சனி, ஜூலை 27, 2013

கலைச்சொற்களும் கொலைச்சொற்களும்

தமிழகத் தொலைக்காட்சிகளைப் பார்க்கும்போதும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும்போதும் அன்றாடத் தமிழ்ப் பேச்சில் ஆங்கிலம் எவ்வளவு கலந்திருக்கிறது என்பதை உணரலாம்.  1970கள் வரைக்கூட இந்த நிலை இல்லை.  அப்போதைய கே. பாலச்சந்தர் படங்களில் மேட்டுக்குடிப் பாத்திரங்கள் மட்டுமே ஆங்கிலம் கலந்து பேசுவார்கள்.  ஆனாலும் மேஜர் சுந்தரராஜன் நடித்த பாத்திரங்களில் அவர் ஆங்கிலத்தில் பேசியதை உடனேயே தமிழில் மொழி பெயர்த்து விடுவார்.  இல்லையென்றால் படம் பார்ப்பவர்களில் பெரும்பாலோருக்குக் கதை புரியாமல் போய் விடும்.

ஆனால், இன்றைய நிலையில், தொலைக்காட்சிச் செய்திகளில் கூட, தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சிற்றூர்களில் உள்ள மூதாட்டிகள் கூடத் தமக்கும் ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக் கொள்ள எதையாவது கலந்து பேசுகிறார்கள். வடநாட்டிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கும் நடிகைகளுக்காவது உண்மையிலேயே தமிழ் தெரியாது.  எனவே அவர்கள் ஆங்கிலம் கலந்து பேசுவதைப் பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அறிவிப்பாளர்களுக்கும் கூட “நான் பிறந்திருக்க வேண்டியது இங்க்லேண்ட்” என்ற உணர்வு போலும்.

மிகப் பெரும்பாலான அறிவிப்பாளர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.  அது அவர்கள் பிழையல்ல.  ஆங்கிலம் நம் தாய்மொழி இல்லையே?  அதை இரண்டாவது மொழியாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஆனால் தாய்மொழியையும் கற்றுக் கொள்ளாவிட்டால், நமக்கு எந்த மொழியுமே முதல்மொழியாக இல்லாமல் போய்விடும்.  இதனால்தான், எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், அது வரும்போதே அது குறிப்பிடும் கலைச்சொற்களைப் புரிந்து கொண்டு, நம்முடையதாக்கி, நம் மொழியில் பெயரிட வேண்டும்.  அதன் ஆளுமையே தனிதான்.  இன்று பட்டி தொட்டி எல்லாமே “இணையம்” என்ற சொல் பரவி இருப்பதே இத்தகைய ஆளுமைக்கு எடுத்துக்காட்டு.

தமிழ் இணையத்தின் தொடக்க காலத்தில், தமிழ்.நெட் (tamil@tamil.net) என்ற மடலாடற்குழுவில்தான் இணையத்தில் தமிழைப் புழங்கிய அத்தனை பேரும் இருந்தோம்.  அங்கேதான் “இணையம்” என்ற சொல்லும் படைக்கப் பட்டது.  அதன் பின்னர் தமிழ்.நெட்டில் இருந்து கிளைத்த சில குழுக்களில் சிறப்பான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.  அவற்றில் அகத்தியர் குழுமம் தலையாயது.

ஒருமுறை, செப்டம்பர் 1999ல், செல்ஃபோன், பேஜர் என்ற ஆங்கிலச்சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல் ஒன்று பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  1989ல், சிங்கப்பூர் முஸ்தஃபா கடையில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் முஸ்லிம்களிடம் இருந்துதான் அகவி என்றால் பேஜர் என்றும், கைப்பேசி என்றால் கார்ட்லெஸ் ஃபோன் என்றும் தெரிந்து கொண்டேன்.  அவர்கள் யாரும் தமிழ்ப் புலவர்களல்லர்.  ஆனால், இந்த அந்நியப் பொருள்களை அவர்கள் தமிழில் பெயர்சூட்டி அழைக்கத் தயங்கவில்லை.  ஆங்கில மோகம் சிங்கப்பூரை அப்போது எட்டவில்லை போலும்.

ஆனால், அகவி, கைப்பேசி, செல்பேசி (மொபைல் ஃபோன்), செல்லிடைபேசி போன்ற பெயர்களைத் தமிழகத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்கள்.  அந்த உரையாடலில் இந்தப் பெயர்களை ஏற்றுக் கொள்ளும் குழப்பம் பற்றி “செந்தில் - கவுண்டமணி” நகைச்சுவை உரையாடல் போல எழுதியிருந்தேன்.

http://www.treasurehouseofagathiyar.net/02300/2333.htm ) அகத்தியரில் அவ்வப்போது இப்படி கலாய்க்கலாம். அறிஞர் ஜெயபாரதி நல்ல நகைச்சுவை உணர்வாளர்.  இத்தனை ஆண்டுகள் கழித்து அதை மீண்டும் வெளியிடுகிறேன்.  இன்றைய வலையுலகம் இதைப் பொருத்தருளட்டும். . :-)

============

X-Mailing-List: agathiyar@egroups.com
From: "Mani M. Manivannan"
Date: Wed, 29 Sep 1999 20:11:22 -0700
Subject: [agathiyar] Re: Fw: [tamil] New word for cell phone?


>>Plug க்கு அடைப்பான் எனும்போது pager க்கு விளிப்பான் என ஏன் 
>>சொல்லக் கூடாது. அல்லது கூவி எனலாமே 
>What about 'அழைப்பான்'? 

க: டேய் செந்தில், டேஏய் செந்தில்! 

செ: என்னாண்ணேய்? விளிச்சீங்களா? 

க: அந்த விளிப்பானை எடுத்து ஒங்கண்ணியை விளி. 

செ: (கண்ணை அகல விரித்துக் கொண்டு) எந்தப் பானை அண்ணே? 

க: டேய்! ஒன் கண்ணை விழிக்கச் சொல்லலேடா, உங்க அண்ணிய விளிக்கச் சொன்னேன். 

செ: அட! அப்படிச் சொல்லுங்கண்ணே! ஆமா, எந்தப் பானைய வைச்சி அண்ணிய விளிக்கச் சொன்னீங்க? 

க: ஏ, புண்ணாக்கு! பானையை இல்லடா முண்டம்! இந்த விளிப்பான் இருக்குதுல்ல? புரியலயா? 

செ: :-( 

க: சரி அழைப்பான்னா என்னான்னு தெரியுமா? 

செ: :-@ 

க: மக்குப்புண்ணாக்கு! தகவல் ஒலி ஒளி அலைப்பானைப் பத்தியாவாது கேள்விப் பட்டிருக்கியா? 

செ: அண்ணே! திட்டுனா புரியற மாதிரி திட்டுங்கண்ணே! 

க: சரி, கரையானையாவது தெரியுமா? சரி விடு, செல்லரிக்கிற பூச்சியைக் கொண்டாந்தாலும் கொண்டு வருவே! 

செ: அட நீங்க ஒண்ணு, வீடு பூரா கரையானும் பூரானுமாத்தானே இருக்கு! 

க: ஆங்! ஒன்னைமாதிரி கரப்பானைக் கொண்டு வந்து ஊட்டுல வச்சா ஏண்டா கரையானும் பூரானும் வராது? 

செ: அண்ணே, அண்ணியை விளிக்கணுமுன்னீங்களே? 

க: டேய் முண்டம், சரி கூவி, தகவல் தாங்கி, கரைவி, அகவி எதைப்பத்தியாவது கேள்விப் பட்டிருக்கியா? 

செ: இல்லங்கண்ணே! 

க: டேய்! ஒங்கோட பேசறதுக்குப் பதிலா,

"இம்பர்வான் எல்லை இராமனையே பாடி 
எண்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி"ன்னு 

பாடுனாரே அந்தப் பாணரோட பொண்டாட்டி பாணிக்கிட்டேயே சொல்லி வெளங்க வைக்கலாம்! 

செ: என்னாங்கண்ணே! (தலையைச் சொறிகிறார்) 

க: டேய் தமிழா! போய் அந்த பீப்பர், பேஜர், எடுத்துட்டு வாடா. 

செ: அட என்னாங்கண்ணேய்! ஒரே பேஜாராப் போச்சு. பேஜர்ன்னு தமில்லே சொல்லிருந்தீங்கன்னா, ஒடனே கொண்ணாந்திருப்பேன்! 

க: (அடிக்க வருகிறார்). 

எடுப்பான் கொடுப்பான் 
விளிப்பான் அழைப்பான் 
இளிப்பான் யார் யாரோ! 
அடைப்பான் யார் யாரோஓ! (என்று புலம்பிக் கொண்டே செல்கிறார்). 

மணி மு. மணிவண்ணன் 
நூவர்க், கலி., அமெரிக்கக் கூட்டு நாடுகள் 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

புதிய கலைச் சொற்களை எளிய தமிழர்களிடம் இருந்து வரும் போது நிலைத்துவிடுகின்றது. குறிப்பாக தமிழ் முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மொழியை இழக்காதிருப்பது வியப்பே. அவர்களின் இருந்தே. Snacks என்பதற்கு நொறுக்குத் தீனி என்ற சொல்லையும் கூட அறிந்து கொண்டேன். இந்த செந்தில் - கவுண்டமணி பதிவை பல காலம் முன்பு எங்கோ நானும் வாசித்த ஓர்மையுண்டு.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

ஆம், எந்தத் தொழில்நுட்பமானாலும், அதை ஆளுபவர்கள் அதற்கு இடும் பெயர்கள்தாம் புலவர்கள் படைக்கும் பெயர்களைக் காட்டிலும் நிலைத்து விடுகின்றன. நீங்கள் குறிப்பிடுவது போலத் தமிழ் முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்மொழியை இழக்காமல் இருப்பது குறிப்பிடத் தக்கது. எனது செந்தில்-கவுண்டமணி பதிவு இந்த 15 ஆண்டுகளில் அகத்தியக் குழுவுக்கும் அப்பால் யார் கண்ணிலோ பட்டிருக்கிறது என்பதும் வியப்பே. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நிரஞ்சன் தம்பி.