்றவர்களால் எளிதில் வலம் வர முடிந்த தமிழ் இணையம் ஜெயமோகனுக்கு எரிச்சலூட்டியிருக்கிறது என்றால் யாருக்குத் தாழ்வு மனப்பான்மை என்று ஒரு நொடி சிந்திக்க வேண்டியிருக்கிறது. இணையத்தின் முகமூடி அவதாரத் தன்மையை அவர் புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.

ஜெயமோகன் எழுதுகிறார்:

இணையத்தில் தமிழைக் கொண்டுவர உழைத்த முன்னோடிகளில் சிலரே சாதிக்காழ்ப்புடன் இதைச் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.

தமிழ்மணம் போன்ற திரட்டிகளே அவதூறாளர்களின் கையில் ஆயுதமாகத்தான் பயன்பட்டன என்று இணையத்தில் வாசித்தபோது மனக்கசப்படைந்தேன். ஒரு திரட்டியில் என் இணையதளத்தை இணைப்பதற்கே நான் அச்சப்படும் சூழல் இன்று நிலவுகிறது



பெயர்களைக் குறிப்பிடாமல், ஆதாரத்தை நிறுவாமல் இப்படிப் பொத்தாம் பொதுவாக எழுதுவதே ஓர் அவதூறு என்றே நான் சொல்லுவேன். சாதிக் காழ்ப்பு என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. நான் முன்னரே குறிப்பிட்டதுபோல், எங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது, எல்லோரும் கூடித்தான் தேர் இழுத்தோம். இல்லையெனில் தேர் நகர்ந்திருக்காது. ஆனால், எண்ணிக்கை கூடிய பிறகு, பிளவுகள் வருவது இயல்பு. தமிழ்க் குமுகத்தில் இருக்கும் சாதிக் காழ்ப்புகள் இணையத்திலும் வெடிக்காதா என்ன? தமிழ் இணையத்தில், தமிழில் எழுதுபவர்களிடையே மட்டும் இருந்த நோய் இல்லை இது. இதை soc.culture.indian, soc.culture.tamil போன்ற தொடக்க கால ஆங்கிலக் குழுமங்களிலும் பார்க்கலாம். இருபதாண்டுகளுக்கு முன்னர் இருந்த அதே ஆரியர்-திராவிடர், பிராம்மணர்-தமிழர், வட இந்தியர்- தென்னிந்தியர், ஐஐடி - ஐஐடி அல்லாதவர் போன்ற பூசல்கள் இன்றும் வெவ்வேறு களங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பூசல்கள் குமுகாயத்தில் இருக்கும் பூசல்கள்தாம். இணையத்தில் திடீரென்று வெடித்த பூசல்கள் அல்ல.

இணையம் என்பது ஒரு கடல். இதில் எல்லாக் கருத்துகளும் கலக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், தொலைக்காட்சியைப் போலவே இதிலும் கவர்ச்சிக்குப் பின்னால்தான் கூட்டம் செல்லும். அதுவும் மனித இயல்புதான். சமூகத்தில் இருக்கும் எல்லா உணர்வுகளையும், பூசல்களையும் தமிழ் இணையமும் எதிரொலிக்கத் தொடங்கி விட்டது என்று நாம் கருதினால், இதை நான் ஒரு சிறு வெற்றி என்றுதான் கொள்வேன். சமூகத்தில் இது போன்ற பூசல்களுக்குத் தீர்வு காணாமல் இணையத்திலும் தீர்வு காண முடியாது. சொல்லப்போனால், இணையத்தில் இத்தகைய பூசல்களுக்குத் தீர்வு காண முடிந்தால், சமூகத்திலும், இது போன்ற பூசல்களுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

பழங்காலத்து மிதவாதக் கட்சியினர் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நாம் நளினமாகக் கருத்துப் பரிமாறிக் கொண்டு சிக்கல்களுக்குத் தீர்வு காணாமல் போவதை விட, செருப்பு பறந்தாலும், எல்லாக் கருத்துகளையும் அறிந்து கொள்ளப் பயன்படுவதால் இணையம் தமிழ்ச்சூழலில் கருத்துப் பரிமாற்றத்துக்கான சாத்தியங்களை உருவாக்கி இருக்கிறது என்றே நான் கொள்கிறேன். இது பொதுவெளியைச் சீரழிக்கவில்லை. இது வரை தமிழ்ச்சூழலில் இல்லாத பொதுவெளியை இணையம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்று அடித்துச் சொல்வேன். பொது உரையாடல்கள் மட்டுமல்ல, அவற்றையும் தாண்டிப் பொதுநலம் கருதிப் பல செயலாக்கங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ் இணையம் தமிழர்களுக்குள்ளே உள்ள இடைவெளியைப் பெரிதும் குறைத்திருக்கிறது. இப்போது, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்ளாமல், ஒருவரைப் பார்த்து ஒருவர் கத்திக் கொண்டாவது இருக்கிறோம். இதையும் தாண்டிச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் தன்மை உள்ளவர்கள் ஆங்காங்கே செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வெகுசிலர் தங்களை அடையாளம் கண்டு கொள்ள இந்த இணையம் துணை புரிகிறது. இதுவே மாபெரும் வெற்றிதான். இதற்கு மேலும் வளருவது நம் கையில், நமது பண்பாட்டில்தான் இருக்கிறது.