திங்கள், மே 15, 2023

இணையத்தில் உங்களைப் பாதுகாப்பது எப்படி - சில அடிப்படைப் பாடங்கள்

[இந்தக் கட்டுரை மே 14, 2017 அன்று Wanna Decrypto என்ற கணினித்தொற்றி பரவிக்கொண்டிருந்த போது ஒரு நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதி முகநூலில் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான பாடங்கள் இன்றும் பொருந்தும் என்று கருதி இதை மீண்டும் பதிகிறேன். - மணி]

இணையத்தில் உங்களைப் பாதுகாப்பது எப்படி - சில அடிப்படைப் பாடங்கள்
மணி மு. மணிவண்ணன்
மே 14, 2017

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பல கணினிக்கிருமித் தொல்லைகள் வந்து கொண்டிருக்கின்றன. வெள்ளி மாலை, சனி காலையில் ஒரு மாபெரும் தாக்குதல் தொடங்கியிருக்கிறது. அது எப்படி, எங்கிருந்து தொடங்கியது, எப்படி உலகெங்கும் பரவியது என்று இன்னும் யாருக்கும் சரிவரப் புலப்படவில்லை. ஆசியாவும் ஐரோப்பாவும் மிகக்கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. இந்தியாவிலும், ரஷ்யாவிலும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் இன்னும் விண்டோஸ் எக்ஸ்-பி வைத்திருக்கும் நாடுகளிலும் இதன் தாக்கம் மிகுந்த அளவுக்கு இருந்திருக்கிறது.

இந்த முறை உங்கள் கணினியில் உள்ள முக்கியமான தரவுகளை ரகசியக் குறியீட்டின் மூலம் என்கிரிப்ட் செய்து பதுக்கி விட்டு அதை மீட்பதற்கு உங்களிடம் பிட்-காயின் என்ற முறை மூல பணம் கேட்டு மிரட்டும் கணினிக்கிருமி பரவியிருக்கிறது. இது சில காலத்துக்கு முன்னர் அமெரிக்காவின் என்.எஸ்.ஏ. என்ற உயர் மட்ட ரகசிய நிறுவனம் பிற நாடுகளின் மீது ஏவுவதற்காகத் தயாரித்திருந்த செயலிகளை யாரோ திருடி வெளியிட்டதன் பிறகு வந்தது. இதைப் போன்ற பன்மடங்கு ஆபத்தான செயலிகள் தொடர்ந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள இலவசமான விண்டோஸ் டிஃபெண்டர் என்ற கணினிக்கிருமிக் கொல்லியை மட்டும் நம்பியிருந்தீர்கள் என்றால் அது போதாது. அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, தூங்கிக் கொண்டிருக்கும் கணினிகளையும் துளைக்கும் கிருமிகள் வந்திருக்கின்றன. இண்டெல் நிறுவனமும் மைக்ரோசாஃப்டும் கூட செய்த தவறுகள் பத்தாண்டுகளுக்கு மேல் ஒளிந்திருக்கிறது. அதை அவர்கள் வேண்டுமென்றே செய்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இது போன்ற முட்டாள்தனங்களைப் பெருநிறுவனங்களும் செய்கின்றன. தங்களை விட அறிவாளிகள் யாருமில்லை என்ற அகந்தை எல்லோருக்கும் உண்டு.

எனவே உங்களில் யாரை வேண்டுமானாலும் இந்தக் கிருமி தாக்கியிருக்கக்கூடும். இனிமேலும் தாக்கக்கூடும். இது போன்ற தாக்குதல்களிலிருந்து ஓரளவுக்காவது தற்காப்பு செய்யக் கற்றுக் கொள்வது இன்றைய உடனடித்தேவை.

1. காசு கொடுக்காமல், லைசன்ஸ் இல்லாத, அடிக்கடி மைக்ரோசாஃப்ட் புதுமைப்படுத்தாத, பழைய விண்டோஸ் இயங்குதளங்களைப் புழங்காதீர்கள். Don't use unlicensed, unsupported, "free" Windows versions bundled with your PC by unscrupulous PC vendors. They will not be supported by Microsoft and will not be updated making you very vulnerable to attacks.

2. உங்கள் நம்பிக்கைக்கு உகந்த ஆன்டி-வைரஸ் எதையாவது பயன்படுத்துங்கள் - இலவசமாய் வரும் மைக்ரோசாஃட் விண்டோஸ் டிஃபெண்டர் போதாது. வெறும் ஆன்டி-வைரஸ் மட்டுமல்லாமல் உங்கள் இணையத் தொடர்புகளையும் பாதுகாக்கும் ஆன்டி-மேல்வேர் செயலிகளைப் புழங்குங்கள். சிமாண்டெக்கின் நார்ட்டன் இண்டர்நெட் செக்யூரிட்டி, மேக்கஃபீ, போன்றவை ஓரளவுக்கு உதவும். அவற்றுள் எப்போதும் இயங்கும் கிருமிக்கொல்லியை இயக்கி வையுங்கள். அவைதான் கணினிக்கிருமிகளை நீங்கள் தெரியாமல் தொட்டீர்கள் என்றால் தடுக்க உதவுபவை. இவற்றில் ஃபைர்வால் Firewall என்ற செயலியும் உண்டு. அவற்றையும் இயக்குங்கள். தேவையில்லாமல் எந்த இண்டர்நெட் போர்ட்டையும் திறக்க விடாதீர்கள். அவற்றின் மூலம் உங்கள் கணினி தூங்கும்போதும் தாக்க முடியும்.

3. உங்கள் கணினியைப் புழங்காத போது அவற்றை இணையத்தொடர்பிலிருந்து நீக்கி, முற்றிலும் அணைத்து விடுங்கள். ஸ்லீப் மோடிலோ, ஹைபர்நேட் மோடிலோ விட வேண்டாம்.

