திங்கள், மே 15, 2023

இணையத்தில் உங்களைப் பாதுகாப்பது எப்படி - சில அடிப்படைப் பாடங்கள்

[இந்தக் கட்டுரை மே 14, 2017 அன்று Wanna Decrypto என்ற கணினித்தொற்றி பரவிக்கொண்டிருந்த போது ஒரு நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதி முகநூலில் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான பாடங்கள் இன்றும் பொருந்தும் என்று கருதி இதை மீண்டும் பதிகிறேன். - மணி]

இணையத்தில் உங்களைப் பாதுகாப்பது எப்படி - சில அடிப்படைப் பாடங்கள்
மணி மு. மணிவண்ணன்
மே 14, 2017

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பல கணினிக்கிருமித் தொல்லைகள் வந்து கொண்டிருக்கின்றன. வெள்ளி மாலை, சனி காலையில் ஒரு மாபெரும் தாக்குதல் தொடங்கியிருக்கிறது. அது எப்படி, எங்கிருந்து தொடங்கியது, எப்படி உலகெங்கும் பரவியது என்று இன்னும் யாருக்கும் சரிவரப் புலப்படவில்லை. ஆசியாவும் ஐரோப்பாவும் மிகக்கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. இந்தியாவிலும், ரஷ்யாவிலும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் இன்னும் விண்டோஸ் எக்ஸ்-பி வைத்திருக்கும் நாடுகளிலும் இதன் தாக்கம் மிகுந்த அளவுக்கு இருந்திருக்கிறது.

இந்த முறை உங்கள் கணினியில் உள்ள முக்கியமான தரவுகளை ரகசியக் குறியீட்டின் மூலம் என்கிரிப்ட் செய்து பதுக்கி விட்டு அதை மீட்பதற்கு உங்களிடம் பிட்-காயின் என்ற முறை மூல பணம் கேட்டு மிரட்டும் கணினிக்கிருமி பரவியிருக்கிறது. இது சில காலத்துக்கு முன்னர் அமெரிக்காவின் என்.எஸ்.ஏ. என்ற உயர் மட்ட ரகசிய நிறுவனம் பிற நாடுகளின் மீது ஏவுவதற்காகத் தயாரித்திருந்த செயலிகளை யாரோ திருடி வெளியிட்டதன் பிறகு வந்தது. இதைப் போன்ற பன்மடங்கு ஆபத்தான செயலிகள் தொடர்ந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள இலவசமான விண்டோஸ் டிஃபெண்டர் என்ற கணினிக்கிருமிக் கொல்லியை மட்டும் நம்பியிருந்தீர்கள் என்றால் அது போதாது. அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, தூங்கிக் கொண்டிருக்கும் கணினிகளையும் துளைக்கும் கிருமிகள் வந்திருக்கின்றன. இண்டெல் நிறுவனமும் மைக்ரோசாஃப்டும் கூட செய்த தவறுகள் பத்தாண்டுகளுக்கு மேல் ஒளிந்திருக்கிறது. அதை அவர்கள் வேண்டுமென்றே செய்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இது போன்ற முட்டாள்தனங்களைப் பெருநிறுவனங்களும் செய்கின்றன. தங்களை விட அறிவாளிகள் யாருமில்லை என்ற அகந்தை எல்லோருக்கும் உண்டு.

எனவே உங்களில் யாரை வேண்டுமானாலும் இந்தக் கிருமி தாக்கியிருக்கக்கூடும். இனிமேலும் தாக்கக்கூடும். இது போன்ற தாக்குதல்களிலிருந்து ஓரளவுக்காவது தற்காப்பு செய்யக் கற்றுக் கொள்வது இன்றைய உடனடித்தேவை.

1. காசு கொடுக்காமல், லைசன்ஸ் இல்லாத, அடிக்கடி மைக்ரோசாஃப்ட் புதுமைப்படுத்தாத, பழைய விண்டோஸ் இயங்குதளங்களைப் புழங்காதீர்கள். Don't use unlicensed, unsupported, "free" Windows versions bundled with your PC by unscrupulous PC vendors. They will not be supported by Microsoft and will not be updated making you very vulnerable to attacks.

2. உங்கள் நம்பிக்கைக்கு உகந்த ஆன்டி-வைரஸ் எதையாவது பயன்படுத்துங்கள் - இலவசமாய் வரும் மைக்ரோசாஃட் விண்டோஸ் டிஃபெண்டர் போதாது. வெறும் ஆன்டி-வைரஸ் மட்டுமல்லாமல் உங்கள் இணையத் தொடர்புகளையும் பாதுகாக்கும் ஆன்டி-மேல்வேர் செயலிகளைப் புழங்குங்கள். சிமாண்டெக்கின் நார்ட்டன் இண்டர்நெட் செக்யூரிட்டி, மேக்கஃபீ, போன்றவை ஓரளவுக்கு உதவும். அவற்றுள் எப்போதும் இயங்கும் கிருமிக்கொல்லியை இயக்கி வையுங்கள். அவைதான் கணினிக்கிருமிகளை நீங்கள் தெரியாமல் தொட்டீர்கள் என்றால் தடுக்க உதவுபவை. இவற்றில் ஃபைர்வால் Firewall என்ற செயலியும் உண்டு. அவற்றையும் இயக்குங்கள். தேவையில்லாமல் எந்த இண்டர்நெட் போர்ட்டையும் திறக்க விடாதீர்கள். அவற்றின் மூலம் உங்கள் கணினி தூங்கும்போதும் தாக்க முடியும்.

3. உங்கள் கணினியைப் புழங்காத போது அவற்றை இணையத்தொடர்பிலிருந்து நீக்கி, முற்றிலும் அணைத்து விடுங்கள். ஸ்லீப் மோடிலோ, ஹைபர்நேட் மோடிலோ விட வேண்டாம்.

4. உங்களுக்கு வரும் மின்னஞ்சலிலோ, மெசஞ்சர்/வாட்சப் மூலமோ வரும் இணைப்புகளை உடனடியாகத் திறக்க முயலாதீர்கள். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் நான் கூட நம்பகமான ஆட்களிடமிருந்து வரும் வைரஸ்களைத் தொட்டிருக்கிறேன். யானைக்கும் அடி சருக்கும். எனவே யாரையும் நம்ப வேண்டாம். இது அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை.

5. கிளுகிளுப்பான படங்கள், வீடியோக்கள், வெப்சைட் லின்க்குகள் வந்தால் சொடுக்காதீர்கள். பெரும்பாலான கம்ப்யூட்டர் வைரஸ்கள் (கணினிக்கிருமிகள்) அவற்றில் ஒளிந்திருக்கும். அப்படிச் சொடுக்கித்தான் தீர வேண்டுமென்றால் உங்கள் வீட்டில் அல்லதுஅலுவலகத்தில் உள்ள கணினிகளில் விளையாடாதீர்கள். உங்கள் வங்கிக்கணக்குகளை அணுகும் கணினியில் நிச்சயமாக இவற்றைச் சொடுக்க வேண்டாம். பிரௌசிங் செண்டரில் உங்களை விட்டால் அங்கே போய் விளையாடுங்கள். உங்கள் அலுவலகத்தில் இது போல ஏதாவது செய்தால் உங்கள் வேலையே போக நேரிடலாம்.

6. மேக் அல்லது லினக்ஸ் டெஸ்க்டாப் கணினி இருந்தால் அவை விண்டோஸ் கணினிகளை விட பாதுகாப்பானவை. உங்கள் ஐ-பேடு அவற்றையும் விட மேலானது. விண்டோஸ் எக்ஸ்-பியைப் புழங்காதீர்கள். அது ஆபத்தானது. விண்டோஸ் 7, 8, 8.1 இலிருந்து 10க்கு மாற முயலுங்கள். தற்போதைக்கு இவற்றையும் மைக்ரோசாஃப்ட் பாதுகாக்கச் செயலிகளைப் புதுப்பித்துள்ளது. அவற்றைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள். வரும் வாரங்களில் மேலும் பல அலைகள் வரக்கூடும்.

7. உங்களுக்கு மிக மிக முக்கியமான, இழக்கக் கூடாத ஆவணங்களை உடனடியாக எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் அல்லது பெரிய (64 ஜிபி/128 ஜிபி) பென் டிரைவ்களில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கூகிள் டிரைவ் போன்ற முகில்கணினித் தளங்களிலும் சேமிக்கலாம் - ஆனால் அவற்றைப் பாதுகாக்கத் தக்க பாஸ்வோர்ட்/கடவுச்சொல் வைத்திருக்க வேண்டும், அந்தக் கடவுச்சொல்லை உங்கள் கணினியில் சேமிக்காமல் வைத்திருக்க வேண்டும்.

8. டார்ரெண்ட் தளங்களிலிருந்து படங்களையும் புத்தகங்களையும் இறக்குபவர்களாய் இருந்தால் எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் கணினிக்குள் வருவதற்கான மிகப்பெரிய ஓட்டை அதுவும்தான்.

9. அதே போல் மேக்ரோ வசதியுள்ள எந்த மைக்ரோசாஃப்ட் கோப்பையும் (Word, Excel etc. documents with Macro) வைரஸ் ஸ்கேன் செய்யாமல் திறக்காதீர்கள். ஜிமெயிலை நம்பலாம். அது நன்றாக ஸ்கேன் செய்கிறது.

10. அதே போல் நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளான் போல் திடீர் திடீர் என்று உங்கள் கணினியிலிருந்து வைரஸ்களைக் களைகிறோம் என்று ஊர்பேர் தெரியாத நிறுவனங்களின் விளம்பரங்கள் வரும். அவற்றை இலவசமாகவோ, காசு கொடுத்தோ வாங்க வேண்டாம்.

இவையெல்லாம் மிகவும் அடிப்படையான தற்காப்புச் செயற்பாடுகள். இவற்றையும் மீறி உங்களை எது வேண்டுமானாலும் தாக்கலாம். என் எஸ் ஏ போன்ற நிறுவனங்கள் மிகவும் பாதுகாப்பான அந்நிய அரசுகளின் கணினிகளைத் தாக்க எழுதிய செயலிகளை வைத்துக் கொண்டுதான் நம்மை யாரோ தாக்குகிறார்கள். எனவே ஆட்டோ ரிக்‌ஷா மீது அணுகுண்டு விழுந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது. ஆட்டோ ரிக்‌ஷாவை எப்படிக் கவனமாக ஓட்டலாம் என்றுதான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அணுக்குண்டு விழும் இடங்களுக்குப் போகாதீர்கள். பக்கத்தில் இருப்பவர் மீது குண்டு விழுந்தால் அது உங்களையும் விடாது. உங்களுக்கு எந்தவிதமான தாக்குதல்களும் இழப்புகளும் ஏற்படாமல் இருக்க வாழ்த்துகிறேன்.

எனக்கு 27 ஆண்டுகாலமாகக் கணினியில் தகவல் பாதுகாப்புத் துறையில் பயிற்சியும் பட்டறிவும் இருக்கிறது. நார்ட்டன் ஆன்டி-வைரஸ் 1.x இலிருந்து அதை எழுதியவர்களில் முதன்மை புரோக்ராம்மராக இருந்திருக்கிறேன். பிறகு வெவ்வேறு நிறுவனங்களில் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி வல்லுநராகவும் இருந்திருக்கிறேன். சென்னையில் நார்ட்டன் செயலிகளை எழுதும் நிறுவனத்தைத் தொடங்கி வளர்த்து ஆளாக்கிய சிலரில் நானும் ஒரு முன்னோடி. எனவே நான் சொல்லுவதை ஓரளவுக்கு நீங்கள் நம்பலாம். இதே செய்தி ஆங்கிலத்தில் வலையில் பல இடங்களில் இருக்கலாம். தமிழில் அவ்வளவாக இருக்காது என்று நினைத்து நண்பர் Nagarajan KS வேண்டிக் கொண்டதனால் இந்த நள்ளிரவிலும் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். யாருக்காவது பயனாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன்.

