வியாழன், டிசம்பர் 30, 2010

நுணுக்குமென்மையும் அளிநட்பேயும்: நிறுவனப் பெயர்களை தனித்தமிழில் மொழிபெயர்த்தல் சரியா?

அண்மையில் மேலை நாட்டு நிறுவனங்களின் சின்னங்களையும் பெயர்களையும் தனித்தமிழில் எழுதி அழகு பார்க்கும் தன்மையைப் பார்க்கிறோம்.  இதைத் தம் தமிழ்த்தொண்டாய்க் கருதுபவர்கள் ஒரு புறம்.  இவர்களுக்கு யூனிகோடு, யூ-டுயூபு, பே-பேல், ஃபயர்ஃபாக்ஸ், ஃபேஸ்புக் என்ற பெயர்களைத் தமிழ்ப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கரைபுரண்டோடும் மொழிப்பற்று.  இந்தப் பற்றாளர்கள் சீர்மைக்குறி,  தந்திறந்திரை,  அளி-நட்பே, நெருப்புநரி, முகநூல் என்ற பெயர்களை இட்டுக் கட்டி ஆளுகிறார்கள்.

இந்தத் தமிழ்ப்படுத்தல் படுத்துகிறது என்று ரவுண்டு கட்டி அடிக்கும் தமிழ்மரபு  அணியினர் சிலர் மறுபுறம்.

இப்படி வணிக நிறுவனங்களின் பதிவு பெற்ற பெயர்களையும், சின்னங்களையும் மொழிபெயர்க்கலாமா? இதைப் பற்றிச் சீனாவில் வணிகம் செய்யும் மேலை நாட்டு நிறுவனங்களும், சீனர்களும் ஏற்கனவே நன்கு சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள்.


உத்தமம் அமைப்பின் கலைச்சொல்லாக்கப் பணிக்குழுவின் முதல் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து கலைச்சொல் வல்லுநர்களோடு  இணைந்து செயலாற்றியதால் சொல்கிறேன்.  பொதுவாக ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரப் பெயர்களையும் சின்னங்களையும் (brand) மொழி பெயர்ப்பது (translate) இல்லை. ஒலி பெயர்ப்பது (transcribe) உண்டு, சில நேரங்களில் குறிபெயர்ப்பது (transliterate) உண்டு.

தமிழ் மொழியின் இலக்கணவிதிக்கு உட்பட்டு அந்தப் பெயர்களைத் தமிழில் எழுதலாமே ஒழிய அவற்றை மொழிபெயர்க்கும் உரிமை அந்த நிறுவனங்களுக்கு மட்டுமே உண்டு.  மைக்குரோசாப்டு, மைக்ரோசாப்ட், மைக்ரோசாஃப்ட் என்று எழுதினால் நாம் எந்த விளம்பரப் பெயரைக் குறிப்பிடுகிறோம் என்று மற்றவர்களுக்கும் விளங்கும். மைக்ரோசாப்டு என்ற பெயரை “நுணுக்கு மென்மை” என்று இலங்கை சர்வேஸ்வரன் கிண்டலுக்காக மொழிபெயர்த்தது போன்ற பெயர்ப்புகள் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிப் பணம் செலவழித்து, அரும்பாடு பட்டு உருவாக்கும் விளம்பரச் சின்னங்களாக முடியாது.  ஃசெராக்ஸ் (ஜெராக்ஸ், செராக்சு), கூகிள் (கூகுள், கூகுல், கூகில், கூக்’ல்) போன்ற பொருளற்ற விளம்பரப் பெயர்களை மொழி பெயர்க்கவே முடியாது.  அதனால் சில விளம்பரப் பெயர்களை மட்டும் மொழி பெயர்த்து விட்டு மற்றவற்றை ஒலிபெயர்ப்பது என்பது முறையாகாது.

டுவிட்டர் நிறுவனம் தனது டுவீட்டுகளைத் தானே “கீச்சு” என்று தனது தமிழ் மொழி அறிவிப்புகளில் குறிப்பிட்டு வருகிறது.  அதனால், டுவீட்டு என்பதற்குப் பகராக ‘கீச்சு’ என்ற சொல்லைத் தமிழில் ஆள்வது பொருத்தம்.  ஆனால், டுவிட்டர் தமது பெயரைத் தாமே மாற்றிக் கொள்ளாதவரையில் நாம் அதற்கு என்ன தமிழ்ப் பெயர் இட்டாலும், அது அந்த நிறுவனத்தையோ, அதன் விளம்பரப் பெயரையோ குறிப்பிடாது.

அதே போல், முகநூல், முகச்சுவடி, முகப்புத்தகம், மூஞ்சிபுக்கு, என்ற பெயர்கள் எவையுமே ஃபேஸ்புக் நிறுவனத்தைக் குறிப்பிடாது.  ஆனால், பேஸ்புக், பேச்புக், பேச்’புக், பேசுபுக்கு, ஃபேசுபுக்கு, என்ற எல்லா ஒலிபெயர்ப்புகளுமே அந்த நிறுவனத்தைக் குறிப்பிடுவதுதான்.  முகநூல்.வணி (or mukanool.com or muganool.com ) என்ற பெயரை இன்று யாராவது பதிந்து கொண்டால், அதை எதிர்த்து ஃபேஸ்புக் நிறுவனம் உடனடியாக வழக்குப் போட்டாலும், செல்லுமா என்று சொல்ல முடியாது.  ஆனால், பேச்சுபுக்கு என்ற பெயரை மற்றவர்கள் பதிவு செய்யக் கூடாது என்று சொன்னால் நீதிமன்றங்களால் அதை மறுப்பது கடினம்.

பே-பேல் சேவையின் பெயரை மொழிபெயர்க்கும் உரிமையும் அந்த நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு. (It is not பே-பால் pay paul though it is more popular in Tamil. That name would remind one of the phrase "to rob Peter to pay Paul."). அதைச் சிலர்  அளிநட்பே என்று பெயரிட்டு அழைக்கலாம்.  ஆனால், அப்படிப் பட்ட பெயரைத் தொழில்நுட்ப மன்றங்களும் அமைப்புகளும் அறிக்கைகளில் சேர்ப்பதற்கு முன்பு அது குறைந்தது பரவலாகப் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும்.

ஒரு விளம்பரப் பெயரை மொழிபெயர்க்கலாமா, குறி பெயர்க்கலாமா, ஒலி பெயர்க்கலாமா என்ற தெரிவுகள் அந்த நிறுவனத்திற்கு மட்டுமே உரியவை.  சில மொழிகளில் மொழி பெயர்ப்பு தேவை.  சீனாவில் மொழி பெயர்த்தால் ஒழிய மக்கள் ஒரு விளம்பரப் பெயரை ஏற்க மறுக்கலாம்.   ஆங்கிலம் தெரிந்த வேறு சில நாடுகளில் ஆங்கிலப் பெயர்களுக்கு இருக்கும் மவுசு தமிழில் மொழி பெயர்த்தால் இல்லாமல் போகலாம்.  “எடுத்துக்கோ ராசா” என்று சொல்லும் இடியாப்பக் கடைக் கிழவியே “டேக் இட் ராசா” என்று பேசும் விளம்பரம் வெற்றி பெறும்போது தமிழில் மொழி பெயர்ப்பதால் மூல நிறுவனத்தின் பிராண்டுக்கு இருக்கும் புகழையும் அடையாளைத்தையும் வைத்து விற்கும் வாய்ப்பை இழந்து மேலும் செலவு செய்து புதிய அடையாளத்தைப் பரப்பத் தேவைப் படலாம்.  எந்த வணிக நிறுவனமும் இப்படி அசட்டுத்தனமாகச் செலவு செய்து ஏற்கனவே இருக்கும் பெயரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

சீன மொழியில் கோகோ கோலா என்ற வணிகப் பெயரைச் சீன எழுத்துகளில்  எழுதத் திணறிய நிறுவனத்தின் சிக்கல்கள் பற்றிய சுவையான செய்திகளை “Branding in China: Global Product Strategy Alternatives" என்ற கட்டுரையில் காணலாம்.


இங்கே சீனர்கள், அரபு மக்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.
சீன நாட்டு மக்கள் தம் தொன்மையான மொழி, பண்பாடு பற்றிப் பீடும் பெருமையும் கொண்டவர்கள்.  அமெரிக்க, ஆங்கிலேயப் “பன்னாட்டுப் பண்பாட்டு”ச் சூழலை ஏற்று அடி பணியாமல், தம் மொழியையும், பண்பாட்டையும், பெருமையையும் உயர்த்திப் பிடிப்பவர்கள்.  இது தென்கிழக்காசியாவில் பிற இன, மொழி, பண்பாடுகளோடு, ஆங்கில/அமெரிக்க ஆளுமைக்கு அடிபணிந்து வாழும் நாடுகளில் உள்ள சீன மக்களுக்கும் பொருந்துமா எனத் தெரியவில்லை.

சீனர்களைப் போலவே தம் மொழி, பண்பாடு, சமயம், இனம் பற்றிப் பீடும் பெருமையும் கொண்ட இன்னொரு குடியினர் அரபு மக்கள். ஆங்கில, அமெரிக்க ஆளுமைக்கு உட்பட்டு வாழ்ந்தாலும், தம் மொழி, பண்பாட்டையும் விட்டுக் கொடுக்காத மரபினர். இதனாலோ என்னவோ, வேற்றுமொழி விளம்பரங்களை அரபு மொழிக்குப் பெயர்ப்பதில் மொழி, பண்பாடு, சமய மரபுகளோடு உடன்படாமல் செய்வதால் விளம்பரங்கள் விளங்காமல் குழப்பத்தை விளைவிக்கின்றன என்று 97% அரபு மக்கள் கருதுவதாக ஒரு தரவு தெரிவிக்கிறது.

தமிழர்களில் பலருக்குத் தம் மொழி, பண்பாடு, தொன்மை பற்றிய பெருமை இருப்பினும், ஒரு சில அண்மைக்காலத் தன்னந்தனித் தமிழர்களின் கேலிக்கூத்தான நடவடிக்கைகளாலும், அமெரிக்க, ஆங்கில, இந்தியப் பண்பாட்டுக் கலவையின் அழுத்தமான ஆளுமையாலும், பிறமொழி, பிற பண்பாடுகளுக்கு அடி பணிந்து கிடந்த வரலாற்றாலும், தனித்தமிழ்ப் பெயர்கள் பீடு தரும் பெயர்கள் என்ற கம்பன் கால நிலை சரிந்து நெடுங்காலமாகிவிட்டது. 

தனித்தமிழ் என்பது மொழியல்ல.  அது இன்றைய தமிழ்மொழியின் ஒரு நடை.  அது சிறப்பு நடை, மிடுக்கு நடை, ஆனால் அது மட்டுமே தமிழ் என்ற நிலை இலக்கியத் தமிழிலிருந்தே விலகிப் பல நூற்றாண்டுகளாகின்றன.  கல்வெட்டுகளின் தொடக்கத்திலிருந்தே, உரைநடைத் தமிழ் கலப்படத் தமிழாகவே இருந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.  இவற்றை எல்லாம் புறக்கணிப்பது என்பது தமிழ் மொழி, பண்பாடு இவற்றின் வரலாற்றில் ஒரு கூறைப் புறக்கணிப்பதற்கு இணையானது.

தமிழில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிப் பெயர்களும் சொற்களும் கலக்கத் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகி விட்டன.  பிறமொழி ஒலிப்புகளும் எழுத்துத் தமிழிலும், பேச்சுத்தமிழிலும் கலந்து விட்டிருக்கின்றன.  தமிழ்நாட்டின் ஆளும் மேல்தட்டுக் குடும்பங்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்து, ஆங்கிலோ-தமிழில் பேசி, ஆங்கிலோ தமிழ்ப் பெயர்களைத் தம் நிறுவனங்களுக்குச் சூட்டி மகிழ்வதை தொலைக்காட்சி நிறுவனங்கள் நமக்கு அன்றாடம் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.  இவர்கள் தனித்தமிழ் அரசியல் பின்னணியில் ஆட்சிக் கட்டில் ஏறிய குடும்பங்களின் வழித்தோன்றல்கள் என்றாலும், தனித்தமிழைப் புறக்கணித்து, ஒரு புதிய மணிக்கோரல் (தமிழும் இங்க்லிஷும் கலந்த மணிcoral) நடையைப் போற்றி வளர்ப்பவர்கள்.

மேலை நாட்டு ஆங்கில விளம்பரப் பெயர்களை அவற்றின் உரிமையாளர்கள் அனுமதியில்லாமல் தமிழில் பெயர்ப்பதற்கு முற்படுவதற்கு முன்பு, தமிழகத்தில், தனித்தமிழ் இயக்கத்தின் வழித்தோன்றல்கள் தோற்றுவித்த நிறுவனங்களின் விளம்பரப் பெயர்களை அவர்களே தமிழில் மொழி பெயர்த்து அல்லது தனித்தமிழ்ப் பெயர் சூட்டி அழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  அப்படிச் செய்யாமல் ஒரு சில மேலைநாட்டுப் பெயர்களை மட்டும் மொழி பெயர்த்து எழுதுவது என்பது தனித்தமிழ் இயக்கம் என்பது போலித்தனமான அரசியல் கூத்து, வேறு ஏதும் கையில் கிடைக்கவில்லை என்றால் தமிழர்களின் பார்வையைத் திருப்புவதற்கான ஒரு மேஜிக் டிரிக், மந்திர தந்திரம், மாயாஜாலம், செப்பிடு வித்தை என்ற குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியாது.

> மொழி ஆளுமை / மொழிப் பற்று / இனப் பற்று என்பது அவரவர் தனிக்கருத்து.

> அன்பர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதனாலேயே
> அடைப்புக்குறிக்குள் அளிநட்பே(paypal)   என்று எழுதுகிறோம்.

> மொழி உணர்வைப் போற்ற வேண்டும் என்று கூறவில்லை. தூற்றாமலாமாவது இருக்கலாமே :(

திங்கள், டிசம்பர் 20, 2010

அறிவியலில் தனித்தமிழ் தாலிபானிசமா?

அறிவியல் தமிழில் எண்ணற்ற கட்டுரைகள் படைத்து வருபவர் கனடாவில் தற்போது வாழும் ஓய்வு பெற்ற அணுமின் பொறியாளர் ஜெயபாரதன் அவர்கள். அவரது அறிவியற் கட்டுரைகளை http://jayabarathan.wordpress.com என்ற சுட்டியில் காணலாம்.

அறிவியல் தமிழில் விக்கிப்பீடியாவில் எண்ணற்ற கட்டுரைகளைக் கூடுமானவரைத் தனித்தமிழிலேயே படைக்கும் குழுவிற்கு உரம் சேர்த்துத் தலைமை தாங்குபவர் கனடாவில் வாட்டர்லூ பல்கலையில் மின்னணுவியல் பேராசிரியர் செல்வகுமார்.

ஜெயபாரதன் 1960களில் இருந்தே தமிழில் அறிவியல் கட்டுரைகளையும் பரிசு பெற்ற நூல்களையும் எழுதி வருபவர்.  அவரது கட்டுரைகளில் 1960களின் தொடக்கத்தில் இருந்த கலைச்சொற்கள் விரவியிருக்கும்.

பேரா. செல்வகுமார் 1960களின் தனித்தமிழ் அறிவியல் கொள்கைகளின் தாக்கத்தினால், கலைச்சொற்கள் யாவும் இயன்றவரை தமிழின் வேர்ச்சொற்களில் இருந்தே, தமிழ் ஒலிப்புடன், தமிழ் எழுத்துகளில் எழுத  வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர்.  இணையத்தமிழின் தொடக்க நாள்களில் இருந்தே தமிழில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி வருபவர். நல்ல நண்பர்.

இவ்விருவருமே தமிழில் அறிவியற் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் தமிழ் மன்றம் மடற்குழுவில் கருத்துக்கலப்பு செய்வது வழக்கம்.  தனித்தமிழில் எழுதுவதை வலியுறுத்துவதும், கிரந்தம் தவிர்த்து எழுதுவதை வலியுறுத்துவதும் “தமிழ்த் தாலிபானிசம்” என்று குற்றம் சாட்டுகிறார் ஜெயபாரதன். (பார்க்க: http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/19c9c6dc26a116d1/01110d8635e8df36?lnk=raot#01110d8635e8df36 )

தாலிபானிசம் என்ற சொல் தேவையில்லாமல் புண்படுத்தும் சொல்.

தனித்தமிழ் நடை என்பது ஒரு சிறப்பு நடை.  இதன் தாக்கம் அளவிட முடியாதது.  கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று எழுதினால்தான் விளங்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த சுஜாதா போன்ற எழுத்தாளர்களையே கணினி, இணையம் என்று மாற்றி எழுத வைத்தது.  இன்று பட்டி தொட்டி எல்லாம் கணினி, இணையம் என்ற சொற்கள் பரவியிருப்பதைப் பார்க்கும்போது இந்தச் சொற்கள் படைக்கப் பட்ட காலத்தில் அல்லது எடுத்தாளப் பட்ட காலத்தில் தமிழ்.நெட் குழுமத்தில் இருந்ததை எண்ணி மகிழ்கிறேன்.

தமிழ் இணையத்தின் தொடக்க காலப் பயனாளர்களின் தனித்தமிழ் ஆர்வத்தால்தான் நல்ல பல தமிழ்க் கலைச்சொற்கள் வேரூன்றின என்பதில் ஐயமே இல்லை.

சன் டிவியின் தொடக்க கால இயக்குநர்களின் கருத்தினால்தான் தமிங்கிலம் ஒரு திராவிடக் கட்சியின் ஊடகத்தின் மூலம் பல்கிப் பெருகிப் பரவியது என்பதிலும் ஐயமே இல்லை.

என்னுடைய இளம் பருவத்தில் இயக்குநர் பாலச்சந்தர் படங்களில் மேஜர் சுந்தரராஜன் பாத்திரம் ஆங்கிலத்தில் ஒரு வசனத்தைப் பேசி உடனேயே அதை அவரே தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லுவார்.  அதாவது உயர்-நடுத்தரக் குடும்பங்களில் ஆங்கிலத்தின் தாக்கம் இருந்ததால் அவர்கள் பேச்சுமொழியில் ஆங்கிலம் வெகுவாகக் கலந்திருந்ததைச் சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் நாட்டுப்புற மக்களுக்கும் கதை புரிவதற்காகத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டியிருந்தது.

அம்மாவை ‘மம்மி’ என்றும், அப்பாவை ‘டாடி’ என்றும் சொல்வது உயர்குலச் செல்வந்தர் குடும்பங்களின் அடையாளங்களாய் உருவெடுத்தன.  இன்று அப்படிப் பேசுவதுதான் நாகரீகம் என்பதும், அப்படிப் பேசாதவர்கள் பட்டிக்காடுகளென்றும் அடையாளங்களாகி விட்டன.  இதை வளர்த்தவர்கள் குமுதம், விகடன் போன்றோர் மட்டுமல்ல, அங்கிருந்து சன் டிவிக்குச் சென்று அதே நாகரீகத்தை உருவாக்கிய தமிங்கிலத் தாலிபான்களும்தான். ;-)

ஆனாலும், இவர்களையும் மீறித் தனித்தமிழ் இன்றும் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது.  சிக்கல் அதுவல்ல.

கலைச்சொற்களை உருவாக்கும் களம் வேறு, அறிவியற் கட்டுரைகளை உருவாக்கும் களம் வேறு.  கலைச்சொற்களைப் பரப்பும் களம் வேறு.  சில சொற்களை சுஜாதா போன்றவர்களே பரப்பினார்கள். முதலில் கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று எழுதிய அதே சுஜாதா, கணினி, இணையம் என்ற சொற்கள் தமிழ் இணையத்தின் முதற்பயனாளர்களிடம் இயல்பாகப் புழங்குவதைக் கண்டு அவரே தனது கடைசிப் பக்கக் கட்டுரைகளில் இதை எழுதிப் பரப்பினார்.  தான் முன்னர் எழுதியது தவறு என்று சொல்லித் தன்னைத் தானே திருத்தி எழுதிய அவரைப் போன்ற பெருந்தன்மையுள்ள அறிவியல் கட்டுரையாளர்களைக் காண்பது அரிது.  மிக அரிது.  சுஜாதா செய்தார் என்பதற்காக எல்லோரிடமும் அதே பெருந்தன்மையை நாம் எதிர்பார்த்தால் ஏமாறுவோம்.

ஜெயபாரதன் கட்டுரையிலும் நல்ல பல தமிழ்ச் சொற்கள் உள்ளன.  அவருக்குப் பழக்கப் பட்ட பழைய கலைச்சொற்களைக் கொண்டு எழுதுவதால் அவரால் விரைவாகப் பல நெடுங்கட்டுரைகளை எழுத முடிவதால், அவரிடம் கலைச்சொற்களை மாற்றச் சொல்லத் தயங்குகிறேன்.  புதிய கலைச்சொற்களை அவரே படைக்கும் முன்னர் ஏற்கனவே தமிழ்ப் பள்ளி நூல்களிலும், கலைச்சொல் அகராதிகளிலும் இருக்கும் கலைச்சொற்களை அவரே பார்த்து எடுத்துக் கொண்டால் படிப்பவர்களுக்குக் குழம்பாது.

கலைச்சொற்களை ஆளுக்கு ஆள் மாற்றிக் கொண்டே இருந்தால் அறிவியல் கட்டுரை படிப்பவர்களுக்குப் பொறுமை இழந்து போய் விடும்.  அடிப்படைக் கலைச்சொற்களில் தரமான ஒரு கோட்பாடு கொண்டு படைப்பவர்கள் ஒரு புறம் இருக்க வேண்டும்.  அப்படிப் படைக்கப் பட்ட கலைச்சொற்களைத் தம் கட்டுரைகளில் எடுத்தாளும் நண்பர்களும் வேண்டும். அப்படிக் கலைச்சொற்கள் பரவிய பின்னர்தான் பொதுமக்களுக்கு எழுதும் ஜெயபாரதன் போன்றோர் அப்படிப் பட்ட கலைச்சொற்களை எடுத்தாளக் கூடும்.

விஞ்ஞானம் என்ற சொல் வழக்கிலிருந்து அருகி (591,000 Google results ) அறிவியல் என்ற சொல் பரவி (1,870,000 Google results ) 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனாலும், அது வழக்கொழிந்து போகவில்லை.  அறிவியல் என்று எழுதினால் மேலும் பலருக்குப் புரியும் என்பதை உணர்ந்தால் ஜெயபாரதன் அறிவியல் என்ற சொல்லை எடுத்தாளக் கூடும்.  அப்படி எழுதுவதால் அவருக்குச் சிந்தனைத் தடையோட்டம் ஏற்பட்டு அவரால் எழுத முடியவில்லை என்றால் அவர் விஞ்ஞானம் என்றே எழுதிக் கொள்ளட்டுமே.  அது அவரது வயதைக் காட்டும் அறிகுறி மட்டும்தான்.  அவரே சயன்ஸ் என்று எழுதினால் (4,450 Google results ) தமிங்கிலத்தைக் குறைக்கச் சொல்லிக் கேட்கலாம்.  மாட்டேன் என்று சன் டிவி போல் அடம் பிடித்தார் என்றால்?

மற்றவர்களும் ஜெயா டிவி, விஜய் டிவி, மெகா டிவி, கேப்டன் டிவி, என்று ஈயடிச்சான் காப்பி(!) அடித்தால் சேன்னலை (73 results ) மாற்றக் கூட வாய்ப்பில்லாமல் போய் விடுமே!

எனவே எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் ஊக்குவிப்போம்.  நல்ல தமிழில், நடைமுறைத் தமிழில், தனித்தமிழில் எழுதுபவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டி ஊக்குவிப்போம்.  குறை சொல்வதால் யாரும் மாறப் போவது இல்லை.  பாராட்டினால் மகிழ்வார்கள்.

பாராட்டுவோம்.

தாலிபான் போன்ற சொற்கள்  தேவையில்லை.

ஜெயபாரதன் அவருக்குக் கை வந்த நடையிலேயே எழுதட்டும். மற்றவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தால், அவரும் நல்ல பல தனித்தமிழ்ச் சொற்களில் எழுதுகிறார் என்று புலப்படும். அதைப் பாராட்டுவோம்.

அவரையும் ஐதரசன், ஈலியம் என்று எழுத வைக்க வேண்டும் என்றால் அவர் கலந்து கொள்ளும் குழுமங்களில் பலரும் ஐதரசன், ஈலியம் என்று எழுத வேண்டும்.

இல்லையேல், அவர் தாம் எழுதுவது தமது வாசகர்களைச் சென்றடைகிறதா என்று கவலை கொள்ள நேரிடும்.

பேரா. செல்வகுமார், பிறமொழி ஒலிப்புகளைத் தமிழில் துல்லியமாகக் கொண்டுவரத் தேவையில்லை என்பதை வலியுறுத்தி எவ்வாறு நாம் அன்றாடம் வழங்கும் ஆங்கிலச் சொற்களுக்கு மேலை நாட்டு மொழிகளிலிலும் வேற்று ஒலிகள் வழங்குகின்றன என்று குறிப்பிடுகிறார்.

இது தொடர்பாக, யூனிகோடு நுட்பக் குழுவுக்கு கிரந்தம் தொடர்பான கருத்து வழங்கும் மனு ஒன்றில் காஞ்சியைச் சேர்ந்த சமஸ்கிருத விற்பன்னர்கள் சிலர் தமிழில் குறிப்பிட்டிருக்கும் பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:

"எந்த லிபியும் தனது இயற்கையான மொழியல்லாத மற்ற மொழிகளைக் குறிப்பதில் அந்தந்த மொழிகளின் இயற்கையான லிபிகளுக்கு ஸமமான ஸாமர்த்யம் பெற்றிருக்கவியலாது. எடுத்துக் காட்டாக read red எனப்படும் வெவ்வேறு ஆங்கிலச் சொற்கள் பாரதீய லிபிகளில் रेड् ரெட் என்பது போல ஒரே முறையில்தான் எழுதப்பட வேண்டியிருக்கின்றன.  ஆக இந்த சொற்களை பாரதீய லிபிகளில் எழுதினால் எழுத்திலிருந்து பொருள் வேற்றுமை விளங்காது.  இது யூனிகோட் அதிகாரிகளுக்குத் தெரிந்தே இருக்கும்.  ஆக க்ரந்த லிபியானது தனது இயற்கை மொழியான ஸம்ஸ்க்ருதத்தைத் தவிர்த்த மற்ற மொழிகளைக் குறிப்பதில் மலையாள லிபியையோ அல்லது வேறு எந்த லிபியையோ ஒத்த ஸாமர்த்யத்தைப் பெற்றிருக்கும்படி க்ரந்தத்தில் எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டே போவதில் பொருளில்லை.”

- தமிழ்நாட்டு க்ரந்த பயனீட்டாளர்கள் சார்பில் வித்வான்கள், 2010-06-20

யூனிகோடு அதிகாரிகளுக்கு ”க்ரந்த லிபி பயன்படுத்தும் வித்வான்களின் வேண்டுகோள்”  Unicode document L2/10-233

இதுதான் யூனிகோடு நுட்பக் குழுவுக்கு அனுப்பப் பட்ட கட்டுரைகளில் தமிழில் உள்ள முதல் கட்டுரை என்பது குறிப்பிடத் தக்கது.   அதே கருத்தை ஆங்கிலத்திலும் பின் வருமாறு மொழி பெயர்த்திருந்தனர்:

"It is not possible for every script to be equally capable – in representing any language other than its native language – as the native script of that language. For
example, the English words “read” (past tense) and “red” (colour) will both be written in Indian scripts only as  रेड् ரெட்  etc and it is not possible to get the difference in meaning via Indian scripts. The Unicode officials will certainly know this. Therefore there is no meaning in adding newer and newer characters to make Grantha (or any other script) equally as capable as other scripts, whether Malayalam or otherwise, in representing other languages, i.e. languages which the script was not originally evolved for, which in the present case all languages other than Sanskrit."

சமஸ்கிருத வித்துவான்கள் கிரந்த எழுத்துமுறைக்குச் சொல்வது தமிழ் எழுத்து முறைக்கும் முற்றிலும் பொருந்தும் என்பது எனது தாழ்மையான கருத்து.

 நண்பர் செல்வாவின் கூற்றுகளில் அடிப்படை ஏரணம் உள்ளது.  முன்பு சமஸ்கிருதம்,  இப்போது ஆங்கிலம்,  நாளை சீனம் என்று ஆதிக்கம் செலுத்தும் மொழிகளுக்காகத் தமிழில் எழுத்துகளைக் கூட்டிக் கொண்டே போவது என்பது அரசனை நம்பிப் புருசனை விட்ட கதை போலத்தான். 

கணினியா கம்ப்யூட்டரா, இணையமா இண்டர்நெட்டா போன்ற வாதங்களுக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களே தனித்தமிழ்க் கலைச்சொற்களை ஏற்று ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.  பேச்சுத்தமிழில் எது வந்தாலும், எழுத்துத்தமிழில் கணினியும் இணையமும் ஒரு தனியிடம் பெற்றுவிட்டன.


எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் தமக்கு உள் வாங்கித் தாம் பெயரிட்டு அழைக்கும் வரை அது அந்நியமாகத்தான் தோன்றும். பிலாக், பிளாக், ப்லாகர் என்றெல்லாம் அந்நியமாயிருக்கும் நுட்பம் வலைப்பூக்கள், வலைப்பதிவர்கள் என்று நமக்கு நெருங்கும்போது இது ஆங்கிலத்தில் புலமை கொண்ட மேல்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல, தமிழில் எழுதத் தெரிந்த அனைவருக்கும் என்ற உரிமையை எடுத்துக் கொள்ள முடிகிறது.

அதற்காகக் கலைச்சொற்கள் தனித்தமிழில் வரும் வரை காத்திருங்கள் என்று சொல்லப் போவதில்லை.  ”வயர் ரீவைண்டிங் செய்வது எப்படி” என்பது போன்ற நூல்களைப் படித்து எண்ணற்ற குட்டித் தொழிற்பட்டறைகளை உருவாக்கி முன்னேறியவர்கள் பலர்.  அவர்களுக்குத் தொழில்நுட்பம் உடனடித்தேவை.  ஆனால், தொழிற்பட்டறை உழைப்பாளியாய் மட்டுமில்லாமல் சிந்தித்துப் புதிய தொழில்நுட்பம் உருவாக்க வல்லமை பெற்ற அறிவியலாளராய், நுட்பவியல் வல்லுநராய் ஆவதற்குத் தாய்மொழியில் கலைச்சொற்கள் தேவை.  ஆங்கிலத்தின் மூலம் பிறநாட்டு நல்லறிஞர் சொல்வது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.  பாரதி சொல்வது போல கலைசெல்வங்கள் யாவையும் தமிழில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.  அப்படிச் சேர்த்தால்தான், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எண்ணற்ற தமிழர்கள் புதுப்புது நுட்பங்களைக் கண்டறிய முடியும்.  இல்லையேல் தற்போது இருப்பது போல, எந்த மொழியிலும் நுட்பமான கருத்தைத் தெளிவாகச் சொல்லும் திறமை இல்லாத தமிழர்கள் எண்ணிக்கைதான் கூடும்.

கலைச்சொல்லாக்கக் கோட்பாடுகள் குறித்து ஜெயபாரதன் - செல்வா பட்டி மன்றங்கள் எண்ணற்ற பல ஏற்கனவே அரங்கேறியுள்ளன.  இருவரிடமும் நல்ல பல கருத்துகள் இருப்பினும்,  இருவருமே தம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளப் போவது இல்லை. எனவே இது குறித்த விடாக்கண்டன் - கொடாக்கண்டன் பட்டிமன்ற விவாதங்கள் அலுப்புத்தட்டத் தொடங்கி விடுகின்றன.  எனவே ஒவ்வொருவருமே என் வழி, தனீஇ வழி என்று பாட்டை போட்டு நடப்பதே நலம்.

ஆனாலும், பட்டிமன்றங்கள் தொடரத்தான் போகின்றன.  நாமும்  ”கற்பினில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா” என்ற பொங்கல் பட்டி மன்றங்களை அவற்றின் சொற்சுவைக்காக மட்டும் கேட்பதுபோல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சுவைத்து மகிழ்வோம்.

செவ்வாய், டிசம்பர் 14, 2010

கல்வெட்டுகள் நம்மை ஏமாற்றுகின்றனவா?

தமிழ் உலகம் மடற்குழுவில் நண்பர் திரு நக்கினம் சிவம் “கல்வெட்டுகளைக் கண்டு ஏமாறாதீர்கள்” என்ற தலைப்பில் (http://groups.google.com/group/tamil_ulagam/browse_thread/thread/4deeb86b729a307b#)  ஒரு வாதத்தை முன் வைக்கிறார்.  கல்வெட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு கிரந்தம் தமிழகத்தை ஆண்டதாக “அறிவு சீவிகள்” சொல்வதாக எடுத்துக் கொண்டு ஒரு சோளக் கொல்லைப் பொம்மையை வெட்டிச் சாய்ப்பது போல இல்லாத ஒரு வாதத்துக்கு மறுப்பு வைக்கிறார்.

உண்மையில் கிரந்த எழுத்துகள் தமிழை ஆண்டிருந்தால்,  தமிழ் எழுத்துகள் முற்றிலும் மறைந்து போயிருக்கும்.  தெலுங்கு, கன்னட மொழிகளுக்குத் தனி எழுத்துகள் தோன்றுவதற்கு முன்னரே தமிழுக்கு எழுத்து வடிவம் இருந்ததற்குக் காரணமே தமிழ் மன்னர்களின் தனி ஆட்சிதான் என்பார் கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

ஆனால், தமிழகத்தில் கிரந்தமும் இருந்தது.  அது அரசர்களின் கல்வெட்டுகளிலும் இருந்தது.  அது மட்டுமல்லாமல், கிரந்த எழுத்துகள் தென்னகத்தின் பல மொழிகளுக்கும், தென்கிழக்கு ஆசியாவின் எண்ணற்ற பல மொழிகளுக்கும் எழுந்த எழுத்துகளுக்குத் தாய் வடிவமாகவும் இருந்தது என்பதுதான் வரலாற்று ஆய்வாளர் கருத்து.


கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள மிக இன்றியமையாத ஒரு தரவு.  கிரந்த எழுத்துகள் பல்லவர் வருகைக்குப் பின்னரே தலைதூக்குகின்றன.  அதற்கு முன்னர் இருந்த கல்வெட்டுகளால் தமிழ் வரலாற்று நிகழ்வுகள் பல உறுதியாகின்றன.  அவை எவையும் கிரந்தத்தில் இல்லை.  கல்வெட்டுகள் மட்டுமல்லாமல் செப்பேடுகளும் தமிழக வரலாற்று நிகழ்வுகளை அறிய இன்றியமையாதவை.

பல்லவப் பேரரசர்கள், சோழப் பெருவேந்தர்கள், பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் குறிப்புகள் பலவற்றைப் பற்றி அறியக் கல்வெட்டுகள் உறுதியாகத் தேவை.  கல்வெட்டுகளைச் செதுக்கிய குடியினர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத குடிகளாக இருந்திருக்கக் கூடும்.  கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளில் இருக்கும் பிழைகள், எழுத்துகளைக் கலந்திருக்கும் முறை, வரிவடிவங்களின் அழகியல் தன்மை, என்று பல கோணங்களில் இவற்றைப் பார்க்கும் போது கல்வெட்டுகளைச் செதுக்கியவர்களுக்குத் தாம் செதுக்கிய மொழி புரிந்திருக்கிறதா என்று சில நேரங்களில் ஐயப் பட வேண்டியிருக்கும்.  ஆனால், எண்ணற்ற பல கல்வெட்டுகளில் பிழைகள் குறைவு.  செதுக்கியதைத் திருத்த முடியாத நிலையில், சிற்பியைக் குறை சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.

கல்வெட்டுகள் பலவற்றில் கிரந்தம் மட்டுமல்ல, தமிழ் வட்டெழுத்தும், பிற்காலத் தமிழ் வரிவடிவமும் உள்ளன.  கல்வெட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு சில கல்வெட்டுகளையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும்.  மசிப்படிகள், மற்றும் எழுத்து வடிவங்களில் வந்துள்ள நூல்களைப் படிக்க வேண்டும்.

சோழர்களுக்குக் கீழ் இருந்த தெலுங்கு, கன்னட நாடுகளில் கல்வெட்டுகள் கிரந்தத்தில் மட்டுமல்ல, தமிழிலும், ஏன் கிரந்த எழுத்துகளில் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் உள்ளன.  கிரந்த எழுத்துகளில் எழுதப் பட்டிருக்கும் தெலுங்கு, கன்னட மொழியில் இருக்கும் கல்வெட்டுகளில் கணேசன் சொல்வது போல “திராவிட எழுத்துகள்” இல்லை.  தெலுங்கு, கன்னட மொழிகளில் எகரம், ஒகரம் இருப்பினும், அந்த எழுத்துகள் கொண்ட பெயர்கள் இக்கல்வெட்டுகளில் இருப்பினும், கிரந்த எழுத்து முறையை மாற்றிக் கொள்ளாமல், அவர்கள் வழக்கப்படி ஏகார ஓகார எழுத்துகளில் தான் தெலுங்கு/கன்னட எகர, ஒகரத்தைக் குறித்திருக்கிறார்கள்.  இது குறிப்பிடத் தக்க தரவு.  இதைச் சான்றாகக் கொண்டே கணேசனின் கூற்றை மறுக்க இயலும்.

அரசர்களின் ஆணைப்படி எழுதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் இவற்றை எவ்வாறு சமைப்பது என்பதற்கு ஒரு முறைமை இருந்திருக்கிறது.  இந்த முறைமையைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.  கல்வெட்டுகள், செப்பேடுகளின் மசிப்படிகள் 1908 வரை திரட்டியவை மட்டுமே நூறாயிரத்தையும் கடந்திருக்கிறது.  இந்தியாவிலேயே எண்ணிக்கையில் கூடுதலான கல்வெட்டுகள், மற்றும் செப்பேடுகள் தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் இருந்திருக்கின்றன.  இவற்றில் பெரும்பான்மையானவை தமிழ் எழுத்துகளிலும், வட்டெழுத்துகளிலும் இருக்கின்றன.  ஆயினும் மெய்க்கீர்த்தி என்ற அரசப் பெருமைகளைப் பறைசாற்றும் செய்திகளைக் கிரந்த எழுத்துகளில், வடமொழியில் எழுதியிருக்கிறார்கள்.  இது, இன்றைக்கு நடக்கும் திறப்பு விழாக்களில் ஆங்கிலத்தில் கல்வெட்டுகளைப் பொறிப்பது போன்றது.  தம் அரசர் பெருமையை தமிழரல்லாதவர்களுக்கும் தெரிவிக்க கிரந்த எழுத்துகளில் வடமொழியில் எழுதியிருக்கும் வாய்ப்பு இருக்கிறது.  ஆனால், கல்வெட்டுகளின் முக்கிய நோக்கங்களை, அதாவது யார் எதற்கு என்ன கொடை வழங்குகிறார்கள் போன்ற உள்ளூர்ச் செய்திகளைப் பெரும்பாலும் தமிழில், தமிழ் எழுத்துகளில் பொறித்திருக்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, உண்மை சுட்டாலும், (தமிழகத்தில் உள்ள கல்வெட்டுப் பகுதிகள் தமிழில் இல்லாமல் இருப்பது சுடுகிறது என்றாலும்), உண்மை உண்மைதான்.

அது இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் பொருள் இல்லை.

தமிழ்ப் பெருவேந்தர்கள் கடல் கடந்தும் படை எடுத்துச் சென்று பல்வேறு நாடுகளை வென்றார்கள்.  இமயத்தில் சேரன் வில்லைப் பொறித்திருக்கலாம். ஆனால், கடாரத்திலும், சாவகத்திலும், சோழன் தமிழைப் பொறிக்கவில்லை.  வடமொழியைத்தான் பொறித்திருக்கிறான்.

இன்றைய நிலையிலும், பல அரசாணைகள், நீதி மன்றத் தீர்ப்புகள், அரசுக் கல்வெட்டுகள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.  தமிழகத்தின் தலைநகரத்தில், கடைகள், பொது நிறுவனங்களின் பெயர்களைத் தமிழிலும் (நோக்குக, தமிழில் மட்டுமல்ல, தமிழிலும்) எழுதுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கவே 2010 வரை காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.  அப்படியும், முற்றிலும் எல்லோரும் மாறவில்லை.  பெங்களூரில் தெருப்பெயர்கள், பேருந்துகள், கடைப் பெயர்கள் எல்லாமே கன்னடத்தில் மட்டுமே இருக்கிறது.  அங்கே முணுமுணுக்காமல் சட்டத்தின் கீழ்ப்படிந்த அதே வணிகர்கள், தமிழகத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர்.

தமிழ்நாட்டில் தமிழையும் ஒரு பாடமாகப் படிக்கச் சொல்வதற்கே நீதிமன்றம் வரை எதிர்க்கப் போகிறார்கள்.  இங்கிருக்கும் சிறுபான்மையர் உரிமைகளைப் பறிப்பது போல் இல்லையா என்ற கூக்குரல் கேட்கிறது.  தனிமனித உரிமைகளைப் பறிப்பது போன்றது இத்தகைய ஆணை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன.  ஆனால், கருநாடகத்தில் கன்னடம் படிக்க வேண்டும் என்பதை முணுமுணுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், தமிழர்களுக்கு மட்டுமே தமிழ் வெறியர்கள் என்ற பழிச்சொல்.

இன்னும் மொழி ஆளுமை பற்றிய செயல்களில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குள்ளேயே ஒரு சரியான புரிதல் இல்லை.  வடமொழி வெறுப்பும், ஆங்கிலத்தின் மீது ஈர்ப்பும், தமிழ்ப் புறக்கணிப்புமே திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலையெடுத்திருக்கின்றன.

நம் வரலாறு பற்றியும் உண்மையை அறிந்து கொள்ளும் அடிப்படையில் இல்லாமல், தொன்மங்களின் அடிப்படையில் நாம் விரும்பும் செய்திகளை வரலாற்றின் மீது மேற்பூச்சு பூசிக் கற்பனை செய்வதில் நமக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி வருகிறது.  இந்தத் தாழ்வு உளப்பாங்கு தேவையற்றது. 

களப்பிரர்களும், பல்லவர்களும் வந்தேறிகள்தாம்.  அவர்கள் தம்முடன் தம் சமயங்களையும், தம் மொழிகளையும், கொண்டு வந்தனர்.  தமிழ் அரசர்களை முறியடித்து வேற்று அரசுகளை நிறுவினர்.  இது வரலாறு.  ஆனாலும், களப்பிரர்களும், பல்லவர்களும், நம்முள் கலந்து விட்டார்கள்.  தமிழர்களாகி விட்டார்கள்.  காலப்போக்கில் தமிழ் மீண்டும் தலை எடுத்தது. பின்னர், மீண்டும் தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிறமொழிகளும், பிறர் ஆட்சிகளும் தலையெடுத்திருந்தாலும், தமிழர்களின் விடாமுயற்சியால் தமிழ் இம்மண்ணில் வேரூன்றியிருக்கிறது.  ஆங்கிலத்தின் மாபெரும் தாக்கத்தின் கீழும், அரசு ஆதரவு கொண்டு இந்தியின் ஆட்சியின் கீழும், தமிழ் தளரவில்லை. 

இணையம் என்ற ஒரு களம் உருவானவுடனேயே, எந்த அரசின் ஆதரவும் இல்லாமல், தமிழர்கள் தாமே உருவாக்கிய குறியீட்டு முறையில் தமிழை வலையேற்றி உலகெங்கும் பரப்பினார்கள்.  இந்தத் தனித்தன்மை இருக்கும் மட்டும், தமிழ் என்றும் வாழும்.  அதற்காகத் தமிழகத்தில் வேற்று மன்னர்கள், வேற்றுக் குடிகள், வேற்று மொழிகள், மேலோங்கவே இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

ஏனைய நாடுகளைப் போலவே, தமிழ் மண்ணிலும், பல பண்பாடுகள், மொழிகள், கருத்துகள், கலந்து ஊடாடின.  எண்ணற்ற பல குடிகள் இங்கு வந்து சேர்ந்தார்கள்.  அவர்கள் இன்று தம்மைத் தமிழராகத்தான் அடையாளம் காணுகின்றனர். இங்கு வந்து சேர்ந்த குடிகள் கொண்டுவந்த கலைச்செல்வங்கள் யாவும் தமிழுக்கு உரம் சேர்த்திருக்கின்றன.  தமிழன்னை தனக்கே உரிய வகையில் இவற்றை எடுத்துக் கொண்டு இன்றும் நம் உள்ளங்களை ஆளுகின்றாள்.

நாம் இந்த உண்மையைக் கொண்டாடலாமே!

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு




2010/12/14 Nakinam sivam

கல்வெட்டுகளைக் கண்டு ஏமாறாதீர்கள்


பல்லவர்கள் காலத்தில் சமசுகிருதமே மேலோங்கி இருந்தது மற்றும் பல தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழி நடைமுறையிலேயே இல்லை என்று கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் உள்ள சமசுகிருத கிரந்த எழுத்துக்களை வைத்து ஒரு சில அறிவு சீவிகள் கிரந்த எழுத்துக்கள் ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்டது போல தங்களது கற்பனைக்கு உயிரோட்டம் அளிக்க முயல்கின்றார்கள்.


இந்த விதமான அறிவு சீவிகள் கல்வெட்டுகளில் உள்ள கிரந்த எழுத்துக்களை வைத்து மட்டும் அம்மொழியே தமிழகத்தை ஒரு காலத்தில் ஆண்டது என்ற ஒரு கருத்தை முன் வைக்கின்றார்கள்.


அவர்கள் பழங்காலத்தில் இருந்து இன்று வரை ஆலயங்கள் யாருடைய கைப்பாவையாக இருந்து வருகின்றன என்பதை கருத்தில் கொள்ளாமல் கல்வெட்டுகளில் காணப்படும் கிரந்தத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு கிரந்தமே தமிழகத்தை ஆண்டது என்று ஒரு குறுக்கு சால் ஓட்டுகின்றார்கள்.


ஒரு உண்மை ஒரு சிலரை சுட்டாலும் அதுதான் உண்மை


அந்த உண்மை


இந்த இருபத்து ஒன்றாம் நுாற்றாண்டிலும் நமது தமிழக ஆலயங்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகைகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன என்றால் பல நுாறு, அயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்பழ தமிழ் மொழியை ஆலயத்தினுள் உள்ள கல்வெட்டுகளில் எழுத விட்டிருப்பார்கள். ஆகம விதி என்ற ஒரு புரட்டை வைத்துக்கொண்டு அதனை சாக்காக வைத்துக்கொண்டு தமிழ் பொன்ற நீச மொழி ஆலயத்தில் எழுதப்பட்டால் ஆலயத்தில் இறைவன் குடி கொள்ள மாட்டார் என்று ஏன் கூறி இருக்க மாட்டார்கள்.


மேலும் கல்வெட்டுகளை பொறிப்பவர்கள் யார் என்று பார்த்தால்
அவர்கள் ஆலயங்களை உருவாக்கும் கல்தச்சர்கள் எனப்படும் சிற்பிகளாகும்.


சிற்பிகள் ஆலயத்தை நிர்மானிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆகம விதிகள் தெரிந்து இருக்க வேண்டியது அவசியம்.


ஆகம விதிகள் அனைத்துமே சமசுகிருதத்தில் ஒருசிலர் மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.
இருப்பினும்
ஆலயத்தை ஆகமப்படி நிர்மாணிக்க வேண்டுமே என்பதற்காக அந்நாளையிலிருந்தே சிற்பிகளுக்கு கிரந்தம் கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ளது.


அப்படி
தெரிந்த கொண்ட மொழி - மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழி தனக்கு தெரிந்துள்ளது என்பதனால் - அதன் மூலம் வேதத்தின் பொருளையும் பரிந்து கொள்ள முடிந்ததனால் அவர்கள் தங்களை ஆச்சாரியர்கள் என்றும் பிற்காலத்தில் ஆசாரிகள் என்றும் மறுவி அழைத்துக்கொண்டனர்.


இன்றைக்கும் ஆசாரிகள் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர்
வேதத்தின் உட்பொருளான பிரம்மமே தெய்வம் என்னும் பொருளில்
விராட்விஸ்வ பிரம்மனே நம
என்று எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு கூறுவதை காணலாம்.


தமிழ் நீச மொழி என்று ஆலயத்தில் நுழையக்கூடாது என்று இன்றைய நாளிலேயே சமசுகிருதத்திற்கு வக்காலத்து வாங்கும் மனிதர்கள் இருக்கும் போது அன்றைய காலக்கட்டத்தில் எப்படி தமிழை ஆலய கல்வெட்டுகளில் பொறிக்க ஒப்புக்கொண்டு இருப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும்.


ஆகவே கல்வெட்டுகளில் கிரந்த எழுத்துக்கள் இருக்கின்ற என்பதற்காக கிரந்தம் ஒரு காலத்தில் ஆட்சி செய்தது என்று வாதிடுவது குறுக்கு சால் ஓட்டும் அறிவு சீவிகளுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.


பயணம் தொடரும்


சிவம்

ஞாயிறு, டிசம்பர் 12, 2010

கிரந்தப் பூச்சாண்டி

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் என்ற தலைப்பில் தமிழ் மன்றம் மடற்குழுவில் இராமகி ஐயா தொடங்கி வைத்த இழையில் நான் எழுதிய ஒரு கடிதத்தின் திருத்திய வடிவத்தை இங்கே தருகிறேன்.  [மூலத்தை http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/484fd5956593823c என்ற சுட்டியில் பார்க்கலாம்.]

கிரந்தப் பூச்சாண்டி

கல்வெட்டுகளும், செப்பேடுகளும் மட்டுமே நமது வரலாற்றுத் தடயங்கள்.  அவை இல்லா விட்டால், நாம் “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்” பேசும் மாக்கள் மட்டுமே.  கல்வெட்டுகள் இல்லையேல் வரலாற்றாய்வாளர்களால் மாமன்னன் அசோகன் என்று ஒருவன் இருந்தான் என்பதையே கண்டு பிடித்திருக்க முடியாது.  கல்வெட்டுகள் இல்லையேல் அதியமான் நெடுமானஞ்சி ஔவைப் பாட்டிக் கதையில் வரும் ஒரு கற்பனைப் பாத்திரமாக மட்டுமே இருந்திருப்பான்.  கல்வெட்டுகள் இல்லையேல் “பொன்னியின் செல்வன்” கதை எழுதுவதற்கு கல்கிக்கு ஒரு செய்தியும் கிடைத்திருக்காது.  கல்வெட்டுகள் இல்லையேல் தமிழர்கள் வாழ்வில் சமணம் எத்தகைய தாக்கம் செலுத்தியிருந்திருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். கல்வெட்டுகள் இல்லையேல் மாமல்லை நமக்கு இன்றும் புரியாத ஒரு விந்தை உலகமாகத்தான் தெரிந்திருக்கும்.

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இன்றைய ஆவணங்களை ஆய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களால் இன்றைய ஆங்கில ஆவணங்களை அப்படியே பதியாமல் நம் வரலாற்றை முற்றாகப் புரிந்து கொள்ள இயலும் என்றா நினைக்கிறீர்கள்?  ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட ஆங்கிலத்தோடு இன்றைய ஆங்கிலத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்.  அந்த மொழியின் வளர்சிதை மாற்றத்தால் பிற்கால ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இன்றைய ஆங்கிலத்தைப் பிற்காலத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது வரலாற்றைப் பிழையின்றிப் பதிவு செய்ய வழிகோலும் என்றா சொல்ல முடியும்?  கிரந்தக் கல்வெட்டு மொழியை அப்படியே பதித்து விட்டுப் பிற்கால அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் மூலத்தைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டியதுதானே அறிவியல்முறைக்குப் பொருத்தமானது?

கிரந்த எழுத்துகளில் இருக்கும் கல்வெட்டுகளை, செப்பேடுகளை, ஓலைச்சுவடிகளை அண்மைக் காலத்தில் தேவநாகரி வரிவடிவத்தில் அச்சிட்டு வருகிறார்கள்.  தமிழ் எழுத்துகளோடு தேவநாகரி எழுத்தும் கலந்து வந்திருக்கும் அவற்றைப் பார்க்கும்போது, கிரந்தத்தின் மீதுள்ள வெறுப்பால் தென்னகத்தில் வரலாற்றில் வேரூன்றாத நாகரி எழுத்துக்கு மேலிடம் கொடுப்பது விந்தையாகத் தெரிகிறது.  சொல்லப் போனால், நாகரி எழுத்தில் இருப்பதால் மேலும் பலரும் கல்வெட்டுப் படிகளைப் படிக்க முடிகிறது என்பது வேறு திறக்கு.  ஆனால், வரலாற்றை நாம் வரலாறாகப் பார்ப்பதில் என்ன தயக்கம் என்று எனக்குப் புரியவில்லை.

இல்லாத கட்டுக்கதைகளை நம்புபவர்களுக்கு உண்மையை அறியத் தயக்கம் ஏனோ?

தமிழர்கள் சிலருக்குக் கிரந்தம் பூச்சாண்டியாகத் தோன்றுவதால் கிரந்த எழுத்துகளை யூனிக்கோடு குறியீட்டில் ஏற்றக் கூடாது என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் புவி இருண்டு போகும் என்பதற்கு ஒப்பானது.

தென்னகத்தில் 1908 வரை எடுத்த கல்வெட்டு, செப்பேட்டுகளின் மசிப் படிகள் மட்டுமே நூறாயிரத்தைத் தாண்டும். அவை மட்டுமே பதிப்பாயுள்ளன. அதற்குப் பின் எடுத்தவற்றின் மசிப்படிகள் இன்னும் எத்தனை காலம் அழியாமல் இருக்குமோ தெரியாது.  1908க்குப் பின் கல்சுரங்கக் குத்தகைதாரர்களும், கல்வெட்டுகளின் பெருமை அறியாத எண்ணற்ற பலரும் பல கல்வெட்டுகளை அழித்து விட்டார்கள்.  நம்முடைய பழைய நாணயங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற பல செல்வங்களை அறியாமையால் நாம் அழித்தது போல நாம் கல்வெட்டுகளையும் விரைவாக அழித்துக் கொண்டிருக்கிறோம்.

பழைய ஓலைச்சுவடிகள் இருந்தென்ன பயன்? ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாமே குப்பைதானே!  சங்கப் பாடல்களை எல்லாம் ஏன் படிக்க வேண்டும்?  புதியது என்னவென்று தெரிந்து கொள்வது போதாதா என்ற குரல்களும் அவ்வப்போது ஒலிக்கத்தான் செய்கின்றன.  சாதி ஒழிப்பு போன்ற பல முற்போக்குக் கொள்கைகளுக்காகப் போராடிய திராவிட இயக்கம் அறிவுசார் கருத்துகளை மறுக்கும் தன்மையையும் வளர்த்து விட்டிருக்கிறது என்று குறைப்பட்டிருக்கிறார் தமிழ் அறிஞர் பேரா. நொபோரு கராஷிமா (http://www.thehindu.com/opinion/interview/article925942.ece).

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓலைச்சுவடிகளைப் போகி கொளுத்தினோம்.  இருபதாம் நூற்றாண்டில் கல்வெட்டுகளைக் கிரேனைட் ஆக்கினோம். இருபத்தோராம் நூற்றாண்டில் கல்வெட்டு எழுத்துகளைக் கூடப் பதிக்கக் கூடாது என்று கூட்டம் போடுகிறோம்.  முன்னாள் துணைவேந்தர் ஒருவரே ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் கை தட்டலுக்காக "மீண்டும் கிரந்த எழுத்துகளுக்கு  இடம் தரக்கூடாது  வரலாற்று ஆவணங்களை தமிழிலே கொண்டுவர முடியும். முடியாது என்றால் அவற்றைத் தூக்கி எறியுங்கள்” என்று சொல்லியிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது.  சங்கத்தமிழை ஆய்ந்த புகழ் பெற்ற  பெரும்புலவர்களின் நூல்கள் பல கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு தமிழ் கற்பித்திருக்கின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

தமிழ் மட்டுமல்ல, உலகின் பல மொழிகளும் இன்று ஆங்கிலத்தின் ஆதிக்கத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. பெருவழக்கொழிந்து போய், வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஓர் எழுத்து முறை கோடிக்கணக்கான தமிழர்கள் அன்றாடம் புழங்கும் எழுத்து முறையை அழித்து விடும் என்று பூச்சாண்டி காட்டுவது விந்தையாக இருக்கிறது.

தமிழ் வீடு ஆங்கிலத்தீயால் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது தோட்டத்தின் ஒரு மூலையில் வாடிக் கிடக்கும் கிரந்தச் செடியில் ஒரே ஒரு இலை தளிர் விட்டிருப்பதைப் பார்த்துக் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவது பொருளற்றது.

கிபி ஆறாம் நூற்றாண்டில் தோன்றி,  அரசுக் கல்வெட்டு உரைநடையில் தமிழோடு கிரந்த எழுத்துகள் கலந்திருந்தாலும் கூட கிபி பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியத்தில் கலக்காத கிரந்த எழுத்துகள் எப்போது தமிழ் இலக்கியத்தில் நுழைந்தன?

மஹேந்திரவர்ம பல்லவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், என்று அரசர்களின் பெயர்களில் எல்லாம் கூடக் கிரந்தம் கோலோச்சியிருந்தும் தமிழ்ப் புலவர்கள் நாவில் ஏன் கிரந்தம் நடமாடவில்லை?  பின்னர் எப்படி வழக்கில் வந்தது?  ராஜராஜன் என்ற பட்டப் பெயரால் அழைக்கப் படும் அருண்மொழிவர்மன் தன்னால் கட்டப் பட்ட மாபெரும் தஞ்சைக் கோவிலுக்குப் “பெருவுடையார் கோவில்” என்றே பெயர் வைத்தான், அதைப் பொறித்தும் வைத்தான்.  அது பின்னாளிலும், இந்நாளிலும் மட்டுமே பிருகதீஸ்வரர் கோவில் என்றாயிற்று.  கம்பனின் இராமகாதையில் இல்லாத கிரந்தம், பின்னாளில் அருணகிரிநாதரின் திருப்புகழில் மணிப்பவழமாகப் புழங்குவதற்கு என்ன காரணம்?  தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் எழுந்த பண்பாட்டு மாற்றங்களை விட, கிரந்தம் என்ற எழுத்துமுறைதான் இதற்குக் காரணம் என்று சொல்வது ஏற்புடையதாகுமா?




மலையாளம் தமிழிலிருந்து பிரிந்ததற்கும், சேரநாட்டின்  தமிழர்கள் இன்று வேற்று ஆட்களாக, மலையாளிகளாகப் பிரிந்து போய் தமிழருடன் முரண்படுவதற்கும் கிரந்த எழுத்துமுறையைக் காரணம் காட்டுகிறார்கள்.  சோழப் பெருவேந்தர்களின் நூறாண்டுப் போர்கள், அடக்குமுறை, பிற சமயங்களின் தாக்கம், வந்தேறிகளின் பண்பாட்டுக் கலப்பு, கடலோடி வணிகம், சேர மன்னர்களின் வீழ்ச்சி இன்ன பிறவற்றால் நேரிட்டவற்றை விட கிரந்தக் குறியீட்டால் மட்டும் சேரத் தமிழர்கள் மலையாளிகளாய்ப் பிரிந்தார்கள் என்று சொல்லுவது ஏற்புடையதல்ல.

கிரந்தக் குறியீடுகள் தமிழர்கள் மொழியில் எழுத்தில் ஊடுருவ முடியும் என்றால், அது பண்பாட்டு மாற்றங்கள் இல்லாமல் முடியாது.  அத்தகைய பண்பாட்டுப் போர்களை, அந்தப் புலனத்தில்தான் எதிர்கொள்ள வேண்டும். பண்பாட்டுப் போர்களில் தொழில்நுட்பங்களைக் கேடயமாகவோ, வாளாகவோ புழங்குவதால் ஏதும் பொருளில்லை. 

இதனால், யூனிகோடு கிரந்த முன்மொழிவுகளில் பிழைகள் இல்லை என்று பொருளல்ல.  பொய்யான வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் தமிழ் எழுத்துக் குறியீடுகள் ஏழை கிரந்த முன்மொழிவில் இணைத்திருக்கும் செயலை அறிவுசார் புலனத்தில் சரியான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும். 

எந்த எழுத்துமுறையும், தனது இயல்பான மொழியல்லாத வேற்றுமொழிகளைக் குறிப்பதில் அந்தந்த மொழிகளின் இயல்பான எழுத்துமுறைக்கு இணையான ஆற்றல் பெற்றிருக்கவியலாது. கிரந்த எழுத்துமுறை தனது இயல்பான மொழியான சமஸ்கிருதத்தைத் தவிர்த்த மற்ற மொழிகளைக் குறிப்பிடுவதில் மலையாளம், தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளிலிருந்து எழுத்துகளைக் கூட்டிக் கொண்டே போவதில் பொருளில்லை. இந்தக் கருத்தைக் கிரந்தத்தில் பிறமொழி எழுத்துகளைச் சேர்ப்பதை எதிர்த்து வடமொழி வல்லுநர்களே யூனிகோடு நுட்பக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.  அவர்கள் சொல்லும் அதே கருத்து தமிழ் மொழியை எழுதுவதற்காக உள்ள தமிழ் எழுத்து முறைக்கும் பொருந்தும்.

தமிழ் எழுத்துகளுக்குள் புதிய வேற்றுமொழி எழுத்துகளும் வர வேண்டியதில்லை.  கிரந்த எழுத்துகளுக்குள் புதிதாகத் தமிழ்/மலையாள எழுத்துகளையும் சேர்க்க வேண்டியதில்லை.  இதைத் தெளிவாக யூனிகோடு குழுவுக்குச் சொல்வதற்குத் தக்க அறிவுசார் கருத்துகளைத் தெரிவிப்பதுதான் தமிழுக்கும், தமிழர்களின் பண்பாட்டுக்கும் பொருந்தும்.  அதை விடுத்துவிட்டு, எதற்கெடுத்தாலும், தமிழ் அழிப்பு என்று உணர்ச்சிவயப் பட்டு பூச்சாண்டி காட்டுவது, அறிவுசார் புலனத்துக்கு ஏற்றதல்ல.  அத்தகைய செயல்களால் தமிழ் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களை வெற்றுக் கூக்குரல்கள் என்று அறிவுசார் அமைப்புகள் ஒதுக்குவதற்கு வழிவகுக்கும்.  அது தேவையும் இல்லை.

நம் தாய்மொழி தமிழை நோஞ்சான் என்று கருதும் தன்னம்பிக்கை அற்ற அஞ்சுநெஞ்சர்களைப் பார்த்துப் பரிவு கொள்ளத்தான் தோன்றுகிறது.

“சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா” பாடல் நினைவுக்கு வருகிறது. 

.....  வார்த்தைகளை
வேடிக்கைக்காகக் கூட நம்பி விடாதே
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே நீ வெம்பி விடாதே!

என்ன தன்னம்பிக்கையுள்ள பாடல்!  எங்கே போயிற்று அந்த வீரம்?

வெள்ளி, டிசம்பர் 10, 2010

பாரதியின் வாக்கு - தமிழன்னை புகழ் ஏறி என்றும் புவிமிசை இருப்பாள்

 இன்று, டிசம்பர் 11.  தமிழன்னையின் தவப்புதல்வன் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள்.
 
இந்தியாவுக்கு விடுதலை என்பதே முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப் படுவது போல், கானல் நீராய், பொய்யாய் வெறுங்கனவாய் இருந்த கொடுமையான காலத்திலேயே
 
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”
 
என்று கொண்டாடிய தன்னம்பிக்கைக் கவிஞன் பாரதி.
 
அடிமைச் சங்கிலிகளால் பிணிக்கப் பட்டு கட்டுண்ட காலத்திலேயே
 
 ”வெள்ளிப் பனிமலை மீதுலவுவோம் அடி
  மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”
 
என்று ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிக் கனாக் கண்டவன் பாரதி.
 
ஆனால், அப்படிப் பட்ட மாபெரும் கவிஞனின் எண்ணற்ற தன்னம்பிக்கைப் பாடல்கள் ஒரு புறம் இருக்க,  தமிழில் ஒன்றும் இல்லை, மேலை நாட்டு மொழிகளே ஓங்கி வளரும், ஆனால் “மெல்லத் தமிழினிச் சாகும்” என்று அறியாப் பேதை ஒருவன் கூறத்தகாத சொல்லைக் கூறினானே என்று தமிழன்னை துடித்துப் போவதாக எழுதிய பாடலில் வரும் கூறத்தகாத கூற்றையே பலர் பிடித்துக் கொண்டு உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
 
 பாரதியின் பிறந்த நாள் அன்று ”தமிழ் இனி மெல்லச் சாகும் விழித்திடு தமிழா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது.  அதைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்: 

http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/c8e8ecdc154abe71#

ஆட்சி மொழியாக இல்லாத மொழிகள், அடுக்களை மொழிகள் மெல்ல மெல்ல அழிந்து மறைந்திடும் என்பது உண்மைதான் என்றாலும், இது போன்ற மிரட்டல் கட்டுரை அப்படிப் பட்ட அழிவுக்கு வித்திடுமே ஒழிய வாழ்வுக்கு வழி வகுக்காது என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.
 
ஒரு மொழி அழிந்து கொண்டு இருக்கிறது என்றால் அதைக் கற்பவர்கள் எண்ணிக்கை குறையுமே ஒழியக் கூடாது. 
 
முன்னெப்போதையும் விட இப்போது தமிழ் பல்லாயிரக் கணக்கானவர்களுக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.  முன்னெப்போதையும் விட பல்லாயிரக் கணக்கணவர்கள் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழில் இல்லாத தலைப்புகளே இல்லை என்னும் அளவுக்கு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உட்பட, உலகில் வெளிவந்துள்ள எந்த நூலாக இருந்தாலும் அதைப் படித்துக் கருத்துரைக்கும் தமிழ்ப் பதிவர்கள் இருக்கிறார்கள்.  உலகத் திரைப்படங்களை அலசும் பதிவுகள் ஆயிரக் கணக்கானவை.  அரசியல் தமிழனுக்கு மூச்சு போல.
 
தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் தமிழ்ச் சூழலில் வாழ்கிறார்கள்.  இங்கே செந்தமிழ் நடையில் அரசு அறிவிப்புப் பலகைகள் உள்ளன.  செந்தமிழ் நடையில் எண்ணற்ற நூல்கள், தாளிகைகள் வெளிவருகின்றன.
 
ஆட்சி மொழியிலும், சட்ட மன்ற மொழியிலும், அரசு அலுவலகங்களிலு, நீதி மன்றங்களிலும் தமிழ் இன்னும் மேம்படலாம், மேம்பட வேண்டும்.
 
வெல்லத் தமிழ் இனி வெல்லும் என்று பறை சாற்றுவார் சிங்கைத் தமிழர் மா. கோ.  தமிழின் பெருமை அதன் தொன்மையில் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது என்று முழங்கினார் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன்.  தமிழால் வாழ்வோர் எண்ணிக்கை கூடிக்கொண்டு வரும் காலத்தில் தன்னம்பிக்கை மிக்க வருங்காலத்தை வரவேற்போம்.
 
தமிழை மேம்படுத்துவது நம் பொறுப்பு. அதைச் செவ்வனே செய்வோம்.  மற்றவர்களுக்கும் தமிழ் மீது நம்பிக்கை வரவழைப்போம்.  இது அழிந்து கொண்டு இருக்கும் மொழி என்ற நம்பிக்கையற்ற பேச்சு நம்மைத் தளரச் செய்வது.
 
பாரதியின் பாடலிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு நம்பிக்கையிழந்து திரிய வேண்டாம்.
 
அவ்வாறு தமிழைத் தூற்றுபவன் ஒரு பேதை என்றே கடிந்தார் பாரதி.
 
”கொன்றிடும்போல் ஒரு வார்த்தை” என்று இந்தக் கூற்றைச் சாடுகிறார்.  “கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்” என்று சொன்னவனைக் கடிகிறார் பாரதி.
 
இந்த வசை எனக்கெய்திடலாமோ? என்று தமிழன்னை தமிழர்களிடம் கேட்பதாகச் சொல்கிறார்.
 
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
 செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
 
என்று தமிழன்னை தன் செல்வங்களுக்குக் கட்டளை இடுகிறாள்.
 
தந்தை அருள்வலியாலும் - இன்று
 சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
  ஏறிப் புவிமிசை என்றுமிருப்பேன்
 
என்று தன்னம்பிக்கையோடு நிறைவு பெரும் பாரதியாரின் பாடலில் வரும் பேதையின் கூற்றையே நம் பிடித்துக் கொண்டிருப்பது பாரதியை நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கே அடையாளம்.  இந்தியாவுக்கு விடுதலை என்பதே பொய்யாய் வெறுங்கனவாய் இருந்த கொடுமையான காலத்திலேயே
 
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”
 
என்று கொண்டாடிய தன்னம்பிக்கைக் கவிஞன் பாரதி.
 
அடிமைச் சங்கிலிகளால் பிணிக்கப் பட்டு கட்டுண்ட காலத்திலேயே
 
 ”வெள்ளிப் பனிமலை மீதுலவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”
 
என்று ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிக் கனாக் கண்டவன் பாரதி.
 
தமிழன்னை புகழ் ஏறி என்றும் புவிமிசை இருப்பாள் என்பதே கவிஞனின் வாக்கு.  அந்த வாக்கு நனவாக வேண்டுமென்றால் தமிழன்னையின் மக்கள் எல்லோரும் ஒருமித்து உழைக்க வேண்டும் என்பதே அவன் கட்டளை.
 
செய்வோம்.
 
என்றுமுள்ள தென் தமிழ் என்று கம்பன் கொண்டாடிய தமிழை, என்றும் புவிமிசை இருப்பாள் என்று பாரதி கொண்டாடிய தமிழன்னையைப் போற்றுபவர்கள், வாரத்துக்கு ஒரு புதுக் கட்டுரை, தமிழில் இல்லாத ஒரு கருத்தை, கலைச் செல்வத்தை, தமிழில் மொழி பெயர்த்துக் கொடுப்போம்.
 
வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம்.  விக்கிப்பீடியா காத்திருக்கிறது.

சனி, நவம்பர் 27, 2010

தொன்மைத்தமிழின் தொடர்ச்சி

தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்கக் கூடாது என்ற அக்கறை உள்ள சிலர் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு மடலாடற்குழு ஒன்றை அமைத்தனர்.  எழுத்துச் சீர்குலைப்பு முயற்சிகளைப் பல ஆண்டுகளாய் எதிர்த்து வரும் நானும் அதில் ஒரு தொடக்கநாள் உறுப்பினன்.  நேற்று அக்குழுவுக்கு அண்மையில் இன்னொரு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய நூல் ஒன்றுக்கு இந்து நாளேட்டில் மதிப்புரை தந்திருந்த சுட்டியை ( http://www.hindu.com/br/2010/08/17/stories/2010081751151300.htm ) அனுப்பினேன்.

எழுத்துச் சீரழிப்பு முயற்சிகளை நான் எதிர்த்து வந்திருக்கும் வரலாறு தெரியாத ஒரு தமிழ்ப் புலவர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு  “ஆட்டைக் கடிச்சு.. மாட்டைக் கடிச்சு.. “ என்ற தலைப்பில் இணைய வரலாற்றின் தொல்பழங்காலத்துச் சிரிப்புத் துணுக்கு ஒன்றை அனுப்பி வைத்தார்.  அதில் ஆங்கிலம் எப்படி ஒரு சில எழுத்துகளை மாற்றிய பின்பு ஜெர்மன் மொழி போல் ஆகிவிடுகிறது என்பதை நகைச்சுவையாக எழுதியிருப்பார்கள்.

சிரிப்புதான்.  ஆனால், இதிலும் ஒரு நுட்பம் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. இது ஜெர்மானியர்களைக் கிண்டல் செய்வது போல் அமைந்திருந்தாலும்,  உண்மையில் ஆங்கிலம் ஒரு ஜெர்மானியக் கிளைமொழிதான் என்பதை மறக்கக் கூடாது.

ஆங்கிலத்தில் கிரேக்க, லத்தீன வேர்ச்சொல்களைக் களைந்து எடுத்து பழைய
ஆங்கிலமொழிக்குப் போவோம் என்று யாரேனும் தனி ஆங்கில உணர்வாளர்கள் முயல்வார்களே ஆனால், அது கிட்டத்தட்ட ஜெர்மன் போல்தான் இருக்கும்.

இருப்பதிலேயே மிகப் பழைய ஆங்கில இலக்கியம் பத்தாம் நூற்றாண்டுக்கு
முன்னர் எழுந்த பெஓவுல்ஃப் (beowulf) என்பது.  இத்தனைக்கும், அதில்
கிரேக்கமும், லத்தீன வேர்களும் கலந்துதான் உள்ளன.  அதன் மூல வடிவைப்
பார்க்க http://www.humanities.mcmaster.ca/~beowulf/main.html என்ற சுட்டியில்
old text என்பதைத் தெரிவு செய்யவும்.  பின்னர் பழைய ஆங்கில வடிவில் பார்க்கலாம்.  அப்படிப் பார்த்தால் அது இப்படித்தான் இருக்கும்:

Ða wæs on burgum         Beowulf Scyldinga,
leof leodcyning,         longe þrage
folcum gefræge         (fæder ellor hwearf,
aldor of earde),         oþþæt him eft onwoc
heah Healfdene;         heold þenden lifde,
gamol ond guðreouw,         glæde Scyldingas.
ðæm feower bearn         forð gerimed
in worold wocun,         weoroda ræswan,
Heorogar ond Hroðgar         ond Halga til;

பதினான்காம் நூற்றாண்டின் சாசர் இயற்றிய கேன்டர்பரி டேல்ஸ் என்ற இலக்கியம் இடைக்கால ஆங்கிலத்தில் இருக்கும்.  அதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள இயலும்.


Whyt was hir smok and brouded al bifore ...
Her filet brood of silk, and set ful hye:
And certainly she hadde a lecherous ye
She was ful more blisful on to see
than is the new pear tree


ஆங்கிலம் மட்டுமல்ல, உலகின் பல மொழிகளின் தொல்லிலக்கியங்களை இன்று வாழும் அவர்கள் கொடிமரபினர் புரிந்து கொள்ள முடிவதில்லை.  பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல என்ற கோட்பாட்டை
ஆழமாகப் பின்பற்றியதாலோ என்னவோ, பல மொழிகளின் தன்மை மிகவும் மாறியதால் மூல மொழி கிட்டத்தட்ட வேற்று மொழியாகவே மாறி அடையாளம் தெரியாமல் போய் விட்டிருக்கிறது.

