வெள்ளி, பிப்ரவரி 01, 2013

பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா...

பள்ளிக்கூடத்தில் எத்தனையோ பாடல்களை மனப்பாடம் செய்கிறோம்.  அதை எதற்கு மனப்பாடம் செய்யச் சொல்கிறார்களோ என்று வருந்திக் கொண்டே கூடச் செய்கிறோம்.  முந்தைய தலைமுறையில் தமிழாசிரியர்கள் பல்லாயிரக் கணக்கான பாடல்களை மனதில் வைத்திருப்பார்கள். கம்பராமாயணத்தில் எங்கிருந்து கேட்டாலும் மழை போல் பொழிவார்கள்.  வெகு சில ஆங்கில ஆசிரியர்களுக்கு சேக்‌ஷ்பியரில் அப்படிப் பயிற்சி இருந்தது.

இலக்கணப் படி அமைந்திருந்த பாடல்களை நாம் பல ஆண்டுகளாக நினைவில் வைத்திருக்க முடிகிறது.  “புதுக்கவிதைகள்” ஏனோ எனக்கு அப்படி நினைவில் இருப்பதில்லை. மற்றவர்களுக்கு இருக்குமோ என்னவோ.

முகநூலில் எதையோ பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று “பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா” பாட்டு நினைவுக்கு வந்தது.  முழுப் பாட்டும் உடனே நினைவில் இல்லாவிட்டாலும் முக்கால்வாசி நினைவுக்கு வந்தது.  வேயுறு தோளிபங்கன் என்ற முகநூல் நண்பர் எஞ்சிய வரிகளை நினைவில் இருந்து எடுத்துத் தந்தார்.  இந்தப் பாடலை கூகிளில் தேடினால் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காகவே இதை பதிவு செய்கிறேன்.  பின்னால் மேலும் விவரங்கள் கிடைத்த பின்னால் நிறைவு செய்வோம்.

இது ஒரு குழந்தைப் பாட்டு.  குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் இயற்றியது என நினைவு.  இதோ பாட்டு:

பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா
அந்தப் பானை ஒரு புறம் ஓட்டையடா
ஓட்டைவழி ஒரு சுண்டெலியும் அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா
உள்ளே புகுந்து நெல் தின்று தின்று
வயிறு ஊதிப் புடைத்துப் பருத்தடா
மெள்ள வெளியில் வருவதற்கும்
ஓட்டை மெத்தச் சிறிதாக்கிப் போச்சுதடா
பானையைக் காலை திறந்தவுடன்
அந்தப் பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா
அதை அப்படியே கௌவிச் சென்றதடா
கள்ள வழியில் செல்பவரை எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
நல்ல வழியில் செல்பவர்க்கு தெய்வம்
நாளும் துணையாக நிற்குமடா!

இதைப் பற்றி மேலும் விவரங்கள் நினைவுக்கு வந்தால் கருத்துகள், பின்னூட்டங்களில் எழுதுங்கள். நன்றி

பி.கு. (பிப்ரவரி 1, 2020) இந்தப் பாடலின் சரியான வரிகளைப் பேரா. ராஜேஸ்வரி Raji அவர்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு இதன் முகநூல் இழையில் பகிர்ந்திருந்தார்கள். அந்த வரிகள் பின்வருமாறு:

பாட்டியின் வீட்டுப் பழம்பானை-அந்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும்-அதன்
உள்ளே புகுந்துநெல் தின்றதடா!

உள்ளே புகுந்துநெல் தின்றுதின்று-வயிறு
ஊதிப் புடைத்துப் பருத்ததடா!
மெள்ள வெளியில் செல்வதற்கு-ஓட்டை
மெத்த சிறிதாகிப்போச்சுதடா!

பானையைக் காலை திறந்தவுடன்-அந்தப்
பாட்டியின் பக்கமாய் வந்தஒரு
பூனை எலியினைக் கண்டதடா!
உடனே கவ்விச் சென்றதடா!

கள்ள வழியினில் செல்பவரை-எமன்
காலடி பற்றித்தொடர்வானடா!
நல்ல வழியினில் செல்பவர்க்கு-தெய்வம்
நாளும் துணையாய் நிற்குமடா!!!

இந்தப் பாடலை இனிமேல் கூகிளில் தேடினால் இந்த வடிவம் கிடைக்கட்டும்.

கருத்துகள் இல்லை: