திங்கள், பிப்ரவரி 10, 2020

மொழிமரபு - பிறமொழிப் பெயர்கள்

மொழிமரபு - பிறமொழிப் பெயர்கள்
தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் (Triplicane, Tuticorin, Sadras, Trichy என்பது போல்) குதறியிருந்ததைப் பார்க்கும்போது எரிச்சலாக இருக்கும். அமெரிக்காவில், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களோடு பல பத்தாண்டுகள் வாழ்ந்த பிறகுதான் அவர்கள் பிறமொழிப் பெயர்களை ஆங்கிலத்தின் தன்மைக்கு ஏற்ப, தமக்கு இயல்பாக வரும் ஒலிப்பில் பலுக்குகிறார்கள் என்பது புலப்பட்டது. Triplicane, Tuticorin, Sadras, Trichy போன்ற பெயர்கள் ஆங்கிலேயர் பிற ஆங்கிலேயர்களுக்குப் புரியும் வகையில் எழுதிய ஆங்கிலப் பெயர்கள். ஆம், அவை தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்கள்தாம். ஆனால், அந்தப் பெயர்கள் ஆங்கிலத்தின் ஒலிப்பியலைப் பின்பற்றி, அவர்கள் நெடுங்கணக்கில் எழுதப்பட்டவை.

ஆனால், ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகும் ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகக் கொண்டு ஆட்சி நடத்தும் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு, இந்த ஆங்கிலப் பெயர்கள் உறுத்துகின்றன. இவற்றைத் தத்தம் மொழிக்கு நெருக்கமாக மாற்ற முயல்கிறோம். Thiruvallikeni, Thoothukkudi, Cathurangappattinam, Thiruchirappalli என்ற பெயர்கள் தமிழர்கள் தமக்கும் பிற இந்தியர்களுக்கும் தமிழை ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கு நெருக்கமான முறையில் எழுத முயன்றதன் விளைவு. இந்தப் பெயர்களை ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் இயல்பாகப் பலுக்கவும் முடியாது, பலுக்கினாலும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிறராலும் புரிந்து கொண்டு எழுத முடியாது. இது மொழி மரபு புரிந்தவர்களுக்குத் தெரிந்ததுதான்.


பெயர்ச்சொற்களை, அதுவும் தனியாள் பெயர்கள், ஊர்ப்பெயர்கள், நாட்டுப் பெயர்களை மூல மொழியைப் போலவே எழுத வேண்டும், பேச வேண்டும் என்று சில தமிழர்கள் கருதுகிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையில் மூலமொழிகளைப் பற்றி அக்கறையற்றவர்கள். உலகில் உள்ள பிறமொழிப் பெயர்களை ஆங்கிலக் கண்ணாடி வழியாகத்தான் பார்த்துப் பழகியவர்கள். அவர்களுக்கு எந்த நாட்டின் பெயராக இருந்தாலும், எந்த மொழியில் உள்ள பெயராக இருந்தாலும், ஆங்கில எழுத்துகளில் தமிழைப் போல் படித்துத் தமிழில் எழுத முயல்பவர்கள். உண்மையில் இவர்களுக்குத் தாய்மொழியிலும் புலமை இருக்காது. ஆங்கிலத்தையும் தாய்மொழியைப் போல் அறிந்தவர்களல்லர். ஆனால் 'நான் பிறந்திருக்க வேண்டியது இங்லேண்ட்' என்று பாடிக் கொண்டு தம்மை ஆங்கிலேயராய், அமெரிக்கராய், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவராய்க் கருதித் தமிழையும் தமிங்கிலமாக்கத் துடிப்பவர்கள்.


சிரியா நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது என்று ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது! அந்த நகரம் 3500 ஆண்டுகள் பழமையானது. அதன் பெயர் அக்கேடியன் மொழியில் 𒀲𒋙 Imerišú இமெரிசு, எகிப்திய மொழியில் 𓍘𓄠𓈎𓅱 T-m-ś-q த-ம-ச-க், பண்டைய அரமேய மொழியில் Dammaśq (דמשק) தம்மாசக், விவிலிய காலத்துப் பண்டைய எபிரேய மொழியில் Dammeśeq (דמשק) தம்மெசெக் என்று போகும். இதைப் பண்டைய கிரேக்கர்கள் Δαμασκός என்றெழுத அவர்களிடமிருந்து ரோமாபுரத்தார் Damascus என்று தம் இலத்தீன் எழுத்துகளில் எழுதியதை ஆங்கிலேயரும், அமெரிக்கர்களும் அதே எழுத்துகளில் தம் மொழியில், ஆங்கிலத்தில் வழங்குகிறார்கள்.


இந்த Damascus அங்கே வாழும் மக்கள் தம் நகருக்கு இட்ட பெயரல்ல. அது புறப்பெயர். ஆங்கிலம் பேசுபவர்கள் இலத்தீனிலிருந்து, கிரேக்கத்திலிருந்து எடுத்துக் கொண்ட பெயர். உண்மையில் மூலமொழிப் பெயருக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்றால் அதில் கிரேக்க/இலத்தீன் தன்மையுடன் -us என்ற ஈற்று இருக்கக்கூடாது. ஆனால், அது கிரேக்க, இலத்தீன், ஆங்கில மொழிமரபுகளுடன் பின்னிப் பிணைந்தது. அதை அவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.


விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பாதிரிகள் எபிரேயம் அறிந்தவர்கள். அவர்களுடைய மொழிபெயர்ப்புகளில் விவிலியப் பெயர்கள் எபிரேயத்துக்கும் பண்டைய கிரேக்கம்/இலத்தீனுக்கும் நெருக்கமாக இருக்கும்.

யோவான் (John), பேதுரு (Peter), தாவீது (David), மரியாள் (Mary), மத்தேயு (Mathew), ஆதாம் (Adam), ஏவாள் (Eve), ஏசு (Jesus) போன்ற பெயர்கள் ஆங்கிலப் பெயர்களிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கின்றன. பிற ஐரோப்பிய மொழிகளிலும், உலக மொழிகளிலும் இந்த வேறுபாடுகள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் மூலப்பெயர்களிலிருந்து விலகியவை. அவை ஆங்கில மரபுக்கேற்று வழங்கும் பெயர்கள்.
ஏசு என்ற பெயர் எப்படியெல்லாம் எபிரேய மொழியிலிருந்து பிறமொழிகளில் திரிந்தது என்று பார்க்கலாம்:
எபிரேயம்: Yeshua (ישוע)
கிரேக்கம்: Yeshu (Ἰησοῦς) (drop the final "a")
இலத்தீன்: Iesus (Iēsous) (sh → s, Y → I, add final s)
கால மாற்றத்தில் J என்ற எழுத்து இலத்தீனில் பரவலான பிறகு
இலத்தீன்: Jesus (pronounced yay-soos)
ஆங்கிலம்: Jesus (pronounced jee-ses)
இதே போல் Yochanan என்ற எபிரேயப் பெயர் மாறியது.
Yochanan → Yohana → Iohannes →
Jean (பிரெஞ்சு)/ John (ஆங்கிலம்)/ Sean (ஐரிசு)/ Ian (இசுக்காட்டிய கேயலிக்கு) / Juan (இசுப்பானியம்)/ யோவான் (தமிழ்) / யோகண்ணன் (மலையாளம்??)
இவற்றில் எது மூல ஒலிப்புக்கு நெருங்கியது? John என்ற ஆங்கிலப் பெயரா?
மத்தேயு என்ற பெயரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அது கிரேக்கத்தில் ματθαιος /Mat-thaios/.
ஆனால் உருசியனில் த-கர ஒலி இல்லை. என்ன செய்தார்கள்?
த-கர ஒலியை ஃப-கரமாக மாற்றினார்கள்!
Матфей Matfay.
விவிலியம் போன்ற ஒரு மத நூலைத் தம் மொழிக்குக் கொண்டுவருவதற்குக்கூட யாரும் தம் மொழியில் புது எழுத்துகளைச் சேர்க்கவில்லை. புதிய ஒலிப்புகளைக் கூட்டவில்லை.
தமிழிலும் அப்படித்தான். கம்பராமாயணத்தில் வடமொழிப் பெயர்களை எழுதுவதற்காகக் கிரந்த எழுத்துகளைக் கம்பன் சேர்க்கவில்லை. பெரிய புராணத்தில் சேக்கிழார் வடமொழிப் பெயர்களுக்காகக் கிரந்த எழுத்துகளைக் கூட்டவில்லை.

தமிழில் பிறமொழி ஒலிப்புகளைக் கூட்ட வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் மூல மொழிகளில் ஒலிப்புகளுக்கு நெருங்கிய ஒலிகளுக்காகக் கூட்ட வரவில்லை. அதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவர்கள் அக்கறைப்படுவதெல்லாம், ஆங்கிலத்தில் உள்ள ஒலிகளைத் தமிழில் கொண்டு வரவேண்டும் என்பதுதான். ஆனால் ஆங்கிலத்தில் உள்ள f, q, z, என்ற ஒலிகளுக்கு இணையான கிரந்த எழுத்துகள் இல்லை. எனவே தற்போது இருக்கும் கிரந்த எழுத்துகள் அவர்களுக்குப் போதாது.

என்ன செய்வார்கள்? ஒரு முறை துக்ளக் சோ f என்ற எழுத்தையே ஒரு மெய்யெழுத்தாகக் கூட்டிக் கொண்டு அதற்கு நெடுங்கணக்கு வரிசை ஒன்றை அச்சிட்டுக் காட்டினார். அதாவது:
f, fா, fி, fீ, fு, fூ , ெf, ேf, ைf .... என்று போகும்.

இப்படி நேரடியாகவே ஆங்கில எழுத்துகளைத் தமிழ் உயிர்மெய்யாக்கும் கருத்தைக் கொண்டுவந்தார். எடுபடவில்லை.

இப்படிக் கருப்பு நிறமுள்ள, கருங்கூந்தலுள்ள தமிழன்னையை வெறுத்து, வெள்ளை நிறமுள்ள மஞ்சள் கூந்தல் கொண்ட பெண்ணாகத் தமிழை மாற்றத் துடிக்கும் சிறுபிள்ளைகளைக் கொல்லைக்குக் கூட்டிச் சென்று குளிப்பாட்டிக் கூட்டி வர முயலலாம். ஆனால் பிடிவாதம் பிடித்த சிறு பிள்ளைகள் அடம் பிடித்தால் போகிற போக்கில் போவென்று கொல்லையிலேயே விட்டு விட வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை: