வியாழன், நவம்பர் 04, 2010

ஒருங்குறி கிரந்தம் பரிந்துரையில் தமிழ் எழுத்துகள் பற்றிய கருத்தறியும் கூட்டம் - பின்னணி

”கிரந்தம் ( வடமொழி ग्रन्थ - புத்தகம் ) என்பது வடமொழியினை எழுத தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும் (லிபி)” என்று குறிப்பிடுகிறது தமிழ் விக்கிப்பீடியா [1].  முற்காலப் பல்லவர்கள் கி.பி. 4ம் நூற்றாண்டில் தோற்றுவித்ததாக அறிஞர்கள் கருதும் இந்த எழுத்துமுறை, பிற்காலச் சோழர்கள் காலத்தில் செந்தரப் படுத்தப் பட்டு இன்று வரை தொடர்கிறது.  பிற்காலச் சோழர்கள் பண்டைத் தமிழ் வட்டெழுத்துக்களை நீக்கி பல்லவர்கள் காலத்தில் தோன்றிய தமிழ் வரிவடிவத்தைப் பரப்பியபோது சில கிரந்த எழுத்துகளின் வரிவடிவங்களுக்கும் அதே ஒலிக்கான தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்களுக்கும் ஒற்றுமை தோன்றியது.  தமிழகத்தில் உள்ள எண்ணற்ற பல கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் கிரந்த எழுத்துக்கள், தற்காலத் தமிழ் மற்றும் முற்காலத் தமிழ் வட்டெழுத்துகள் அவற்றை எழுதியவர்களுக்குத் தோன்றிய விதங்களில் பல்வேறு கலப்புமுறைகளில் காணப் படுகின்றன.  கிரந்தமும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் எண்ணற்ற வைணவ உரைநூல்கள் உள்ளன. 20ம் நூற்றாண்டில் வடமொழியை எழுதத் தமிழகத்திலும் தேவநாகரியைப் புழங்கத் தொடங்கும் வரை கிரந்த எழுத்துகள் அச்சிலும் இருந்தன. இன்றும் கூடத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் 10,000 வேத விற்பன்னர்களும், 15,000 இந்து அர்ச்சகர்களும் கிரந்தத்தில் எழுதிய சமய நூல்களைத்  தொடர்ந்து படித்து வருவதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.

வரலாற்று நூல்களை ஆராயும் அறிஞர்களும், இந்து சமய ஆர்வலர்களும் கிரந்த எழுத்துக்களை ஒருங்குறி என்னும் யூனிக்கோடு குறியீட்டுமுறைக்குள் கொண்டு வரக் கடந்த சில ஆண்டுகளாக அரும்பாடு பட்டு  வந்திருக்கிறார்கள். இறுதியாகக் கடந்த செப்டம்பர் 6 அன்று புது தில்லியில் கூடிய அறிஞர் கூட்டம் பல வேறு அறிஞர்கள் கொடுத்த முன்மொழிகளை ஒருங்கிணைத்து எல்லோரையும் ஒன்று கூட்டி ஓர் இறுதி முன்மொழியை யூனிகோடு நுட்பக் குழுவின் முன்னர் வைக்க முடிவு செய்தது.  கிரந்த எழுத்துகள் தமிழோடு கலந்த பல கல்வெட்டுகள் பற்றிய ஆய்வு தமிழ்நாட்டில் தொடர்ந்தாலும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தமிழ்நாட்டிலிருந்து எந்தக் கல்வெட்டு ஆய்வாளரையும் அழைத்ததாகத் தெரியவில்லை.  தமிழக அரசின் சார்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்தப் பரிந்துரையில் 1700 ஆண்டுகளாக வடமொழியை மட்டும் எழுதத் தொடர்ந்து வந்திருக்கும் கிரந்த எழுத்துகளின் பேச்சொலி எழுத்து முறையின் (phonetic) கூட, வடமொழியில் இல்லாத ஆனால் தமிழிலும் மலையாளத்திலும் மட்டும் இன்றும் வழக்கிலிருக்கும் எ, ஒ, ழ, ற, ன என்னும் ஐந்து ஒலியன்களைக் கூட்ட வேண்டும் என்ற முன்மொழிவும் இடம் பெற்றிருந்தது.  இந்த முன்மொழியை முதலில் மொழிந்து தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் நாக. கணேசன்.  சமஸ்கிருதத்தில் இல்லாத எழுத்துகளைக் கூட்டுவதற்குச் சில அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், இது ஒருங்கிணைப்பு முன்மொழிவு என்பதாலோ என்னவோ, கிரந்த எழுத்து முறைக்குச் சற்றும் பொருந்தி வராத இந்த முன்மொழிவு எப்படியோ இறுதி முன்மொழிவிலும் இடம் பெற்று விட்டது.  இந்த முன்மொழிவை ஒருங்குறியின் தெற்காசியத் துணைக்குழுவும் ஏற்றுக் கொண்டு நவம்பர் 6 அன்று நடக்கவிருக்கும்  யூனிக்கோடு நுட்பக் குழுக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப் பரிந்துரைத்துள்ளது. இது யூனிகோடு ஏற்புப் பட்டியலிலும் அரங்கேறி விட்டது.