ஆனால், தமிழ் அப்படி அல்ல.  மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வந்திருந்த போதிலும், தொன்மைத் தமிழ் வியக்கத் தக்க வகையில் தொடர்ந்து வருகிறது.   பத்தாம் நூற்றாண்டுத் தமிழை  மட்டுமல்ல,  2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத்தமிழையும் நம்மில் பலரால் படிக்க முடிவது மட்டுமல்ல புரிந்து கொள்ள முடிவதும் தமிழின் தொடர்ச்சிக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு.




“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”

என்ற சங்கப் பாடலை நாம் பள்ளியில் படிக்கிறோம்.  இதைப் படிக்கும்போது சங்கத் தமிழில் முறையான பயிற்சி இல்லாமலேயே நம்மால் அச்சொற்களை அடையாளம் காண முடிகிறது.  பொருளையும் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. அண்மையில் நடந்து நிறைவேறிய செம்மொழி மாநாட்டின் கருப்பொருள் பாடலே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றுதான் தொடங்குகிறது!  ஈராயிரம் ஆண்டுத் தொடர்ச்சியுள்ள பாடல் வரிகள் நம்மை இன்னும் ஈர்க்கின்றன.



வள்ளல் பாரியின் பறம்புமலையைத் தமிழ் வேந்தர் மூவரும் சூழ்ந்து முற்றுகையிட்டு அவரை வென்ற நிலையில், பாரியின் இரண்டு பெண்களும் பாடியதாக வரும் பாடல் இதோ:

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்
வென்று எரிமுரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

 இதில் வரும் சொற்கள் கவிதை நடையில் இருந்தாலும், இன்றும் வாழும் வரிகள்.  ஓரளவு பயிற்சியில் இதைப் படித்தால் ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாடல் நம் உள்ளத்தைப் பிழியும்.


சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

என்ற (குறைந்தது) 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளை எந்த உரையும் இல்லாமலேயே நம்மால் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. பல திருக்குறள்களை நாம் பேருந்துகளில் பார்க்கிறோம்.   “வாயில் தோறும் வள்ளுவம்” என்ற திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியின் அனைத்து அலுவலங்களின் வாயில்களிலும் ஒரு திருக்குறள் அதன் தெளிவுரையோடு பொறித்து வைத்திருக்கிறார்கள்.


வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன் பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண்ணகை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

என்ற பாடலை மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி அவர்கள் பாடிக்
கேட்டிருக்கிறோம். அது (குறைந்தது)  1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையின் வரிகள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நதியில் விளையாடிக் கொடியில்
தலைசீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

என்ற கண்ணதாசனின் திரைப்படப் பாடல் 1960களின் தொடக்கத்தில் பட்டி தொட்டியெல்லாம் முழங்கிய பாடல்.  இன்றும் மக்கள் கேட்டு மகிழும் பாடல்.

அண்மையில் வந்த இருவர் என்ற படத்திலும்,

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா

என்று வரும் பாடலில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாரிமகளிர் வரிகளை எடுத்தாண்டு இருந்தாலும், மக்களால் புரிந்து கொண்டு அதைக் கேட்டு மகிழ முடிகிறது.

இது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களையும் நம் சூழலில் வாழும்
மொழியாகப் படிக்க முடிகிறது என்பதற்கு மட்டுமல்ல அந்த மொழி, பண்பாட்டின் தொடர்ச்சி நம்மிடையே இன்னும் வாழ்கிறது என்பதற்கும் ஓர் எடுத்துக் காட்டு.

கடந்த 1500 ஆண்டுகளில் தமிழைச் சுற்றி எண்ணற்ற தாக்கங்கள்.  தமிழ்
மன்னர்களின் வீழ்ச்சி.  பண்பாட்டுக் கலப்புகள். பிற மொழிகளின்
தாக்கங்கள்.  ஆனால் தமிழை அரசர்கள் மட்டுமின்றி மக்களும் போற்றி வளர்த்ததன் அடையாளமே இந்தத் தொடர்ச்சிக்கு அடிப்படை.



அதனால்தான்,  பல்லவர் ஆட்சியில் கல்வெட்டு மொழி கிரந்த எழுத்துகளில் வடமொழியாக இருந்தாலும்,  பக்தி இலக்கியங்களில் கிரந்தக் கலப்பே இல்லாத தமிழே வழங்கியது.   ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டச் சங்க காலம் தொடங்கி,  12ம் நூற்றாண்டின் கம்ப ராமாயணத்துக்கும் பின்னர் வரை, பிறமொழிச் சொற்களை ஏற்றாலும் வேற்று ஒலிகளையோ, எழுத்துக்களையோ ஏற்காமலேயே தமிழ் இலக்கியம் தழைத்திருந்தது. 

தமிழ் மன்னர்களின் வீழ்ச்சி, வேற்று மொழிகளின் ஆட்சி, புலவர்களை ஆதரிக்கப் புரவலர்கள் இல்லாத நிலை என்று எத்தனையோ சிக்கல்களை எதிர் கொண்டிருந்தாலும், தமிழ் இன்றும் தொடர்கிறது.


இருப்பினும், 1500 ஆண்டுகளில் மொழியில் மாற்றம் ஏற்படுவதும் தவிர்க்க
இயலாததொன்று.  பழைய உரைகளைப் படிப்பதற்கும் பழைய செய்யுள்களைப்
படிப்பதற்கும் ஓரளவுக்காவது பயிற்சி தேவை.  நமக்கு நன்றாகத் தெரிந்தது
போல் இருக்கும் பாடல்களையும் பண்டைக் காலப் பண்பாட்டோடு புரிந்து
கொள்வதற்கும் பயிற்சி தேவை.  இலக்கண இலக்கியங்களைப் புரிந்து
கொள்வதற்கும் பயிற்சி தேவை.

இணையம் வளர்ச்சியினால் தமிழில் பயிற்சியும் பட்டமும் பெற்றவர்கள்
பெரிதும் தமிழ் மடலாடற்குழுக்களுக்குள்ளும், வலையிலும் வலம் வரும்போது, அவர்களது பயிற்சியில் பயின்றதைப் பலருக்கும் பகிர்ந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ் இணைய முன்னோடிகள் பலருக்கும் இருந்தது.

ஆனால், அப்படிப் பட்டம் பெற்ற வெகுசிலரே பண்டைத் தமிழ் நூல்களை இன்றைய தமிழருக்கும் அறிமுகப் படுத்தித் தமிழைப் பரப்பும் பணியில்
ஈடுபடுகின்றனர்.  தொல்காப்பியத்திலும், நன்னூலிலும் எண்ணற்ற செய்திகள்
உள்ளன.  சங்க இலக்கியங்களை எடுத்துக் கொண்டால், நாளும் ஒரு பாடல் என்று விளக்கிக் கொண்டே போகலாம்.  தமிழில் பட்டம் பெறாத எழுத்தாளர்கள்
சுஜாதாவும், ஜெயமோகனும் எழுதிய அளவு கூட தமிழ்ப் புலவர்கள் எழுதி நான்
பார்த்ததில்லை.

உண்மையான தமிழ்ப் பணி தமக்குத் தெரிந்த தமிழைப் பகிர்ந்து கொள்வதுதான். தமிழ்ப் புலவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது குறைந்தது அவ்வளவுதான்.  ஆனால், தமிழில் பட்டம் பெறாதவர்களும் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து கருத்துப் பரிமாறிக் கொள்ள இணையம் வழி காட்டுகிறது என்பதில் நமக்கு ஆறுதல்.  இந்த இணையப் பரிமாற்றம் இருப்பதால்தான், புலம்பெயர்ந்த தமிழர்களால் தமிழின் விழுதுகளாக இயங்க முடிகிறது.





தொன்மைத் தமிழின் தொடர்ச்சியால்தான்,  வட்டார வழக்குகளால் சிதறுண்டு கிளைமொழிகளாய்த் துண்டாகாமல், நம் உரைநடைத் தமிழால், பொதுமொழி வழக்கால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருடனும் ஊடாட முடிகிறது. 

எழுத்துகளை மாற்ற வேண்டும் என்று துடிப்பவர்களும், புதிய ஒலிகளைக் கூட்ட வேண்டும் என்று முயல்பவர்களும் அத்தகைய “சீர்திருத்தங்கள்” தொன்மைத் தமிழின் தொடர்ச்சியின் ஆணி வேரையே பெயர்த்தெடுத்துவிடும் என்பதைப் பற்றிக் கவலைப் படுகிறார்களா எனத் தெரியவில்லை.



எபிரேய மொழியை மீட்ட யூதர்களும், வடமொழியை வாழ வைக்க முயலும் இந்திய அரசும், இந்தத் தொன்மையின் தொடர்ச்சி அறுந்தால் மீட்பது எவ்வளவு கடினம் என்பதை நன்றாக உணர்ந்தவர்கள்.  காளிதாசனின் ஒப்பற்ற காவியங்களை மூல மொழியிலேயே படித்துச் சுவைக்கக் கூடியவர்கள் குறைவு.  ஆனால், எத்தனை இன்னல்களுக்கு நடுவிலும், கம்பன் விழா கொண்டாடித் தமிழை வளர்க்கும் ஈழத்தமிழர்களோடு, புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கம்பனை இன்றும் கொண்டாடுகிறோம். சிலப்பதிகார நாட்டிய நாடகங்கள் நம்மை இன்னும் ஈர்ப்பவை. சங்கப் பாடல்களின் செறிவை தற்காலப் புதுக்கவிதைகளும் எட்டவில்லை.

நம் முன்னோர்கள் நமக்கு ஒரு பெரும் கருவூலத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  ஆனால், பழையதை விடப் புதியதன் மேல் நமக்குள்ள ஈர்ப்பால் நம் மரபைப் புறக்கணிக்கிறோம்.  மரபின் அருமை தெரிந்தவர்களுடன் பழகி வரலாறு கற்றுத் தந்த பாடங்களையும் மறக்காமல் இருப்போமாக.

வெள்ளி, நவம்பர் 26, 2010

ஏழை மாணவர்களை மட்டும் தமிழ்வழிப் பள்ளிகளில் படிக்க வைப்பது கொடுமையா?

இன்று நண்பர் இண்டிராம் தமிழ் உலகம் மடலாடற்குழுவில் ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தார்.  (இது பல ஆண்டுகளாய் அவர் வலியுறுத்தி வரும் செய்திதான் என்றாலும், இன்று அவர் கோணம் “கொடுமை” என்பதை வலியுறுத்தியுள்ளது. ) முதலில் அவர் தமிழ் உலகம் குழுமத்தில் என்ன எழுதினார் என்று பார்ப்போம்.

On Nov 26, 10:18 am, indyram wrote:
> நண்பர்களே
>
> தற்காலத் தமிழ் நாட்டில் நடுத்தர வகுப்பினர், பணவசதியுள்ளோர், அரசு
> அதிகாரிகள் எல்லோரும்  தங்களது குழந்தைகளை ஆங்கில மெட்ரிகுலேஷன்
> பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
>
> ஆனால் அரசதிகாரிகள்   தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர்கள்தமிழ் தான்
> பயிலவேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.
>
> ஆங்கில வழி கல்வி நிலையங்களெல்லாம் தனியார் நிறுவனங்கள்.
> அவைகளில் படிக்க டுயூஷன் (கல்விகட்டணம்)  கட்டவேண்டும். ஏழை
> மாணாக்கர்களின் பெற்றோர்களால் அதை செய்யமுடியாது. ஆகவே அவர்களெல்லாம்
> அரசு இலவசப்பள்ளிகளில்தான் படிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
>
> தமிழக 231 எம் எல் ஏக்களில் 181 பேர்களின் குழந்தைகளும்
> பேரக்குழந்தைகளும் ஆங்கில வழி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தான்
> பயிலுகிறார்கள் என்ற தகவலை பத்ரிகைகள் வெளிப்ப்டுத்தியுள்ளன
>
> தற்காலத்தில் தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலை பெற வேண்டுமானால்
> திறமையான ஆங்கில அறிவு தேவை.
> இதை  எல்லா பெற்றோர்களுக்கும்  உணர்ந்துள்ளனர்.
> ஏழை மாணவர்களின் பெற்றோர்களும் இதை அறிந்துள்ளனர்.
> ஆனால் அவர்களிடம் தங்கள் குழந்தைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்
> படிக்கவைக்க பணவசதியில்லை
>
> கர்நாடக மாநிலத்திலும் இதே நிலமை தான். ஆனால் அங்குள்ள ஏழை மக்களெல்லாம்
> அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலத்தில் பயில வசதி செய்யவேண்டும் என்று
> போராட்டம் செய்து வருகிறார்களாம்.
>
> தமிழக ஏழை மக்கள் வாழ்க்கையில் உயரவேண்டுமானால் தங்களது குழந்தைகள்
> ஆங்கில வழியில் பயில உதவவேண்டும் என்று கோரிக்கைவைக்கவேண்டும்.
>
> மனசாட்சியுள்ள நடுத்தர வகுப்பினர் இதற்கு ஆதரவளிக்கவேண்டும்
>
> 50 வருடங்களுக்கு முன் நான் தமிழ்வழியில் தான் பயின்றேன். இப்போது காலம்
> மாறிவிட்டது. இப்போதைய மாணவனாக நான் இருந்திருந்தேனானால் நானும்
> ஆங்கிலவழியில் தான் பயில விரும்புவேன்



நான் அவருக்கு அளித்த மறுமொழி:

தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில வழிப்பள்ளிகள் மட்டுமல்ல, பல ஆங்கில வழிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் கூடப் பெயருக்குத்தான் ஆங்கில வழிக் கல்வி.  ஆங்கிலம் இந்தியாவைப் பொருத்தவரையில் இரண்டாம் மொழி.  ஆனால், ஆங்கிலத்தை முறையாக இரண்டாம் மொழிக் கல்வி முறைப்படி (English as a Second Language ESL) கற்பிக்காமல், அதை முதல் மொழி போல் கற்பிப்பதால் ஆங்கில மொழிப் புலமையே பலருக்கு இல்லை.  ஆங்கில மொழியே தகராறாக இருக்கும்போது ஆங்கில மொழி வழிக் கல்வியிலும் சிக்கல்தான்.  பெயருக்கு ஆங்கில வழி என்றாலும், பாடங்கள் நடத்துவது பல வகுப்புகளில் தமிழிலும்தான்.  அது மட்டுமல்ல, தேர்வுகளில் விடை அளிக்கும் போது தமிழிலும் விடையளிக்கலாம் என்ற வாய்ப்பு இருப்பதை மாணவர்கள் சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆங்கில வழிப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்த மாணவர்கள் பலருக்கும் ஆங்கிலத்தில் தங்கு தடையில்லாமல் பேசவோ, பிழையில்லாமல் எழுதவோ தெரிவதில்லை.  பிறர் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதிலும் அவர்களுக்குச் சிக்கல் இருக்கிறது.  இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளி மாநிலங்களிலும் உள்ள கதைதான்.  இவர்களுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், தங்கள் தாய்மொழியிலும் நன்றாகப் பேச, எழுதத் தெரிவதில்லை.  ஆங்கில வழிப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் பலருக்கும் ஆங்கிலப் புலமை இருப்பதில்லை. “பட்லர்” இங்கிலிஷ், “சட்டக்காரி” தமிழ் பேசும் நிலைமைக்கு இழிந்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் பயில்பவர்களிடையே டிஸ்லெக்சியா என்னும் எழுத்துக் குழப்பம் அதிகமாகக் காணப் படுகிறது.  எழுத்துக்கும் ஒலிக்கும் நெருங்கிய தொடர்புள்ள இந்திய எழுத்து முறைகளில் (deep orthography) அவ்வளவாகக் காணப் படாத டிஸ்லெக்சியா, எழுத்துக்கும் ஒலிக்கும் தொடர்பு குன்றிய ஆங்கில எழுத்து முறை (shallow orthography) உள்ள நாடுகளில் கூடுதலாகக் காணப் படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். (http://en.wikipedia.org/wiki/Orthographies_and_dyslexia#The_effects_of_orthographic_depth_on_dyslexia)  டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகள் படிப்பதில் விருப்பம் இல்லாதவர்களாகக் காணப் படுகிறார்கள். அமெரிக்காவில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு டிஸ்லெக்சியா உள்ளது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது (http://www.readfaster.com/education_stats.asp).  தமிழகத்தில், தமிழ் வழிப் பள்ளிகளில் டிஸ்லெக்சியாவைக் காண்பது மிக அரிது.  டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளும் இந்திய எழுத்து முறைகளால் கற்க முடிகிறது என்பதைப் பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.

தமிழ்வழிப் பள்ளிகளை ஒழித்து விட்டு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றினால், பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டுத் தற்குறிகளாக மாறக் கூடுவோர் எண்ணிக்கை மூன்றில் ஒருவராகக் கூட மாறலாம் என்பது அமெரிக்கப் புள்ளி விவரத்தோடு ஒப்பிட்டால் தெரியவரும்.

சில சிறிய மாவட்டப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றி அவற்றில் மாணவர்கள் படிப்பு நிலை உயர்கிறதா என்று பார்த்து, அவற்றில் டிஸ்லெக்சியாவின் அறிகுறிகள் தென்படுகின்றனவா போன்ற புள்ளி விவரங்களைத் திரட்டிய பின்னரே ஆங்கில வழிப் பள்ளிகளால் வாழ்க்கை நிலை உயருமா என்று அறிய முடியும்.

இன்றைய நிலையில் கல்வி நிலையில் உயர்ந்திருப்பவர்கள் கல்விக்குச் செலவிடும் பொருள், நேரம், அக்கறையால் உயர்ந்திருப்பவர்கள் கூடுதலே தவிர இவர்கள் ஆங்கில வழிக்கல்வியால் மட்டும் உயர்ந்திருக்கிறார்கள் என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை.

மேம்போக்காகப் பார்க்கும் போது தலைசிறந்த ஆசிரியர்கள், தலைசிறந்த மாணவர்கள் திரண்டிருக்கும் பள்ளிகள் பெரும்பாலும் ஆங்கில வழிப் பள்ளிகளாக இருப்பதைப் பார்த்து, எல்லாப் பள்ளிகளையும் ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றினால் பெரும் வெற்றி கிடைக்கும் என்பது தோன்றலாம்.  ஆனால், இதற்குச் சான்றுகள் குறைவு.  ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு இருக்கும் முதலீடு தமிழ் வழிப்பள்ளிகளுக்கும் இருந்தால் அவற்றாலும் பெரும் வெற்றி அடைய முடியும்.

