செவ்வாய், மார்ச் 02, 2010

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
                                   
சென்னை, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்திய எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? என்னும் தலைப்பிலமைந்த கருத்தரங்கம் மார்ச் 2, 2010, செவ்வாய்க்கிழமை மாலை 6-30 மணிக்கு நடந்தது.


[படம்: பேரா. மறைமலை, மணிவண்ணன், இராம.கி., இ. திருவள்ளுவன்]

கணிஞர் மணி மு.மணிவண்ணன் தலைமை தாங்கினார். அவர் தமது தலைமையுரையில் பேசியவற்றுள் சில:

“சீர்திருத்தம் என்பதை நாம் வெறுப்பதாகவோ எதிர்ப்பதாகவோ கருதிவிடக்கூடாது. பழமையைப் போற்றுவதாகவும் கருதிவிடக்கூடாது. காலத்தினால் மாற்றம் நிகழ்வது இயல்பே. ஆனால் அம்மாற்றம் படிப்படியாக, சிறிதுசிறிதாகவே ஏற்படும்.  தமிழ்க்கல்வெட்டு எழுத்துகளின் மாற்றநிலையைப் பார்த்தால் இவ்வுண்மை புலனாகும்.

இப்போது சீர்திருத்தம் என்பவர்கள் உடனடியாக ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவிழைகிறார்கள்.இம் மாற்றத்தினால் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது?

எழுத்துகள் குறைந்தால் கல்வி கற்கும் திறன் அதிகமாகும் என்னும் கூற்று உண்மையில்லை என்பதற்கு ஒரு சான்று கூறுகிறேன்.  தமிழ்நாட்டில் படிப்பறிவு 74%.தமிழைவிடக் குறியீடுகள் மிகுந்தும் தமிழில் இல்லாத கூட்டெழுத்துகள் நிறைந்தும் மொழி மலையாளம்.எனினும் தமிழ்நாட்டை விட அங்குப்படிப்பறிவு மிகுதி.(94%)

ஆயிரக்கணக்கான குறியீடுகளையும் எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ள சீனம்,சப்பான் மொழியினரின் கல்வியறிவு சாலச் சிறந்துவிளங்கவில்லையா?
எனவே பொய்யான தகவல்களையும் பொருந்தாத கூற்றுகளையும் அடிப்படையாகக் கொண்டுவிளங்கும் எழுத்துச்சீர்திருத்தக் கருத்துப்பரப்புரை ஏற்கத்தக்கதன்று.

தமிழ் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய மொழி எனக் கருதிவிடக்கூடாது.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா,  கனடா, அமெரிக்கா எனப் பல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மாற்றம் - எழுத்தமைப்பில் - ஏற்படுமாயின் அயல்நாட்டுத்தமிழுக்கும் இந்தியத் தமிழுக்கும் வேறுபாடு  தோன்றும். தமிழிலிருந்து மலையாளம் பிரிந்ததைப்போல பல மொழிகள் மீண்டும் உருவாகும் சூழல் ஏற்படும்.

ஏனைய நாட்டுத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் என்ன கருதுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதன்பின்னரே இத்தகைய செயல்களைப் பற்றிய சிந்தனைக்குச் செல்லவேண்டும்.”

பொறியாளர் இராமகி கூறியவற்றுள் சில:

நாக.இளங்கோவன் தகுந்த சான்றாதாரங்களுடன் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுவார் கூற்றின் பொருந்தாமையை விளக்கியுள்ளார்.அவற்றையே நான் இங்கு வலியுறுத்த விழைகிறேன்.

இ,ஈ,உ,ஊகாரக் குறியீடுகளை மாற்றினால் சென்னைப் பல்கலைப் பேரகராதியின்  59% சொற்கள் மாற்றம் பெற நேரலாம்.  கல்பாக்கம் சீனிவாசன் புள்ளிவிவரங்களின் படி இ-கர ஈகார, உகர ஊகாரக் குறியீடுகள் தமிழில் 24% சொற்களில் உள்ளன.  நான்கில் ஒரு சொல் மாறுவது என்பது மிகப் பெரிய மாற்றம்.

இளைய தலைமுறையினர் இம்மாற்றங்களால் இன்று அச்சிலிருக்கும் பல நூல்களைப் புரிந்துகொள்ளாது இடர்ப்படுவர்.  பழைய பதிப்புகள் படிப்பாரற்றுப் போகும்.  இப்பதிப்புகளில் 90%க்கு மறுபதிப்பு வாராமல் போகலாம்.

மேலும் இன்றைய குறியீடுகளால் தமிழைப் படிப்பதற்குத் துன்பமாகவுள்ளது என யாரேனும் முறைப்படி ஆராய்ந்தார்களா? இவர்கள் பள்ளிகளுக்குப் போய்க் கணக்கெடுத்துவந்தார்களா?  எத்தகைய ஆய்வும் நிகழ்த்தாமல் இவர்களாக ஒரு முடிவுக்கு எப்படிவரலாம்?

சீன மொழியிலோ சப்பானிய மொழியிலோ ஆயிரக் கணக்கான குறியீடுகள் உள்ளன என்றாலும் அவர்களே பண்பாட்டுத் தொடர்ச்சி கருதி அவற்றை மாற்றுவது பற்றித் தயங்குகிறார்களே!" என்றார்.

திரு.இலக்குவனார் திருவள்ளுவன் இலக்கணநூல்களை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றினார்.

“கி.மு.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியம் எழுத்துகளின் வடிவங்களை விளக்குகிறது.  அதன்பின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்று குறிப்பிடுவதன் மூலம் தொல்காப்பியர் கால எழுத்துவடிவமுறை மாற்றம் பெறவில்லை என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.  இதன் பின்னர் வந்த இலக்கணநூல்களும் இக் கருத்தையே வலியுறுத்துகின்றன. இதனால் தமிழில் எழுத்து வடிவங்கள் மாற்றம் பெறவில்லை என்பது புலனாகிறது.

கல்வெட்டு எழுத்து ஒரு சுருக்கெழுத்துப் போன்று தொழில்நுணுக்கமொழியே. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துகள் மாற்றம் பெற்றதாகக் கூறல் தவறு.”

மூன்று உரையாளர்களும் மிகவும் நடுநிலையாக, யாரையும் தனிப்பட்ட முறையில் குறித்துப் பேசாமல், தகுந்த சான்றாதாரங்களுடன் உரை நிகழ்த்தியமை அவையோரின் கவனத்தை ஈர்த்தது.

துணைமுதல்வர் நூல்வெளியீட்டுவிழாவையும் மீறி ஐம்பது பேர் கூட்டத்திற்கு வந்திருந்தமை மகிழ்வளித்தது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பரவலாக இனி இது போன்ற கூட்டங்கள் நடக்கவிருப்பதன் முன்னோடியாக இக்கூட்டம் அமைந்தது எனலாம்.

எழுத்துச் சீர்திருத்தம் தேவையா - சிறப்புக் கருத்தரங்கம்

இன்று மாலை சென்னை எசுப்பிளனேடு ஒய். எம். சி. ஏ. அரங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.  எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அக்கறை உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

திங்கள், மார்ச் 01, 2010

நயனம் - nayanam: எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1

நயனம் - nayanam: எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு கோணல் பார்வை


யூனிகோடு மூலம் அறிஞர்கள் வலியுறுத்தும் எழுத்துச் சீர்திருத்தத்தை உடனே நிறுவ இயலும் என்கிறார் அங்கிங்கு எனாதபடி வலை எங்கும் நிறைந்திருக்கும் "எலியப்பர் மேல் ஏறிவரும் ஒலியப்பர்" மரபுச்செல்வர்.
 
அறிஞர்கள் தற்போதைக்கு வலியுறுத்தாத, ஆனால் வேறு சிலர் பரிந்துரைத்த சீர்திருத்ததையும் யூனிகோடு மூலம் நாம் செயற்படுத்த முடியும்.
 
தமிழ்க்குழந்தைகள் தேவையில்லாமல் இரு வேறு குறியீடுகள் மூலம் தனி உயிரெழுத்துகளையும் உயிர்மெய்களின் உயிரெழுத்துக் குறீயீடுகளையும் தனித்தனியே கற்க வேண்டி இருப்பதாலும் நேரம் வீணாகிறது என்ற சாக்கில் உயிரெழுத்துகளையும், உயிரெழுத்துக் குறிகளையும் ஒன்றாக்கி விடலாம்.
 
