ஞாயிறு, டிசம்பர் 12, 2010

கிரந்தப் பூச்சாண்டி

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் என்ற தலைப்பில் தமிழ் மன்றம் மடற்குழுவில் இராமகி ஐயா தொடங்கி வைத்த இழையில் நான் எழுதிய ஒரு கடிதத்தின் திருத்திய வடிவத்தை இங்கே தருகிறேன்.  [மூலத்தை http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/484fd5956593823c என்ற சுட்டியில் பார்க்கலாம்.]

கிரந்தப் பூச்சாண்டி

கல்வெட்டுகளும், செப்பேடுகளும் மட்டுமே நமது வரலாற்றுத் தடயங்கள்.  அவை இல்லா விட்டால், நாம் “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்” பேசும் மாக்கள் மட்டுமே.  கல்வெட்டுகள் இல்லையேல் வரலாற்றாய்வாளர்களால் மாமன்னன் அசோகன் என்று ஒருவன் இருந்தான் என்பதையே கண்டு பிடித்திருக்க முடியாது.  கல்வெட்டுகள் இல்லையேல் அதியமான் நெடுமானஞ்சி ஔவைப் பாட்டிக் கதையில் வரும் ஒரு கற்பனைப் பாத்திரமாக மட்டுமே இருந்திருப்பான்.  கல்வெட்டுகள் இல்லையேல் “பொன்னியின் செல்வன்” கதை எழுதுவதற்கு கல்கிக்கு ஒரு செய்தியும் கிடைத்திருக்காது.  கல்வெட்டுகள் இல்லையேல் தமிழர்கள் வாழ்வில் சமணம் எத்தகைய தாக்கம் செலுத்தியிருந்திருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். கல்வெட்டுகள் இல்லையேல் மாமல்லை நமக்கு இன்றும் புரியாத ஒரு விந்தை உலகமாகத்தான் தெரிந்திருக்கும்.

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இன்றைய ஆவணங்களை ஆய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களால் இன்றைய ஆங்கில ஆவணங்களை அப்படியே பதியாமல் நம் வரலாற்றை முற்றாகப் புரிந்து கொள்ள இயலும் என்றா நினைக்கிறீர்கள்?  ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட ஆங்கிலத்தோடு இன்றைய ஆங்கிலத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்.  அந்த மொழியின் வளர்சிதை மாற்றத்தால் பிற்கால ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இன்றைய ஆங்கிலத்தைப் பிற்காலத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது வரலாற்றைப் பிழையின்றிப் பதிவு செய்ய வழிகோலும் என்றா சொல்ல முடியும்?  கிரந்தக் கல்வெட்டு மொழியை அப்படியே பதித்து விட்டுப் பிற்கால அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் மூலத்தைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டியதுதானே அறிவியல்முறைக்குப் பொருத்தமானது?

கிரந்த எழுத்துகளில் இருக்கும் கல்வெட்டுகளை, செப்பேடுகளை, ஓலைச்சுவடிகளை அண்மைக் காலத்தில் தேவநாகரி வரிவடிவத்தில் அச்சிட்டு வருகிறார்கள்.  தமிழ் எழுத்துகளோடு தேவநாகரி எழுத்தும் கலந்து வந்திருக்கும் அவற்றைப் பார்க்கும்போது, கிரந்தத்தின் மீதுள்ள வெறுப்பால் தென்னகத்தில் வரலாற்றில் வேரூன்றாத நாகரி எழுத்துக்கு மேலிடம் கொடுப்பது விந்தையாகத் தெரிகிறது.  சொல்லப் போனால், நாகரி எழுத்தில் இருப்பதால் மேலும் பலரும் கல்வெட்டுப் படிகளைப் படிக்க முடிகிறது என்பது வேறு திறக்கு.  ஆனால், வரலாற்றை நாம் வரலாறாகப் பார்ப்பதில் என்ன தயக்கம் என்று எனக்குப் புரியவில்லை.

இல்லாத கட்டுக்கதைகளை நம்புபவர்களுக்கு உண்மையை அறியத் தயக்கம் ஏனோ?

தமிழர்கள் சிலருக்குக் கிரந்தம் பூச்சாண்டியாகத் தோன்றுவதால் கிரந்த எழுத்துகளை யூனிக்கோடு குறியீட்டில் ஏற்றக் கூடாது என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் புவி இருண்டு போகும் என்பதற்கு ஒப்பானது.

தென்னகத்தில் 1908 வரை எடுத்த கல்வெட்டு, செப்பேட்டுகளின் மசிப் படிகள் மட்டுமே நூறாயிரத்தைத் தாண்டும். அவை மட்டுமே பதிப்பாயுள்ளன. அதற்குப் பின் எடுத்தவற்றின் மசிப்படிகள் இன்னும் எத்தனை காலம் அழியாமல் இருக்குமோ தெரியாது.  1908க்குப் பின் கல்சுரங்கக் குத்தகைதாரர்களும், கல்வெட்டுகளின் பெருமை அறியாத எண்ணற்ற பலரும் பல கல்வெட்டுகளை அழித்து விட்டார்கள்.  நம்முடைய பழைய நாணயங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற பல செல்வங்களை அறியாமையால் நாம் அழித்தது போல நாம் கல்வெட்டுகளையும் விரைவாக அழித்துக் கொண்டிருக்கிறோம்.