எது எப்படி இருப்பினும், தமிழ்நாட்டில் ஆங்கிலம் கற்பிக்கும் முறை இரண்டாம் மொழிக் கல்வி முறையைப் பின்பற்றினால், ஆங்கிலத்தில் புலமை கூடும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் எழுத்துகளில் டிஸ்லெக்சியா


 கீழ்க்கண்ட கடிதத்தை மின் தமிழ், தமிழ் மன்றம், தமிழ் உலகம் என்ற மடலாடற்குழுக்களுக்கு அனுப்பி இருந்தேன்.  முதலில் கடிதத்தையும் பின்னர், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் தருகிறேன்.  


டிஸ்லெக்சியா (Dyslexia) என்னும் எழுத்துக்குழப்பம் சிலருக்கு இருக்கிறது.  பொதுவாக இந்திய  மொழிகளின் எழுத்துகள் ஒலியன் அடிப்படையில் அமைந்திருப்பதால் அத்தகைய  குழப்பங்கள் குறைவு.  இந்தக் குழப்பங்கள் இடவல மாற்றங்களாலும் நடப்பவை.  தமிழ்  எழுத்துகள் பெரும்பாலும் இட வல மாற்றம் ஆனாலும், வேறு எழுத்தோடு குழம்ப வாய்ப்பில்லை.  ஆங்கிலத்தில் b என்ற எழுத்தும் d எழுத்தும் இட வல மாற்றம் நேர்ந்தால் குழம்பிக் கொள்ள நேரிடும். 


தமிழ்நாட்டில் என்னுடன் பள்ளியில் படித்தவர்கள் எவருக்கும் இத்தகைய எழுத்துக் குழப்பம் இருந்ததில்லை. அமெரிக்காவில் இது சற்றுக் கூடுதல். (பார்க்க: http://www.readfaster.com/education_stats.asp ).  ஏனென்றால் ஆங்கிலத்தின் எழுத்து முறை அப்படிப் பட்டது.  ஒலிப்புக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு மேம்போக்கானது (Orthographically shallow).  இந்திய எழுத்துகள் பொதுவாக ஒலிப்புக்கும் எழுத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவை. (Orthographically deep). ஆனாலும், அவற்றிலும் சிக்கல்கள் உள்ளன.  தேவநாகரியில் கூட்டெழுத்துகள் ஏராளம்.  அவை அனைத்தையும் மனனம் செய்வது சற்றுக் கடினம்.  அவற்றிலும் இட வல மாற்றக் குழப்பங்கள் நேரிடலாம்.  தமிழ் எழுத்துகள் பல ஒலியன்களைச் சுட்டக் கூடியவை. காக்கை, காகம், தங்கம், சென்னை, பச்சை, பசை, இஞ்சி என்ற சொற்களில் க, ச என்ற எழுத்துகளின் ஒலியன்கள் இடத்துக்கு ஏற்றவாறு மாறுபவை.  இதைத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எளிதில் கற்றுக் கொண்டாலும், தமிழை மூன்றாம் மொழியாகக் கற்கும் பிறநாட்டினருக்கு இது குழப்பம் தரும்.  இத் தன்மையால் எழுத்துக் குழப்பமும் வரலாம். 


பொதுவாக  Orthographically deep script இருக்கும் மொழியில் டிஸ்லெக்சியா  குறைவு. Orthographically shallow script உள்ள மொழியில் கூடுதல். (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Orthographies_and_dyslexia#The_effects_of_orthographic_depth_on_dyslexia )  ஆங்கிலம், இத்தாலிய மொழி இரண்டுக்கும் எழுத்து பொதுவாக இருந்தாலும், இத்தாலிய மொழியில் எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு சற்று நெருக்கமே.  ஆனால், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் லத்தீன் எழுத்துகளை இரவல் வாங்கியதால் அவற்றில் ஒலிக்கும் எழுத்துக்கும் உள்ள நெருக்கம் குறைவு.  எனவே இவற்றில் எழுத்துகள் Orthographically shallow என்பார்கள்.  அதனால் இத்தாலிய மொழியை விட பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் எழுத்துக் குழப்பம் கூடுதலாக இருக்கும். 

தற்போது இந்தியாவில் பல இடங்களிலும் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா நோய் இருப்பதைக் கண்டு பிடித்து அதற்கு ஏற்ற முறைகளில் கற்பிக்க முயன்று வருகிறார்கள்.  அதில் தமிழ்க் குழந்தைகளையும் பிற நாட்டுக் குழந்தைகளோடு ஒப்பிட்டு வருகிறார்கள்.  ஆனால் இத்தகைய ஆராய்ச்சிகளில் இந்தக் குழந்தைகளுக்குத் தமிழில் எழுதும்போது எழுத்துக் குழப்பம், டிஸ்லெக்சியா இருக்கிறதா என்று ஆய்பவர்கள் வெகு சிலரே.


எம்.ஜி.ஆர். தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்த பிறகு, தமிழில்
டிஸ்லெக்சியா கூடி இருக்க வேண்டும்.  னை,ணை,லை போன்ற எழுத்துகள் எழுத்துக் குழப்பத்தைக் கொடுப்பவை.  பழைய எழுத்து முறையில் இத்தகைய குழப்பங்கள் வராது. இது போதாது என்று இன்னும் எழுத்துச் சீர்திருத்தம் செய்தால் குழந்தைகள் கற்பது எளிதாகும் என்பவர்கள், இந்த டிஸ்லெக்சியா பற்றிய ஆராய்ச்சியைப் படித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இதன் தொடர்பாக, தமிழில் இட வல மாற்ற எழுத்துக் குழப்பங்களைக் காணும்போதெல்லாம் நான் திரட்டத் தொடங்கியுள்ளேன்.


இன்று கூட ஒரு கடிதத்தில் தருகிறேன் என்பதற்கு தருகேரீன் என்று ஒருவர்
எழுதியிருந்தார். இது போல எழுத்துக் குழப்பங்கள் தங்கள் கண்களில் பட்டால் எனக்குத் தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.


பின்னூட்டங்களிலிருந்து வெட்டி ஒட்டியவை:


From: தாரகை Date: Nov 21, 2:09 am

காலத்தின் தேவையை அறிந்த மணியான இழை:-)

Dyslexia- defining a learning disability that impairs a person's ability to read and which can manifest itself as a difficulty with phonological awareness, phonological decoding, orthographic coding, auditory short-term memory, and/or rapid naming. (http://en.wikipedia.org/wiki/Dyslexia )

Dyslexia- எழுத்துக்குழப்பம் என்பதைவிட சொல்யெழுத்துக்கேடு எனலாம்.

> இது போல எழுத்துக் குழப்பங்கள் தங்கள் கண்களில் பட்டால் எனக்குத் தெரிவித்தால்
> நன்றியுடையவனாக இருப்பேன்.

பரவலாக உள்ளது.

தேவைப்படுமின், அடியேனின் இழைகள் சிலவற்றில் காணலாம்:-)



---------- ----------
From: Rajam Date: Nov 21, 2:29 am

//Dyslexia //

ஹ்ம்ம்ம்ம்... இதெ வேறெ  எங்கெயோ வேற மாதிரிக்  கேட்டமாதிரி இருக்கே, 
எங்க மொழியியல்  வகுப்பில் தொடங்கி:

http://en.wikipedia.org/wiki/Metathesis_(linguistics)



இந்தக் குழப்பம்  எழுத்திலும் பேச்சிலும்  உண்டு. எனக்குக் கணினித் 
தட்டெழுத்தில் பலநேரம்  குறுக்கிடும்.







பேச்சு மொழியில் இந்த //Dyslexia // என்ற "போக்கு" பழைய  ஒரு மொழியிலிருந்து 
("பழந்தமிழிலிருந்து"?  யாருக்குத் தெரியும்?)  சில தெலுங்குச் சொற்களை 
உருவாக்கியது என்று   கேள்வி. சரியோ தப்போ  தெரியாது. உண்மை 
தெரிந்துகொள்ள  வேண்டுமானால் திரு  திவாகர் போன்றவர் உதவலாம்.




--------------------
From: விஜயராகவன்  Date: Nov 21, 3:50 am

It is difficult to say when an error in writing or speech becomes something with can be identified as a  psychiatric disorder. To call டிஸ்லெக்சியா  an எழுத்துக்குழப்பம்  is an oversimplification. 

The wikipedia defines it as "Dyslexiais a broad term defining a learning disability that impairs a person's ability to read,[1] and which can manifest itself as a difficulty with phonological awareness, phonological decoding, orthographic coding, auditory short-term memory, and/or rapid naming."

Perhaps if there is a consistent pattern in a person's speech or writing errrors - giving due allowance for cultural and environmental differences , one may establish a syndrome.

Manivannan makes a direct correlation with writing systems - with a pat on the back. I don't know how valid it is. Is it a case of ethnocentrism?

In my view, instead of looking for "errors" in writing or speech , we must concentrate on a single person and see if there is a consistency - to really find out about thisdyslexia
 

--------------------From: தாரகை Date: Nov 21, 4:13 am
> It is difficult to say when an error in writing or speech becomes
> something which can be identified as a  psychiatric disorder

Psychiatric disorder?

Its neither a psychiatric disorder nor an intellectual disability. Its ONLY an impairment.

> In my view, instead of looking for "errors" in writing or speech , we
> must concentrate on a single person and see if there is a consistency
> - to really find out about thisdyslexia

Rather than concentrating on a single person & siding with discrimination, it would be worthwhile to study the present day Thamizh ethnic diversion from a very high Thamizh reading population to a sparse Thamizh reading group(s). What type of (r)evolutionary act transformed this change?



---------- ----------
From: Hari Krishnan Date: Nov 21, 8:35 am

> இன்று கூட ஒரு கடிதத்தில் தருகிறேன் என்பதற்கு தருகேரீன் என்று ஒருவர்
> எழுதியிருந்தார்.

வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தட்டச்சு சொல்லித் தருவதிலும், தட்டிய தாள்களைத் திருத்துவதிலும், தட்டச்சுத் தேர்வுத் தாள்களைத் திருத்தும் பணியிலும் கழித்தவன் என்பதால், ஒருவர் செய்யும் எழுத்துப் பிழையிலிருந்தே அவர் என்ன முறையைப் பயன்படுத்தித் தட்டுகிறார் என்பது எனக்கு அவருடைய விரலே நேரில் வந்து சாட்சி சொல்வதைப் போலப் பிடிபட்டுவிம்.

தருகேரீன் என்று தட்டியிருப்பதற்குக் காரணம், பயனர், ட்ரான்ஸ்லிடரேஷன் முறையைப் பயன்படுத்துகிறார்.  tha-ru-ki-rEn அல்லது tha-ru-ki-reen என்று தட்டவேண்டிய இடத்தில், tha-ru-kee-riin என்று தட்டியிருக்கிறார்.

 ட்ரான்ஸ்லிடரேஷன் முறையில் தட்டுபவர்களுக்கு இப்படிப்பட்ட மாடுதற்றங்கள்...(அட தடுமாற்றங்களைத்தான் சொல்றேன்) ஏற்படுவது சகஜம்.  பலருடைய கடிதங்களில் ஜூ எல்லாம் ஜீ என்று மாறிவிடுவதைக் காணலாம்.  ஜீன் மாதம், ஜீலை மாதம், ஜீனியர் விகடன் என்றுதான் தட்டுவார்கள்.  இந்த இடத்தில் ட்ரான்ஸ்லிடரேஷன் காரணமில்லை.
 There is a lot of a difference in typing juu or jU and jii and jI. though both keys are placed next to each.  இது வடிவக் குழப்பம்.  எழுத்து வடிவத்தை மனத்தில் பதியாததால் ஏற்படும் குழப்பம்.

 ஒருவிரலால் தட்டும்போது இப்படிப்பட்ட மாடுதற்றங்கள் நிறைய ஏற்படுவது சகஜம்.

டிஸ்லெக்சியா பிரச்சினையால் தருகிறேன் தருகேரீன் ஆகும் வாய்ப்பு உண்டு.
 ஏனெனில், தட்டிக் கொண்டிருக்கும்போது, எந்த சீக்வென்ஸில் தட்டினோம், அடுத்தது என்ன எழுத்தைத் தட்டவேண்டும் என்பதற்கான மனப் பயிற்சியில் கணநேரப் பிறழ்வு ஏற்படும்.  (எழுதிய பிறகு அதை வாசித்துப் பார்த்துத் திருத்தவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருப்பதில்லை.  அது அவர்களுடைய நேரக் குறைவு என்று கொள்வோம்.)

தட்டச்சு முறையைக் கற்றுக் கொண்டால், டிஸ்லெக்சியாவின் சின்னக் கூறு இன்னமும் உள்ள என்னைப் போன்றவர்கள்கூட சீராகவும் பிழையின்றியும் தட்ட முடியும்.  



---------- Forwarded message ----------
From: மணி மு. மணிவண்ணன் Date: Nov 21, 11:04 am

On Nov 21, 3:50 am, விஜயராகவன்  wrote:

> It is difficult to say when an error in writing or speech becomes
> something with can be identified as a  psychiatric disorder. To call
> டிஸ்லெக்சியா  an எழுத்துக்குழப்பம்  is an oversimplification.

அகராதியிலிருந்து:

dys·lex·i·a (ds-lks-)
n.
A learning disorder marked by impairment of the ability to recognize
and comprehend written words.
[New Latin : dys- + Greek lexis, speech (from legein, to speak; see
leg- in Indo-European roots).]

இது உளவியல் நோய் எல்லாம் இல்லை.  மூளையில் நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு குறை. இதன் வெளிப்பாடு சொற்களைக் குழப்பி எழுதுவதில்
வெளிப்படுகிறது.  இதற்கென்று மருத்துவக் கலைச்சொல் இருக்கிறதா எனத்
தெரியாது.  ஆனால், ஆங்கிலச் சொல்லில் இருந்து கருத்தை நேரடியாக வெளிக் கொணரும் அதே நேரத்தில், இது நோய் என்றோ, வேறு எவ்வாறோ மட்டம் தட்டாமல் குறிப்பிடுவதற்காக “எழுத்துக் குழப்பம்” என்று குறிப்பிட்டேன்.  இப்போது தமிழிலும் “மாற்றுத் திறனாளிக்ள்” என்ற சொல் (alternatively enabled) பரவிக் கொண்டிருக்கிறது.

> Manivannan makes a direct correlation with writing systems - with a
> pat on the back. I don't know how valid it is. Is it a case of
> ethnocentrism?

அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.  எண்ணற்ற பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நான் புரிந்து கொண்டதைத்தான் நான் எழுதியிருக்கிறேன்.  அதனால், நம் எழுத்து முறையைக் கொண்டாடவில்லை. நீங்கள் கூர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், தேவநாகரியிலும், தமிழிலும் உள்ள சிக்கல்களையும் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.  ஆனால், ஆராய்ச்சியாளர்கள் முடிவு என்னவென்றால், ஒலிக்குப் பொருந்தி வரும் எழுத்துருக்களில், நேர் வடிவங்களில் உள்ள எழுத்துகள் உள்ள மொழிகளில் டிஸ்லெக்சியாவின் தாக்கம் குறைவு.  அந்த நோய் இல்லாமல் இல்லை.  ஆனால், நோய்க்கு மருந்தாக மொழியின் நேர்வடிவம் அமைந்திருக்கிறது.  மொழியில் எழுத்து, ஆங்கிலம்/பிரெஞ்சு போலக் குறைவடிவத்தில் இருந்தால், டிஸ்லெக்சியாவின் தாக்கம் கூடுதலாக இருக்கிறது.  ஆராய்ச்சியாளர்கள் இதை வெகுவாக ஆராய்ந்தே இம்முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

> In my view, instead of looking for "errors" in writing or speech , we
> must concentrate on a single person and see if there is a consistency
> - to really find out about thisdyslexia

எண்ணற்ற பல முறைகளில் ஆராய்ச்சியாளர்கள் இந்த நோயைப் பற்றி ஆய்ந்து வருகின்றனர்.  இந்த நோயைக் குணப்படுத்த எழுத்துகளை மாற்ற வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.  ஆனால், எழுத்துக் குழப்பம் ஏற்பட எழுத்து வடிவங்களின் தன்மையும் இடைஞ்சலாக இருக்கிறது என்பது தெரிந்தால், அதற்கு ஏற்றவாறு குழந்தைக் கல்வி அமைய வேண்டும்.  இல்லையேல், பள்ளிகளில் குழந்தைகளை வீணாகத் தொந்தரவு செய்ய நேரிடலாம்.

தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஒரு பாடமொழியாக மட்டும் இருந்த காலத்தில்
டிஸ்லெக்சியாவின் தாக்கம் வெளிப்படையாகத் தெரியவில்லை.  ஆங்கிலம்
கற்பிக்கும் மொழியாகவும் ஆகிவிட்டதனால், டிஸ்லெக்சியாவின் தாக்கத்தைத் தமிழ்ப் பெற்றோர்களால் நன்றாகவே உணர முடிகிறது.

சில குழந்தைகளுக்குக் கற்பதில் ஆர்வம் குறைவதும், கற்க முடியாமல்
திணறுவதும், அதனால் பள்ளியை விட்டு விலகுவதும் அன்றாடம் கல்வித்துறை பார்க்கும் நிகழ்ச்சிகள்.  இவற்றை ஓரளவுக்காவது புரிந்து கொண்டால், குழந்தைக் கல்வியில் இருக்கும் சிக்கல்களைக் குறைக்க முடியும்.

இது இன்னும் முழுமையாகப் புரிபடாத நோய். ஆனால், இதற்கான இடைக்காலத் தீர்வுகள் இருக்கின்றன.  பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை, மருத்துவர்கள் என்று எல்லோரும் கலந்து செயலாற்ற வேண்டிய துறை இது.


பெருநகரங்களில் இதைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும்,
சிற்றூர்களிலும், பேரூர்களிலும், இதைப் பற்றி அவ்வளவாகத்
தெரிந்திருக்காது.

இதற்கிடையில், குழந்தைகளுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று எழுத்தைச்
சீர்திருத்தம் செய்யக் கிளம்புபவர்கள் குட்டையை மேலும் குழப்பிவிடக்
கூடும்.  அதனால், எழுத்துச் சீர்திருத்தம் செய்கின்ற பேர்வழிகளை இதைப்
பற்றியும் முறையாகக் கள ஆய்வு செய்ய வற்புறுத்த வேண்டும்.

அன்பின் ஹரி,

நீங்கள் குறிப்பிட்டது மிகவும் முக்கியமான பார்வை.

நானும் முறையாகத் தட்டச்சு பயின்றவன்.  வெகுவேகமாத் தட்டச்சிடும்போது
எனக்கும் இட வல மாற்றம் (தட்டச்சில்) ஏற்படும்.  இடது பக்கத்தில் வர
வேண்டிய எழுத்துக்கு முன்னரே வலது பக்க எழுத்து விழுந்து விடும்.  எனது
தட்டச்சின்மேல் எனக்கு நம்பிக்கை கூடுதல் என்பதால், பல முறை, நான்
தட்டச்சிட்டதைப் படிக்காமலேயே அனுப்பி விடுவேன்.

இளமைப் பருவத்தில் விழாத இடவல மாற்றப் பிழைகள், அண்மைக்காலத்தில்
அடிக்கடி விழுகின்றன. அதற்கும் சர்க்கரையின் அளவுக்கும் தொடர்பு
இருக்கக்கூடும் என்பது உங்கள் கடிதத்தில் இருந்துதான் தெரிந்து
கொண்டேன்.

இந்த தட்டுப் பிழை வேறு.  எழுத்துக் குழப்பம் வேறு.

இடது கைக்காரர்களால் வலது கைக்காரர்கள் உருவாக்கிய உலகில் வாழ்வதில் சிக்கல்கள் எவ்வளவு இருக்கின்றனவோ, அதே போல்தான் டிஸ்லெக்சியாவால் நொந்திருக்கும் குழந்தைகள்/பெரியவர்களுக்கும்.  இதன் முதல் கட்டம், இதை ஆராய்ச்சி செய்வதே.

டிஸ்லெக்சியா என்று ஒரு நோயைப் பண்டைக்காலத்திலேயே தமிழர்கள் கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல வரிவடிவங்களை அமைத்தார்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள் வருகிறேன் என்று யாரேனும் தவறாக நினைத்துக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல.

பண்டைக் கால மனிதர்கள் நம்மைப் போலவே அறிவுள்ளவர்கள்.  அவர்கள் சூழலுக்கு ஏற்றாற்போல அவர்கள் தம் உலகைப் படைத்துக் கொண்டார்கள்.  உணவே மருந்து, மருந்தே உணவு என்று அவர்கள் வாழ்ந்தது நமக்கு இன்று வியப்பளிக்கலாம்.

டிஸ்லெக்சியா நோய் எப்போது தோன்றியிருக்கும் என்று ஆய்வாளர்களுக்குத்
தெரியவில்லை.  ஆனால், இந்த மூளைநோய், எழுத்துகளை உருவாக்குவதற்கு
முன்பும் இருந்திருக்க வேண்டும்.  ஆனால், எழுத்து முறை தோன்றிய போது
வெளிப்பட்டிருக்க வேண்டும்.  நோயைப் புரிந்து கொள்ளாமல், மாணவர்களின்
திறனை மதிப்பிடும் நாடுகளில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கை இதனால்
வெகுவாகப் பாதிக்கப் படும்.

நீங்கள் சொல்வது போல் அன்றாட வாழ்வில் இட/வல மாற்றக் குழப்பங்கள்
உள்ளவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன்.  அவர்களில் பெரும்பாலோர் இடது
கைப் பழக்கம் உள்ளவர்கள்.  நீங்களும் இடதுகைப் பழக்கம் உள்ளவரா எனத்
தெரியாது.

உங்கள் குறிப்பிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம், எழுத்துக்குழப்பம்
வேறு, தட்டுப் பிழை வேறு.  ஒன்றுக்கு ஒன்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

அப்படியானால், தருகேரீன் என்பது நிச்சயமாகத் தட்டுப்பிழைதான்.  இது
டிஸ்லெக்சியா இல்லை.

என் தேடல் தொடர்கிறது!

திங்கள், நவம்பர் 22, 2010

பாவலரேறு தமிழ்க்களத்தில் கிரந்தத்தின் மீது ஒரு போர்

மேடவாக்கத்தில் உள்ள பாவலரேறு தமிழ்க்களம் தனித்தமிழ் ஆர்வலர்களின் கோட்டை.  பெருஞ்சித்திரனார் பெயரில் அமைந்திருக்கும் இந்த மன்றத்தில் பல தமிழ்ப் புலவர்களும், தமிழுணர்வாளர்களும் அவ்வப்போது கூடி தனித்தமிழ் வளர்த்தல், தமிழுக்கு வரும் இடர்ப்பாடுகள் களைதல் பற்றி ஆய்ந்து வந்திருக்கின்றனர்.  எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய அலசல்களை வெவ்வேறு கோணங்களில் இம்மன்றம் அலசியிருக்கிறது.

தற்போது தமிழ் யூனிக்கோடு (ஒருங்குறி) குறியீட்டில் கிரந்த முன்மொழிவுகளைப் பற்றிக் கேள்விப்பட்ட தமிழ்க்களத்தார் அதைப் பற்றிக் கேள்விப் பட்டவுடன் தமிழுக்கு வந்திருக்கும் மிகப் பெரும் இடையூறாக அதைக் கருதியுள்ளனர்.  சிக்கலின் கருப்பொருளாக அவர்கள் கருதுவது “கணினியில் தமிழ்மொழிக்காக உருவாக்கப் படும் ஒருங்குறி இட அமைப்பில் 26 கிரந்த எழுத்துகளும் தமிழில் இடம் பெற வேண்டும் என்று குறுக்கு வழியில் சிலர் தமிழ் எழுத்து அமைப்பில் புகுத்தப் பார்ப்பது” என்பதே.

“தமிழர்க்கு எட்டாத தொலைவிலேயே தமிழ் கெடுக்கப் படுகிறது.  தமிழறிஞர் பலருக்கு இப்போது கணினித் தமிழில் அறிமுகம் குறைவு.  கணினி அறிஞர் பலர் தமிழில் பற்றும் ஆர்வமும் அக்கறையுமில்லாதவர்களாக உள்ளனர்.  இந்த இடைவெளியைப் பயன்படுத்தி ’சர்மா’ போன்ற காஞ்சி மடத்தவர் நுழைந்து குறுக்குச்சால் ஓட்டுகின்றனர். மொழியறிவு பெற்ற தமிழர்களும், கணினியறிவு பெற்ற தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழைக் காக்க வேண்டிய காலம் இதோ வந்து விட்டது.” என்று சொல்லி, தமிழறிஞர்களும் கணினியறிஞர்களும் ஒருங்கே கலந்து கொள்ளும்  கருத்துரையாடல் நிகழ்ச்சியை தமிழ்க்களம் கூட்டியது.

தமிழ்க்களத்தில் மீனன் கிரந்தத்தை எதிர்த்துப் போர்க்குரல் கொடுப்பவதைப் பேரா. இறையரசன், பேரா. பொன்னவைக்கோ, பூங்குன்றன் பார்க்கிறார்கள்.

அழைப்பிதழில் எனக்குத் தெரிந்து இருந்த ஒரே கணினி அறிஞர் முன்னாள் துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ அவர்கள் மட்டுமே.  ஏனையோர் பேரா. இறையரசன் போன்ற தமிழ்ப்புலவர்கள் மட்டுமே.  ஒருங்குறி பற்றி அரைகுறையாகப் புரிந்து கொண்டு இதைப் பற்றி எழுதுபவர்கள் ஏராளம்.  ஏற்கனவே தினமணியில் வந்த தவறான செய்தி மற்றும் பலர் பல்வேறு முறையில் இதைப் பற்றி எழுதுவதால் குழம்பிப் போய் இருப்பவர்கள் பலர்.  இதில் தமிழ்ப்புலவர்கள் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.  ஏற்கனவே திரு ஸ்ரீரமணஷர்மாவின் கிரந்த முன்மொழிவின் ஆய்வையும், செறிவையும், உள்ளடக்கத்தையும் நான் பாராட்டி எழுதி இருந்தது பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.

ஸ்ரீரமணஷர்மா இரண்டு முன் மொழிவுகளை முன் வைத்திருந்தார்.  ஒன்று கிரந்த எழுத்துகளைத் தரப்படுத்துவது என்பது.  இரண்டாவது தமிழ் எழுத்துக்களின் அடிப்படையில் எழுந்த 26 புதுக்குறியீடுகளைக் கொண்டு வடமொழிக்குத் தேவையான வர்க்க எழுத்துகள், துணையெழுத்துகளை ஒருங்குறியில் தரப்படுத்துவது என்பது.  அவரது கிரந்த முன்மொழிவு மிகச் சிறப்பாக இருந்தாலும், அதில் திரு. நாக. கணேசன் வலியுறுத்துவது போல தமிழ் எழுத்துகளை எ, ஒ, ழ, ற, ன, மற்றும் தமிழ் உயிர்மெய்க் குறியீடுகள் ெ, ொ ஆக வடமொழியில் இல்லாத இந்த ஏழு குறியீடுகளை ஏற்றுவதைப் பட்டும் படாமல் ஆதரித்திருந்தார்.  இதில் எனக்கு உடன்பாடு இல்லை.  நான் முன்பே துணைவேந்தர் ராஜேந்திரன் கூட்டத்தில் சொன்னது போல, திரு ஷர்மாவுக்கும் கிரந்தக் குறியீடுகளில் தமிழ் எழுத்துகள் தேவையில்லை என்ற கருத்தில் உடன்பாடு உண்டு.  ஆனால், தமிழ் எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளையும் கலந்து எழுத வேண்டிய தேவை இருக்கும்போது தொழில்நுட்பச் சிக்கல்களால் அவ்வாறு எழுத இயலாதே என்றார். அதை அப்புறம் பார்ப்போம்.

ஆனால், ஷர்மாவின் இன்னொரு முன்மொழிவான 26 புதுக் குறியீடுகளை நீட்டித்த தமிழ் என்ற பட்டியலில் கூட்டுவதை நான் முன்னரே யூனிகோடுவுக்கு எழுதிய கடிதத்தில் எதிர்த்திருக்கிறேன்.  அதை http://www.infitt.org/pressrelease/UTC_Unicode_Grantha_Letters_SMP.pdf  என்ற சுட்டியில் பார்க்கலாம்.

இதை அறியாத சில தமிழ்ப் புலவர்கள், ஷர்மாவின் முன்மொழிவை நான் பாராட்டியதை வைத்துக் கொண்டு, தன்  தாயைக் கொல்ல வருபவருடைய தங்கக் கத்தியைப் பாராட்டும் “உட்பகைவன்” என்று என்னைச் சில மடலாடற்குழுக்களில் சாடத் தொடங்கி விட்டார்கள்.  தினமணிக்குத் தவறான செய்தியைக் கொடுத்ததே நான் தான் என்றே முடிவுக்கு வந்து விட்டார்கள்.  TACE16 குறியீடு தமிழக அரசுத் தரமாக வேண்டும் என்று பத்தாண்டுகளாக உழைத்தவர்களில் நானும் ஒருவன்.  அது தெரியாதவர்களாம் மட்டுமே இப்படிப் பட்ட புரளிகளை நம்ப முடியும்.  தமிழ்ப்புலவர்களுக்குக் கணினித் தமிழ் மட்டுமல்ல, கணினித் தமிழ் வரலாறும் தெரியாது.  அவர்கள் கண்ணோட்டத்தில் ”மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” என்பவர்கள் “உட்பகைவர்கள்.”

இந்த நிலையில் தமிழ்க்களம் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று இருந்தேன்.  ஆனால், நண்பர் இராமகி அவர்களோ, இது தனித்தமிழ் வளர்க்கும் நல்லோர் கூட்டம்.  அவர்களுக்குத் தொழில்நுட்பத்தை விளக்கி உண்மையைச் சொல்ல வேண்டும்.  இல்லையேல் ஏற்கனவே குழம்பிக் கிடப்பவர்கள் அவர்களை மேலும் குழப்புவார்கள்.  அதனால், நீங்கள் கட்டாயம் ஆற்றவேண்டிய தமிழ்ப்பணி இது என்று அன்புக் கட்டளையிட்டார்.  எங்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எழுத்துச் சீர்திருத்த எதிர்ப்பு, TACE16 குறியீடு, கிரந்தத்தில் தமிழ் எழுத்து எதிர்ப்பு என்று பல கருத்துகளில் இணைந்து செயலாற்றி வருகிறோம்.  இராமகி அவர்களின் வியக்கத்தக்க தமிழ் நடை பலரைப்போலவே என்னையும் ஈர்ப்பது.  அவரது ஆழ்ந்த தமிழ்ப் பற்றும், தமிழைப் பற்றி மாற்றுத்தடத்தில் சிந்திக்கும் திறனும், கலைச்சொல்லாக்க ஈடுபாடும் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. அவர் சொல்லை ஏற்று அழையாத விருந்தாளியாய் தமிழ்க் களக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றேன்.

கூட்டம் காலம் தாழ்த்தியே தொடங்கினாலும், தலைமை விருந்தினர் பேரா. பொன்னவைக்கோ வேறு நிகழ்ச்சியில் இருந்து வந்து சேர மேலும் நேரம் ஆகும் என்பதால், முதலிலேயே பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  விழா அமைப்பாளர் பூங்குன்றன் அவர்களின் தொடக்க உரையிலேயே அவர்களுக்கு இதைப் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டதால், இதன் முழு விவரத்தையும் ஒரு சில நிமிடங்களில் கூற வேண்டிய கட்டாயத்தைப் புரிந்து கொண்டேன்.

ஒருங்குறி என்ற யூனிகோடு (Universal Encoding system not Uniform Encoding) உலகின் எல்லா எழுத்துகளையும் உள்ளடக்க முயலும் குறியீட்டு முறை.  இதில் வெவ்வேறு தட்டுகள் உள்ளன.  அடித்தட்டு (BMP - Basic Multilingual Plane) வாழும் மொழிகளின் எழுத்துகளை உள்ளடக்கியது.  துணைத் தட்டுகள் (SMP - Supplementary Multilingual Plane) பண்டைய எழுத்துகள், இசை மற்றும் கணக்குக் குறியீடுகள் போன்றவற்றை உள்ளடக்கியவை.  தமிழ் எழுத்துகள் அடித்தட்டில் உள்ளன.  ஏனைய இந்திய எழுத்துகளைப் போன்ற கட்டமைப்பில் 128 கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக் கட்டத்தில் வர்க்க எழுத்துகளுக்கான இடங்கள் வெற்றிடங்களாக உள்ளன.  இதில் யாரும் எதையும் திணிக்க வரவில்லை.  இரண்டு கிரந்த முன்மொழிவுகளும், இப்போது இருக்கும் யூனிகோடு தமிழை எந்த விதத்திலும் மாற்ற முன்வரவில்லை.  இவற்றால் இன்றைய தமிழுக்கு எந்த வித இடையூறும் இல்லை.  இல்லவே இல்லை.  இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் வீண் கற்பனைதான் வளரும்.

ஸ்ரீரமணஷர்மாவின் நீட்டித்த தமிழ் முன்மொழிவு  26 கிரந்த எழுத்துக்களைத் தமிழில் திணிக்க முன்வருகிறது என்று சொல்வது பிழை.  ஆறாம் நூற்றாண்டில் தென்னகத்தில் தொடங்கி, கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தில் புழங்கி வந்த கிரந்த எழுத்து முறை, தேவநாகரியின் ஆதிக்கத்தால் கிட்டத்தட்ட மறைந்தே போய் விட்டது.  தேவநாகரியும் கிரந்தமும் தெரியாதவர்களுக்கும் தமிழ் எழுத்துகளிலேயே வடமொழியின் வர்க்க ஒலிகளையும், தமிழில் இல்லாத உயிரெழுத்துகளையும் குறிப்பிடுவதற்காக, மேற்குறிகள் அல்லது கீழ்க்குறிகள் போன்ற துணைக்குறிகளை வைத்து எழுதும் முறை (க,க²,க³,க⁴,த,த²,த³,த⁴...) 20ம் நூற்றாண்டில் எழுந்தது.  காஞ்சி மடத்தால் பரப்பப் பட்ட இந்த எழுத்து முறையில் அம்மடத்தின் நூல்கள் வெளிவந்துள்ளன.  இதைத் தற்கால மணிப்பிரவாள எழுத்து முறை எனலாம்.  இவை பெரும்பாலும் தமிழ் எழுத்துகள்தாம்.  (பெரும்பாலும் என்று ஏன் சொல்கிறேன் என்றால், தமிழில் இல்லாத, ஆனால் வடமொழிக்கு வேண்டிய குறியீடுகளையும் ஷர்மா கேட்டுள்ளார்.)  ஆனால், இங்கே  (க,க²,க³,க⁴,த,த²,த³,த⁴... என்று காண்பது போல மேற்குறியிட்ட எழுத்துகளைத் தற்போதுள்ள யூனிகோடு  முறையிலேயே எழுதலாம்.  ஆனால், தா², தோ² போன்ற உயிர்மெய் எழுத்துகளை எழுதும்போது இந்த மேற்குறி த என்ற அகரமேறிய உயிர்மெய்யெழுத்தின் மேல் இல்லாமல், துணைக்கால் அருகே இருப்பது குழப்பத்தைத் தரும் என்கிறார் ஷர்மா.

இந்தச் சிக்கலுக்குக் காரணம் யூனிகோடு குறியீடு அல்ல, ஆனால், அதை இயக்கும் செயலிதான் என்று நிறுவினார் மலேசியாவின் முத்து நெடுமாறன். அது மட்டுமல்லாமல், இது தனி எழுத்து முறையல்ல.  இது ஒரு குறி மாற்று முறை.  தமிழ் எழுத்துகளில் வடமொழி ஒலியை மட்டுமல்லாமல், அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் வழங்கும் எழுத்துகளான (F, Q, Z) போன்ற பிறமொழிகளுக்கும், ஏன் பன்னாட்டு ஒலிக் குறியீடுகள் பலவற்றிற்கும் கூடத் தேவையான மீக்குறிகள், மேற்குறிகள், துணைக்குறிகளைத் தமிழ் எழுத்துகளுடன் இணைத்து எழுதலாம்.  இதற்கு என்று ஒரு துணைக்குறிப் பட்டியல் அமைப்பது வேறு, வடமொழிக்காக மட்டும் வர்க்க ஒலிகளுக்காகத் தமிழ் எழுத்து என்ற பெயரில் இடம் ஒதுக்குவது என்பது வேறு. இத்தகைய வாதங்களை என்னுடைய மறுப்புக் கடிதத்திலும், கனடா பேராசிரியர் செல்வகுமார் அவர்களின் கடிதத்திலும் காணலாம்.

இத்தகைய மறுமொழிகளையும் கருத்தில் கொண்டு, யூனிகோடு நுட்பக் குழுவின் தென்னாசியத் துணைக்குழு, நவம்பர் 1க்கு முன்னரே ஷர்மாவின் “நீட்டித்த தமிழ்” முன்மொழிவை ஏற்க மறுத்துப் பரிந்துரைத்திருந்தது.  ஷர்மாவின் இந்த முன்மொழிவை எதிர்த்து உலகெங்கும் வாழும் பல தமிழர்கள் யூனிகோடு நுட்பக் குழுவுக்குக் கடிதங்கள் எழுதியிருந்தாலும், இவை அனைத்தும் யாரோ தவறான பரப்புரை செய்ததால் புரியாமல் எழுதப்பட்டவை என்று யூனிகோடு நுட்பக் குழுவினர் அவற்றை ஒதுக்கி விட்டதாக அறிகிறேன்.

காஞ்சி மடத்தின் ஷர்மா 26 கிரந்த எழுத்துகளைத் திணிக்க வருவதை எதிர்க்க அங்கு கூடியிருந்தவர்களுக்கு இந்தச் செய்தி ஏமாற்றத்தைத் தந்திருக்க வேண்டும்.   கூட்டம் அமைதியாக என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தது.

பிறகு கிரந்தம் பற்றிப் பேசத் தொடங்கினேன்.  கிரந்த எழுத்து முறை என்பது வடமொழி ஒலிகளை எழுதத் தென்னகத்தில் பல்லவர் காலத்தில் தோற்றுவிக்கப் பட்ட முறை.  தென்னிந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு எழுத்து முறை.  பல்லாயிரக் கணக்கான பல்லவ, சோழ, பாண்டிய அரசர்கள் மற்றும் சிற்றரசர்களின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிரந்தத்திலோ அல்லது கிரந்த எழுத்துகள் கலந்தோ எழுதப் பட்டிருக்கின்றன.  இவற்றில் தமிழர்களின் வரலாற்றுச் செய்திகள் பொதிந்திருக்கின்றன.  இந்தக் கல்வெட்டுகளின் படங்கள் பல இன்னும் பதிப்பிக்கப் படவில்லை.  எவையுமே இன்று வரை கணினியில் ஆய்வுக்காக எழுத்து அறியும் வகையில் எண்ணிமப் படுத்தப் படவில்லை.

இந்திய அரசின் கிரந்த முன்மொழிவு இக்குறையைத் தீர்க்க எழுந்த முன்மொழிவு.  இந்திய அரசின் முன்மொழிவு பல ஆண்டுகளாய்ப் பல அறிஞர்கள் எழுதிய முன்மொழிவுகளின் ஒருமித்த முன்மொழிவு.  இதில் முதலில் நாக கணேசன் எழுதிய முன்மொழிவில்தான் தமிழ் எழுத்துகள் சேர்க்கப் பட்டன.  அதைச் சேர்த்ததற்கு கணேசன் கூறும் காரணம் தமிழ் எழுத்துகள் ஏற்கனவே திவ்வியப் பிரபந்தம் போன்ற நூல்களை வெளியிடுவதற்காக கிரந்த எழுத்து முறையில் வழக்கில் இருப்பவை என்பதாம்.  எண்ணற்ற கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் தமிழ் எழுத்துகளை எழுதக் கிரந்தத்தில் வரிவடிவம் இருந்தது என்று கணேசன் கூறியிருக்கிறார்.  ஆனால், அதற்கேற்ற சான்றுகள் அவர் முன்மொழிவில் இல்லை.

கணேசனின் முன்மொழிவில் பிழைகள் மலிந்திருந்தன என்று கருதிய ஸ்ரீரமணஷர்மா, தாமே ஒரு கிரந்த முன்மொழிவை எழுதினார்.  இதில் வடமொழிச் சமய நூல்களை பொருளும் ஒலிப்பும் மாறாமல் கிரந்தத்தில் கொண்டு வரத் தேவையான தொழில் நுட்பங்களை விளக்கி இருக்கிறார் ஷர்மா.  கணேசன் கூறியதைப் போல் தமிழ் எழுத்துகளைக் கூட்டுவதை ஏற்றுக் கொண்டாலும், அவை தமிழ்ப் பெயர்களைக் குறி பெயர்ப்பதற்காக என்றால் அவை தேவை இல்லை என்கிறார் ஷர்மா.

கிரந்த எழுத்துகளில் தமிழைச் சேர்ப்பதால் என்ன கேடு விளையலாம்?

கிரந்த எழுத்துகளிலேயே தமிழை எழுத முடிந்தால் மெல்ல மெல்ல தமிழ் எழுத்துகள் வழக்கொழிந்து போய் கிரந்தம் மேலாதிக்கம் செலுத்த, தமிழில் பிறமொழிச் சொற்கள் எண்ணற்ற வந்து கலந்து போய், சேரர் தமிழ் மலையாளமாகத் திரிந்தது போல, இன்றைய தமிழும் இன்னொரு மலையாளமாகத் திரிந்து விடலாம் என்று பலர் அஞ்சுகின்றனர்.  தமிழ் எழுத்துகளில் கிரந்த வர்க்க எழுத்துகள் கலந்து போய்  மணிப்பிரவாளம் மீண்டும் உயிர்தெழுந்து தனித்தமிழை அழிக்கலாம் என்று இன்னொரு அச்சமும் உள்ளது.

கிரந்த எழுத்துகளில் குறளும், பெயரும், கிரந்த நெடுங்கணக்கும்


கிரந்த முன்மொழிவின் சிக்கல்கள் தமிழ் எழுத்துகளுக்கு அல்ல. இந்தியாவிலேயே மிக எளிமையான தமிழ் எழுத்துமுறையைக் கை விட்டு விட்டு மிக மிகச் சிக்கலான கிரந்த எழுத்து முறையை ஒட்டு மொத்தத் தமிழர்களும் எடுத்துக் கொள்வார்கள் என்பது வீண் மிரட்சி. இதன் உண்மையான சிக்கல் என்னவென்றால் இவற்றால் தோன்றக் கூடிய வரலாற்றுக் குழப்பமும், சிதைவும் தான். தமிழுக்கு என்று தனி எழுத்து இருந்த வரலாறேகூட மறையக் கூடும். இருக்கும் கல்வெட்டுகளையெல்லாம் வேலை மெனக்கெட்டுக் கற்சுரங்கங்களுக்காக வேட்டு வைக்கும் தமிழன் தன் வரலாற்றுக்கும் சேர்த்துதான் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறான். இந்த முட்டாள்தனத்தோடு இந்த் ஒருங்குறிச் சிக்கலும் சேர்ந்தால் வரலாற்று ஆவணங்களில் உள்ள செய்திகள் மறையலாம்.  ஆனால், தமிழ் இன்னொரு மலையாளமாக மாறக்கூடும் என்ற அச்சம் எனக்கு இல்லை.

இந்த கிரந்த முன்மொழிவைப் பற்றி விரிவாக அலசி நுட்பக் கருத்துகளை யூனிகோடு நுட்பக் குழுவுக்கு வைக்க வேண்டும் என்றால், நமக்குத் தேவையானவர்கள் - யூனிகோடு நுட்பத்தை அறிந்தவர்கள், கிரந்த எழுத்துகளைப் பற்றி நன்கறிந்தவர்கள், கிரந்தத்தில் வடமொழி எழுதுவதைப் பற்றி அறிந்தவர்கள், கல்வெட்டுகளில் கிரந்தம், தமிழ், ஏனைய தென்மொழிகள் பற்றி அறிந்தவர்கள், மொழியியல் வல்லுநர்கள் என்பவர்களே.  தமிழ் மட்டும் தெரிந்தவர்களால் இந்த முன்மொழிவுக்குத் தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் மறுமொழி சொல்வது அரிது.

தப்பித் தவறி இந்த இரண்டு முன்மொழிவுகளுமே யூனிகோடுவின் தரமாகி விட்டாலும் கூட, நாம் எச்சரிக்கையுடன் இருந்தால் தமிழுக்குக் கேடு ஏதும் வருவதைத் தவிர்க்கலாம் என்று என் பேச்சை விரைவாக முடித்தேன்.

மேலும் கூட்டத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த பதிவில் தொடர்கிறேன். ஆனால், இதற்கிடையில் “மணிப்பிரவாளத்துக்கு மறுவாழ்வா” என்ற தலைப்பில் தமிழுணர்வாளர்கள் செவ்வாய், நவம்பர் 23 அன்று கூடவிருக்கிறார்கள்.

பொதுவாக இது போன்ற தொழில் நுட்பத் தொடர்பான கூட்டங்களில் பொது மக்களுக்குத் தொழில் நுட்பச் செய்திகளை விளக்குபவர்களுக்குத் தொழில் நுட்பப் பின்னணி இருப்பது நல்லது.  ஏற்கனவே தினமணியில் தவறான செய்திகள் வந்தது பலரையும் குழப்பியிருக்கிறது.  தொழில்நுட்பம் புரியாதவர்கள் இதை மேலும் குழப்பிக் கொள்ள நேரிடும்.

குறைந்தது, இதைப் பற்றிப் பேசுபவர்கள் யூனிகோடு நுட்பக் குழுவிடம் அளிக்கப் பட்ட கிரந்த முன்மொழிவுகளை முற்றிலும் படித்துப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். நுட்பக் குழு இதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது, ஏனைய அறிஞர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள், இந்த முன்மொழிவுகள் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் என்ன, நிறைவேறினால் உண்டாகும் தொழில் நுட்பத் தாக்கம் இவற்றைப் பற்றித் தெரிந்து பேசுவது நல்லது. 

இதில் ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும்.

BMP, SMP என்ற இரண்டுக்கும் என்ன வேறுபாடு, எங்கே தமிழ்க் குறியீடுகள் உள்ளன, எங்கே முன்மொழியப் பட்ட குறியீடுகள் போகும்,  இவை இரண்டையும் கலக்க முடியுமா கூடாதா என்று தெரிய வேண்டும்.  நீட்டித்த தமிழ் என்றால் என்ன? அதன் உருவம் எப்படி இருக்கும்?  அது வந்தால் என்ன நடக்கும்?  வராவிட்டால் யாருக்கு என்ன குறை? 

கிரந்த முன்மொழிவில் தமிழ் எழுத்துக்கள் ஐந்தையும், தமிழ் உயிர்மெய்க் குறிகள் இரண்டையும் சேர்க்க வேண்டும் என்று முன்மொழிந்தது யார்?  அவர் அதற்கு என்ன சான்றுகள் காட்டியிருக்கிறார்?  தமிழ் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் அவர் முன்மொழிந்தது போல் முழுக்க தமிழ் எழுத்துகளுக்கு இணையான எழுத்துகளைக் கொண்டு முழுக்க கிரந்த எழுத்துகளிலேயே அச்சாகியிருக்கிறதா? அவர் மேற்கோள் காட்டும் “சம்ஸ்கிருத கிரந்த லிபி சபா” சென்னையில் எங்கே இருக்கிறது?  அவர்கள் உண்மையிலேயே தமிழ் எழுத்துகளைக் கிரந்தக் குறியீடுகளில் அச்சிடுகிறார்களா?

மணிப்பிரவாளத்தில் இன்னும் யாரேனும் எதையேனும் அச்சிடுகிறார்களா?  இருந்தால் எதற்காக?  மணிப்பிரவாளத்தில் என்னென்ன பழைய நூல்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் இருக்கின்றன?  அவற்றில் என்ன செய்திகள் உள்ளன?  இவற்றால் தமிழுக்கும், தமிழனுக்கும் என்ன கிடைக்கும்?

வேள்விக்குடி செப்பேடுகள், தளவாய்புரம் செப்பேடுகள், என்றால் என்ன?  அவை எந்த எழுத்துகளில் உள்ளன? தமிழ்நாட்டிலும், கேரளத்திலும், மற்றும் ஆந்திரத்திலும், கருநாடகத்திலும் உள்ள தமிழ், தமிழர், தமிழ் மன்னர் பொறித்த கல்வெட்டுகள் எந்தெந்த மொழிகளில், என்னென்ன எழுத்துகளில், எந்தெந்தக் குறியீடுகளில் உள்ளன?

அண்மையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் எண்ணிமப்படுத்த (digitize) ஒப்பந்தம் செய்துள்ளபடி எடுத்திருக்கும் 100,000 கல்வெட்டுப் படிகளில் எவ்வளவு கிரந்த எழுத்துகளில் உள்ளன, எவ்வளவிற்றில் கிரந்தம் கலந்து உள்ளது?

இது போன்ற கேள்விகளுக்கு அறிஞர் சான்றுகளுடன் விடை கொடுத்தால், பொதுமக்கள் எதை ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்று தெரிந்து செய்யலாம். 

அதுவே பொறுப்பான செயல்.

கண்மூடித்தனமான எதிர்ப்போ ஆதரவோ பகுத்தறிவாளர்கள் நெறிக்கு ஏற்புடையதாகாது.

ஊடகங்களில் வரும் பிழையான செய்திகளால், கிரந்த முன்மொழிவுகள் பற்றி இன்னும் குழப்ப நிலை கூடிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.  சரியான தொழில்நுட்பச் செய்திகளை, தொழில்நுட்பத்தில் பட்டறிவு உள்ளவர்கள் விளக்கிச் சொல்வது தேவை.  இது அறிவு சார்ந்த துறை.  பேசாளர்கள் கூடுமானவரை உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், நுட்பச் சான்றுகளைக் கொண்டு செய்திகளை விளக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

செய்வார்களா?

ஞாயிறு, நவம்பர் 07, 2010

Tamil, Grantha, Unicode - The need to stop adding fuel to the fire to extinguish it

Friends,

This is a rare post in English. My apologies for mixing an English post in my Tamil blog.  But I thought it is important enough to post it as is rather than write it in Tamil, particularly when non Tamils are watching us and wondering how Tamils approach issues related to Tamil language.

Mr. Ramasami, a Tamil enthusiast was concerned about the recent activity on Grantha encoding and Tamil and wrote the following to the Tamil Ulagam mailing list among several others.  Since I am a member of Tamil Ulagam, I happened to read this in the thread http://groups.google.com/group/tamil_ulagam/browse_thread/thread/0c145414f1c4e515#

He wrote on November 7, 2010:
There can be a separate slot for grantha letters, not to called extended Tamil, in which they can do any thing. People like Dr.Ganesan & Dr. ManiManivannan & c, are trying to add unnecessay letters in the tamil slot, since they are encouraged by the silence of so called patrons, when U+0B82 &  U+0BB6 were inserted in the Tamil slot. The earlier the vacant positions are occuppied by real Tamil letters like the earlier nA, NA, RA, elephant trunk like ai vowel mark,  consonants with u vowel mark, consonants with U vowel mark and the like, Tamil slot will be safe from  fifth column intruders !!


This e-mail (and some others along similar lines) prompted me to respond with the following e-mail to him at the Tamil Ulagam list.

Dear Mr. Ramasami,

I would like to make at least two corrections to your post and if you don't mind I would like you to forward my post to all the other mailing lists where I am not a subscriber.

One, I don't have a doctorate degree.  So, I am comfortable with a Thiru Mani Manivannan or Mr. Mani Manivannan and please don't address me with a Dr. title.  That would be misleading.  Please.

Two. You have made a statement that I along with Dr. Ganesan is trying to add unnecessary letters in the Tamil slot.  That is wrong.  Please verify your data before posting such mails.  These things take on lives of their own and inflammatory discussions erupt.

I have spent enormous hours in the past few days working with several equally hardworking people all over the world in trying to understand what is going on and trying to persuade the Tamil Nadu government, India government and the Unicode Technical committee and even INFITT working group members that the proposals to add Tamil letters to grantha need further review and a decision to accept it must be deferred.  I have, as a member of the INFITT WG02, before taking over as its chair this month, wrote a technical note recording my concern about adding new characters to Extended Tamil in the SMP space.  It is a matter of public record.

I would like to appeal to all those who want to comment on such emotional issues to first ascertain facts before accusing people of evil designs.  Most of the proposals are matter of public record and there is a lot of hard work that go behind these.

I have strong difference of opinion with Dr. Ganesan and his effort to add five uniquely Tamil characters as "Dravidian characters" in the Grantha proposal.  His stated reasons vary all over the place.  In the mailing list MinTamil he imagines that Grantha character set, with the addition of Tamil characters, will become popular with Tamils all over the world for writing anything with foreign sound.  Though that will have a major effect on Tamils, he has been insisting that INFITT has no locus standi in commenting on Grantha proposal as it has nothing to with Tamil.

If there is anyone "scheming" to create a trojan horse to "invade" Tamil, rather than color it with caste, race and linguistic politics, I'd suggest that one look at the various proposals.  It appears that Dr. N. Ganesan initiate this proposal and he asserts that he has solid support from several Tamil and international linguists.  It would be best to  ask Dr. Ganesan to justify the addition of the five Tamil characters (plus two Tamil vowel modifiers) in light of his contradictory statements all over the place.  I wish he would write a separate white paper with reasoned arguments, particularly in light of the strong opposition filed with the UTC by several scholars.

Unicode consortium and INFITT are technical bodies and if one were to have these technical bodies accept or reject proposals one needs to make sound technical arguments.  Emotional statements, accusations against "fifth column intruders" etc., don't impress the technical bodies.

In preparing for the arguments against these proposals, some of us recognized that we were in dire need of scholars with expertise in Grantha and Tamil, Linguistics, Grantha/Tamil epigraphy, solid knowledge of Grantha/Tamil inscriptional records, understanding of Sanskrit and Grantha etc.  While it is easy to caricature it as the neo-Aryan invasion of the pristine Tamil country, and unfortunately only such dire characterizations move the government machinery to action, these proposals require some rational minds sit and review the proposals carefully and judge them on technical merits.  The political and emotional attributes of these will not go away now that politicians are involved.  But since the Unicode Technical Committee has deferred its decision until its next meeting on February 26th or so, we have about 3 months to investigate this and make facts known.

Whoever gets appointed to these committees cannot do their job in a highly charged atmosphere if they worry that everyone of their scholarly decision is going to be judged and they may face hostile crowds baying for their heads for being a traitor to their cause.

I am fairly surprised that the process that the Government machinery in Tamil Nadu followed to investigate these proposals were fairly balanced and even the politicians involved in this have been far more open minded than some of the emotional outbursts that I have seen in the mailing lists.  I concede that the emotional outbursts were the reason why the authorities even got involved in such an arcane activity as a Unicode proposal to encode Grantha script.  Without that I doubt if an octogenarian CM would spend several hours on the eve of a major public holiday reviewing the impact of this proposal and bothering to send a note to the central ministry for urgent action.

But that is done.  Now, I hope that all the people that demanded government action would push for swift appointment of this high level committee and give scholarly space to this committee to make its recommendations in relative academic freedom.

Tamils belong to a great civilization.  We should have enough faith in the strength of the great Tamil language and the wisdom of Tamil people to handle any challenges.

We should also have the magnanimity to let others equally passionate about their language and culture to define their space in the world.

I hope that all these heightened attention and energy on Tamil unicode and unicode space can be harnessed for positive actions and promote Tamil computing in public spheres including that of eGovernance and archival of Tamil heritage records.

However, if the atmosphere is so charged, I am concerned that people who possess the knowledge to help us understand the issues better may not participate in the deliberations and we will all suffer as a result.

Please, I appeal to you, please don't make it so difficult to do this.  If you really want to help, read up the various proposals and the public comments from various players and judge for yourselves.

Until then, please don't add fuel to the fire.

Thank you,

Regards,

Mani M. Manivannan
(presently at) Singapore

P.S. If I don't respond to your e-mails in a timely manner, please bear with me.  I have other things to do to earn a living and sometimes I have to prioritize those.  While I am traveling on business, my access to the internet and my time to read and respond to your comments are limited.  And I need time to think before responding to your e-mails rather than react rashly.  And I hope that you would give me the same respect and think about what I have written here before reacting to it within minutes.  நன்றி.