மணி மு. மணிவண்ணன்.
Mani M. Manivannan

லாலான் முள்ளும் லப்பர்க் கொட்டையும் - படைப்பிலக்கியத்தின் வெற்றி

லாலான் முள்ளும் லப்பர்க் கொட்டையும் - படைப்பிலக்கியத்தின் வெற்றி
மணி மு. மணிவண்ணன்

தமிழின் மிகப்பெரும் புலவர்கள் தமிழ் இலக்கியத்தைப் பற்றிச் சொல்லும்போது அது ஒரு கரை காண முடியாத கடல் என்று மலைப்பார்கள். அதெல்லாம் அவர்கள் சங்க இலக்கியங்கள், காப்பியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பே சொன்னது. உ. வே. சா. அவர்களின் "என் சரித்திரம்" நூலில் இப்படியொரு குறிப்பு வரும்.

அப்படிப்பட்ட கரை காண முடியாத கடலில், படைப்பிலக்கியங்களில் கொண்டாடப்படுபவை பாவினங்கள்தாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை பாடல்களுக்கே உண்டு. அணுவைத் துளைத்து எழு கடலைப் புகுத்தும் தன்மையெல்லாம் குறுகத்தரித்த குறள் வெண்பாவினால்தான் முடியும்.

செவ்வியல் இலக்கியங்களைப் படிக்கும் சுவையே தனி. தமிழின் சான்றோர் இலக்கியங்களைப் படிப்பதில் ஒரு கூடுதல் சுவை உண்டு. அவை நம் முன்னோர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதுடன், மாந்த இயல்பை நம் உள்ளத்தைத் தைக்கும் வகையில் சொன்னதும் அந்தச் சுவையைக் கூட்டும்.

சொல் வளம், பொருள் வளம் நிறைந்து கிடக்கும் அந்தக் கருவூலத்தைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் படித்து இன்புற வேண்டும். பாடல்களை, கவிதைகளைப் படிப்பது கூட ஒரு கலை. படிப்பவர்களின் பின்புலத்தைப் பொறுத்து, அவருடைய கல்வி, பட்டறிவு, வாழ்க்கையில் அவர் நிலை என்பவற்றைப் பொறுத்து, பிற மொழிகளிலும் அவர் என்னென்ன படித்துச் சுவைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்து இது ஆளுக்கு ஆள் மாறும். இதில் கவிச்சக்கரவர்த்தி, கவிப்பேரரசு, என்றெல்லாம் நாம் வழங்கும் பட்டங்கள் நமக்குப் பெரிதாகத் தோன்றலாம். ஆனால் பிறர் அவற்றை ஏற்க வேண்டியதில்லை.

பண்டைத் தமிழிலக்கியம் என்னை ஈர்த்த அளவுக்குத் தற்காலத் தமிழிலக்கியம் ஈர்த்ததில்லை. அதிலும் பாரதி, பாரதிதாசன் கவிதைகளைத் தாண்டிப் பிற கவிதைகளைச் செப்பிடு வித்தைகளைப் பார்ப்பது போல் பார்த்துக் கடந்திருக்கிறேன். ஆனாலும், அவ்வப்போது ஒரு சில கவிதைகள் என் உள்ளத்தைத் தைக்கத் தவறவில்லை.

எப்போதாவது சில சமயத்தில் ஒரு சில கவிதைகள் என்னை உலுக்கி விடும். நெஞ்சின் ஆழத்தில் அவை உறங்கிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது விழித்தெழுந்து வாழ்க்கையைப் பற்றிய என் கண்ணோட்டத்தை மீண்டும் மீண்டும் சீராய்வு செய்யத் தூண்டும். இன்று வேறு எதையோ பற்றி எழுதிக் கொண்டிருந்த போது, மங்கிக் கொண்டிருக்கும் என் நினைவுக் கிடங்கிலிருந்து இந்த வரிகள் விழித்தெழுந்து என்னை உலுக்கின.

"லாலான் முள்ளு டிங்கின்னுதே! லப்பர்க் கொட்டை டப்புன்னுதே!"
இது மலேசியாவின் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் தொகுத்த "மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்" என்ற நூலில் இடம் பெற்ற ஒரு கவிதையின் சில வரிகள். அடிக்கடிப் புரட்டிப் படிக்கும்போதும் மேற்கோள் காட்டும்போதும் எளிதாகக் கண்டுபிடிக்க வசதியாக இருப்பதற்காக, அந்த நூலின் பல பக்கங்களில் அடிக்கோடிட்டு, பக்கம் குறிக்கும் ஒட்டுத்தாள் இட்டு, அடையாளச் சுட்டிகளைப் பாதுகாத்திருந்தேன். சென்னை வெள்ளத்தில் நான் இழந்த கருவூலங்களில் இதுவும் ஒன்று. அதனால்தான் இன்று என் நினைவுக்கு வந்த வரிகள் என் உள்ளத்தின் அடியாழத்தில் இருந்து முகிழ்த்தவை.

நான் மேற்கோள் காட்டிய "கவிதை"யை எழுதியவர், கல்வியறிவு அவ்வளவாக இல்லாத ஒரு தோட்டத் தொழிலாளி. தன் தாய்மண்ணில் வாழ முடியாத நிலையில், விற்பனையாளர்கள் பொன் கொழிக்கும் நிலம் என்று கற்பித்த மலாயாவுக்குச் செல்வம் தேடிக் கப்பலேறிய பலருள் அவரும் ஒருவர். எண்ணற்ற கனவுகளைச் சுமந்து சென்ற அவர், மலாயாவில் எதிர்கொண்ட உணர்வுகளை இந்த இரண்டு வரிகள் அவரது உள்ளத்தைப் பிழிந்து சாறாக்கித் தந்து விடுகின்றன.

மலாயாக் காடுகளில் இரபர் தோட்டத் தொழிலாளியாகச் சென்ற அவர் காலணி இல்லாமல் நடந்த போது அவர் காலில் தைத்த லாலான் முள்ளை நினைவு கூர்கிறார். இரபர் தோட்டத்தில் தரையில் கிடக்கும் இரபர் கொட்டைகள் அவ்வப்போது வெடித்தது, எண்ணற்ற கனவுகளைச் சுமந்து வந்த தம் நெஞ்சே வெடித்ததைப் போன்று உணர்கிறார்.

இந்தக் கவிதையின் தாக்கம் அதன் மொழி வளத்தால் வரவில்லை. யாப்பின் செழுமையால் இல்லை. ஓர் எளிய தொழிலாளி தான் பட்ட வேதனையை இந்தச் சொற்களால் பல பத்தாண்டுகள் கழித்தும் அந்தத் தோட்டத்தைப் பற்றித் தெரியாத என்னைப் போன்று வசதியுடன் வாழும் மெத்தப் படித்த இன்னொரு தலைமுறைக்கும் கடத்தியிருக்கிறார்.

அந்தக் கவிதையைப் படித்த சில ஆண்டுகள் கழித்து மலேசியாவுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 2001 தமிழ் இணைய மாநாட்டின்போது பினாங்குத் தீவுக்குச் சென்றிருந்தேன். அங்கே என்னை அழைத்துச் சென்றவர் மருத்துவர், தமிழறிஞர் செயபாரதி அவர்கள். அவர் ஓர் இரபர் தோட்டத்திற்குள் என்னை அழைத்துச் சென்ற போது அவரிடம் இந்த "லப்பர்க்கொட்டை" பற்றிக் கேட்டேன். அவர் இரபர் தோட்டத்தின் தரையில் இருந்து சில இரபர் கொட்டைகளை எடுத்துக் கொடுத்தார். அந்தத் தோட்டத் தொழிலாளியின் கவிதையின் நினைவாக அந்த "லப்பர்க் கொட்டைகளை" அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றேன்.

படைப்பிலக்கியத்தின் நோக்கமே இதுதான். இடம், காலம், சூழ்நிலை எல்லாவற்றையும் கடந்து ஒரு மனிதன் தன் அடிமனதில் உணருவதை அதற்குத் தொடர்பே இல்லாத இன்னொருவருக்குக் கொண்டு சேர்ப்பதுதான் படைப்பிலக்கியத்தின் வெற்றி.
படைப்பிலக்கியத்தின் நோக்கமே இதுதான். இடம், காலம், சூழ்நிலை எல்லாவற்றையும் கடந்து ஒரு மனிதன் தன் அடிமனதில் உணருவதை அதற்குத் தொடர்பே இல்லாத இன்னொருவருக்குக் கொண்டு சேர்ப்பதுதான் படைப்பிலக்கியத்தின் வெற்றி.

அந்தக் கவிதை என் உள்ளத்தை இன்றும் ஆழத் தைக்கிறது. தமிழ் மண்ணில் பிறந்த ஒரு தமிழரை, அவர் போன்ற பல தமிழர்களை, இந்த மண் கைவிட்டிருக்கிறது. அவரைப் போன்ற ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்கள் மலாயா, சிலோன், பிசித்தீவுகள், மொரீசியசு தீவுகள், ரெ யூனியோன் தீவுகள், தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் என்று உலகெங்கும் சிதறினார்கள். கப்பல்களில் ஏறி வணிகம் செய்ய அவர்கள் செல்லவில்லை. தங்கள் அடிப்படை வாழ்வை உறுதி செய்ய வேறு வழியே இல்லாமல் சென்றார்கள். அவர்கள் தங்களைக் கொத்தடிமைகளாய் விற்றுப் பிழைக்கச் சென்ற கதையை அவர்களுடைய தாய்மண்ணே மறந்து விட்டது. இனிமேலும் இப்படி ஓர் இழிவு தம் மக்களுக்கு வரக்கூடாது என்று எந்தத் தலைவர்களும் உறுதி எடுத்ததாகத் தெரியவில்லை.

இது ஏதோ சென்ற நூற்றாண்டுகளின் கதை மட்டுமல்ல. தங்கள் வாழ்விடத்தை விட்டுப் புலம்பெயரும் தமிழர்கள் கதை இன்னும் தொடர்கிறது. அது யாழ்ப்பாணமாக இருந்தாலும் சரி, அடையாற்று ஆற்றங்கரையாக இருந்தாலும் சரி, அந்த இழப்பின் வலியும், அவர்கள் எதிர்கொள்ளும் புதிய வாழ்க்கையின் இழிவும் நம் நெஞ்சைத் தைக்க வேண்டும். அதை நம் வாழ்நாளில் இன்னும் நடக்க விடுகிறோமே என்று நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

படைப்பிலக்கியத்தின் தன்மை அதுதான். அதன் பாடுபொருள் உலகளாவியது. அந்த லப்பர்க் கொட்டை தமிழர்களைப் பற்றியது மட்டுமல்ல. இன்றும் பிழைப்பு தேடி தமிழகத்துக்கு வரும் பிகாரிகளைப் பற்றியது மட்டுமல்ல. குண்டு வீச்சிலிருந்து தப்பிச் செல்லும் உக்கிரயீனாவின் மக்களைப் பற்றியது மட்டுமல்ல.