திரு கணேசனின் முன்மொழிவு பற்றித் தமிழ்த் தகவல் நுட்பவியலாளர்கள் சிலருக்குத் தெரிந்திருந்தாலும், போதிய சான்றுகளற்ற முரணான இந்த முன்மொழிவை வடமொழி வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்று அசந்து இருந்து விட்டார்கள்.  இதற்கிடையில் தமிழ் எழுத்துகளிலேயே கிரந்த எழுத்துகளைக் குறிக்க நீட்டித்த தமிழ்க் குறியீட்டு முறையில் தனி இடம் வேண்டும் என்று ஸ்ரீரமணஷர்மா என்ற இளம் அறிஞர் வைத்த முன்மொழிவைப் பொது அரங்குக்குக் கொண்டு வந்து திரு கணேசன் கடுமையாக எதிர்க்க அணி திரட்டினார்.  ஸ்ரீரமணஷர்மா முன்மொழிவுக்குப் பலத்த எதிர்ப்பைத் திரட்டுவதில் கணேசன் வெற்றியும் பெற்றார்.  இது தொடர்பாக யூனிகோடு ஏற்புப் பட்டியலைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிய சிலர் கிரந்த முன்மொழிவில் கணேசனின் கோரிக்கையும் இடம் பெற்றிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்கள். அது இந்திய அரசு பரிந்துரைத்த முன்மொழிவு என்பதையும் தெரிந்து கொண்டார்கள்.  இதனால் தமிழுக்கு என்னென தாக்கங்கள் நேரிடலாம் என்று பார்க்கத் தொடங்கினார்கள்.

தமிழில் புது கிரந்தம் வேண்டாம் என்று கணேசன் தொடங்கிய மறுப்பு அணி தமிழ் உணர்வின் உச்சக்  கட்டத்தில் இருந்தது. அதனால், கிரந்தத்திலும் தமிழ் எதற்கு என்று கேட்கத் தொடங்கினார்கள்.  கணேசன் முன்மொழிவு யூனிகோடு தரமாக ஆவதற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் அவரது முன்மொழிவால் தமிழுக்கு என்ன தாக்கம் உண்டாகும், கிரந்தம் கலந்த தமிழ் ஆவணங்களை எண்ணிமப் படுத்தலில் என்னென்ன சிக்கல்கள் உண்டாகும் என்பதை ஆய்வதற்கு நேரம் தேவை என்று அவர்களுக்குப் புலப்பட்டது.  இந்த நேரம் வேண்டும் என்றால் யூனிகோடு நுட்பக் குழுவுக்கு எடுத்துச் செல்வதை விட இந்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் முறையிடுவதே சிறப்பு என்பது அவர்களுக்குத் தெரிந்தது.  ஆனால், கிரந்தத்தில் தமிழ் எழுத்துகளைக் கூட்டுவதால் என்ன பெரிய இடர்ப்பாடு வரப்போகிறது என்று இறுமாந்து இருந்த அரசியல் தலைவர்கள் இந்த முறையீட்டைப் பொருட்படுத்தவில்லை. இதை மேலெழுந்தவாரியாகப் பார்த்த உத்தமம் யூனிக்கோடு பணிக்குழுவுக்கும் நுட்பக் குழுக் கூட்டத்தின் கெடுவுக்கு முன்னால் இந்தக் கோரிக்கையால் என்ன சிக்கல்கள் எழும் என்பதை ஆராய்ந்து ஒரு பரிந்துரை எழுத நேரம் இருக்கும் என்று தோன்றவில்லை.

கணேசன் திரட்டிய எதிர்ப்பு அணியால் கணேசனே இப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிலரின் கடும் முயற்சியால் கணேசனின் கோரிக்கையையும் இந்த எதிர்ப்பு அணி கூர்ந்து பார்க்கத் தொடங்கியது.  கனடா பேரா. செல்வகுமார் அவர்கள் கணேசனின் முன்மொழிவு தொடர்பான வாதங்களைப் படிக்கத் தொடங்கினார்.  தன்னுடைய முன்மொழிவில் கிரந்தத்தில் ”திராவிட” எழுத்துகளைத்தான் கூட்டியிருக்கிறேன் என்று வெளியில் சொல்லும் கணேசன் இவை ஏன் தேவை என்பதை வலியுறுத்தும் முகமாக யூனிகோடுக்கு எழுதிய கட்டுரையில் தன் வேறு முகத்தைக் காட்டி இருந்தார்.  அந்தக் கட்டுரையில் கணேசன் சொன்னது என்ன?

“Grantha in Unicode will go a long way for the native user community and spread the knowledge and use among the Tamils. Other script communities of India do not need the Grantha script as their own scripts like Devanagari or Telugu can be used to write Sanskrit. But it is ONLY Tamils who will use the Grantha script. Unicode Consortium will be pleased in a few years’ time, many Tamil script e-mails, e-lists, blogs, newspapers will have words written in Grantha script. So, Tamils will use Grantha script mixing it with Tamil even though Tamil will be more compared to Grantha words/sentences in a Web page.”

இதைப் படித்த பேரா. செல்வகுமார் அதிர்ந்து போனார்.  கணேசனின் முன்மொழிவு வெற்றி பெற்றால் இடைக்காலக் கேரளத்தில் மணிப்பிரவாளம் சேரர் தமிழின் தன்மையை மாற்றித் தமிழை விட்டுப் பிரிந்து மலையாளம் என்ற தனிமொழியாகப் பிரிந்தது போல இன்றைய தமிழும் இன்னொரு மணிப்பிரவாளத்தின் தாக்கத்தினால் தன் மரபையே இழந்து மலையாளம் 2.0 போல இன்னொரு மொழியாக மாறிவிடும் என்று அஞ்சினார்.  21ம் நூற்றாண்டில், கணினியிலும் வலையிலும் தமிழ் பரவிய பின்னால் கூடவா தமிழ் தன் தன்மையை இழந்து போய்விடும் என்று தொழில்நுட்பவாதிகளாகிய எங்களில் சிலர் செல்வாவின் அச்சத்தைப் பொருட்படுத்தவில்லை.  சரி, என் அச்சத்தைப் பொருட்படுத்தாதீர்கள், ஆனால், கணேசனின் முன்மொழிவால் தமிழுக்கு என்ன தாக்கம் நேரிடலாம் என்று இது வரை யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா என்ற கேள்வியை முன் வைத்தார் செல்வா.  அப்படி ஆராயவாவது யூனிகோடு நுட்பக் குழுவுக்கு நம் வேண்டுகோளைத் தெரிவிக்க வேண்டும் என்று மன்றாடினார் செல்வா.

இதற்கு இடையில் இந்திய அரசின் முன்மொழிவின் படி, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளரான தமிழ் இணையப் பல்கலையின் இயக்குநர் ப. நக்கீரனுக்கு வந்தது.  அதில் இந்திய அரசின் கிரந்த முன்மொழிவுக்குத் தமிழக அரசின் பின்னூட்டத்தைத் தருமாறு இருந்த வேண்டுகோளைத் தொடர்ந்து முனைவர் நக்கீரன் தமிழக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களோடு கலந்து பேசினார்.  தான் திரட்டிய கருத்துகளை இந்திய அரசுக்கு அனுப்பிய பின்னர் அவருக்கும் உத்தமத்தில் பேரா. செல்வகுமார் எழுப்பிய கேள்விகள் இதை மேலும் ஆராய்வதற்கான போதிய நேரம் இல்லை என்ற எண்ணம் வலுப்பட்டது.

செல்வா மற்றும் பலரின் வலியுறுத்தலின் பேரில் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்புக் கருத்துகளைத் திரட்டி செல்வா நடத்தி வரும் தமிழ் மன்றம் மடற்குழுவில் நல்ல பல கட்டுரைகளை எழுதிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் கவிஞருமான ரவிக்குமார் அவர்களுக்கு நான் சில கடிதங்களை அனுப்பினேன்.  அரசியல் மற்றும் எழுத்துப் பணிகளில் ஆழ்ந்திருக்கும் ரவிக்குமார் என்னுடைய கடிதங்களுக்கு விடையளிக்காமல் போகவே என் புலம்பெயர்ந்த நண்பர்களுக்கு என் அரசியல் முயற்சியின் தோல்வியைத் தெரிவித்து விட்டு, கணேசனின் முன்மொழிவில் தமிழ் தகவல் தொழில்நுட்பங்களுக்கு ஏதாவது சிக்கல் வருமா என்று பார்ப்பதில் கவனத்தைத் திருப்பினேன். 

அப்போதுதான், மின் தமிழ் குழுமத்தில் ஸ்ரீரமணஷர்மாவின் கிரந்த முன்மொழிவு பற்றிய கட்டுரை கிரந்தம் பற்றி ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு போன்றது என்று வினோத் ராஜன் எழுதிய கடிதம் என் கண்ணில் பட்டது.  ஷர்மாவின் முன் மொழிவைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தாலும், வேலைப் பளுவாலும், கிரந்தம் பற்றி எனக்கு ஏதும் தொடர்பு இல்லாததாலும், நான் அதை ஆழ்ந்து படிக்கவில்லை. வினோத் ராஜனோடு விக்கிப்பீடியா, தனித்தமிழ் போன்றவற்றில் எனக்குச் சில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், இந்த இளைஞரின் கிரந்தம், சமஸ்கிருதம், மற்றும் பழைய சமண பௌத்த சமயங்கள் பற்றிய ஆர்வமும் துடிப்பும், தொழில்நுட்பங்களில் அவர் காட்டிய திறமையும் என் கவனத்தை ஈர்த்திருந்தது.  தனி மடல்களில் பேரா. செவ்வியார் அவர்களும் வினோத் ராஜனை வெகுவாகப் பாராட்டியிருந்தார். 

விக்கிப்பீடியா பற்றிய கருத்துகளில் ”தமிழ் தாலிபான்” என்றூ வினோதின் கடும் தாக்குதல்களுக்கு ஆளாகி இருந்தாலும், அவரது தொழில்நுட்பத் திறன் பற்றிப் பேரா. செல்வா கொண்டிருந்த மதிப்பும் எனக்கு நினைவுக்கு வந்தது.  வினோத் தன் நண்பரைப் புகழ்ந்து எழுதியிருக்கிறாரா, அல்லது ஸ்ரீரமணஷர்மாவின் முன்மொழிவு உண்மையிலேயே ஒர் ஆய்வேடு போன்றதா என்று பார்க்க முடிவு செய்தேன். இதற்கு முன்னர் ஸ்ரீரமணஷர்மாவின் இன்னொரு நீட்டித்த தமிழ் இடங்களில் கிரந்தக்  குறியீடுகள் பற்றிய முன்மொழிவை நான் தொழில்நுட்ப அடிப்படையில் எதிர்த்திருந்தேன்.  அதனால், அவருடன் எனக்குக் கருத்து வேற்றுமை இருந்தாலும், ஷர்மாவின் கிரந்த முன்மொழிவைப் படிக்கத் தொடங்கினேன்.

ஏற்கனவே கணேசனின் கிரந்த முன்மொழிவையும், இந்திய அரசின் கிரந்த முன்மொழிவையும் பார்த்து விட்டு அவற்றின் நீர்த்துப் போன வாதங்களால் ஈர்க்கப் படாத எனக்கு, ஷர்மாவின் கிரந்த முன்மொழிவு ஒரு தேர்ந்த ஆராய்ச்சி வல்லுநரின் ஆய்வேடு போல் தோன்றியது.  ஆங்காங்கே சிறுபிள்ளைத்தனமான வாதங்களையும் தேவையற்ற சொற்றொடர்களும் இருந்தாலும், அவை இள்ம்பருவத்தில் எல்லோரும் செய்யக்கூடிய பிழைகள்தாம்.  அவரது முன்மொழிவை ஏற்கனவே பல இடங்களில் நான் பாராட்டியது அவருக்கு மிகுந்த கூச்சத்தைக் கொடுத்திருப்பதால் மேலும் நான் ஏதும் சொல்லுவதற்கில்லை.  எப்படி தமிழ் மொழியிலும், தமிழ் எழுத்துகளிலும், தமிழ் தகவல் தொழில் நுட்பத்திலும், என்னுடைய  மொழி ஆர்வத்தினால் நான் நேரத்தை ஒதுக்கி ஈடுபடுகிறேனோ, அதை விடப் பன்மடங்கு ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் இந்த இளைஞர் இந்த முன்மொழிவை எழுதியிருந்தது என்னைக் கவர்ந்தது.  அது மட்டுமல்லாமல், தமிழ் நீட்சியில் கிரந்த எழுத்துக் குறியீடு பற்றிய அவரது முன்மொழிவு தொடர்பாகத் தனிமனிதப் பழிச்சொற்களுக்கு அவர் ஆளாகி இருந்ததும் நினைவுக்கு வந்தது.  வாய்ப்பு வரும்போது ஷர்மாவிடம் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்ட வேண்டும் என்று எண்ணினேன்.

அரசியல்வாதிகளுக்கு ஓரிரண்டு மின்னஞ்சல்கள் மட்டும் அனுப்பி வைத்துவிட்டு நம் வேலை முடிந்து விட்டது என்று இருந்தால் ஒன்றும் நடக்காது என்று எண்ணிய புலம்பெயர்ந்த தமிழர்கள் அமெரிக்காவிலிருந்து தோழர் ரவிக்குமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் அனுப்பிய மின்னஞ்சல்களைப் பார்க்குமாறு நச்சரித்தனர்.  நான் அனுப்பிய செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு இதைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர இயலாது என்று எண்ணினாலும், அமெரிக்கத் தமிழர்களின் வலியுறுத்தலால், இதைக் கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்து தன் கட்சித் தலைவர் தொல் திருமா அவர்களுடன் தோழர் ரவிக்குமார் பேசியிருக்கிறார். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள பாண்டிச்சேரிக்குச் சென்று பிரெஞ்சு கீழை நாட்டியல் கழகத்தில் பேரா. ழான் லூக் செவ்வியார் மற்றும் பல இந்தியவியல் அறிஞர்களோடு கலந்து பேசியிருக்கிறார்.

இதற்கு முன்னர் கணேசனின் தலைமையில் ஸ்ரீரமணஷர்மாவின் கிரந்த முன்மொழிவுக்கு எழுந்த அரசியல் எதிர்ப்புகளின் வன்மையும், இனவெறுப்புத் தொனியும் பேரா. செவ்வியார் அவர்களை அதிரவைத்தன. தமிழ்த்தேசியவாதிகளுக்கு சமஸ்கிருதம், கிரந்தம் என்றாலே இனவெறி கலந்த ஆழ்ந்த வெறுப்பு மேலோங்கி எதையும் எதிர்ப்பார்கள் என்ற முடிவுக்கு வந்த செவ்வியார், கிரந்த முன்மொழிவு உடனே ஏற்கப்படாவிட்டால், கிரந்த எழுத்துமுறை பற்றி நன்கு தெரிந்த ஒரு சில மூதறிஞர்கள் தங்கள் வாழ்நாளுக்குள் இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்று தோழர் ரவிக்குமாரிடம் சொல்லி, கிரந்த எழுத்து முறை எதிர்ப்பை மட்டுப்படுத்தி இந்த முன்மொழிவை யூனிக்கோடு ஏற்றுக் கொள்ள வழி செய்யுமாறு ரவிக்குமாரிடம் வலியுறுத்தினார்.  பேரா. செவ்வியார் மற்றும் துணையிருந்த அறிஞர்களின் தமிழ்த்தொண்டைப் பற்றி வியந்த ரவிக்குமார், பேரா. செவ்வியாரின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கத் தொடங்கினார்.