பழைய ஓலைச்சுவடிகள் இருந்தென்ன பயன்? ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாமே குப்பைதானே!  சங்கப் பாடல்களை எல்லாம் ஏன் படிக்க வேண்டும்?  புதியது என்னவென்று தெரிந்து கொள்வது போதாதா என்ற குரல்களும் அவ்வப்போது ஒலிக்கத்தான் செய்கின்றன.  சாதி ஒழிப்பு போன்ற பல முற்போக்குக் கொள்கைகளுக்காகப் போராடிய திராவிட இயக்கம் அறிவுசார் கருத்துகளை மறுக்கும் தன்மையையும் வளர்த்து விட்டிருக்கிறது என்று குறைப்பட்டிருக்கிறார் தமிழ் அறிஞர் பேரா. நொபோரு கராஷிமா (http://www.thehindu.com/opinion/interview/article925942.ece).

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓலைச்சுவடிகளைப் போகி கொளுத்தினோம்.  இருபதாம் நூற்றாண்டில் கல்வெட்டுகளைக் கிரேனைட் ஆக்கினோம். இருபத்தோராம் நூற்றாண்டில் கல்வெட்டு எழுத்துகளைக் கூடப் பதிக்கக் கூடாது என்று கூட்டம் போடுகிறோம்.  முன்னாள் துணைவேந்தர் ஒருவரே ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் கை தட்டலுக்காக "மீண்டும் கிரந்த எழுத்துகளுக்கு  இடம் தரக்கூடாது  வரலாற்று ஆவணங்களை தமிழிலே கொண்டுவர முடியும். முடியாது என்றால் அவற்றைத் தூக்கி எறியுங்கள்” என்று சொல்லியிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது.  சங்கத்தமிழை ஆய்ந்த புகழ் பெற்ற  பெரும்புலவர்களின் நூல்கள் பல கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு தமிழ் கற்பித்திருக்கின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

தமிழ் மட்டுமல்ல, உலகின் பல மொழிகளும் இன்று ஆங்கிலத்தின் ஆதிக்கத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. பெருவழக்கொழிந்து போய், வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஓர் எழுத்து முறை கோடிக்கணக்கான தமிழர்கள் அன்றாடம் புழங்கும் எழுத்து முறையை அழித்து விடும் என்று பூச்சாண்டி காட்டுவது விந்தையாக இருக்கிறது.

தமிழ் வீடு ஆங்கிலத்தீயால் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது தோட்டத்தின் ஒரு மூலையில் வாடிக் கிடக்கும் கிரந்தச் செடியில் ஒரே ஒரு இலை தளிர் விட்டிருப்பதைப் பார்த்துக் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவது பொருளற்றது.

கிபி ஆறாம் நூற்றாண்டில் தோன்றி,  அரசுக் கல்வெட்டு உரைநடையில் தமிழோடு கிரந்த எழுத்துகள் கலந்திருந்தாலும் கூட கிபி பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியத்தில் கலக்காத கிரந்த எழுத்துகள் எப்போது தமிழ் இலக்கியத்தில் நுழைந்தன?

மஹேந்திரவர்ம பல்லவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், என்று அரசர்களின் பெயர்களில் எல்லாம் கூடக் கிரந்தம் கோலோச்சியிருந்தும் தமிழ்ப் புலவர்கள் நாவில் ஏன் கிரந்தம் நடமாடவில்லை?  பின்னர் எப்படி வழக்கில் வந்தது?  ராஜராஜன் என்ற பட்டப் பெயரால் அழைக்கப் படும் அருண்மொழிவர்மன் தன்னால் கட்டப் பட்ட மாபெரும் தஞ்சைக் கோவிலுக்குப் “பெருவுடையார் கோவில்” என்றே பெயர் வைத்தான், அதைப் பொறித்தும் வைத்தான்.  அது பின்னாளிலும், இந்நாளிலும் மட்டுமே பிருகதீஸ்வரர் கோவில் என்றாயிற்று.  கம்பனின் இராமகாதையில் இல்லாத கிரந்தம், பின்னாளில் அருணகிரிநாதரின் திருப்புகழில் மணிப்பவழமாகப் புழங்குவதற்கு என்ன காரணம்?  தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் எழுந்த பண்பாட்டு மாற்றங்களை விட, கிரந்தம் என்ற எழுத்துமுறைதான் இதற்குக் காரணம் என்று சொல்வது ஏற்புடையதாகுமா?




மலையாளம் தமிழிலிருந்து பிரிந்ததற்கும், சேரநாட்டின்  தமிழர்கள் இன்று வேற்று ஆட்களாக, மலையாளிகளாகப் பிரிந்து போய் தமிழருடன் முரண்படுவதற்கும் கிரந்த எழுத்துமுறையைக் காரணம் காட்டுகிறார்கள்.  சோழப் பெருவேந்தர்களின் நூறாண்டுப் போர்கள், அடக்குமுறை, பிற சமயங்களின் தாக்கம், வந்தேறிகளின் பண்பாட்டுக் கலப்பு, கடலோடி வணிகம், சேர மன்னர்களின் வீழ்ச்சி இன்ன பிறவற்றால் நேரிட்டவற்றை விட கிரந்தக் குறியீட்டால் மட்டும் சேரத் தமிழர்கள் மலையாளிகளாய்ப் பிரிந்தார்கள் என்று சொல்லுவது ஏற்புடையதல்ல.

கிரந்தக் குறியீடுகள் தமிழர்கள் மொழியில் எழுத்தில் ஊடுருவ முடியும் என்றால், அது பண்பாட்டு மாற்றங்கள் இல்லாமல் முடியாது.  அத்தகைய பண்பாட்டுப் போர்களை, அந்தப் புலனத்தில்தான் எதிர்கொள்ள வேண்டும். பண்பாட்டுப் போர்களில் தொழில்நுட்பங்களைக் கேடயமாகவோ, வாளாகவோ புழங்குவதால் ஏதும் பொருளில்லை. 

இதனால், யூனிகோடு கிரந்த முன்மொழிவுகளில் பிழைகள் இல்லை என்று பொருளல்ல.  பொய்யான வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் தமிழ் எழுத்துக் குறியீடுகள் ஏழை கிரந்த முன்மொழிவில் இணைத்திருக்கும் செயலை அறிவுசார் புலனத்தில் சரியான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும். 

எந்த எழுத்துமுறையும், தனது இயல்பான மொழியல்லாத வேற்றுமொழிகளைக் குறிப்பதில் அந்தந்த மொழிகளின் இயல்பான எழுத்துமுறைக்கு இணையான ஆற்றல் பெற்றிருக்கவியலாது. கிரந்த எழுத்துமுறை தனது இயல்பான மொழியான சமஸ்கிருதத்தைத் தவிர்த்த மற்ற மொழிகளைக் குறிப்பிடுவதில் மலையாளம், தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளிலிருந்து எழுத்துகளைக் கூட்டிக் கொண்டே போவதில் பொருளில்லை. இந்தக் கருத்தைக் கிரந்தத்தில் பிறமொழி எழுத்துகளைச் சேர்ப்பதை எதிர்த்து வடமொழி வல்லுநர்களே யூனிகோடு நுட்பக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.  அவர்கள் சொல்லும் அதே கருத்து தமிழ் மொழியை எழுதுவதற்காக உள்ள தமிழ் எழுத்து முறைக்கும் பொருந்தும்.

தமிழ் எழுத்துகளுக்குள் புதிய வேற்றுமொழி எழுத்துகளும் வர வேண்டியதில்லை.  கிரந்த எழுத்துகளுக்குள் புதிதாகத் தமிழ்/மலையாள எழுத்துகளையும் சேர்க்க வேண்டியதில்லை.  இதைத் தெளிவாக யூனிகோடு குழுவுக்குச் சொல்வதற்குத் தக்க அறிவுசார் கருத்துகளைத் தெரிவிப்பதுதான் தமிழுக்கும், தமிழர்களின் பண்பாட்டுக்கும் பொருந்தும்.  அதை விடுத்துவிட்டு, எதற்கெடுத்தாலும், தமிழ் அழிப்பு என்று உணர்ச்சிவயப் பட்டு பூச்சாண்டி காட்டுவது, அறிவுசார் புலனத்துக்கு ஏற்றதல்ல.  அத்தகைய செயல்களால் தமிழ் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களை வெற்றுக் கூக்குரல்கள் என்று அறிவுசார் அமைப்புகள் ஒதுக்குவதற்கு வழிவகுக்கும்.  அது தேவையும் இல்லை.

நம் தாய்மொழி தமிழை நோஞ்சான் என்று கருதும் தன்னம்பிக்கை அற்ற அஞ்சுநெஞ்சர்களைப் பார்த்துப் பரிவு கொள்ளத்தான் தோன்றுகிறது.

“சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா” பாடல் நினைவுக்கு வருகிறது. 

.....  வார்த்தைகளை
வேடிக்கைக்காகக் கூட நம்பி விடாதே
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே நீ வெம்பி விடாதே!

என்ன தன்னம்பிக்கையுள்ள பாடல்!  எங்கே போயிற்று அந்த வீரம்?

கருத்துகள் இல்லை: