சனி, பிப்ரவரி 20, 2010

பெரியார் சன்னதியும் அண்ணாசாமி, கலைஞ்சசாமி பரிவார தேவதைகளும்

தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் கிரந்தம் தமிழுக்குத் தேவையா? என்ற இழையில், இழைக்குச் சற்றும் தொடர்பில்லாமல், திருக்குறள் கடவுள் வாழ்த்து, கடவுள் மறுப்பு வாதம் பற்றி நண்பர்கள் வேந்தன் அரசும், ஜெயபாரதனும் பந்தாடிக் கொண்டிருந்தார்கள்.  இந்த ஆட்டம் அவ்வப்போது வெவ்வேறு களங்களில் வருவதுதான் என்றாலும்,  ஜெயபாரதனின் கீழ்க்காணும் கூற்று என்னைக் கொஞ்சம் உசுப்பி விட்டுவிட்டது.

சி. ஜெயபாரதன் எழுதினார்:


கடவுளைக் காட்டு, உயிரைக் காட்டு, ஈர்ப்பியலைக் காட்டு, மின்சக்தியைக் காட்டு, கருந்துளையைக் காட்டு, கருஞ் சக்தியைக் காட்டு !  இல்லாவிட்டால் அவை அனைத்தும் இல்லை என்பேன் என்று பகுத்தறிவுவாதி ஒருவதான் சொல்கிறான்.

அந்தத் தொடரில் தொடர்ந்து நான் எழுதியவற்றை இந்த வலைப்பூவிலும் பதிக்கிறேன்.

இது சற்று அலுப்புத் தட்டும் வாதம்.

கடவுள் மறுப்பு வாதங்கள் தொன்மையானவை.  வேத காலத்திலிருந்தும், பௌத்த, சமண காலத்திலும், மிகவும் கூர்மையான அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன.  சார்வாக, லோகாயத எண்ணங்கள் தலைமையானவை.  ஆசீவகர்கள் சிந்தனையும் தமிழ்நாட்டிலும் வேரூன்றி இருந்திருக்கிறது.

ஈர்ப்பியலை, மின்சக்தியை, கருங்குழியை, கருஞ்சக்தியை  அளவிட முடியும்.  அவை பற்றிய அளவைகள், கருத்துகள் பிழையானவை என்றால் அவற்றை மாற்றிக் கொள்ள முடியும். 

உயிர் வேறு, ஆன்மா வேறு.

உயிர் இருக்கிறதா இல்லையா என்று எளிதில் கண்டறிய முடியும்.  உயிரைக் கொடுக்க முடியாவிட்டாலும், எடுக்க முடியும்.

பகுத்தறிவுவாதிகள் இவற்றை எதிர்ப்பதில்லை.  எதிர்ப்பதாக நீங்கள் கூறுவதால் உங்களுக்குப் பகுத்தறிவுவாதம் பற்றி ஏதும் தெரியாது என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

கடவுள் என்ற பொதுக்கருத்து வேறு,  ஒவ்வொரு சமயங்களும் காட்டும் விதப்பான கருத்து வேறு.

மரங்களையும், நாகங்களையும், கற்களையும், குளங்களையும்,
மழையையும், காற்றையும், இடியையும், மின்னலையும், கடலையும்,
ஆற்றையும் வ்ழிபடுவது வேறு.  இந்தப் பேரண்டத்தைப் படைத்ததாகக்
 கருதப் படும் சக்தி என்பது வேறு.

இயற்கைப் பொருள்களை வழிபடும் மனிதன், அந்தப் பேராற்றல்
கொண்டிருக்கக் கூடிய மாபெரும் படைப்புக் கடவுளின் ஒரு பகுதியை
 வழிபடுகிறான் என்பதெல்லாம் சப்பைக் கட்டு.

தனக்கு இடைஞ்சல் தரக்கூடிய ஆற்றல்களுடன் சமரசம் செய்ய முயல்வது 
மனிதனின் இயல்பு.

அரசனுடன், அமைச்சனுடன், அரசியல் வாதிகளுடன், எதிரியுடன் சமரசம்
செய்து கொள்வதுபோல, மரத்துடன், கடலுடன், மற்ற சக்திகளுடன் 
சமரசம் செய்ய முயல்வது மனித இயல்பு.