இருப்பினும், இதன் பின்புலத்தைப் பற்றி அரசிடம் சொல்லாவிட்டால், இது பிற்காலத்தில் பெரும்பூதமாகக் கிளம்பினால் கூட்டணி அரசுக்கும், நடுவணரசு அமைச்சர் ஆ. ராசாவுகும், தமிழக முதலவருக்கும் தீராப் பழி நேரிடலாம் என்றும், ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதில் மெத்தனமாக இருந்து தீராப்பழி ஏற்றது போல் இதிலும் கோட்டை விட்டுவிடாதீர்கள் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தமிழக அரசியல்வாதிகள் சிலர் இதைப் பற்றி மிகவும் குழம்பினார்கள். கணேசன் முன்மொழிவுக்கும், ஊடகங்களில் காரசாரமாகக் கண்டிக்கப்பட்ட ஸ்ரீரமணஷர்மாவின் வேறு முன்மொழிவுக்கும் வேறுபாடு தெரியாமல், ஊடகங்களில் வந்த அறிக்கைகளைப் பார்த்து அதிர்ந்து போன அமைச்சர்களும், அலுவலர்களும் விவரம் என்னவென்று புரிந்து கொள்ள முயன்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்தி சொல்ல, தமிழக உயர்மட்டங்களில் இருந்த கணேசனின் ஆதரவாளர்கள் மாற்றுக் கருத்து சொல்ல, தமிழக அரசியல் தலைமை வெகுவாகக் குழம்பியிருந்தது.

இந்தக் குழப்பங்கள் பற்றிய தெளிவு வருவதற்காக இதைப் பற்றிய கருத்துகளைப் பல அறிஞர்களிடம் கேட்டுக் கருத்தறியும் பொறுப்பை அண்மையில் செம்மொழித் தமிழ் மாநாடு நடத்தி வெற்றி கண்டிருந்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைத் துணைவேந்தர் ராஜேந்திரன் அவர்களிடம் கேட்க முடிவு செய்தார்கள்.  துணைவேந்தர் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்வார் என்று காத்திருந்த ரவிக்குமார் அவரோடு தொடர்பு கொண்டார்.  புலம்பெயர்ந்த தமிழர்கள் அமெரிக்காவிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் தொடர்ந்து அரசியல் தலைமையைத் தொடர்பு கொண்டு கணேசனின் கிரந்தத்தில் தமிழ் எழுத்துத் திணிப்பை எதிர்க்குமாறு வற்புறுத்தினர். இவர்களில் சிலரோடு கூடிப் பேசிய துணைவேந்தர் ராஜேந்திரன் மற்றும் இரவிக்குமார் நவம்பர் 2, செவ்வாய் இரவு எனக்கு மின்னஞ்சல் அனுப்பி மறுநாள் மாலை 4 மணிக்கு நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைத்தார்கள்.

அழைப்பை ஏற்று என்னுடைய தொலைபேசி எண்ணைத் துணைவேந்தருக்கு அனுப்பியவுடன் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார் பேரா. ராஜேந்திரன். இந்தக் கூட்டத்துக்கு வேறு யாரையெல்லாம் அழைக்கலாம் என்று என் கருத்தையும் கேட்டார்.  நான் எனக்குத் தெரிந்த நண்பர்கள் பெயர்களைக் குறிப்பிட்டேன். எல்லோரும் தன் கருத்தை ஆதரிப்பவர்களை மட்டும் திரட்டினால் இது கருத்தறியும் கூட்டமாக இல்லாமல் கட்சிக்கூட்டம் போல் ஆகிவிடும் என்று கவலைப் பட்ட துணைவேந்தர் கிரந்தத்தில் தமிழ் எழுத்துகள் வேண்டும் என்று ஆதரிப்பவர்கள் பெயர்களைக் கேட்டார்.  கணேசனைத் தவிர இதை ஆதரிப்பவர்கள் யார் என்று தெரியாவிட்டாலும்,  இந்திய அரசின் கிரந்த முன் மொழிவு பற்றி புது தில்லியில் கூடிய கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீரமணஷர்மாவுக்கும், அவரது நண்பர் வினோத் ராஜனுக்கும் இது பற்றித் தெரிந்திருக்கலாம் என்று அவர்கள் பெயரைப் பரிந்துரைத்தேன்.  அவர்கள் தொலைத்தொடர்பு பற்றிய விவரங்கள் கிடைக்குமா என்று துணைவேந்தர் கேட்டார். வலையுலகில் அவர்கள் தொடர்பு கிடைப்பதா அரிய செயல் என்று எண்ணி கண்டு பிடித்து விடுகிறேன் என்று உறுதி அளித்தேன்.

நள்ளிரவுக்குப் பின்னால் மின் தமிழ், தமிழ் மன்றம், தமிழ் உலகம், சி-தமிழ், உத்தமம் பொதுமன்றம் ஆகிய குழுமங்களுக்குத் துணைவேந்தரின் சிறப்புக் கூட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டேன். அவற்றில் ஸ்ரீரமணஷர்மா மற்றும் வினோத் ராஜன் தொடர்புத் தகவல்களைக் கேட்டிருந்தேன்.  பின்னர் வினோத் ராஜனின் வலைத்தளம் வழியாக அவரது மின்னஞ்சல் முகவரியையும், ஷர்மாவின் கிரந்த முன்மொழிவிலேயே அவரது மின்னஞ்சல் முகவரியையும் கண்டு பிடித்து அவர்களுக்குத் தனிக்கடிதமும் எழுதிக் கூட்டத்துக்கு வருமாறு அழைத்துத் துணைவேந்தருடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டினேன்.

பிறகு ஒரு குழுமத்தில் நான் இவ்வாறு ஷர்மாவைப் போற்றியதையும், வினோத் ராஜனை அழைத்ததையும் ஒரு பேராசிரியர் தவறாகப் புரிந்து கொண்டு எனக்கு எழுதிய கடிதம் என்னை வெகுவாகப் புண்படுத்தியது.  மொழி, பண்பாடு, தொழில்நுட்பம் இவற்றைப் பற்றி மாறுபட்ட கருத்து கொண்டவர்களும் பண்புடன் கலந்து பேசி, சிக்கல்களுக்குத் தீர்வு காணும் தன்மை தமிழ்நாட்டில் வெகுவாக அருகிவிட்டது.  அரசியல் மேடைகளில் மாற்றுக் கருத்துகள் மோதினாலும், தனிவாழ்வில் மனிதர்களோடு அன்பாகப் பழகிய அரசியல் தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்.  இந்தப் பண்பாடு, நான் அமெரிக்கா சென்ற பிறகு மேலும் வலுப்பெற்றது.  எதிர்க்கருத்து கொண்டவர்கள் எல்லோருமே எதிரிகள் இல்லை. தமிழக மொழி, இன அரசியல் பற்றி என் கருத்துகள் அனைத்திலுமே நானும் என் அருமை நண்பனும் கடுமையாகச் சாடிக்கொள்வோம். பார்ப்பவர்கள் ஏதோ கை கலப்பு நடக்குமோ என்று அஞ்சினாலும், இது அண்ணன் தம்பி சண்டைதான். இன்று அடித்துக் கொள்வோம், நாளை சேர்ந்து கொள்வோம். ஆனாலும், தற்கால அமெரிக்கா போலவே, தற்காலத் தமிழகத்திலும் கலாச்சாரப் போர்களில் நஞ்சு கலந்து கொண்டிருக்கிறது.  இதன் தாக்கத்தினால்தான் அந்தப் பேராசியரும் என் மீது பழி போட்டிருக்க வேண்டும்.  அதே நேரத்தில் அந்த இளைஞர் ஸ்ரீரமணஷர்மா இந்த இளம் வயதில் எப்படிப் பட்ட தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்கிறார் என்றும் தோன்றியது.  தீதும் நன்றும் பிறர்தர வாரா.

வினோதும், ஸ்ரீரமணஷர்மாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்கள்.  அது ஏமாற்றம் அளித்தது.  துணைவேந்தர் அஞ்சியது போல இது ஒரு கட்சிப் பேரணியாக மாறிவிடுமோ என்று அஞ்சினேன். குறைந்தது ஷர்மாவின் கருத்து என்ன என்பதையாவது மின்னஞ்சல் மூலம் தெரிந்து கொள்ளலாம் என முயன்றேன்.  இதற்கு நடுவில் என்னோடு தொடர்பு கொள்ளும்படி வினோதுக்கும் ஷர்மாவுக்கும் பேரா. செவ்வியார் ஆதரவாகப் பரிந்துரைத்திருந்தார்.  அவரது கடிதத்தாலோ என்னவோ ஷர்மா எனது மின்னஞ்சலுக்கு விடையளித்தது மட்டுமல்லாமல, நல்ல பல அரிய தகவல்களை விவரமாகத் தெரிவித்தார்.  அவருக்கு என் மீது எப்படி நம்பிக்கை வந்ததோ தெரியவில்லை, ஆனால், இந்தக் கடிதத்தில் தனது தனித் தொலைபேசி எண்ணையும் வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் தந்தார்.

கூட்டத்துக்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த எனக்கு வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது அவரது மின்னஞ்சல் கிட்டியது.  உடனடியாக அவருடைய எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். நல்ல துடிப்பான இளைஞர்.  நான் பேசிய அந்த 40 நிமிடங்களில் கிரந்த/தமிழ்க் கல்வெட்டுகள், செப்பேடுகளைப் பெயர்த்து எழுதுவதில் உள்ள சிக்கல்கள் என்று தொழில்நுட்பம் தொடர்பானச் சிக்கல்களைப் பற்றிப் பேசினோம்.

தமிழ் எழுத்துகளைக் கிரந்தக் குறியீட்டில் இடத் தேவையில்லை என்பதுதான் ஷர்மாவின் கருத்தும். நல்ல வேளையாகக் கருத்து வேறுபாடு இல்லாததால், இந்த முதல் தொடர்பில் நுட்பச்சிக்கல்கள் பற்றி மட்டும் பேசினோம். அவரோடு பேசிக் கொண்டிருந்த போது பல தொழில்நுட்பச் சிக்கல்கள்.  குறியீட்டுச் சிக்கல்கள், ஆவணப்படுத்தலில் சிக்கல்கள் என்று தோன்றியது.  இதை முழுதும் ஆய்ந்து தெளிவு பெறக் கல்வெட்டியல், மொழியியல் புலமை உள்ளோர் உட்பட்ட துறை வல்லுநர்கள் குழுவொன்று தேவை என்பது மட்டும் புலப்பட்டது. ஷர்மாவும் இதைப் பற்றி மேலும் கொஞ்சம் ஆராய வேண்டும் என்று சொன்னார்.  முழுக்க முழுக்கத் தேவை இல்லை என்றும் சொல்ல முடியாது, ஆனால் தேவை என்று சொன்னால் வேறு சிக்கல்கள் வரலாம் என்றும் அவர் ஏற்றுக் கொண்டார்.

கூட்டம் தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு டெல்லி ஐ.ஐ.டி. முன்னாள் பேராசியரும், உலக எழுத்துமுறைகள் பற்றிச் சென்னையில் கிழக்கு பதிப்பகத்தோடு இணைந்து தொடர்கூட்டத்தில் பேசிவரும் என் நண்பர் பேரா. சுவாமிநாதன் தொடர்பு கொண்டார்.

(தொடரும்)


அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

(தீபாவளி விடிகாலை)

[1] Bibliographic details for கிரந்த எழுத்துமுறை
Page name: கிரந்த எழுத்துமுறை
Author: விக்கிப்பீடியா contributors
Publisher: விக்கிப்பீடியா, .
Date of last revision: 25 அக்டோபர் 2010 05:16 UTC
Date retrieved: 4 நவம்பர் 2010 18:55 UTC
Permanent URL: http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&oldid=618292
Page Version ID: 618292
[2] Proposal to Encode the Grantha script in Unicode, Shriramana Sharma

http://www.google.com/url?sa=D&q=http://sites.google.com/site/jamadagni/files/utcsubmissions/grantha-proposal-FINAL.pdf&usg=AFQjCNEIDGaOFNviP8TUYrCyPpPFgg2RCg

வியாழன், அக்டோபர் 28, 2010

பிபிசி தமிழோசை: தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா?

கடந்த சில நாட்களாகத் தமிழ் இணையத்தில் பரபரப்பாக இருந்து வந்த ஒரு செய்தி, இன்று காலை திராவிடர் கழகத்தலைவரும், விடுதலை ஏட்டின் ஆசிரியருமான வீரமணி அவர்களின் அறிக்கையால் பெரிதாக வெடித்துள்ளது.

மாண்புமிகு வீரமணி அவர்களின் அறிக்கை பற்றிய செய்திகள் இதோ:



http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42196

http://thatstamil.oneindia.in/news/2010/10/28/insert-sanskrit-unicode-font-tamil.html

இந்தப் பெருவெடிப்பு தமிழ்நாட்டின் ஏனைய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததோ இல்லையோ, இது போன்ற செய்திகளைப் பார்த்து நேயர்களுக்குச் செய்திகளை முறையாகத் திரட்டித் தரும் தமிழின் தலை சிறந்த வானொலியான பிபிசி தமிழோசையின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


பிபிசி தமிழோசை செய்தியாளர் ஜெகதீசன், தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா என்ற தலைப்பில் இந்தச் சர்ச்சை குறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதன் சுட்டி இதோ:

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/10/101028_unicodetamil.shtml

இது தொடர்பாக திரு ஜெகதீசன் என்னுடன் தொடர்பு கொண்டு ஒரு செவ்வியைப் பதிவு செய்தார். முழுச் செவ்வியின் சுட்டியும் இதோ:


http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2010/10/101028_unicodegranntha?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1




அவர் எனது கருத்துகளில் சிலவற்றை பிபிசி தமிழோசை முகப்பில் பதிவு செய்துள்ளார்:

செய்தி (நன்றி பிபிசி):

”தொழில் நுட்ப அடிப்படையிலும், மொழித்தேவையின் அடிப்படையிலும் இந்த கூடுதல் எழுத்துருக்கள் தமிழ் ஒருங்குறிக்குள் தேவையில்லை என்கிறார் கணினித்தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட உத்தமம் என்கிற உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான மணி மு மணிவண்ணன்.

இந்த சர்ச்சைகுறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில், தமிழின் மொழியியல் தேவையை ஏற்கெனவே இருக்கும் அடிப்படை எழுத்துருக்களே ஈடுசெய்யவல்லது என்று கூறும் மணிவண்ணன், கூடுதலாக 26 கிரந்த எழுத்துருக்களை தமிழ் ஒருங்குறிக்குள் கொண்டுவருவது தேவையற்றது என்கிறார்.

அதேசமயம், இந்த விடயத்தை யூனிகோட் நிறுவனம், உணர்வுரீதியாக அணுகாது என்றும், வெறும் தொழில்நுட்ப பிரச்சினையாக மட்டுமே இந்த விடயத்தை அது பார்க்கும் என்றும் அவர் கூறினார்.”

தற்காலத் தொழில்நுட்பம் பற்றிய சிக்கல் ஒன்றை, எல்லோருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகப் பேசுவதற்கு நல்ல தமிழ்ப் பயிற்சியும் பட்டறிவும் தேவை.  பேரா. வா. செ. குழந்தைசாமி அவர்கள் எத்தகைய சிக்கலான நுட்பச் செய்தியையும் தங்குதடையில்லாமல் ஆற்றொழுக்குப் போல, அதே நேரத்தில் ஒரு மிடுக்கான அரச நடைத் தமிழில் பேசுவதில் வல்லவர்.  பல முறை அவரது பேச்சுக்களைக் கேட்டு வியந்திருக்கிறேன்.  சில முறை அவரது பேச்சுக்களை வானொலிக்காகப் பதிவு செய்திருக்கிறேன்.  அவரது ஆற்றல் எனக்கு இல்லை என்றாலும், அவரது பேச்சுக்களைக் கேட்டதன் தாக்கத்தினால், இந்தச் செவ்வியில் என்னால் ஓரளவுக்குப் பேச முடிந்தது.  இந்த செய்தியை முன் பின் கேட்டிராதவர்களுக்கு நான் சொன்னது புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை.

இந்தச் சிக்கலைப் பற்றி விவரமாக எழுதிப் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.

செவ்வியைக் கேட்பவர்கள் நான் சொன்ன கருத்துகளைப் பற்றி மறுமொழியை இங்கே பதிவு செய்தால் மகிழ்வேன்.