தனித்தனி உயிரெழுத்துகளுக்குப் பகராக,  அகரத்தை மற்றும் கற்றுக் கொண்டு, அகரத்துடன் ஏனைய உயிரெழுத்துக் குறியீடுகளை இணைத்து ஏனைய தனி உயிரெழுத்துகளை எழுதலாம்.  ;-)
 
இதோ:
 
அ அ‍ா அ‍ி அ‍ீ அ‍ு அ‍ூ அ‍ெ அ‍ே அ‍ை அ‍ொ அ‍ோ அ‍ௌ
 
இதன் மூலம் 11 எழுத்துகளைக் கற்பதைத் தவிர்க்கலாம்.
 
இதில் அ‍ை   (பழைய ஐ) மற்றும் அ‍ௌ (பழைய ஔ) இவற்றைத் தவிர்த்து அய், அவ் என்று எழுதி விட்டால், இந்த ஐகார, ஔகார வரிசைகளைக் கற்கத் தேவையே இல்லை.
 
பத்து உயிரெழுத்துகளை ஓர் அகரம் மற்றும் ஒன்பது குறியீடுகளை மட்டும் வைத்துக் கற்றுக் கொள்ளலாம்.
 
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்  என்ற பதினெட்டு மெய்களையும் ஆயலாம்.
 
ங் தேவையற்ற மெய்.  அதை ன்க் என்ற கூட்டெழுத்தின் மூலம் எழுதலாம்.  இன்கு, நுன்கு, பன்கு, வன்காளம், மயன்குகிறாள், என்று எழுதலாம்.  ஆங்கிலம் பயின்றவர்களுக்கு இதன் வசதி நன்றாகப் புரியும்.
 
அதே போல், ஞ் என்பதும் தேவையற்ற மெய்.  அதை ன்ச் என்ற கூட்டெழுத்தின் மூலம் எழுதலாம்.  பன்சு, வன்சம், கன்சி, இன்சி,  என்று எழுதலாம்.  பழகப் பழக இது நன்றாக வரும்.
 
தமிழுக்கு ணகரம், நகரம், னகரம் என்று மூன்றும் தேவையில்லை.  டண்ணகரத்தைப் பெரும்பாலும் தவறாகப் பலுக்குகிறார்கள்.  எனவே அதைக் கழட்டி விட்டு விடலாம்.
 
தந்நகரத்துக்கும், றன்னகரத்துக்கும் வேறுபடுத்திக் காட்டுபவர்கள் வெகு சிலரே.
 
றன்னகரம் தமிழுக்கே உரியது என்பதால் வடமொழியில் இருக்கும் தந்நகரத்தைக் கைவிடுவதுதான் திராவிடக் கொள்கைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்.  எனவே தந்நகரத்தையும் கழட்டி விடலாம். 
 
தமிழன் வாயில் ழகரமும் வராது, ளகரமும் வராது.  சிறு குழந்தைகளை இப்படிப் போட்டு வறுத்தெடுப்பது சரியல்ல.  இவை இரண்டையும் கழட்டி விட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 
அதே போல் இந்த வல்லின றகரம் ஆசிரியர்கள் வாயிலேயே வருவதில்லை.  வேறு எந்த மொழியிலும் இல்லாத இந்த றகரத்தையும் வெட்டுவது நன்று.
 
இவற்றால் மெய்யெழுத்துகள் பதினெட்டிலிருந்து பதினொன்றுக்குக் குறைகின்றன.  உயிரெழுத்துக்களையும் பன்னிரண்டில் இருந்து ஒன்றாகக் குறைத்து, மேலும் ஒன்பது குறீயிடுகளை மட்டும் வைத்துக் கொள்வோம்.   மொத்தம் 21  குறியீடுகளை மட்டும் பயின்றால்  போதுமானது.  ஆங்கிலத்தின் 52 குறியீடுகளை விடத் தமிழில் குறைவு.  எழுத்தறிவு வளர, இனம் மலர இதை விடத் தேவையான சீர் திருத்தம் என்ன இருக்க முடியும்?
 
பாருங்கள், மேலெழுந்த வாரியான ஆய்விலேயே எத்தனை எழுத்துகளைக் களைந்தாயிற்று!  சீர்திருத்தம் என்பது வெகு எலிமையானது, கொன்சம் சின்தித்துப் பார்த்தால் வரும்.
 
அகர முதல எலுத்தெல்லாம் ஆதி
பகவன் முதர்ரே உலகு
 
கர்ரதனால் ஆய பயனென்கொல் வாலரிவன்
னர்ரால் தொலார் எனின்
 
மலர்மிசை ஏகினான் மானடி சேர்ன்தார்
னிலமிசை னீடு வால்வார்
 
வேன்டுதல் வேன்டாமை இலானடி சேர்ன்தார்க்கு
யான்டும் இடும்பை இல
 
பொரிவாயில் ஐன்தவித்தான் பொய்தீர் ஒலுக்க
னெரி னின்ரார் னீடு வால்வார்
 
வல்லுவனைப் பார்த்தோம்.  அடுத்தது கம்பன் மீது ஒரு கை வைப்போம்.
 
"பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியாள் ஆகி
அஞ்சொல் இளமஞ்சை எனஅன்னம் எனமின்னும்
வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்"
 
அடடா, எப்படிப்பட்ட பாடல் இது.  பாவம் தமிழ்க் குலன்தைகல்.  இதைப் பாடம் படிக்க முடியாமல் எலுத முடியாமல் மன்டையை உடைத்துக் கொல்லுகிரார்கல்.
 
எனவே, திருத்திய தமிலெலுத்துகலில் இதை எலுதலாம்.
 
"பன்சிஒலிர் வின்சுகுலிர் பல்லவம் அனுன்க
சென்செவிய கன்சம்நிகர் சீரடியால் ஆகி
அன்சொல் இலமன்சை எனஅன்னம் எனமின்னும்
வன்சிஎன னன்சம்என வன்சமகல் வந்தால்"
 
கவினயம் கொன்சம் கூடக் குரையாமல்  (ஏரத்தால) அதே ஒலிப்புடன் கம்பரசம் பருக முடிகிரதல்லவா?
 
கொன்சம் சிலம்பை எட்டிப் பார்ப்போம்.
 
வாழிஎம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி
 
இதைப் பாருங்கல், சின்னக் குலன்தைகலால் இதை எலுத முடியுமா?
 
வாலி எம் கொர்கை வேன்தே வாலி
தென்னம் பொருப்பின் தலைவ வாலி
செலிய வாலி தென்னவ வாலி
பலியொடு படராப் பன்சவ வாலி
 
பாருங்கல்.  இலன்கோவடிகலை னமது கவின்சர் வாலியைப் போல எலிதாகப் படிக்க முடிகிரதல்லவா?  என்ன எலுத்தில் எலுதினாலும் இப்படித்தான் படிக்கிரார்கல் என்னும்போது பேசுவது போல எலுதுவது தேவையான சீர்திருத்தமல்லவா?
 
இன்த  எடுத்துக் காட்டுகலில் உயிரெலுத்துச் சீர்திருத்தத்தைக் காட்டவில்லை.  அதர்குத் தேவையான கருவிகல் உருவான பின்னால் அதையும் செய்யலாம்.
 
காட்டாக, முதல் திருக்குரலை இப்படி எலுதலாம்:
அகர முதல அ‍ெலுத்தெல்லாம் அ‍ாதி
பகவன் முதர்ரே அ‍ுலகு 
 
எலுத்துச் சீர்திருத்தம் னம் இனத்தைக் காப்பார்ரத் தேவையானது.  காலத்தின் தேவை கருதி இதைச் செய்தால் னம்மிடம் இருக்கும் தேவையர்ர குப்பைகலைக் கலைய முடியும்,  னன்னூல் சொன்னது போல,
 
பலையன கலிதலும் புதியன புகுதலும்
வலுவல கால வகையினானே.
 
வால்க சீர்திருத்தம்.  வால்க தமில் மொலி.
 
:-((