4. உங்களுக்கு வரும் மின்னஞ்சலிலோ, மெசஞ்சர்/வாட்சப் மூலமோ வரும் இணைப்புகளை உடனடியாகத் திறக்க முயலாதீர்கள். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் நான் கூட நம்பகமான ஆட்களிடமிருந்து வரும் வைரஸ்களைத் தொட்டிருக்கிறேன். யானைக்கும் அடி சருக்கும். எனவே யாரையும் நம்ப வேண்டாம். இது அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை.

5. கிளுகிளுப்பான படங்கள், வீடியோக்கள், வெப்சைட் லின்க்குகள் வந்தால் சொடுக்காதீர்கள். பெரும்பாலான கம்ப்யூட்டர் வைரஸ்கள் (கணினிக்கிருமிகள்) அவற்றில் ஒளிந்திருக்கும். அப்படிச் சொடுக்கித்தான் தீர வேண்டுமென்றால் உங்கள் வீட்டில் அல்லதுஅலுவலகத்தில் உள்ள கணினிகளில் விளையாடாதீர்கள். உங்கள் வங்கிக்கணக்குகளை அணுகும் கணினியில் நிச்சயமாக இவற்றைச் சொடுக்க வேண்டாம். பிரௌசிங் செண்டரில் உங்களை விட்டால் அங்கே போய் விளையாடுங்கள். உங்கள் அலுவலகத்தில் இது போல ஏதாவது செய்தால் உங்கள் வேலையே போக நேரிடலாம்.

6. மேக் அல்லது லினக்ஸ் டெஸ்க்டாப் கணினி இருந்தால் அவை விண்டோஸ் கணினிகளை விட பாதுகாப்பானவை. உங்கள் ஐ-பேடு அவற்றையும் விட மேலானது. விண்டோஸ் எக்ஸ்-பியைப் புழங்காதீர்கள். அது ஆபத்தானது. விண்டோஸ் 7, 8, 8.1 இலிருந்து 10க்கு மாற முயலுங்கள். தற்போதைக்கு இவற்றையும் மைக்ரோசாஃப்ட் பாதுகாக்கச் செயலிகளைப் புதுப்பித்துள்ளது. அவற்றைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள். வரும் வாரங்களில் மேலும் பல அலைகள் வரக்கூடும்.

7. உங்களுக்கு மிக மிக முக்கியமான, இழக்கக் கூடாத ஆவணங்களை உடனடியாக எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் அல்லது பெரிய (64 ஜிபி/128 ஜிபி) பென் டிரைவ்களில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கூகிள் டிரைவ் போன்ற முகில்கணினித் தளங்களிலும் சேமிக்கலாம் - ஆனால் அவற்றைப் பாதுகாக்கத் தக்க பாஸ்வோர்ட்/கடவுச்சொல் வைத்திருக்க வேண்டும், அந்தக் கடவுச்சொல்லை உங்கள் கணினியில் சேமிக்காமல் வைத்திருக்க வேண்டும்.

8. டார்ரெண்ட் தளங்களிலிருந்து படங்களையும் புத்தகங்களையும் இறக்குபவர்களாய் இருந்தால் எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் கணினிக்குள் வருவதற்கான மிகப்பெரிய ஓட்டை அதுவும்தான்.

9. அதே போல் மேக்ரோ வசதியுள்ள எந்த மைக்ரோசாஃப்ட் கோப்பையும் (Word, Excel etc. documents with Macro) வைரஸ் ஸ்கேன் செய்யாமல் திறக்காதீர்கள். ஜிமெயிலை நம்பலாம். அது நன்றாக ஸ்கேன் செய்கிறது.

10. அதே போல் நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளான் போல் திடீர் திடீர் என்று உங்கள் கணினியிலிருந்து வைரஸ்களைக் களைகிறோம் என்று ஊர்பேர் தெரியாத நிறுவனங்களின் விளம்பரங்கள் வரும். அவற்றை இலவசமாகவோ, காசு கொடுத்தோ வாங்க வேண்டாம்.

இவையெல்லாம் மிகவும் அடிப்படையான தற்காப்புச் செயற்பாடுகள். இவற்றையும் மீறி உங்களை எது வேண்டுமானாலும் தாக்கலாம். என் எஸ் ஏ போன்ற நிறுவனங்கள் மிகவும் பாதுகாப்பான அந்நிய அரசுகளின் கணினிகளைத் தாக்க எழுதிய செயலிகளை வைத்துக் கொண்டுதான் நம்மை யாரோ தாக்குகிறார்கள். எனவே ஆட்டோ ரிக்‌ஷா மீது அணுகுண்டு விழுந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது. ஆட்டோ ரிக்‌ஷாவை எப்படிக் கவனமாக ஓட்டலாம் என்றுதான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அணுக்குண்டு விழும் இடங்களுக்குப் போகாதீர்கள். பக்கத்தில் இருப்பவர் மீது குண்டு விழுந்தால் அது உங்களையும் விடாது. உங்களுக்கு எந்தவிதமான தாக்குதல்களும் இழப்புகளும் ஏற்படாமல் இருக்க வாழ்த்துகிறேன்.

எனக்கு 27 ஆண்டுகாலமாகக் கணினியில் தகவல் பாதுகாப்புத் துறையில் பயிற்சியும் பட்டறிவும் இருக்கிறது. நார்ட்டன் ஆன்டி-வைரஸ் 1.x இலிருந்து அதை எழுதியவர்களில் முதன்மை புரோக்ராம்மராக இருந்திருக்கிறேன். பிறகு வெவ்வேறு நிறுவனங்களில் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி வல்லுநராகவும் இருந்திருக்கிறேன். சென்னையில் நார்ட்டன் செயலிகளை எழுதும் நிறுவனத்தைத் தொடங்கி வளர்த்து ஆளாக்கிய சிலரில் நானும் ஒரு முன்னோடி. எனவே நான் சொல்லுவதை ஓரளவுக்கு நீங்கள் நம்பலாம். இதே செய்தி ஆங்கிலத்தில் வலையில் பல இடங்களில் இருக்கலாம். தமிழில் அவ்வளவாக இருக்காது என்று நினைத்து நண்பர் Nagarajan KS வேண்டிக் கொண்டதனால் இந்த நள்ளிரவிலும் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். யாருக்காவது பயனாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன்.

மணி மு. மணிவண்ணன்.
Mani M. Manivannan

லாலான் முள்ளும் லப்பர்க் கொட்டையும் - படைப்பிலக்கியத்தின் வெற்றி

லாலான் முள்ளும் லப்பர்க் கொட்டையும் - படைப்பிலக்கியத்தின் வெற்றி
மணி மு. மணிவண்ணன்

தமிழின் மிகப்பெரும் புலவர்கள் தமிழ் இலக்கியத்தைப் பற்றிச் சொல்லும்போது அது ஒரு கரை காண முடியாத கடல் என்று மலைப்பார்கள். அதெல்லாம் அவர்கள் சங்க இலக்கியங்கள், காப்பியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பே சொன்னது. உ. வே. சா. அவர்களின் "என் சரித்திரம்" நூலில் இப்படியொரு குறிப்பு வரும்.

அப்படிப்பட்ட கரை காண முடியாத கடலில், படைப்பிலக்கியங்களில் கொண்டாடப்படுபவை பாவினங்கள்தாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை பாடல்களுக்கே உண்டு. அணுவைத் துளைத்து எழு கடலைப் புகுத்தும் தன்மையெல்லாம் குறுகத்தரித்த குறள் வெண்பாவினால்தான் முடியும்.

செவ்வியல் இலக்கியங்களைப் படிக்கும் சுவையே தனி. தமிழின் சான்றோர் இலக்கியங்களைப் படிப்பதில் ஒரு கூடுதல் சுவை உண்டு. அவை நம் முன்னோர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதுடன், மாந்த இயல்பை நம் உள்ளத்தைத் தைக்கும் வகையில் சொன்னதும் அந்தச் சுவையைக் கூட்டும்.

சொல் வளம், பொருள் வளம் நிறைந்து கிடக்கும் அந்தக் கருவூலத்தைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் படித்து இன்புற வேண்டும். பாடல்களை, கவிதைகளைப் படிப்பது கூட ஒரு கலை. படிப்பவர்களின் பின்புலத்தைப் பொறுத்து, அவருடைய கல்வி, பட்டறிவு, வாழ்க்கையில் அவர் நிலை என்பவற்றைப் பொறுத்து, பிற மொழிகளிலும் அவர் என்னென்ன படித்துச் சுவைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்து இது ஆளுக்கு ஆள் மாறும். இதில் கவிச்சக்கரவர்த்தி, கவிப்பேரரசு, என்றெல்லாம் நாம் வழங்கும் பட்டங்கள் நமக்குப் பெரிதாகத் தோன்றலாம். ஆனால் பிறர் அவற்றை ஏற்க வேண்டியதில்லை.

பண்டைத் தமிழிலக்கியம் என்னை ஈர்த்த அளவுக்குத் தற்காலத் தமிழிலக்கியம் ஈர்த்ததில்லை. அதிலும் பாரதி, பாரதிதாசன் கவிதைகளைத் தாண்டிப் பிற கவிதைகளைச் செப்பிடு வித்தைகளைப் பார்ப்பது போல் பார்த்துக் கடந்திருக்கிறேன். ஆனாலும், அவ்வப்போது ஒரு சில கவிதைகள் என் உள்ளத்தைத் தைக்கத் தவறவில்லை.

எப்போதாவது சில சமயத்தில் ஒரு சில கவிதைகள் என்னை உலுக்கி விடும். நெஞ்சின் ஆழத்தில் அவை உறங்கிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது விழித்தெழுந்து வாழ்க்கையைப் பற்றிய என் கண்ணோட்டத்தை மீண்டும் மீண்டும் சீராய்வு செய்யத் தூண்டும். இன்று வேறு எதையோ பற்றி எழுதிக் கொண்டிருந்த போது, மங்கிக் கொண்டிருக்கும் என் நினைவுக் கிடங்கிலிருந்து இந்த வரிகள் விழித்தெழுந்து என்னை உலுக்கின.

"லாலான் முள்ளு டிங்கின்னுதே! லப்பர்க் கொட்டை டப்புன்னுதே!"
இது மலேசியாவின் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் தொகுத்த "மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்" என்ற நூலில் இடம் பெற்ற ஒரு கவிதையின் சில வரிகள். அடிக்கடிப் புரட்டிப் படிக்கும்போதும் மேற்கோள் காட்டும்போதும் எளிதாகக் கண்டுபிடிக்க வசதியாக இருப்பதற்காக, அந்த நூலின் பல பக்கங்களில் அடிக்கோடிட்டு, பக்கம் குறிக்கும் ஒட்டுத்தாள் இட்டு, அடையாளச் சுட்டிகளைப் பாதுகாத்திருந்தேன். சென்னை வெள்ளத்தில் நான் இழந்த கருவூலங்களில் இதுவும் ஒன்று. அதனால்தான் இன்று என் நினைவுக்கு வந்த வரிகள் என் உள்ளத்தின் அடியாழத்தில் இருந்து முகிழ்த்தவை.

நான் மேற்கோள் காட்டிய "கவிதை"யை எழுதியவர், கல்வியறிவு அவ்வளவாக இல்லாத ஒரு தோட்டத் தொழிலாளி. தன் தாய்மண்ணில் வாழ முடியாத நிலையில், விற்பனையாளர்கள் பொன் கொழிக்கும் நிலம் என்று கற்பித்த மலாயாவுக்குச் செல்வம் தேடிக் கப்பலேறிய பலருள் அவரும் ஒருவர். எண்ணற்ற கனவுகளைச் சுமந்து சென்ற அவர், மலாயாவில் எதிர்கொண்ட உணர்வுகளை இந்த இரண்டு வரிகள் அவரது உள்ளத்தைப் பிழிந்து சாறாக்கித் தந்து விடுகின்றன.

மலாயாக் காடுகளில் இரபர் தோட்டத் தொழிலாளியாகச் சென்ற அவர் காலணி இல்லாமல் நடந்த போது அவர் காலில் தைத்த லாலான் முள்ளை நினைவு கூர்கிறார். இரபர் தோட்டத்தில் தரையில் கிடக்கும் இரபர் கொட்டைகள் அவ்வப்போது வெடித்தது, எண்ணற்ற கனவுகளைச் சுமந்து வந்த தம் நெஞ்சே வெடித்ததைப் போன்று உணர்கிறார்.

இந்தக் கவிதையின் தாக்கம் அதன் மொழி வளத்தால் வரவில்லை. யாப்பின் செழுமையால் இல்லை. ஓர் எளிய தொழிலாளி தான் பட்ட வேதனையை இந்தச் சொற்களால் பல பத்தாண்டுகள் கழித்தும் அந்தத் தோட்டத்தைப் பற்றித் தெரியாத என்னைப் போன்று வசதியுடன் வாழும் மெத்தப் படித்த இன்னொரு தலைமுறைக்கும் கடத்தியிருக்கிறார்.

அந்தக் கவிதையைப் படித்த சில ஆண்டுகள் கழித்து மலேசியாவுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 2001 தமிழ் இணைய மாநாட்டின்போது பினாங்குத் தீவுக்குச் சென்றிருந்தேன். அங்கே என்னை அழைத்துச் சென்றவர் மருத்துவர், தமிழறிஞர் செயபாரதி அவர்கள். அவர் ஓர் இரபர் தோட்டத்திற்குள் என்னை அழைத்துச் சென்ற போது அவரிடம் இந்த "லப்பர்க்கொட்டை" பற்றிக் கேட்டேன். அவர் இரபர் தோட்டத்தின் தரையில் இருந்து சில இரபர் கொட்டைகளை எடுத்துக் கொடுத்தார். அந்தத் தோட்டத் தொழிலாளியின் கவிதையின் நினைவாக அந்த "லப்பர்க் கொட்டைகளை" அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றேன்.

படைப்பிலக்கியத்தின் நோக்கமே இதுதான். இடம், காலம், சூழ்நிலை எல்லாவற்றையும் கடந்து ஒரு மனிதன் தன் அடிமனதில் உணருவதை அதற்குத் தொடர்பே இல்லாத இன்னொருவருக்குக் கொண்டு சேர்ப்பதுதான் படைப்பிலக்கியத்தின் வெற்றி.
படைப்பிலக்கியத்தின் நோக்கமே இதுதான். இடம், காலம், சூழ்நிலை எல்லாவற்றையும் கடந்து ஒரு மனிதன் தன் அடிமனதில் உணருவதை அதற்குத் தொடர்பே இல்லாத இன்னொருவருக்குக் கொண்டு சேர்ப்பதுதான் படைப்பிலக்கியத்தின் வெற்றி.

அந்தக் கவிதை என் உள்ளத்தை இன்றும் ஆழத் தைக்கிறது. தமிழ் மண்ணில் பிறந்த ஒரு தமிழரை, அவர் போன்ற பல தமிழர்களை, இந்த மண் கைவிட்டிருக்கிறது. அவரைப் போன்ற ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்கள் மலாயா, சிலோன், பிசித்தீவுகள், மொரீசியசு தீவுகள், ரெ யூனியோன் தீவுகள், தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் என்று உலகெங்கும் சிதறினார்கள். கப்பல்களில் ஏறி வணிகம் செய்ய அவர்கள் செல்லவில்லை. தங்கள் அடிப்படை வாழ்வை உறுதி செய்ய வேறு வழியே இல்லாமல் சென்றார்கள். அவர்கள் தங்களைக் கொத்தடிமைகளாய் விற்றுப் பிழைக்கச் சென்ற கதையை அவர்களுடைய தாய்மண்ணே மறந்து விட்டது. இனிமேலும் இப்படி ஓர் இழிவு தம் மக்களுக்கு வரக்கூடாது என்று எந்தத் தலைவர்களும் உறுதி எடுத்ததாகத் தெரியவில்லை.

இது ஏதோ சென்ற நூற்றாண்டுகளின் கதை மட்டுமல்ல. தங்கள் வாழ்விடத்தை விட்டுப் புலம்பெயரும் தமிழர்கள் கதை இன்னும் தொடர்கிறது. அது யாழ்ப்பாணமாக இருந்தாலும் சரி, அடையாற்று ஆற்றங்கரையாக இருந்தாலும் சரி, அந்த இழப்பின் வலியும், அவர்கள் எதிர்கொள்ளும் புதிய வாழ்க்கையின் இழிவும் நம் நெஞ்சைத் தைக்க வேண்டும். அதை நம் வாழ்நாளில் இன்னும் நடக்க விடுகிறோமே என்று நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

படைப்பிலக்கியத்தின் தன்மை அதுதான். அதன் பாடுபொருள் உலகளாவியது. அந்த லப்பர்க் கொட்டை தமிழர்களைப் பற்றியது மட்டுமல்ல. இன்றும் பிழைப்பு தேடி தமிழகத்துக்கு வரும் பிகாரிகளைப் பற்றியது மட்டுமல்ல. குண்டு வீச்சிலிருந்து தப்பிச் செல்லும் உக்கிரயீனாவின் மக்களைப் பற்றியது மட்டுமல்ல.

சனி, ஏப்ரல் 22, 2023

எரிகற்கள்

எரி கற்கள்
- மணி மு.மணிவண்ணன்


"எரி கற்கள் மழையாய்ப் பெய்கின்றன, இது போன்ற அரிதான காட்சி மீண்டும் வர 99 ஆண்டுகளாகும்" என்று தொலைக்காட்சியிலும், நாளேடுகளிலும், வலையிதழ்களிலும் பரபரப்பான செய்தி. ஓர் இலையுதிர் காலத்து இரவு. பச்சைப் பசேலென்ற இலைகள் பழுத்து, மஞ்சளாய், சிவப்பாய், மற்றும் விவரிக்கவியலாத வண்ணங்களாய் மாறி, மழையில் நனைந்து, குளிரில் நடுங்கி, உப்புக் காற்றில் உதிரத் துவங்கியுள்ளன. இன்னும் சில நாட்களில் மரங்கள் மொட்டையாய்க் காட்சி அளிக்கும்.

நள்ளிரவு. தொலைபேசியில் கம்ப ராமாயண இலக்கிய அலசலை முடித்தார் நண்பர். சி. என். என். இல் ஆ·ப்கான் செய்திகள். பேசினால் மட்டும் கன்னம் ஒட்டிக் கொள்ளும் மீன் முகத்தாள் ஐரோப்பிய ஆங்கிலத்தில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். உன்னித்துக் கேட்கும் பொறுமையில்லாமல் கொட்டாவி விட்டேன்.

"ஏதாவது தெரிகிறதா பாருங்கள்."

இல்லத்தரசியின் கட்டளை.

இரவு உடையோடு புழக்கடையில் வந்து நின்று எட்டிப் பார்த்தேன். பனித்துளிகள் கண்ணாடிச் சன்னல்களின்மேல் மொட்டு விட்டுக் கொண்டிருந்தன. அடிவானத்தில் பனிமூட்டம். நிலவில்லாத வானம். ஓக்லந்தை நோக்கி ஓவென்ற இரைச்சலோடு சென்று கொண்டிருந்த விமானத்தின் விளக்குகள் மின்மினிப் பூச்சி போல் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தன.

தொடர்பே இல்லாமல் இளம்பருவத்தில் கிறுக்கிய "கவிதை" ஒன்று மங்கலாக நினைவுக்கு வந்து தொந்தரவு கொடுத்தது.

"'எண்ணமென்ற விண்ணிலே எண்ணிலா மேகங்கள்! ..... விண்மீனும் சிரிக்கவில்லை!'" "போடா, பொடிப்பயலே, மேகங்கள் நிறைந்த எண்ணமென்ற விண்ணைப் பற்றி உனக்கென்ன தெரிந்திருக்கும்" என்று என் இளமைப் பருவத்தைக் கடிந்து கொண்டே விண்மீன்களைத் தேடிப் பார்த்தேன்.

"என்ன, ஏதாவது தெரிகிறதா?"

உள்ளத்தரசி உள்ளிருந்து குரல் கொடுத்தாள். குளிரில் லேசான நடுக்கம்.

"இன்னும் இல்லை. பார்த்துக் கொண்டிருக்கிறேன்."

உள்ளறையின் விளக்கையும், தொல்லைக்காட்சியையும் அணைக்கச் சொன்னேன். சற்று நேரம் கழித்து விண்மீன்கள் கண்சிமிட்டிச் சிரிக்கத் துவங்கின. மெல்லிய காற்றில் குளிர் கூடியது. நடுக்கமும் கூடியது. பற்கள் சோம்பேறித்தனமாய்த் தந்தி அடித்து எச்சரித்தன. எரிகற்களைத் தேடத் துவங்கினேன். கருநீலப் புடவையில் வெள்ளிப்பூக்கள் பளிச்சிடும் இரவு அன்னையின் மடியில் உறங்கிய குழந்தைப் பருவ நாட்களின் நினைவு ஏதோ இனம் புரியாத இழப்பை நினைவூட்டியது.

"என்ன, நான் வரட்டுமா? கண்ணாடியை மறந்து வைச்சுட்டுப் பாத்துக்கிட்டிருக்கீங்களா?"

உண்மைதான், பள்ளிப்பருவத்தில் இரவின் மடியில் உறங்கிய நினைவுகள் பசுமையாய் வாழ்கின்றன. ஆனால் மூக்குக்கு மேல் கண்ணாடியிருக்கிறதா என்பதில் மறதி! கண்ணாடியைத் தொட்டுப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டேன்.

"கண்ணாடியை மறக்கலே, ஆனா இன்னும் ஏதும் தெரியலே!"

"சரி, சரி, அங்கே குளிருலே வெடவெடத்துக்கிட்டு நிக்காதீங்க. ஏதாவது போர்வை போத்திக்கிட்டுப் போய்ப் பாருங்க!" இல்லாளின் கரிசனம்.

"பரவாயில்லம்மா. ரெண்டு மணிக்குத்தான் உச்சக் கட்டம்னு சொன்னாங்க. அப்போ பாக்கலாமே?"

"ஆமா, அதுக்குண்ணு கடிகாரத்துலே நேரம் வச்சு எழுந்து பாக்கப் போறீங்களா, இல்லே, ரெண்டு மணி வரைக்கும் காத்திருக்கறேன்னு சாக்கு வச்சுக்கிட்டு கணினி முன்னாலே தட்டிக்கிட்டு இருக்கப் போறீங்களா?"

எனது மர மண்டையில்கூட எச்சரிக்கை மணி அடித்தது.

"அதெல்லாம் இல்லேம்மா. இன்னைக்குப் பூரா கணினி பக்கமே போகலே, கவனிச்சியா? எனக்குக் களைப்பா இருக்கு. அதான். படுக்கை அறைச் சன்னல்லே வெனிசியன் திரையைச் சுருக்கிட்டுத் தூக்கம் வர்ற வரைக்கும் வானத்தைப் பாக்கலாம். என்ன சொல்றே?"

படுக்கை அறைச் சன்னல் வழியாக எத்தனையோ முறை நிலவு காய்வதைப் பார்த்த நினைவுகள் மலர்ந்தன. அதென்ன, நிலவு காய்வது? கதிரவன் காயலாம், நிலவு காயலாமோ என்றோர் இழை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது. எத்தனை நிலவுகள் பார்த்திருந்தாலும் "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்" என்று பாரி மகளிர் பார்த்த நிலவு பற்றிய எண்ணம் இன்னோர் இழையில் ஓடிக் கொண்டிருந்தது.

வெனிசியன் திரையைச் சுருக்கிப் பார்த்தாலும் ஏதும் தெரியவில்லை. சன்னலில் படிந்திருந்த பனிமொட்டுகளை நுனி விரலால் மேய்ந்தேன்.

"என்ன அங்கே, சின்னப் பிள்ளைங்க மாதிரிக் கண்ணாடியில கோடு போட்டு வெளையாடிக்கிட்டு இருக்கீங்க?" ஓர் அழுக்குத்துணியைத் தேடி எடுத்து வந்து கண்ணாடிச் சன்னலை அழுத்தித் துடைத்தேன். பனித்திரை அகன்ற பின்னால் வான் ஒளி தூறத் துவங்கியது.

ஆரவாரமில்லாத பின்னிரவு. பக்கத்து வீட்டுக் கருப்புப் பூனையைக் கூடக் காணோம். விண்மீன் கூட்டங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். வான மகளின் பட்டு ஆடையின் பளபளப்பு கண்ணுக்குப் புலப் படவில்லை.

"சரி, சரி. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நகரத் தெருவிளக்குகளின் ஒளிச்சிதறல்களில் எரிகல் நாட்டியங்கள் கண்ணுக்குப் புலப்படாமல் போகலாம். பரவாயில்லை. நாளை தொலைக்காட்சியில் எல்லாவற்றையும் நன்றாகவே காட்டி விடுவார்கள்" என்று மனது ஆறுதல் சொன்னாலும், சிறு குழந்தையைப் போல் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலை வெய்யில் சுரீர் என்று அடித்து எழுப்பியது. திரையை மூடி விட்டு, மேலும் அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போடுவதற்காகப் போர்வையைத் தலைக்குமேல் இழுத்திப் போர்த்திக் கொண்டேன்.

மணி மு. மணிவண்ணன்
தென்றல், டிசம்பர் 2001
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3734

வாழ்வும் சாவும்

நண்பனுடன் தொலைபேசியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். சன்னலின் வழியாக என் வீட்டுப் புல்வெளியும் அதைக் கடந்து எங்கள் தெருவும் தெரியும். ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத தெரு. அவ்வப்போது மகிழுந்துகளும் சரக்குந்துகளும் விரைந்து செல்லும். எதிர் வீட்டு நிப்பானியத் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் பேரப்பிள்ளைகளைப் பார்க்கப் போகாத சமயத்தில் அவர்கள் வீட்டுப் புல்வெளியை மிகுந்த அக்கறையுடன் ஒவ்வொரு புல்லையும் பார்த்துப் பார்த்துத் தண்ணீர் தெளிப்பார்கள், உரம் போடுவார்கள், களை பிடுங்குவார்கள், புல் தரையை சமப்படுத்துவார்கள். ஓர் உழவன் நெல் வயலைக் கூட இவ்வளவு அக்கறையோடு பார்த்துக் கொள்வானா என்று தெரியாது.

அவர்களுக்கு இடது பக்க வீட்டில் இருந்தவர்கள் முதலை, மலைப்பாம்பு போன்ற அரிதான ஊர்வனவற்றை வளர்ப்பவர்கள் என்று ஒரு புரளி உண்டு. அது உண்மைதானா என்று அறிவதற்கு எனக்கு ஆர்வமில்லை. அப்படி ஏதும் இருந்தால் அது தெருவைக் கடந்து சாக்கடை வழியாக எங்கள் வீட்டுக்குள் வரும் வாய்ப்பு குறைவு என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன். எது எப்படியோ அவர்கள் கடந்த சில வாரங்களாகத் தங்கள் வீட்டில் இருந்த எல்லாவற்றையும் சரக்குந்துகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். சில நாட்களாக அவர்கள் வீட்டில் யாரும் குடியிருக்க வில்லை. தோட்டக்காரர் மட்டும் வந்து புல்வெளியைச் சீரமைத்து விட்டுப் போய் விட்டார்.

இன்று குப்பை வண்டிகள் வரும் நாள். குப்பைத் தொட்டி, மறுசுழற்சித் தொட்டி, தோட்டக்குப்பைத் தொட்டி மூன்றையும் வெளியில் வைத்திருந்தோம். மூன்று குப்பை வண்டிகளும் வெவ்வேறு நேரத்தில் வந்து குப்பையை அள்ளிக்கொண்டு போய்விடும். அவர்கள் சில சமயத்தில் குப்பைத்தொட்டிகளைத் தெருவில் சாய்த்து விட்டுப் போய்விடுவார்கள். இல்லாவிட்டாலும் அவை திறந்திருப்பதால், தம் நாய்களை நடைப்பயிற்சிக்குக் கூட்டிச் செல்லும் அக்கம்பக்கத்தார், நாயின் கழிவுகளை எங்கள் குப்பைத் தொட்டிகளில் காணிக்கையாகச் செலுத்திவிட்டுச் செல்ல நேரிடலாம். எனவே குப்பை வண்டி வந்து சென்ற அடுத்த மில்லி நொடிக்குள் அவற்றை வீட்டுக்குள்ளே கொண்டு வந்து விடுவது சிறப்பு.

இது தவிர அஞ்சல் ஊழியர் வருவார். பக்கத்து வீட்டிலிருந்து குறுக்கு வழியாக எங்கள் வீட்டுப் புல்தரை மீது நடந்து வந்து என் வீட்டுக் கதவில் இருக்கும் ஓட்டையில் அஞ்சல்களைப் போட்டுவிட்டுப் போவார். தண்ணீர்ப் பற்றாக்குறையினால், புல்தரைக்கு நான் அவ்வளவு தண்ணீர் தெளிப்பதில்லை என்பதால் எங்கள் புல்தரை பொதுவாகக் காய்ந்துதான் இருக்கும். கடந்த சில வாரங்களாகப் பெய்த நல்ல மழையால் இப்போது புல்தரை செழிப்பாகப் பசுமையாக இருக்கிறது. இனிமேல் அவற்றின் மீது நடந்து அவற்றை நசுக்க வேண்டாம் என்று அடுத்தமுறை அஞ்சல் ஊழியர் வரும்போது சொல்ல வேண்டும். இது அவருக்கே தெரிந்திருக்க வேண்டும். அரசு ஊழியரல்லவா. தான் செய்வது தப்பு என்று அவருக்குத் தோன்றாது. நாம் சுட்டிக் காட்டினாலும் திருந்துவாரோ என்னவோ!

இளவேனிற்காலம் பிறந்து விட்டது. ரோசாச் செடிகள் பூத்துக் குலுங்குகின்றன. நடைபாதையில் இருக்கும் மரத்தின் கிளைகளிலும் இலைகள் துளிர்த்திருக்கின்றன. இரண்டே வாரங்களில் மொட்டை மரங்களாக இருந்தவை இன்று பச்சைப் பசேலென்று இலைத்துளிர் காலத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. இலைகளும் பூக்களும் இருந்தால் வண்டுகளும், தேனீக்களும், வண்ணத்துப்பூச்சிகளும் வராமல் இருக்குமா? பேரரசு வண்ணத்துப் பூச்சியும் மெக்சிக்கோவிலிருந்து வலசை வந்து விட்டது போல் தெரிகிறது. கடுங்குளிர் காலத்திலும் வலசை செல்லாத குருவிகள் எப்போதும் போல் புல் தரையில் எதையோ பொறுக்கித் தின்று கொண்டிருக்கின்றன. தெருவின் இருமருங்கும் நெடிந்துயர்ந்து நிற்கும் மின்சாரக் கம்பங்களின் உச்சியில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு தாம் ஆளும் உலகைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் அண்டங்காக்கைகள் அவ்வப்போது குரல் கொடுக்கும். அவற்றுக்குப் பின்னர் இருக்கும் தொலைத்தொடர்புக் கம்பிகள் மீது வெகு விரைவாக ஓடும் அணில்கள் எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தும். அவ்வளவு உயரமான கம்பிகள் மீது எப்படித்தான் அவை நிலை குலையாமல் ஓடுகின்றனவோ!

அண்டங்காக்கைகள் ஏனோ அணில்களைப் பொருட்படுத்துவதில்லை. அவை கூர்மையான அறிவுள்ளவை. எந்த வீட்டில் யார் என்ன செய்கிறார்கள், எப்போது வருவார்கள், என்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருப்பவை அவை. பக்கத்து வீட்டுக்காரர்கள் நம்மை உளவு பார்ப்பது போலத்தான் காக்கைகளும் நம்மை வேவுபார்த்துக் கொண்டே இருக்கும். அவ்வப்போது அவை தம்மினத்துக்குக் கரைந்து ஏதோ சொல்லும். படபடவென்று சிறகடித்துக் கொண்டு அவை எல்லாம் ஒரே சமயத்தில் தரை மீது ஏதோ தாக்குதல் தொடுக்கும். பின்பு மீண்டும் மின்கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்டு பேரரசைக் கண்காணிப்பதைத் தொடரும்.

இரவு நேரமென்றால் ராக்கூன்கள் வரும். ஆனால், ஆரஞ்சு மரம் பழுத்துக் குலுங்கும்போதுதான் அவை பழம் பறிக்க வரும். தற்போதைக்கு, இளவேனிலின் தொடக்கத்தில் பறித்துத் தின்ன ஏதுமில்லை. கயோட்டிகளின் நடமாட்டம் இன்னும் அடங்கவில்லை. பெண் கயோட்டிகளை ஈர்க்க ஆண் கயோட்டிகள் ஊளையிடுவதை இரவில் கேட்கலாம். பகலில் அவை வளர்ப்பு நாய்களையும், வளர்ப்புப் பூனைகளையும் வேட்டையாடுகின்றன என்று எங்கள் அக்கம்பக்கத்தினர் கண்காணிப்புக் குழுவில் செய்தி பகிர்கிறார்கள். இது தவிர வீடுகளில் புகுந்து திருடுபவர்களும் கூடியிருக்கிறார்களாம். வீடற்றவர்கள் நகர்மையப் பகுதியிலிருந்து அகநகர எல்லைகளுக்கும் பெயரத் தொடங்கிவிட்டார்கள். பேரங்காடியின் வேலிக்கருகே கூடாரங்களைப் போட்டுக் குடியிருப்பதை அண்மையில் நானே பார்த்தேன். இவர்களுக்கெல்லாம் புதிதாக மலிவு வீடு கட்டிக் கொடுத்து வீடற்றவர் சிக்கல்களைத் தீர்ப்பேன் என்று உறுதியளித்த மாநகரத்தலைவி இன்னும் செயலாற்றத் தொடங்கவில்லை.

