தமிழ் எழுத்து சீர்திருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் எழுத்து சீர்திருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 13, 2011

தமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவையா?

தமிழில்  புதிய கிரந்த எழுத்துகள் திணிப்பா, இல்லை, கிரந்தத்தில் தமிழ் எழுத்துக்களை நுழைத்து தமிழை விழுங்கப் பார்க்கிறார்களா என்ற பரபரப்பான கருத்தாடல்களைத் தொடர்ந்து, தமிழில் இல்லாத பிறமொழி ஒலிகளை, குறிப்பாக ஆங்கில ஒலிகளைக் குறிக்கப் புதிய எழுத்துகளை உருவாக்க வேண்டுமா கூடாதா என்ற சூடான பட்டிமன்றம் தமிழ் மன்றம் மடலாடற்குழுவில் பொங்கலுக்குச் சற்று முன்னரே அரங்கேறியிருக்கிறது.  (பார்க்க:
http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/fa20de4c8556d9e0/8f69b475037d85f0)

இந்த முன்மொழி x மறுமொழி கலந்துரையாடலில்  தமிழ் மன்றம் குழுவில் இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களும், மொழியியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்ளவில்லை என்பதைக் காண்கிறேன்.
 
மொழி வளர்ச்சி என்பது ஒரு தனித்துறை.  மொழிக்குத் தேவையானவற்றைப் பற்றி ஆற அமரச் சிந்தித்துப் பரிந்துரைகள் செய்யக் கூடிய அறிஞர்கள் பலர் கூடிப் பேச வேண்டும்.  ஆனால், இது கொச்சையாகச் சொல்வது போல “ரூம் போட்டு யோசிப்பாங்களோ” போன்றதும் அல்ல. ஏனைய பல குமுகாயவியல்கள் போல மொழி வளர்ச்சியும் ஓர் ஆராய்ச்சித் துறை.
 
இதில் வாதிடுவோர்கள் பெரும்பாலும் பொறியாளர்கள்.
 
பொறியாளர்களுக்கு என்று ஒரு தனிப் பண்பு உண்டு.
 
இருக்கும் எதையும் சும்மா விட்டு வைக்க மாட்டோம்.  நோண்டிக் கொண்டே இருப்போம்.  திருத்திக் கொண்டே இருப்போம்.  முழுமையாக எதையாவது படைத்து விட்டால் எங்களுக்குத் தலையே வெடித்து விடும்!  :-). அதுதான் எங்கள் துறையின் பண்பு.  இதில் மென்கலன் துறை என்றால் இப்படிப் பட்ட நோண்டல்களை மிகவும் எளிதாகச் செய்ய முடியும்.  யூனிக்கோடு குறியீடு மென்கலன் தொடர்புள்ளது அல்லவா!  நன்றாக நோண்டலாம். ;-)
 
ஒரு மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை இடுவது ஒரு முறை (prescriptive).  இப்படித்தான் இருக்கிறது என்று விளக்கம் தருவது இன்னொரு முறை (descriptive). 
 
வாதத்துக்குத் தக்கவாறு நம்மில் பலர் இந்த இரண்டு அணிகளில் மாறி மாறிச் சேர்ந்து கொண்டு வாதிடுவோம்!
 
அதென்ன, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய தொல்காப்பியமும், நன்னூலும் 21ம் நூற்றாண்டுத் தமிழுக்குக் கால் கட்டிப் போடுவது என்று கொதித்தெழுபவர்கள் ஒரு சாரார்.
 
அடடா!  அந்தப் பாணினி இருக்கிறாரே, எப்படியெல்லாம் சிந்தித்து இந்த மொழியைக் கட்டிக் காக்க வழிவகை செய்திருக்கிறார் என்று பாராட்டுபவர்கள் மற்றொரு சாரார்.
 
பாணினியைப் பாராட்டுபவர்கள் சிலருக்குத் தொல்காப்பியமும், நன்னூலும் பிடிப்பதில்லை.  அதே போல் தொல்காப்பியத்தைக் கொண்டாடும் சிலருக்கோ பாணினி என்றால் எட்டிக்காய்.  செத்த மொழி, செத்த மொழி என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள்.
 
ஓர் இலக்கண நூல் மொழியின் இயல்பான வளர்ச்சியைக் கட்டிப் போட முடியுமா என்ற வாதங்கள் தொடர்கின்றன.  பாணினியின் உயர்வான இலக்கணத்திற்குப் பல நூற்றாண்டுகள் கழித்துதான் சமஸ்கிருதத்தின் செவ்வியல் காலமே தொடங்குகிறது.  காளிதாசனின் ஒப்பற்ற காவியங்கள் பாணினிக்குப் பின்னர் ஏழெட்டு நூற்றாண்டுகள் கழித்தே எழுந்தன.
 
சங்கப் பாடல்கள் தொல்காப்பியத்துக்குப் புறம்பானவையா இல்லையே, புறம்பானவை என்றால் தொல்காப்பியத்துக்கு முந்தியவையா இல்லையா, என்ற சுவையான ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன.
 
தமிழ் இலக்கியப் பரப்பிலேயே மிக உயர்வாகத் தமிழாசிரியர்கள் கருதுபவை சங்க இலக்கியங்கள்தாம்.  அவை தொட்ட உச்சியைப் பின் வந்த எவையுமே, கம்ப ராமாயணம் உட்படத் தொடவில்லை என்று கருத்தைப் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
 
அதனால் மொழி உறைந்து போய் விடுமா என்ன?
 
சமஸ்கிருதம் உறைந்து போய் விடவில்லையா எனக் கேட்கிறீர்களா?
 
ஆமாம், சமஸ்கிருதம் உறைந்துதான் போய் விட்டது.
 
சமண, பௌத்த சமயங்களின் மேலெழுச்சி சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தைத் தகர்த்து பிராகிருத, மக்கள் மொழிகளை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியதில் இருந்தே மக்கள் மொழிக்கும் அறிஞர் மொழிக்கும் இடைவெளி தோன்றத் தொடங்கியது.  இருப்பினும் காளிதாசனின் காவிய காலத்தில் செவ்வியல் சமஸ்கிருதம் மீண்டும் மேலெழுந்து நின்றதே?  பின் ஏன் உறைந்து போனது?
 
இது வரலாற்று, மொழியியல் வல்லுநர்களுக்கு உரித்த கேள்வி.
 
சமஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழியாக இருந்திருக்க முடியாது என்ற எண்ணமும் உண்டு. இருப்பினும், வெகு அண்மைக்காலம் வரை, ஆங்கிலத்தின் ஆதிக்கம் எழும் வரை, சமஸ்கிருதமே இந்தியத் துணைக்கண்டத்தின் அறிஞர் மொழியாக, இணைப்பு மொழியாகச் செயல் பட்டு வந்திருக்கிறது.
 
தமிழின் தன்மை தனி.
 
தமிழில் செம்மொழி வழக்கும் கொச்சை மொழி வழக்கும் நெடுங்காலமாகத் தொடர்ந்து வந்துள்ளன. பாவிலக்கியத்தில் செம்மொழியும், உரைநடையில் இளகிய தன்மையும் வழங்கி வந்திருக்கிறது.  இந்த நிலை மாறத் தொடங்கியது தமிழ் மன்னர்களின் ஆட்சி வீழ்ந்த பின்னரே.  கடைசிப் பாண்டியன் ஆளும் வரை இலக்கிய நடையில் வடமொழி எழுத்துகளைப் பொதுவாக விலக்கியே எழுதி வந்திருக்கின்றனர்.  கிரந்த எழுத்துகளைச் சேர்த்து எழுதுவதும், பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதத் தொல்காப்பிய விதிகளை மீறி எழுதுவதும் மூவேந்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், தமிழரல்லாதவர் புரவலர்கள்  ஆகிய பின்னரே எனத் தெரிகிறது.
 
மிகப் பழைய கல்வெட்டுகளில் கொச்சை மொழியும், கலப்பு மொழியும் தெரிகின்றன. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்களுக்கு ஆயிரம் ஆண்டு கழித்து உரைய் எழுதிய உரைகாரர்களும் கூடச் செம்மொழி நடையிலேயே எழுதி வந்திருக்கின்றனர்.  தமிழின் பெருமையை வடமொழி வாணர்களுக்கு உரத்துச் சொல்ல வந்த வைணவ உரைகாரர்கள் தம் உரைகளில் தமிழும் வடமொழியும் கலந்து எழுதியிருந்தாலும், அந்த மணிப்பிரவாள நடையை அவர்கள் தோற்றுவிக்கவில்லை.  அது சமணர்களின் ”கொடை” என்றே அறிஞர்கள் கருதுகின்றனர்.
 
பாவிலக்கியம் மெலிந்து உரைநடை இலக்கியம் மேலெழத் தொடங்கிய 19ம் நூற்றாண்டில், முதலில் வடமொழிச் சொற்களும், கிரந்த எழுத்துகளும் வெகுவாகக் கலந்தே எழுதியிருக்கிறார்கள்.  “பிரதாப முதலியார் சரித்திரம்” என்ற புதினத்தை வைத்துக் கொண்டு பள்ளியில் தடுமாறியது நினைவிருக்கிறது.  பாரதியாரின் கட்டுரைகளில் இயல்பாக வரும் பல வடமொழிச் சொற்களை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது.  இதற்குக் காரணம், இது போன்ற பிறமொழிச் சொற்கள் தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தினாலும்,  வடமொழியின் தொடர்பு இல்லாத குடிகளின் ஏற்றத்தினாலும், தமிழ் எழுத்துத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தாம். 

அதே நேரத்தில் வடமொழிச் சொற்கள் இருந்த இடத்தை இன்று ஆங்கிலம் பிடித்துக் கொண்டு விட்டது. ஆள்வோர்களின் மொழி என்ற மதிப்பு வடமொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்ந்து விட்டது.  ‘60களிலும், ‘70களிலும், பெரும்பான்மைத் தமிழர்களுக்குப் புரியாத டாடி, மம்மி தமிழை இன்று சன் டிவி போன்ற ஊடகங்களின் கான்வென்ட் கன்னிகள் பட்டி தொட்டியெல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  

இதைத் தொடர்ந்துதான், இந்தக் கான்வென்ட் கன்னிகளின் நுனிநாக்குத் தமிழை எழுத முடியாதது சிலருக்குக் குறைபாடாகத் தெரிகிறது.

ஆங்கிலேயப் பேரரசு உலகை ஆண்டு கொண்டிருந்த போது கூடத் திருவல்லிக்கேணி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், என்ற பெயர்களைச் சரியாக எழுதுவதற்காக அவர்கள் தம் மொழியின் எழுத்துகளை மாற்றிக் கொள்ளவில்லை.  ட்ரிப்லிகேன், டுடிகொரின், ட்ரவேன்ட்ரம்,  ட்ரிச்சினாபொலி, டேஞ்சோர் (Triplicane, Tuticorin, Trivandram, Trichinopoly, Tanjore) என்றுதான் எழுதினார்கள்.

தன்னம்பிக்கை மிக்க பழந்தமிழர்கள் இது போன்ற எண்ணற்ற சொற்களைத் தமிழில் தமிழ் முறைப்படிதான் எழுதினார்கள்.

ஸ்ரமண என்ற சொல்லை, சமண என்றும் அமணர் என்றும்தான் வழங்கினார்கள்.  இன்றும் தமிழ்ச் சமணர்கள் தங்களைச் சமணர்கள் என்றுதான் அறிவிக்கிறார்கள்.

அதே போல் சமணர்கள் அருகக் கடவுள் என்று பன்னெடுங்காலமாக அழைத்து வந்திருக்கும் கடவுளின் பெயர் பாகத மொழியில் அரிஹந்த், சங்கத மொழியில் அர்ஹத்.  தமிழில் அருகன்.  இலக்கியத்திலும் அருகன்.

Arihant (Jain Prakrit: अरिहन्त arihant, Sanskrit: अर्हत arhat).

மனதில் உறுதி வேண்டும்.

அரபு மக்களுக்கும் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடைவெளி இருக்கிறது.  அரபுநாடுகளில் வழங்கும் உள்ளூர்க் கொச்சை மொழியை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் இருந்தாலும், அவர்கள் எழுத்து மொழியையும், பள்ளியில் பயிலும் செம்மொழியையும் புரிந்து கொள்வதில் எந்த விதத் தடுமாற்றமும் இல்லை.

அவர்கள் எழுத்துகளில் உயிரெழுத்துகள் இல்லை.  உயிரெழுத்துகளைக் குறிக்க மீக்குறிகள் இருந்தாலும் அவற்றை அரபியும் எபிரேயமும் (Hebrew) புழங்குவது இல்லை.



நிப்பானியர் பிறமொழிச் சொற்களைக் குறிப்பதற்காகத் தனி எழுத்துகளை உருவாக்கியது போல் தமிழும் செய்ய வேண்டுமா?

ஐரோப்பியர் இந்திய மொழிகளில் ஒலிகளைத் துல்லியமாக ஆய்வாளர்களுக்குக் குறிப்பிடுவதற்காக உருவாக்கியது போல மீக்குறிகளை உருவாக்க வேண்டுமா?

தமிழில் இல்லாத ஒலிகளைக் குறிப்பிடுவதற்காக கிரந்தத்திலிருந்து மேலும் பல குறியீடுகளை மலையாளம் போல இரவல் வாங்க வேண்டுமா?

இது போன்ற கருத்தாடல்களில் மொழி வளர்ச்சித் துறையில் பயிற்சியில்லாத பொறியாளர்கள் காரசாரமாக மோதிக் கொண்டிருப்பதைத் துறை வல்லுநர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!  ஆனால், இத்தகைய கருத்தாடல்கள் தமிழுக்குத் தேவைதான்.  நம் மொழியின் இயல்பு, வளர்ச்சி பற்றி நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள இவை வகை செய்கின்றன.


அரபியரும், எபிரேயரும் தம் மொழியைப் போற்றும் தன்னம்பிக்கையுள்ள பழம்பெரும் பண்பாடுகளின் வழித்தோன்றல்கள்.

தமிழர்களுக்குத் தம் மொழி பற்றிய பெருமையும், இதில் இப்படித்தான் எழுதுவோம் என்ற தன்னம்பிக்கையும் இருக்கிறதா என்பது கேள்வி

ஞாயிறு, ஜூன் 06, 2010

எழுத்துச் சீரழிப்பு பற்றிய சிந்தனைகள் - 2

எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று வலியுறுத்துவோர் கூறும் காரணங்கள் என்ன?
  • இகர, ஈகார, உகர ஊகார வரிசைகள் ஒழுங்கில்லை
  • வரி வடிவ மாற்றங்கள் தமிழுக்குப் புதிதல்ல
  • பெரியார் சொன்னார், பெரியார் செய்தார்
  • எம்.ஜி.ஆர். சீர்திருத்தம் பாதிக்கிணறுதான் தாண்டியது,
  • தமிழறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள்
    • தெ.பொ.மீ., மு.வ.,கி.வா.ஜ., வ.சு.ப., ம.பொ.சி., சஞ்சீவி, 
  • கற்பதை எளிதாக்க உதவும்
  • புலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகளுக்கு உதவும்
  • கருவிகளுக்காக மாற்ற வேண்டு
  • எழுத்துக்கள் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
  • பிறமொழியினர் சீர் திருத்தத்தில் வெற்றி
    • மலையாளம், சீனம், துருக்கி, மலாய், ஜெர்மன், ருசியன்...
 இவ்வளவுதான்.

தமிழ் உயிர்மெய்யெழுத்துகள் வரிசையில் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகளில் மட்டும், உயிர்ககுறிகள் அகரமேறிய உயிர்மெய்க்குறியோடு கூடி, ஒரே கூட்டுக்குறியாக அமைகின்றன.  இதில் உகர, ஊகாரக் கூட்டுக்குறிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதது போல் தோன்றுவதால், இவற்றைக் கற்பவர்கள் தனித்தனியே மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும்.என்பது ஒரு வாதம்.  மேலும், இந்தத் தன்மையால் அச்சு செய்யும்போது இந்த உயிர்மெய்களுக்கு மட்டும் தனித்தனி அச்சுகள் செய்ய வேண்டியிருக்கும்.  இவற்றின் எண்ணிக்கை கூடுதல் என்பதால் இவை அடிக்கடி தேய்ந்து போகவும் வாய்ப்புண்டு.  எனவே, இந்தச் சிக்கல்களைத் தீர்க்க இந்தக் கூட்டுக் குறிகளை உடைத்து எழுதினால் என்ன என்பது பெரியாரின் கேள்வி.


இந்திய எழுத்துகளிலேயே தமிழுக்கு உள்ள சிறப்பே அதுதான்.  தமிழ் அசையெழுத்துகளைக் (orthographic syllables) கூட்டுக்குறியில் (conjunct consonant) எழுதுவதில்லை.  கிட்டத்தட்ட அகரவரிசை (alphabet) எழுத்துகள் போல் உயிர்மெய்யையும், உயிர்க்குறியீட்டையும் தனித்தனியே எழுதுகிறோம்.  இகர, ஈகார, உகர, ஊகார வரிசையின் விதி விலக்கை உடைத்து விட்டால், எல்லாத்தமிழ் எழுத்துகளும் அகர-அசையெழுத்து முறையிலிருந்து அகரவரிசை எழுத்து முறைக்கு மாறிவிடும்.  இது ஆங்கிலம் போல் மிகக்குறைவான குறியீடுகளில் ஒலிகளைக் குறிப்பிட உதவும் என்பது கூடுதல் வாதம்.

கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் மெல்ல மெல்ல மாறிக் கொண்டு வந்திருப்பதைச் சுட்டிக் காட்டும் சீர்திருத்த வாதிகள், மாற்றங்கள் தமிழுக்குப் புதிதல்ல என்று வாதாடுகிறார்கள்.  எம்.ஜி.ஆர். 1978ல் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பாதிக்கிணறு தாண்டியது போலத்தான் எனும் இவர்கள், எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்ததைக் கலைஞர் முடித்து வைக்கக் கோருகிறார்கள்.

இந்த மாற்றங்களால், அசையெழுத்துகளின் வரிசைகள் ஓரளவுக்குச் சீராகும்.  இதற்கு மேலும் சீர்மை செய்ய முடிந்தாலும், அத்தகைய சீர்மை தமிழ் எழுத்து வரிசைகள் அனைத்தையுமே மாற்றி, தற்போதைய தலைமுறையையே எழுத்தறிவில்லாத தற்குறிகளாக மாற்றிவிடும் என்பதால், அவற்றைத் தற்போதைய சீர்திருத்த முயற்சிகள் வலியுறுத்துவதில்லை.  இத்தகைய முயற்சிகளால் வரும் நெடுங்கணக்குப் பட்டியலின் ஒரு வடிவத்தைத் திரு. நாக கணேசன் அவரது வலைப்பூவில் காட்டுகிறார்;

எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று இவர்கள் கூறுவது தமிழ் நெடுங்கணக்கின் 247 எழுத்துகளைக் குறைப்பதல்ல.  அசையெழுத்துகளின் வரி வடிவங்களை மாற்றுவதால், கற்றுக் கொள்ள வேண்டிய குறியீடுகளின் எண்ணிக்கை குறையும் என்பது வாதம்.  அதாவது. இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகளைத் தனித்தனி எழுத்துகளாகக் கணக்கிட்டால்  72 ( 4 x 18) ) ஆகும்.  அவற்றைத் தனிக் குறிகளாக உடைத்தால்,  22 ( 4  + 18)  குறியீடுகள் ஆகின்றன.  எனவே 50 குறியீடுகளை மனனம் செய்யத் தேவையில்லை என்பது வாதம். இதனால் கற்பது எளிதாகும் என்பது நம்பிக்கை.  இதைச் சோதித்துப் பார்க்கத் தேவையில்லாத மிக எளிய செயல் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

உலக மொழிகளில் எழுத்துச் சீர்திருத்தம் என்பது புதியதல்ல. மலையாளம், சீனம், துருக்கி, மலாய், ஜெர்மன், ருசியன், வியட்நமீஸ், டாகலாக், கொரியன், என்று பல மொழிகளில் ஏற்கனவே செய்ததுதான்,

இந்தச் சீர்திருத்தத்தைச் செய்யாவிட்டால், புலம் பெயர்ந்த தமிழ்க் குழந்தைகள் தமிழைக் கற்பது மிகக் கடினம் என்று கல்லாமல் இருந்திடலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.  இது தமிழை என்றென்றும் வாழ வைக்கச் செய்ய வேண்டிய மிகச் சிறிய மாற்றம்.  இந்தச் சீர்திருத்தத்தை அறிவித்து ஒரு பத்து அல்லது இருபது ஏன் முப்பது ஆண்டுகளுக்குள் புது வரிவடிவத்துக்கு மாறி விட்டால், ஒரு புதிய தலைமுறைக்குப் புதிய எழுத்துகள் மட்டுமே தெரியும். பழைய தலைமுறை மறைய மறைய புதிய எழுத்துகள் வேரூன்றும் என்பது இவர்கள் வாதம்.

அச்சிலிருக்கும் நூல்களைத் தேர்ந்தெடுத்து நல்ல நூல்களை மட்டும் புதிய எழுத்துகளில் வலையில் மறுபதிப்புச் செய்வதால், நல்ல நூல்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.  இதனால் தமிழுக்குத் தேவையற்ற தீய நூல்களை எளிதில் களைய முடியும் என்கிறார் சீர்திருத்தவாதி வீரா. இராசகோபாலன்.

இவர்கள் ஆதரவாளர்களாகப் பட்டியலிடும் தமிழறிஞர்களில் ம.பொ.சி., வ.சு.ப. மாணிக்கனார் சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள்.  அவர்களே இந்தச் சிறு சீர்திருத்தத்தை இறுதியில் ஆதரித்தார்கள் என்கிறார்கள் இவர்கள். இவர்கள் சொல்லும் அறிஞர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு, வரதராசனார், கி.வா.ஜகந்நாதன்,  ந. சஞ்சீவி, ஐராவதம் மகாதேவன், வா. செ. குழந்தைசாமி, தினமலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பெரும் தமிழறிஞர்கள், பற்றாளர்கள், ஆய்வாளர்கள் அடங்குவர்.  இவர்கள் அரசுக்கு மிக நெருக்கமானவர்கள்.  இவர்கள் தமிழின் எதிரிகள் அல்லர், நெடுங்காலம் தமிழுக்குத் தொண்டு செய்து வந்திருப்போர்.  எனவே இவர்கள் கொள்கைகளைச் சிறுமைப் படுத்துவதோ, அல்லது தமிழுக்குத் தீங்கு செய்வோர் என்று சொல்வதோ பொருந்தாது என்பது சீர்திருத்தவாதிகளின் கருத்து.

திரு. ஐராவதம் மகாதேவன் தினமணியில் ஆசிரியராக இருந்த போது, இந்தக் கருத்துகளை வெளியிட்டு  படிப்போர் கருத்துக்கணக்கு பார்த்தார்கள்.  அவர்கள் கணக்கில் சீர்திருத்தத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று செய்தி வெளியிட்டார்கள்.  இதைத்தவிர வேறு எந்த அறிவியல் முறைச் சோதனையோ, கணக்குகளோ சீர்திருத்தவாதிகள் செய்ததாகத் தெரியவில்லை.  குறிப்பாக, குழந்தைக்கல்விச் சோதனை செய்து உண்மையிலேயே சீர்திருத்தம் கற்பதை எளிதாக்குகிறதா, எப்படிப் பட்ட வரிவடிவம் அதற்குப் பொருத்தம் என்று யாரும் ஆய்ந்ததாகத் தெரியவில்லை.


இவர்களுக்கு மிகுந்த பக்க பலமாக இருப்பது திராவிடர் கழகம்.  அது தன் விடுதலை நாளேட்டில் சில பகுதிகளைத் தொடர்ந்து திருந்திய எழுத்துகளில் பதிப்பித்து வந்துள்ளது மட்டுமல்லாமல், அதை அரசாணை மூலம் செந்தரக் குறியீட்டாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சொல்லப் போனால், இந்தச் சீர்திருத்த முயற்சிக்குப் பெரியார் பெயர் மட்டும் இல்லையென்றால் யாரும் இதைக் கண்டு கொண்டிருந்திருக்க மாட்டார்கள்.

இவைதான் சீர்திருத்த ஆதரவாளர்களின் வாதம்.

அடுத்த பகுதிகளில், எப்போது சீர்திருத்தம் தேவை, எப்படிப் பட்ட சீர்திருத்தங்கள் பலனளிகின்றன, என்றும், இந்தப் பகுதியில் சீர்திருத்த வாதிகள் கொண்ட கருதுகோள்களுக்கு எத்தகைய ஆதரவு இருக்கிறது என்றும் பார்ப்போம்.

(தொடரும்).

சனி, ஜூன் 05, 2010

எழுத்துச் சீரழிப்பு பற்றிய சிந்தனைகள் - 1

அண்மைக்காலத்தில் எழுத்துச் சீரழிப்பு முயற்சிகளில் சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது போலத் தோன்றியது. இரவும் பகலும் விழிக்காமல் உலகெங்கும் உள்ள மடற்குழுக்கள், வலைப்பூக்கள், என்று எல்லா இடங்களிலும் இடையறாது சீரழிப்புப் பரப்புரை செய்து வந்து கொண்டிருந்தவர்கள் திடீரென்று அமைதியானார்கள்.  பின்னணியில் மும்முரமாகச் சீர்திருத்த முயற்சிகள் தொடர்கின்றன என்று செய்திகள் வேறு.  எனினும், சீரழிப்பை எதிர்த்து மலேசியாவில் குரல் கொடுத்திருந்த இளங்குமரனார் தமிழகம் திரும்பியதில் இருந்து புதுவை வலைப்பதிவர் சிறகம் சீரழிப்பை எதிர்த்து ஒரு மாநாடு கூட்ட முடிவு செய்தது. மே மாதம் 16 ம் நாள், ஞாயிறன்று ”தமிழ் எழுத்து வடிவ மாற்றம் - எதிர்ப்பு மாநாடு” என்ற தலைப்பில் மாநாடு கூட்ட ஏற்பாடுகள் தொடங்கின.

தமிழ்மணம் வலைப்பதிவு திரட்டியில் சீரழிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்த பதிவர்களை அவர்கள் தொடர்பு கொண்டார்கள்.  வாஷிங்டன் சங்கரபாண்டி, கனடா பேராசிரியர் செல்வகுமார், அரேபியாவிலிருந்து நாக. இளங்கோவன், மலேசியாவிலிருந்து சுப. நற்குணன்,  சென்னையிலிருந்து இராம.கி. ஐயா அவர்கள், மற்றும் நான் வலைப்பூவுலகிலிருந்து கலந்து கொண்டோம்.  பூவுலகிலிருந்து செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்,  புதுச்சேரி பேராசிரியர்கள் ம. இலெ. தங்கப்பா, மற்றும் நா. இளங்கோ ஆகியோரும் மற்றும் புதுவைப் பதிவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

ஞாயிறு காலையில் கூட்டம் திரட்டுகிறார்களே, அதிலும், எழுத்துச் சீரழிப்பு போன்ற சற்று நுட்பமான கருத்தாயிற்றே, கடற்கரைக்கு அருகே கூடுகிறார்களே,  கூட்டம் திரளுமா என்ற ஐயம் இருந்தது என்னவோ உண்மைதான்.  சான் பிரான்சிஸ்கோவில் கூட்டம் கூட்டினால், அவ்வளவு காலையில் கூட்ட மாட்டோம்.  ஞாயிறன்று சோம்பலாக எழுந்து, காலையில் தொலைக்காட்சி முன்னால் அமெரிக்கக் கால்பந்தாட்டத்தைப் பார்க்க உட்காருபவர்களை வலுக்கட்டாயமாகத் தமிழ்க் கூட்டத்துக்குக் கூட்டி வருவது அவ்வளவு எளிதல்ல.

ஆனால், புதுச்சேரித் தமிழர்கள் மொழியார்வமும், சமூகப் பார்வையும் கொண்டவர்கள்.  தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால் அவர்கள் விழிமலர்கள் வேலாகும், வாளாகும் தன்மை கொண்டவர்கள்.  என்ன இருந்தாலும் பாரதியும் பாரதிதாசனும் வாழ்ந்த மண்ணல்லவா!  அப்படித்தான் இருக்கும்.



பல கருவித் தடங்கல்களுக்கு நடுவிலும் கூட்ட்த்தை இனிதே தொடங்கினர்.  இளங்குமரனார் ஐயா தொகுத்த ”தமிழ் வடிவ சீர்திருத்தமா, சீரழிப்பா” என்ற நூலை வெளியிட்டனர்.  நமக்குத் தெரியாத பல அரிய கருத்துகளைத் திரட்டியுள்ளது இந்த நூல்.  தமிழ் ஆர்வலர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய நூல். மாநாட்டில் நடந்த பல செய்திகளைப் புதுவை வலைப்பதிவர் சிறகம் நன்றாகத் தொகுத்துள்ளது.

கூட்டத்தில் நான் சொன்ன சிலவற்றை இங்கே பகிர்ந்து கொண்டு எனது சிந்தனைத் தொடரைத் தொடங்குகிறேன்.

முதலில், சீர்திருத்தம் தேவையா என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

என்று வள்ளுவர் சொன்னது போல நடுநிலைமையுடன் இதை ஆய்வோம்

சீர்திருத்தம்
  • ஏன் தேவை, 
  • என்ன சீர்திருத்தம் தேவை, 
  • யாரெல்லாம் இதை வலியுறுத்துகிறார்கள், 
  • ஏன்
என்று பார்ப்போம்.

தமிழ் எழுத்துகள் தெய்வீக எழுத்துகள் என்று நாம் சொல்லவில்லை.

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து  பண்ணுறத் தெரிந்தாய்ந்த தமிழ் எழுத்துக்குச் சீர்திருத்தம் தேவையே இல்லை என்றும் நாம் வாதிட வரவில்லை.

பழைய காலத்தில் சீர்திருத்தம் செய்திருக்கிறார்கள்.  அவை என்ன, சரியா தவறா, அவற்றை ஏற்றிருக்கலாமா என்றும் பார்ப்போம். எப்போது சீர்திருத்தம் தேவை என்றும் ஆய்வோம்.

பின்னர் எப்போது சீர்திருத்தம் தேவையில்லை என்றும் பார்போம்.  சீர்திருத்தம் தேவை என்போர் கூறும் காரணங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.

வரிவ்டிவச் சீர்திருத்தம் குறித்து அரசியல் தலைவர்கள் என்ன கூறினார்கள் என்பதையும் கருத்தில் கொள்வோம்.

பின்னர் குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வோம்.

செவ்வாய், மார்ச் 02, 2010

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
                                   
சென்னை, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்திய எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? என்னும் தலைப்பிலமைந்த கருத்தரங்கம் மார்ச் 2, 2010, செவ்வாய்க்கிழமை மாலை 6-30 மணிக்கு நடந்தது.


[படம்: பேரா. மறைமலை, மணிவண்ணன், இராம.கி., இ. திருவள்ளுவன்]

கணிஞர் மணி மு.மணிவண்ணன் தலைமை தாங்கினார். அவர் தமது தலைமையுரையில் பேசியவற்றுள் சில:

“சீர்திருத்தம் என்பதை நாம் வெறுப்பதாகவோ எதிர்ப்பதாகவோ கருதிவிடக்கூடாது. பழமையைப் போற்றுவதாகவும் கருதிவிடக்கூடாது. காலத்தினால் மாற்றம் நிகழ்வது இயல்பே. ஆனால் அம்மாற்றம் படிப்படியாக, சிறிதுசிறிதாகவே ஏற்படும்.  தமிழ்க்கல்வெட்டு எழுத்துகளின் மாற்றநிலையைப் பார்த்தால் இவ்வுண்மை புலனாகும்.

இப்போது சீர்திருத்தம் என்பவர்கள் உடனடியாக ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவிழைகிறார்கள்.இம் மாற்றத்தினால் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது?

எழுத்துகள் குறைந்தால் கல்வி கற்கும் திறன் அதிகமாகும் என்னும் கூற்று உண்மையில்லை என்பதற்கு ஒரு சான்று கூறுகிறேன்.  தமிழ்நாட்டில் படிப்பறிவு 74%.தமிழைவிடக் குறியீடுகள் மிகுந்தும் தமிழில் இல்லாத கூட்டெழுத்துகள் நிறைந்தும் மொழி மலையாளம்.எனினும் தமிழ்நாட்டை விட அங்குப்படிப்பறிவு மிகுதி.(94%)

ஆயிரக்கணக்கான குறியீடுகளையும் எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ள சீனம்,சப்பான் மொழியினரின் கல்வியறிவு சாலச் சிறந்துவிளங்கவில்லையா?
எனவே பொய்யான தகவல்களையும் பொருந்தாத கூற்றுகளையும் அடிப்படையாகக் கொண்டுவிளங்கும் எழுத்துச்சீர்திருத்தக் கருத்துப்பரப்புரை ஏற்கத்தக்கதன்று.

தமிழ் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய மொழி எனக் கருதிவிடக்கூடாது.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா,  கனடா, அமெரிக்கா எனப் பல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மாற்றம் - எழுத்தமைப்பில் - ஏற்படுமாயின் அயல்நாட்டுத்தமிழுக்கும் இந்தியத் தமிழுக்கும் வேறுபாடு  தோன்றும். தமிழிலிருந்து மலையாளம் பிரிந்ததைப்போல பல மொழிகள் மீண்டும் உருவாகும் சூழல் ஏற்படும்.

ஏனைய நாட்டுத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் என்ன கருதுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதன்பின்னரே இத்தகைய செயல்களைப் பற்றிய சிந்தனைக்குச் செல்லவேண்டும்.”

பொறியாளர் இராமகி கூறியவற்றுள் சில:

நாக.இளங்கோவன் தகுந்த சான்றாதாரங்களுடன் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுவார் கூற்றின் பொருந்தாமையை விளக்கியுள்ளார்.அவற்றையே நான் இங்கு வலியுறுத்த விழைகிறேன்.

இ,ஈ,உ,ஊகாரக் குறியீடுகளை மாற்றினால் சென்னைப் பல்கலைப் பேரகராதியின்  59% சொற்கள் மாற்றம் பெற நேரலாம்.  கல்பாக்கம் சீனிவாசன் புள்ளிவிவரங்களின் படி இ-கர ஈகார, உகர ஊகாரக் குறியீடுகள் தமிழில் 24% சொற்களில் உள்ளன.  நான்கில் ஒரு சொல் மாறுவது என்பது மிகப் பெரிய மாற்றம்.

இளைய தலைமுறையினர் இம்மாற்றங்களால் இன்று அச்சிலிருக்கும் பல நூல்களைப் புரிந்துகொள்ளாது இடர்ப்படுவர்.  பழைய பதிப்புகள் படிப்பாரற்றுப் போகும்.  இப்பதிப்புகளில் 90%க்கு மறுபதிப்பு வாராமல் போகலாம்.

மேலும் இன்றைய குறியீடுகளால் தமிழைப் படிப்பதற்குத் துன்பமாகவுள்ளது என யாரேனும் முறைப்படி ஆராய்ந்தார்களா? இவர்கள் பள்ளிகளுக்குப் போய்க் கணக்கெடுத்துவந்தார்களா?  எத்தகைய ஆய்வும் நிகழ்த்தாமல் இவர்களாக ஒரு முடிவுக்கு எப்படிவரலாம்?

சீன மொழியிலோ சப்பானிய மொழியிலோ ஆயிரக் கணக்கான குறியீடுகள் உள்ளன என்றாலும் அவர்களே பண்பாட்டுத் தொடர்ச்சி கருதி அவற்றை மாற்றுவது பற்றித் தயங்குகிறார்களே!" என்றார்.

திரு.இலக்குவனார் திருவள்ளுவன் இலக்கணநூல்களை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றினார்.

“கி.மு.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியம் எழுத்துகளின் வடிவங்களை விளக்குகிறது.  அதன்பின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்று குறிப்பிடுவதன் மூலம் தொல்காப்பியர் கால எழுத்துவடிவமுறை மாற்றம் பெறவில்லை என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.  இதன் பின்னர் வந்த இலக்கணநூல்களும் இக் கருத்தையே வலியுறுத்துகின்றன. இதனால் தமிழில் எழுத்து வடிவங்கள் மாற்றம் பெறவில்லை என்பது புலனாகிறது.

கல்வெட்டு எழுத்து ஒரு சுருக்கெழுத்துப் போன்று தொழில்நுணுக்கமொழியே. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துகள் மாற்றம் பெற்றதாகக் கூறல் தவறு.”

மூன்று உரையாளர்களும் மிகவும் நடுநிலையாக, யாரையும் தனிப்பட்ட முறையில் குறித்துப் பேசாமல், தகுந்த சான்றாதாரங்களுடன் உரை நிகழ்த்தியமை அவையோரின் கவனத்தை ஈர்த்தது.

துணைமுதல்வர் நூல்வெளியீட்டுவிழாவையும் மீறி ஐம்பது பேர் கூட்டத்திற்கு வந்திருந்தமை மகிழ்வளித்தது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பரவலாக இனி இது போன்ற கூட்டங்கள் நடக்கவிருப்பதன் முன்னோடியாக இக்கூட்டம் அமைந்தது எனலாம்.

திங்கள், மார்ச் 01, 2010

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு கோணல் பார்வை


யூனிகோடு மூலம் அறிஞர்கள் வலியுறுத்தும் எழுத்துச் சீர்திருத்தத்தை உடனே நிறுவ இயலும் என்கிறார் அங்கிங்கு எனாதபடி வலை எங்கும் நிறைந்திருக்கும் "எலியப்பர் மேல் ஏறிவரும் ஒலியப்பர்" மரபுச்செல்வர்.
 
அறிஞர்கள் தற்போதைக்கு வலியுறுத்தாத, ஆனால் வேறு சிலர் பரிந்துரைத்த சீர்திருத்ததையும் யூனிகோடு மூலம் நாம் செயற்படுத்த முடியும்.
 
தமிழ்க்குழந்தைகள் தேவையில்லாமல் இரு வேறு குறியீடுகள் மூலம் தனி உயிரெழுத்துகளையும் உயிர்மெய்களின் உயிரெழுத்துக் குறீயீடுகளையும் தனித்தனியே கற்க வேண்டி இருப்பதாலும் நேரம் வீணாகிறது என்ற சாக்கில் உயிரெழுத்துகளையும், உயிரெழுத்துக் குறிகளையும் ஒன்றாக்கி விடலாம்.
 
தனித்தனி உயிரெழுத்துகளுக்குப் பகராக,  அகரத்தை மற்றும் கற்றுக் கொண்டு, அகரத்துடன் ஏனைய உயிரெழுத்துக் குறியீடுகளை இணைத்து ஏனைய தனி உயிரெழுத்துகளை எழுதலாம்.  ;-)
 
இதோ:
 
அ அ‍ா அ‍ி அ‍ீ அ‍ு அ‍ூ அ‍ெ அ‍ே அ‍ை அ‍ொ அ‍ோ அ‍ௌ
 
இதன் மூலம் 11 எழுத்துகளைக் கற்பதைத் தவிர்க்கலாம்.
 
இதில் அ‍ை   (பழைய ஐ) மற்றும் அ‍ௌ (பழைய ஔ) இவற்றைத் தவிர்த்து அய், அவ் என்று எழுதி விட்டால், இந்த ஐகார, ஔகார வரிசைகளைக் கற்கத் தேவையே இல்லை.
 
பத்து உயிரெழுத்துகளை ஓர் அகரம் மற்றும் ஒன்பது குறியீடுகளை மட்டும் வைத்துக் கற்றுக் கொள்ளலாம்.
 
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்  என்ற பதினெட்டு மெய்களையும் ஆயலாம்.
 
ங் தேவையற்ற மெய்.  அதை ன்க் என்ற கூட்டெழுத்தின் மூலம் எழுதலாம்.  இன்கு, நுன்கு, பன்கு, வன்காளம், மயன்குகிறாள், என்று எழுதலாம்.  ஆங்கிலம் பயின்றவர்களுக்கு இதன் வசதி நன்றாகப் புரியும்.
 
அதே போல், ஞ் என்பதும் தேவையற்ற மெய்.  அதை ன்ச் என்ற கூட்டெழுத்தின் மூலம் எழுதலாம்.  பன்சு, வன்சம், கன்சி, இன்சி,  என்று எழுதலாம்.  பழகப் பழக இது நன்றாக வரும்.
 
தமிழுக்கு ணகரம், நகரம், னகரம் என்று மூன்றும் தேவையில்லை.  டண்ணகரத்தைப் பெரும்பாலும் தவறாகப் பலுக்குகிறார்கள்.  எனவே அதைக் கழட்டி விட்டு விடலாம்.
 
தந்நகரத்துக்கும், றன்னகரத்துக்கும் வேறுபடுத்திக் காட்டுபவர்கள் வெகு சிலரே.
 
றன்னகரம் தமிழுக்கே உரியது என்பதால் வடமொழியில் இருக்கும் தந்நகரத்தைக் கைவிடுவதுதான் திராவிடக் கொள்கைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்.  எனவே தந்நகரத்தையும் கழட்டி விடலாம். 
 
தமிழன் வாயில் ழகரமும் வராது, ளகரமும் வராது.  சிறு குழந்தைகளை இப்படிப் போட்டு வறுத்தெடுப்பது சரியல்ல.  இவை இரண்டையும் கழட்டி விட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 
அதே போல் இந்த வல்லின றகரம் ஆசிரியர்கள் வாயிலேயே வருவதில்லை.  வேறு எந்த மொழியிலும் இல்லாத இந்த றகரத்தையும் வெட்டுவது நன்று.
 
இவற்றால் மெய்யெழுத்துகள் பதினெட்டிலிருந்து பதினொன்றுக்குக் குறைகின்றன.  உயிரெழுத்துக்களையும் பன்னிரண்டில் இருந்து ஒன்றாகக் குறைத்து, மேலும் ஒன்பது குறீயிடுகளை மட்டும் வைத்துக் கொள்வோம்.   மொத்தம் 21  குறியீடுகளை மட்டும் பயின்றால்  போதுமானது.  ஆங்கிலத்தின் 52 குறியீடுகளை விடத் தமிழில் குறைவு.  எழுத்தறிவு வளர, இனம் மலர இதை விடத் தேவையான சீர் திருத்தம் என்ன இருக்க முடியும்?
 
பாருங்கள், மேலெழுந்த வாரியான ஆய்விலேயே எத்தனை எழுத்துகளைக் களைந்தாயிற்று!  சீர்திருத்தம் என்பது வெகு எலிமையானது, கொன்சம் சின்தித்துப் பார்த்தால் வரும்.
 
அகர முதல எலுத்தெல்லாம் ஆதி
பகவன் முதர்ரே உலகு
 
கர்ரதனால் ஆய பயனென்கொல் வாலரிவன்
னர்ரால் தொலார் எனின்
 
மலர்மிசை ஏகினான் மானடி சேர்ன்தார்
னிலமிசை னீடு வால்வார்
 
வேன்டுதல் வேன்டாமை இலானடி சேர்ன்தார்க்கு
யான்டும் இடும்பை இல
 
பொரிவாயில் ஐன்தவித்தான் பொய்தீர் ஒலுக்க
னெரி னின்ரார் னீடு வால்வார்
 
வல்லுவனைப் பார்த்தோம்.  அடுத்தது கம்பன் மீது ஒரு கை வைப்போம்.
 
"பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியாள் ஆகி
அஞ்சொல் இளமஞ்சை எனஅன்னம் எனமின்னும்
வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்"
 
அடடா, எப்படிப்பட்ட பாடல் இது.  பாவம் தமிழ்க் குலன்தைகல்.  இதைப் பாடம் படிக்க முடியாமல் எலுத முடியாமல் மன்டையை உடைத்துக் கொல்லுகிரார்கல்.
 
எனவே, திருத்திய தமிலெலுத்துகலில் இதை எலுதலாம்.
 
"பன்சிஒலிர் வின்சுகுலிர் பல்லவம் அனுன்க
சென்செவிய கன்சம்நிகர் சீரடியால் ஆகி
அன்சொல் இலமன்சை எனஅன்னம் எனமின்னும்
வன்சிஎன னன்சம்என வன்சமகல் வந்தால்"
 
கவினயம் கொன்சம் கூடக் குரையாமல்  (ஏரத்தால) அதே ஒலிப்புடன் கம்பரசம் பருக முடிகிரதல்லவா?
 
கொன்சம் சிலம்பை எட்டிப் பார்ப்போம்.
 
வாழிஎம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி
 
இதைப் பாருங்கல், சின்னக் குலன்தைகலால் இதை எலுத முடியுமா?
 
வாலி எம் கொர்கை வேன்தே வாலி
தென்னம் பொருப்பின் தலைவ வாலி
செலிய வாலி தென்னவ வாலி
பலியொடு படராப் பன்சவ வாலி
 
பாருங்கல்.  இலன்கோவடிகலை னமது கவின்சர் வாலியைப் போல எலிதாகப் படிக்க முடிகிரதல்லவா?  என்ன எலுத்தில் எலுதினாலும் இப்படித்தான் படிக்கிரார்கல் என்னும்போது பேசுவது போல எலுதுவது தேவையான சீர்திருத்தமல்லவா?
 
இன்த  எடுத்துக் காட்டுகலில் உயிரெலுத்துச் சீர்திருத்தத்தைக் காட்டவில்லை.  அதர்குத் தேவையான கருவிகல் உருவான பின்னால் அதையும் செய்யலாம்.
 
காட்டாக, முதல் திருக்குரலை இப்படி எலுதலாம்:
அகர முதல அ‍ெலுத்தெல்லாம் அ‍ாதி
பகவன் முதர்ரே அ‍ுலகு 
 
எலுத்துச் சீர்திருத்தம் னம் இனத்தைக் காப்பார்ரத் தேவையானது.  காலத்தின் தேவை கருதி இதைச் செய்தால் னம்மிடம் இருக்கும் தேவையர்ர குப்பைகலைக் கலைய முடியும்,  னன்னூல் சொன்னது போல,
 
பலையன கலிதலும் புதியன புகுதலும்
வலுவல கால வகையினானே.
 
வால்க சீர்திருத்தம்.  வால்க தமில் மொலி.
 
:-((