ஏதோ ஒன்றைக் கொடுத்தால், தனக்கு வேண்டிய ஒன்றைத் தரும் சக்தி என்ற அளவில் மட்டும் பேரம் செய்ய முயல்பவன் மனிதன்.
அது செல்வமாக இருக்கலாம், மறு பிறவியாக இருக்கலாம், சுவர்க்கமாக இருக்கலாம், ஆனால், தன்னைத் தந்தோ, அல்லது ஏதாவது தானத்தைத் 
தந்தோ, தனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சக்தியைத்
தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும் மனிதனுக்குச் சமயங்கள் அந்தச் சமரசம் செய்ய வழிவகுக்கின்றன.
அத்தகைய சமயங்களுக்குள் இருக்கும் பொய், புளுகு, மனிதனுக்கு எதிரான கொள்கைகள் இவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதும் மனித இயல்புதான்.

"குற்றம் செய்தால் கண்ணைக் குத்தும் சாமி"  என்று மிரட்டும் சமயத்துக்கு எதிராக நான் சாமிக்குற்றம் செய்கிறேன் பார், என்னை அந்தச் சாமி என்ன செய்து விடும் என்று எதிர்த்துக் காட்டுவது பகுத்தறிவுதான்.

ஏ மனிதனே, உன்னைப் பிறப்புக்கு முன்னரே அடிமைப் படுத்தும் அமைப்புகளை நீ ஏற்க வேண்டியதில்லை.  உன் கருவிலேயே உனக்குப் பூட்டிய விலங்குகளை நீ உடைத்தெறி.  உன்னை அடிமைப்படுத்தும் எந்த அமைப்புகளையும் நீ ஏற்க வேண்டியதில்லை.

உன்னைப் பிறப்பிலேயே ஒரு தெய்வம் அடிமை எனச் சொல்கிறது என்றால், அது தெய்வமே இல்லை.  அதை நீ அச்சமின்றி எதிர்க்கலாம் என்று கலகக்குரல் கொடுப்பது பகுத்தறிவுவாதம் என்றால், அது மனிதநேயத்துக்கு ஏற்றதே.

தெய்வம், கடவுள் என்ற கொள்கைகள் எல்லாம், மனிதனிடமிருந்து தோன்றிய கருத்துகள்.  அவை உண்மையா பொய்யா என்று அறிய முடியாத கருத்துகள்.  யாரும் தன்னந்தனியே தன் இல்லத்துக்குள் தனக்குப் பிடித்த கடவுளை வணங்குவதைப் பற்றிச் சற்றும் கவலைப் படுவதில்லை.

ஆனால், கடவுளின் பெயரால், சமயத்தின் பெயரால், மனிதனைத் தாழ்த்தி, அவனுக்கு விலங்கிடும் அமைப்புகள் எவையையும் எதிர்ப்பதில் தவறே இல்லை.

கடவுள் கண்ணைக் குத்துவதில்லை என்பதைப் பகுத்தறிவுவாதிகள் அன்றாடம் காட்டிக் கொண்டே இருந்தாலும், நம்புபவர்கள் பலர் மாறுவதில்லை.

தம் இருப்பிடத்தை இடி, மின்னல், மழையிலிருந்தோ, மனிதரின் செயல்களிடமிருந்தோ காப்பாற்றக்கூட முடியாதவர் ஒரு வல்லமை படைத்த கடவுளா என்று கேட்பதில் தவறில்லை.

பேரண்டத்தைப் படைத்ததாகத் தாம் நம்பும் கடவுளுக்கு உலகில் தனியாக எண்ணற்ற இருப்பிடங்கள் தேவையில்லை என்று கொள்பவர்களும்
பகுத்தறிவுவாதிகள்தாம்.

"வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கைக்காகக் கூட நம்பி விடாதே!
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பிவிடாதே நீ வெம்பிவிடாதே!"

என்ற பாடலின் கருத்தை யார்தான் மறுக்கவியலும்?

"கடவுளை மற, மனிதனை நினை"  என்ற வாக்கின் மனிதநேயத்தை யார்தான் வெறுக்க முடியும்?
சிறு பிள்ளைத் தனமான வாதங்கள் அலுப்புத் தட்டுபவை.
இதற்கு விடையாக ஜெயபாரதன் எழுதினார்:
On 2/20/10, சி. ஜெயபாரதன்  wrote:
விஞ்ஞானம் நுழைய முடியாத பிரபஞ்சத்தின் தோற்றமும், அதன் பிறப்பின் காரணமும் விளைவுகளும் கடவுளைப் போல் ஊகிப்புகளே. 

நான் எழுதினேன்:
 ஆம்.  பிற்காலத்தில் தரவுகள் இந்த ஊகிப்புகள் பிழையானவை என்று காட்டினால், அறிவியல் சற்றும் தயங்காமல் தம் கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளும்.


ஆனால், கடவுள் சொன்னார், முனிவர்கள் எழுதினார்கள் என்று சொல்லும் சமயங்கள் தாங்கள் சொல்லியவற்றை மாற்ற முடியாது.
உலகைக் கடவுள் இப்படித்தான் படைத்தார், இத்தனை நாளில் 
படைத்தார் என்று எழுதியவர்களால், அறிவியல் அளவைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.  டார்வினின் படிவளர்ச்சிக் கொள்கையோடு சமரசம் செய்து கொள்ள முடியாது.  டைனசோர்களையும், பெரும்பழங்கால உயிரினங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
உலகம் தட்டையானது, ஆமையின் முதுகில் மிதப்பது என்று சொன்னவர்களால், உருண்டையான உலகுடன் சமரசம் செய்துகொள்வது கடினம்.

கலிலியோவைத் தண்டித்தது சமயக் கொள்கை.  பின்னர் அசடு வழிந்து சமரசம் செய்து கொண்டு சமாளித்துத் தொடர்கிறது.

பல சமயங்களால் அது முடிவதில்லை.

அறிவியலில் எதுவுவே மாற்ற முடியாத அடிப்படைக் கொள்கையில்லை.  சார்ல்ஸ் நூட்டனும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும், சார்ல்ஸ் டார்வினும் இறைத்தூதர்களல்லர்.  மனிதர்கள்.  அவர்கள் கோட்பாடுகளுகளைத் தகர்த்தெறியும் தரவுகள் கிடைத்தால், அறிவியல் அவர்களைப் புறக்கணிக்கத் தயங்காது.

அதுதான் சமயச் சிந்தனைக்கும், அறிவியல் சிந்தனைக்குமுள்ள அடிப்படை வேறுபாடு.

 நண்பர் ஜெயபாரதன் சற்றுப் பொறுமை இழந்து எழுதினார்:

On 2/20/10, சி. ஜெயபாரதன்  wrote:
////பேரண்டத்தைப் படைத்ததாகத் தாம் நம்பும் கடவுளுக்கு உலகில் தனியாக எண்ணற்ற இருப்பிடங்கள் தேவையில்லை என்று கொள்பவர்களும் பகுத்தறிவுவாதிகள்தாம்///
சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி கொண்டு பிளப்பதும் எக்காளம் ?
கடவுளுக்குக் கலைக் கோவிலான மதுரை மீனாட்சி ஆலயத்தைப் பீரங்கி கொண்டு பிளப்பவர் அடி முட்டாள்கள் !!!!
கடவுளை நம்பாதவர் மூர்க்கராய்ப் பீரங்கி கொண்டு ஏன் தாக்கப் போகிறார் ?
கடவுளை நம்பாத பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையார் சிலையை ஏன் உடைத்துக் காட்டினார் ?  
பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையாரை ஒழித்தாரா ?


அதற்கு என் விடை:

நீங்கள் மிகைப்படுத்திக் கூறுகிறீர்கள்.  தற்கால நெடுந்தொடர் பாணியில் கேட்டால் "இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய்த் தெரியலை?"

பெரியார் என்று சீரங்கநாதனையும், தில்லை நடராஜனையும், மதுரை மீனாட்சி ஆலயத்தையும் பீரங்கி கொண்டு பிளந்தார்?!

பகுத்தறிவுப் பெரியார் உடைத்த பிள்ளையார் சிலையை விடக் கூடுதலாக ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகளை இன்று மக்கள் வெவ்வேறு வடிவங்களில், வண்ணங்களில் கடலில் கொண்டு போய்க் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  சிலருக்கு அது ஒரு நாள் கூலி வேலை. பலருக்கு அதில் பக்திப் பரவசம்.

பெரியார் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் வந்தார்.

செருப்பு மாலை அணிவித்த பெரியார் கிட்டத்தட்ட நூறு வயது வாழ்ந்து விட்டதால், பிள்ளையாருக்குச் செருப்பு மாலையும் உகந்தது போலும் என்று ஆத்திகர்கள் கருதிக் கொண்டனர்.

யாரோ ஒரு ஆத்திகப் பெரியார், நாத்திகப் பெரியாரைப் பற்றிக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

"பக்தன் ராமனை மறந்தாலும், ராமசாமி மறக்க மாட்டார்.  பிள்ளையாருக்கு பக்தன் பூசை செய்யவில்லையென்றாலும், ராமசாமி செருப்புமாலை போடுவார்.  ஒவ்வொரு நொடியும் கடவுளைப் பழிக்கிறேன் என்று சொல்லி மறக்காமல் கடவுள் பெயரை நாவில் கொண்ட இவர் ஒரே பிறவியில் மோட்சம் அடையும் பாக்கியம் பெற்றவர்."

பெரியாரை இப்படியும் பார்க்கலாம் என்று அப்போதுதான் தெரிந்தது.

அதைப் பற்றியும் பெரியார் பொருட்படுத்தவில்லை.

இந்து சமயத்தில் ஆயிரக்கணக்கான குப்பைகள் உள்ளன.

எல்லா சமயங்களிலும் ஆயிரக்கணக்கான குப்பைகள் உள்ளன.

பெரியார் இயக்கமும், எந்த அரசியல் இயக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்து சமயம் தனக்குள்ளே இருந்து கொண்டு தன்னைச் சீர்திருத்த முயன்ற எல்லோரையும் விழுங்கிக் கொண்டு விட்டது.  சித்தர்கள் செய்யாத விளையாட்டா?  இராமானுசர் செய்யாத சீர்திருத்தமா?  கடைசியில் அவரும் எல்லோரையும் போல இன்னொரு கடவுள்.  பரிவார தேவதை. ஏவ்வ்வ்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக அசைக்க முடியாத, ஆட்டம் காணாத சமய மூட நம்பிக்கைகள் இந்து சமயத்தை அர்த்தமிழக்கச் செய்தன.

இதை விவேகானந்தர் உணர்ந்திருந்தார்.

காந்தி கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டிருந்தார்.  கேரளாவின் தீண்டாமைக் கொள்கைகளை ஒரு பைத்தியக்கார விடுதியென அவர் கருதியது இதற்கு ஒரு காட்டு.

பெரியார், அப்படிப் பட்ட மூட நம்பிக்கைகளைத் தோலுரித்துக் காட்டினார். அவர் கொள்கைகளை மூலைக்கு மூலை முழங்கத் தொடங்கிய காலத்தில், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வீதி இருந்தது.  பிராம்மணாள் மட்டும் சாப்பிடலாம் என்ற அறிவிப்புப் பலகை இருந்தது.  சில விடுதிகளில் "பிராம்மணர்கள் சாப்பிடும் இடம்" என்று தனி இடம் ஒதுக்கப் பட்டிருந்தது.

நாட்டு விடுதலைக்குப் போராடிய காங்கிரஸ் மாநாடுகளிலும் கூட சாதிகள் தனித்தனியாகச் சாப்பிட வசதி செய்திருந்தார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் நடத்திய குருகுலத்தில் பிராம்மணர்கள் மற்ற சாதியினரிடம் இருந்து விலகி இருந்தனர்.

நாட்டுக்கு விடுதலை வேண்டுமென்றால், விடுதலை வேண்டுபவர்கள் தமக்குள்ளே இத்தனை பாகுபாடு பார்த்தல் சரியா என்று பெரியார் கேள்வி எழுப்பினார்.  பாரதியாரும் அதையேதான் கேட்டார்.

ஆனால், பெரியாருக்குக் கிடைத்த விடை, அவருக்கு வேறு பாதையை வழி வகுத்துக் கொடுத்தது.

இன்று பிராம்மணர்கள் சாப்பிடுமிடமோ, பிராம்மணாள் விடுதியோ இல்லை.

அன்று ஒடுக்கப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று புறக்கணிக்கப் பட்ட பல சாதியினர் இன்று வாழ்வுத்தரத்தில் உயர்ந்திருக்கிறார்கள்.

தீண்டத்தகாதவர் என்று புறக்கணிக்கப் பட்ட சாதியினர் நடத்தும் சைவ உணவு விடுதிகளில் இன்று பிராம்மணரும், பலரும் அன்றாடம் சாப்பிடுகிறார்கள்.

அன்று எல்லோரும் சாதிப் பெயரைப் பட்டம் போல ஒட்டிக் கொண்டிருந்தனர். 

இன்று சாதிப் பெயரை ஒட்டிக் கொள்ளும் வழக்கம் வெகு குறைவு.

அன்று தீண்டத்தகாதவர், கீழ் சாதியினர் என்று கருதப் பட்டவ்ர்களைப் பள்ளிகளுக்குள்ளேயே விட மாட்டார்கள்.  இன்று அப்படிப்பட்ட சாதிகளில் தோன்றியவர்கள் நாட்டை ஆளுகின்றனர்.

இதற்கெல்லாம் அடி கோலியவர் பெரியார் என்று பலர் போற்றுகின்றனர்.

தமிழ்நாடு இயல்பாக எடுத்துக் கொள்ளும் பல முன்னேற்றச் சிந்தனைகள் இன்றும் வடநாட்டில் நடைமுறைப் படுத்த முடிவதில்லை.  தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்கள் சமூகத்தில் உயர்ந்த அளவுக்கு வட மாநிலங்களில், குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிகாரில் இல்லை.
அதனால்தான், உத்தரப்பிரதேசத்தில் பெரியாருக்குச் சிலை வைத்துப் போற்றினார்கள்.

பெரியார் கொள்கைகளை ஏற்காதவர்கள்கூட அவரது வாழ்நாளில் அவர் தூண்டிய மாற்றங்களை வரவேற்கிறார்கள். 

இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள், இந்து சமயம் பெரியாரை ஒரு பெரும் பக்தனாக, இந்து சமயத்தைத் திருத்த கடவுள் அனுப்பிய அரக்கனாக வழிபடுவார்கள்.

புத்தரை அப்படித்தான் இந்து சமயம் ஓர் அவதாரமாக எடுத்துக் கொண்டு பௌத்தத்தை ஸ்வாஹா செய்தது.  ஆதிசங்கரரையே ஒரு "ப்ரசன்ன பௌத்தர்" (மறைவான புத்த பிக்கு) என்று சிலர் குற்றம் சாட்டவில்லையா?  மகாயான பௌத்த சமயத்துக்கும் சங்கரரின் அத்வைதத்துக்கும் உள்ள வேறுபாடு ஒன்றும் பெரிதில்லை என்றார்கள் பல வைதீக அறிஞர்கள்.

எம்பெருமான் தடுத்தாட் கொண்ட பெரும் பக்தன் என்று பெரியாருக்குச் சன்னதிகள் வைத்து அதற்கு அண்ணாசாமி, கலைஞ்சசாமி பரிவார தேவதைகள் வைத்து, தமிழ்நாடெங்கும் உள்ள பெரியார், அண்ணா சிலைகளைக் கோவில்களாக்கினாலும் வியப்படைய மாட்டேன்.

செவ்வாய், பிப்ரவரி 16, 2010

இந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை - மறுபதிவு

 இந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை பற்றி மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழ்மன்றம் மடற்குழுவில் உரையாடிக் கொண்டிருந்தோம் (பார்க்க: இந்திய ஊடகங்களின் மீது வழக்கமான ஒரு குற்றச்சாட்டு ).  அப்போது நான் எழுதியதை, நண்பர்களின் பரிந்துரையை ஏற்று, சில மாற்றங்களுடன், இங்கே மறு பதிவு செய்கிறேன்.


 ++++++++++++++++++



இந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை பற்றிச் சென்ற சில ஆண்டுகளில் இந்து நாளேடு ஒரு தொடர் வெளியிட்டிருந்தது.  ஆங்கில ஊடகங்களில் வேலை செய்பவர்கள் பொதுவாக மேட்டுக்குடி மக்கள் (elite families) என்றும், ஆங்கில வழிப்பள்ளிகளில் படித்தவர்கள் என்றும், சாதாரண பொதுமக்கள் பற்றிய மேட்டுக்குடி சிந்தனை உடையவர்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

குறிப்பாக இட ஒதுக்கீடு பற்றிய செய்திகளிலும், அன்புமணி ராமதாஸ் பற்றிய செய்திகளிலும், தீவிர வலதுசாரி சாய்மானத்துடன் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  ஆனால், பொதுமக்களிடையே, குறிப்பாகத் தென் மாநிலங்களில் இட ஒதுக்கீடு பற்றி நடுவணரசு கொள்கைகள் எல்லாம் முப்பதாண்டுகளுக்கு முன்னதாகவே வழக்கில் வந்தவை. இதில் என்ன பெரும் கூப்பாடு என்று தென் மாநில மக்களுக்குப் புரியவில்லை என்று சொல்லியிருந்தார்கள்.

அதே போல், ஈழத்தமிழர்கள் வதைபடும் செய்திகள், மலேசியத் தமிழர்கள் பற்றிய செய்திகள், இவை எல்லாம் ஆங்கில ஊடகங்களில் சார்புத் தன்மையோடே பார்க்கப் படும்.  குறிப்பாக, ஈழத்தமிழர் பற்றிய செய்திகளில், ஆங்கில ஊடகங்கள், குறிப்பாக நாளேடுகள் ஈழத்தமிழர் வீழ்வதைக் கண்டு கொள்ளவில்லை. அப்படிக் கண்டு கொண்டால் சிங்களவர் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.  ஆனால், தமிழ் நாளேடுகளும், வார இதழ்களும் (ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து) தமிழர் வதைபடுவதைப் பற்றிப் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.  பெருநீரோட்ட நாளேடான தினமணி இதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு.  அதே குழுமத்தைச் சேர்ந்த ஆங்கில நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏனைய ஆங்கில ஊடகத்தின் சார்பைத்தான் எதிரொலித்தது.

இதே போல் அரசு நடத்தும் அனைத்திந்திய வானொலியிலும் சார்புத் தன்மை தெரிந்தது.  தமிழ்ச் செய்திகள்  ஓரளவு ஈழத்தமிழர் பற்றிய செய்திகளை ஒலிபரப்பின.  ஆங்கிலச் செய்தியில் அவ்வளவாக அனுதாபம் தெரிவிக்கவில்லை என்றாலும், நாளேடுகளை விட, ஏனைய ஆங்கில ஊடகங்களை விடக் கூடுதலாகவே செய்திகளை ஒலிபரப்பினார்கள்.

என் டி டிவி போன்ற ஊடகங்கள், தமிழர் வீழ்ச்சியை தீபாவளி போல் கொண்டாடினார்கள்.  புலிகள் வீழ்ச்சி மட்டுமல்ல, மலேசியத் தமிழர்கள் கைது செய்தியும் ஆங்கில ஊடகங்களுக்குக் கொண்டாட்டத்தையே தருவன.  இவர்களைப் பொருத்தவரையில் தமிழர்கள் அடிமைகளாகக் கப்பலேறிப் போனவர்கள்.  அவர்களுக்கு என்று எந்த உரிமையும் கிடையாது. 

ஆஸ்திரேலியாவில் பொறுக்கித் தனமாக நடந்து கொண்ட இந்தியர்கள் செருப்படி வாங்கிய போது இந்திய ஊடகங்கள் போர்க்குரல் எழுப்பினார்கள்.  அமெரிக்காவில் தொடர்ந்து பல தெலுங்கர்கள் கொலை செய்யப்பட்டது இவர்கள் கவனத்தை ஈர்த்தது.  ஆனால் தமிழனுக்கு ஆதரவாக ஒரு மூச்சு கூட விட மாட்டார்கள்.

நானும் இந்த ஆங்கில நாளேடுகளைப் பார்த்துச் சலித்துப் போய்விட்டேன்.  அவற்றில் விளம்பரம் செய்யும் எவரையும் நான் ஆதரிப்பதில்லை.  இருக்கும் சந்தாவையும் நிறுத்தி விட்டு முழுக்க முழுக்கத் தமிழ் நாளேடு மட்டும் படிக்கிறேன்.  இந்தியாவில் ஒளிபரப்பாகும் எந்த ஆங்கிலச் செய்தியையும் நான் பார்ப்பதில்லை.  தமிழனைப் பற்றி அக்கறையுடன் செய்தி வெளியிடாத எவருக்கும் என்னுடைய ஆதரவு இல்லை.  வலையில் அமெரிக்க நாளேடுகள் வருவதால், உலகச் செய்திகளுக்கு அவற்றை மட்டுமே நம்பியிருக்கிறேன்.  இங்கிலாந்தின் கார்டியன், அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், சான் ஓசே மெர்க்குரி நியூஸ் இவற்றில் வெளியாகும் செய்திகள் ஓரளவுக்கு நம்பகமானவை.

சிங்களவரின் இன வெறியாட்டம் பற்றிய செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டுமென்றால் அமெரிக்க, இங்கிலாந்து ஊடகங்களைத்தான் நீங்கள் நாட வேண்டும்.  இந்தியாவில் அதைப் பார்க்க முடியாது.  இனி மேல் இந்திய ஆங்கில ஊடகங்கள் மனித உரிமையைப் பற்றி நாயாய்க் குரைத்தாலும் அவற்றை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

அதே நேரத்தில் தமிழ் ஊடகங்களைப் பற்றியும் எனக்கு வருத்தம் உண்டு.  சுனாமி சமயத்தில் வேலை மெனக்கெட்டு உடனுக்குடன் சன் டிவி வரவழைத்தேன்.  ஆனால், சுனாமி பற்றி அவ்வப்போது, துள்ளல் மகிழ்ச்சிக் குரலோடு இத்தனை பேர் சாவு என்று கான்வென்ட் கன்னிகள் புன்னகை செய்தார்களே ஒழிய, வழக்கமான நெடுந்தொடர் குப்பைகளும், குத்தாட்டங்களும் மட்டுமே ஒளி பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் நாளேடுகளோ, பிணங்களை அள்ளிக் குவிப்பதை முழு வண்ணப் படங்களோடு வெளியிட்டு மகிழ்ந்தனர்.  இவர்களின் எவனாவது தன்னுடைய தாய் தந்தையர், உடன் பிறந்தார், குழந்தைகளை அப்படிப் படம் காட்டி வெளியிட்டிருப்பானா?  அதென்ன ஊரார் பிணங்களை மட்டும் போட்டுக் காட்டும் காட்டுமிராண்டித்தனம்?

அதே போல் எப்போது யார் துன்பப்பட்டாலும் குத்தாட்டம் மட்டும் குறையாது.  தமிழ் மக்களுக்கு சீரியல் தொடர் இல்லையென்றால் தலல வெடித்து விடும்.

சீ, இப்படியும் இருக்கிறார்களே ஊடகங்களில் என்று நம்மை நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

எந்த மேலைநாட்டு ஊடகமாவாவது செப்டம்பர் 11ல் இறந்தவர்களின் பிணங்களைப் படம் பிடித்துப் போட்டார்களா?  அவர்களுக்குத் தம் மக்களை எப்படி மதிப்பது என்று தெரியும்.

நம்மை நாமே மதிக்கவில்லை என்றால் எப்படி ஊரானிடம் மதிப்பை எதிர்பார்க்க முடியும்?

சனி, பிப்ரவரி 06, 2010

மானமுள்ள உடன்பிறப்புக்குப் பணிவுள்ள தமிழனின் விடை

மலையாள நடிகர் ஜெயராம் பிதற்றியிருக்கிறார் (தமிழ்ப்பெண்களை அவதூறாக பேசிய நடிகர்).

நடிகர் ஜெயராமின் பிதற்றலில் எண்ணற்ற தவறுகள் உள்ளன.
  • ஒரு முதலாளி தன் வீட்டு வேலைக்காரியைப் பெண்டாள எண்ணுவது
  • ஒரு வேலைக்காரி தமிழ்ப்பெண் என்பதை இழிவாக எண்ணுவது
  • கருப்பான பெண் என்ற நிறவெறியைக் கொண்டிருப்பது
  • எருமை போன்றவள் என்று அவரைப் பழித்தது
என்ற எல்லாமே முட்டாள்தனமான முரட்டுச் செயல்கள்.

  • அப்படிப் பட்ட நடிகனுக்குத் தமிழ்நாட்டில் சென்ற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டலாம்.
  • அவன் படம் ஓடும் திரையரங்குகள் முன்பு மறியல் செய்யலாம்.
  • அவன் வீட்டுக்கு முன் தேர் உயரத்துக்குக் கருப்பு எருமை கட் அவுட் ஒன்றை அவன் முகச்சாயலில்  வைக்கலாம்.

ஆனால், ஒரு சில தமிழர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? ( பார்க்க: 
நடிகர் ஜெயராம் வீடு மீது தீப்பந்தம் ...‎ -

நடிகர் ஜெயராம் வீடு மீது நேற்று மாலை தீப்பந்தம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அலுவலகம் எரிக்கப்பட்டதுடன், காரும் .
... 8 பேர் கைது செய்யப் பட்டனர்.  அவர் டைரக்டரும், நடிகருமான சீமானின் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறினார்கள்...
)

 ஆனால்,  செய்ய வேண்டியதை எல்லாம் விட்டு விட்டு, பொறுக்கித்தனமாக அந்த நடிகன் வீட்டை, அவன் இல்லாதபோது தாக்கி, அலுவலறையை எரித்து, அவன் மனைவி மக்களை மிரட்டுவது தமிழனுக்குப் பெருமை தரும் செயலா என்ன?

இதைச் செய்த பொறுக்கிகள் சீமான் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தினத்தந்தியில் படித்தபோது  வேண்டுமென்றே சீமானின் இயக்கத்தைப் பழிக்கிறார்களோ என்றுதான் நான் முதலில் எண்ணினேன்.

ஆனால், பகலவன் என்பவரின் வலைப்பூவில் இன்று வந்த பதிவு (கருணாநிதிக்கு மானமுள்ள உடன்பிறப்பின் அவசர கடிதம்! ) என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பகலவனின்  சொல்லடிகளிள் சிலவற்றை இப்பதிவின் கீழே போட்டிருக்கிறேன்.