நண்பனோடு பேசிக் கொண்டே இருந்த நான் தெருவின் மீதும் ஒரு கண்ணை வைத்திருந்தேன். குப்பைத்தொட்டிகளைக் காலையிலேயே உள்ளே கொண்டு வந்துவிட்டதால் அதைப் பற்றிய கவலையேதும் இல்லை. எந்த வித அக்கறையும் இல்லாமல் சோம்பலாகத் தெருவைப் பார்த்துக் கொண்டே இருந்த என் கண்ணுக்குத் திடீரென்று சில அசைவுகள் தெரிந்தன. சிமெண்டுத் தரையில் ஏதோ துள்ளிக்கொண்டிருந்தது. தொலைபேசியில் இருந்த கவனத்தைச் சற்றே அதன் மீது திருப்பிக் கூர்ந்து பார்க்கத் தொடங்கினேன். அது ஏதோ ஓணானின் துண்டிக்கப்பட்ட வால் போல் தெரிந்தது. அது இன்னும் துள்ளிக்கொண்டிருந்ததால் கவனம் விரியத் தொடங்கியது. கூரையிலிருந்து அண்டங்காக்கை ஒரு விமானத்தின் ஒயிலோடு இறங்கியதைக் கவனித்த என் கண்கள், துள்ளிக் கொண்டிருந்த வாலைத் தாண்டி எதையோ கொத்தியதைத் தொடர்ந்து கவனித்தன. வாலை இழந்த ஒரு சிறிய ஓணான் தற்காப்புப் போராட்டத்தில் இருந்தது. அண்டங்காக்கையும் ஓணானை எச்சரிக்கையாகத்தான் தாக்கியது. இரண்டும் ஒன்றையொன்று சுற்றிச் சுற்றி வந்தன. காக்கை கொத்துவதும், ஓணான் தப்பியோடி அதைக் கடிக்க முயல்வதும் என் கவனத்தைத் தொலைபேசியிலிருந்து முழுக்க முழுக்கத் திருப்பிவிட்டது. தொலைபேசியில் தொடர்ந்து ஊம் கொட்டிக் கொண்டிருந்த நான் இருக்கையில் இருந்து எழுந்து சன்னலுக்கருகில் வந்து நின்று விட்டேன்.

காக்கையும் ஓணானும் தம் போர்க்களத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி என் சன்னலுக்கருகே கொண்டு வந்து விட்டன. இது வேலி ஓணான் போலத்தான் தெரிந்தது. அதற்கு நஞ்சு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். என்றாலும் அண்டங்காக்கை மிகுந்த எச்சரிக்கையுடன் அதன் பின்புறத்தைத் தாக்கிக் கொண்டிருந்தது. திடீரென்று என்ன நினைத்ததோ காக்கை, இன்னும் துள்ளிக் கொண்டிருந்த ஓணான் வாலைக் கொத்தித் தின்றது. அதற்குள் தப்பிச் செல்ல ஓணானையும் விடவில்லை. அதைத் துரத்தி வந்து கொத்தியது. இப்போது இரண்டும் சன்னலுக்கு இரண்டடி தள்ளித் தரையில் போராடிக் கொண்டிருந்தன. சன்னலின் வெனீசியக் கதவுகளை அடித்து மூடித் திறந்தேன். அந்த ஒலியைக் கேட்ட காக்கை எச்சரிக்கையாகப் பறந்து விட்டது.

வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த நண்பனிடம் என் கண் முன் நடந்த போராட்டத்தைப் பற்றிச் சொன்னேன். மனித வாழ்க்கையும் அப்படித்தான் என்று அவன் தத்துவம் பேசிக் கொண்டிருந்த போது அண்டங்காக்கை மீண்டும் வந்து ஓணானைத் தேடியது. ஓணானின் வாழ்க்கையைக் காப்பாற்றிய பெருமிதத்தில் இருந்த எனக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. மீண்டும் சன்னல் கதவுகளை அடித்துச் சாத்தித் திறந்தேன். நண்பன் தொலைபேசியை வைத்து விட்டான். யாரிடம் ஓணான் காக்கை சண்டை பற்றி நேர்முக வர்ணனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உள்ளிருந்து வந்த மனைவி கேட்டார். சொன்னேன். வெளிக்கதவைத் திறந்து வெளியே வந்து ஓணானும் காக்கையும் எங்கே என்று பார்த்தோம். ஓணான் இருந்த சுவடே தெரியவில்லை. அருகிலிருந்த மின்கம்பத்திலிருந்து என்னைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்த அண்டங்காக்கைதான் ஓணானுடன் போரிட்ட காக்கையாக இருந்திருக்குமோ என்று நினைத்தேன்.

குளிர்காலத்தில் என் கண்ணுக்குத் தெரியாமல் என்னென்ன வாழ்வா சாவா போராட்டங்கள் இருந்தனவோ! இளவேனிற்காலத்தில் இலைகளும், பூக்களும், புழுக்களும், பூச்சிகளும், பிறந்து வாழ்வைத் தொடங்கும் நேரத்தில் இவற்றுக்காகவே காத்திருந்த பிற உயிரினங்களும் தம் வேட்டைகளைத் தொடங்குகின்றன. இயற்கையின் சுழற்சியில் இன்னுமொரு பருவம் தொடங்கிவிட்டது.



முகநூலில் ஏப்பிரல் 21 அன்று பகிர்ந்தது.

https://www.facebook.com/manivannan.m.mani/posts/pfbid02NfARG8nr8qF6NQpx6G3kT7AHARLsSHWFdDHtTwFdaUJnV9nCiYzD8uiPSrPCkyMcl