நம்முடைய தன்மானத்துக்குப் போராடுபவர்கள் மற்றவர்களைத் தூற்றுவதும், இழிவான சொற்களைக் கொட்டுவதும் நம் பண்பாட்டுக்கு ஒவ்வாதது என்று யாராவது இந்தப் பகலவனுக்குச் சொல்லவேண்டும்.

இவரது பதிவைப் பார்க்கும்போது, சீமானின் நாம் தமிழர் இயக்கம் இத்தகைய செயலைக் கொண்டாடுகிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

இதற்கும், மும்பையில் வந்தேறிகள் என்று சொல்லி மற்றவர்களை மிரட்டும் தாதாக்களின் செயலுக்கும் என்ன பெருத்த வேறுபாடு உள்ளது?  இப்படி மிரட்டிப் பணம் பறிக்கும் கூட்டம் என்றுதான் நாம் தமிழர் இயக்கத்தின் மீதும் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னர் தங்கபாலு, இப்போது ஜெயராம்.

இருவருமே கண்டிக்கத் தக்கவர்கள்தாம்.

ஆனால், இப்படிப் பட்ட பொறுக்கித்தனமான செயல்களால், அவர்கள் செய்த தவறு அடிபட்டுப் போய் தமிழர்கள் மதிப்புதான் கெடுகிறது.

சீமான், தன் இயக்கத்தின் பெயரை "நாம் தமிழர்" என்று வைத்துக் கொள்ள விரும்பினால், தமிழனுக்கே உரிய பண்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இல்லையேல், "நாம் குண்டர்கள்" என்று வைத்துக் கொண்டு குண்டர் செயலைத் தொடரட்டும்.

ஜெயராமின் சொற்களை விட சீமானின் குண்டர்கள் செயல் நம்மைத் தலை குனிய வைக்கிறது.

சீமானின் குண்டர்கள் செயலைப் போலவே சீமானின் பரப்புரையாளர்களின் தரம் குறைந்த சொற்கள் தமிழன் என்ற அடையாளத்தையே இழிவாக்குகிறது.
உண்மையிலேயே தமிழர்கள் எதிர்காலம் பற்றி அக்கறை கொள்பவர்கள் இவை போன்ற குண்டர் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

ஈழத்தமிழர்களின் நிலை கண்டு துடித்து ஆள்வோரின் சிறுமை கண்டு பொங்கியெழுந்தவர்களுக்குத் தலைமை வகுத்தவர் சீமான்.  அவர், இந்த இளந்தமிழர்களுக்கு நல்ல வழி காட்டாமால் கீழ்த்தரமான செயல்களைக் கண்டிக்காமல் இருப்பது வருந்தத்தக்கது.  தலைமைப் பொறுப்புக்கு ஒவ்வாதது.

இனமானம் வேறு, இனவெறி வேறு.

"தமிழர்கள் பல நாட்டில் வாழ்பவர்கள்...  எல்லா நாடுகளிலும் சிறுபான்மையினர்" என்பார் பேரா. வா. செ. குழந்தைசாமி.  பல நாடுகளில் தமிழர்களும் வந்தேறிகள்தாம்.  அதை உணர்ந்து பொறுப்பாக எழுதவேண்டும், பேசவேண்டும், நடந்து கொள்ளவேண்டும்.

சீமானின் கும்பல்களின் வெறியாட்டத்தையும், இழிசொற்களையும், பண்பாடுள்ள தமிழ் உலகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.



--- On Sat, 6/2/10, பகலவன் wrote:
தமிழ் நாடில் உள்ள உனக்கு முதுகு எலும்பு கிடையாது ,கருநாயே நீ என்னடா இந்த மலையாள நாயை மன்னிக்க. நீ என்ன தமிழர் பிரிதிநிதியா? சொட்ட கருநாய்நிதி. தமிழின துரோகி என எல்லோரும் உங்களை திட்டுவார்கள்.

        நாங்கள் மனமுள்ள சீமானாக இருக்க வேண்டாம்.ஆனால் எங்களை இலவசத்தின் பெயரில் கோமாளியாக அல்லவா வைத்து இருக்கிறிர்கள்.நீங்கள் வாழ்க நீடுடி வாழ்க.கடைசியாக உங்க வாயில் பால் ஊற்ற வேண்டும் என்று இந்த உடன்பிறப்புக்கு ஆசை.முடியுமா தறுதலை தலைவா!