புதன், அக்டோபர் 20, 2010

Top Five Regrets of the dying


என் கல்லூரி நண்பர் ஒருவர் கீழ்க்கண்ட கட்டுரையை அனுப்பினார்:
இறப்பின் மடியில் இன்றோ நாளையோ என்று முடிவை எதிர்நோக்கி வாழும் மக்களின் நிறைவேற முடியாத வருத்தங்களைப் பற்றி அப்படிப் பட்ட மக்களுக்கு அவர்களின் இறுதிநாட்களில் பணிவிடை விடை செய்திருந்த எழுத்தாளர் பிரான்னி வாரி என்ற பெண் உணர்ந்து எழுதியிருக்கிறார்.
அப்படிப் பட்ட வருத்தங்களில் தலையாய ஐந்து வருத்தங்கள் என்ன?
1. மற்றவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழாமல், என் நெஞ்சறிய உண்மையாக வாழத் துணிந்திருக்கலாம்.
2. வேலையில் இவ்வளவு கடுமையாக உழைக்காமல் இருந்திருக்கலாம்
3. என் உண்மையான உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டும் துணிச்சல் இருந்திருக்கலாம்.
4. நண்பர்களோடு தொடர்பு விட்டுப்படாமல் வாழ்ந்திருக்கலாம்.
5. மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க வழிவிட்டிருக்கலாம்.
இறப்பின் மடியில் எழும் வருத்தங்கள் நம் அடையாளத்தைக் காட்டுபவை என்பது உண்மைதான்.  ஆனால், என்னுடைய கண்ணோட்டம் சற்று வேறுவிதமானது.

பெயர் தெரியாத போதையாளர்கள் ( Alcholics Anonymous ) குழுவினரின் இறை வணக்கப் பாடலின் கருத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.
"Serenity Prayer" adopted by Alcholics Anonymous:
...
God, grant us the...
Serenity to accept things we cannot change,
Courage to change the things we can, and the
...Wisdom to know the difference
Patience for the things that take time
Appreciation for all that we have, and
Tolerance for those with different struggles
Freedom to live beyond the limitations of our past ways, the
Ability to feel your love for us and our love for each other and the
Strength to get up and try again even when we feel it is hopeless.
அதை விட, கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே” பாடல், இன்னும் கூடுதலாகவே பிடிக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே, முனிவின்
இன்னா தென்றலு மிலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல்பொருது இரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

- கணியன் பூங்குன்றன்

All towns are home towns, all people are our kin
Neither good fortune nor any harm come to us from others
Grief and reconciliation are likewise
Even death isn't new
We don't celebrate life as sweet
Nor do we cringe that life is hurtful
Just as a ferry hurries along the
Wild rapids fuelled by the
Great rains with thunder
Dodging and weaving through
The mighty rocks of a mountain pass
Life is but random
And those that have realized this
After deep contemplation
Neither praise anyone as Great
And certainly never put down
Anyone as less worthy

நாம் எல்லோருமே நம்மைச் சுற்றி நடப்பதைப் பொருத்து, நமக்கு அப்போது என்ன தெரிந்திருந்திருந்ததோ அதைப் பொருத்து, நம் அப்போதைய உணர்வுகளைப் பொருத்து, நம் மரபணுக்கள் நம்மை ஆட்டுவிப்பதைப் பொருத்து, நாம் வளர்ந்த விதம் நம் பட்டறிவைப் பொருத்து, நாம் வாழும் பண்பாட்டின் வரையறைகளைப் பொருத்து, அந்த நேரத்தில் எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்கிறோம்.  இதற்கு வருந்தத் தேவையில்லை.  வாழ்க்கை என்ற சீட்டாட்டத்தில் நமக்கு வந்து விழுந்த சீட்டுகளை நமக்குத் தெரிந்த வரையில் ஆடுகிறோம்.  அவ்வளவே!

So, all of us do what we do at the time we do with the information that we had and the emotional state in which we find ourselves in because at that particular moment that appeared to be the best choice. No regrets. Those are the cards that life dealt us and we play the hand we are dealt to the best of our ability.

பெயர் தெரியாத போதையாளர்கள் ( Alcholics Anonymous ) பாடலைச் சற்று மாற்றி

God, grant us the...
Serenity to accept things we cannot change,
Even if you may be but a figment of my imagination.
என்று கும்பிடலாம்.

சனி, செப்டம்பர் 04, 2010

என் வாக்கைப் பெற விரும்பும் தமிழ் வேட்பாளருக்கான குறைந்த அளவு தகுதிகள்

ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று முகநூலில் நான் ஒரு மறுமொழி அளித்திருந்தேன்.  அதைப் பார்த்த ஒரு நண்பர்
    மிக தவறான போக்கு இது.. எவன் ஆண்டால் என்ன என்று தன் கடமை தெரியாத படிக்காதவர்கள் சொல்லலாம்.. மிக்க படித்த நீங்கள் சொல்வது இந்த நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.. எற்படுத்திகொண்டிருக்கிறது... இதுக்கு பேரு நடுநிலைமை இல்லை.
  
    இங்கு அனைவருக்கும் ஒரு அரசியல் அறிவு தேவை.. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை இங்கே.. நீங்கள் சாப்பிடும் பருக்கையில் கூட அரசியல் கலந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள்.. அரசியலை விட்டு விலகும் மக்கள் இருக்கும் நாடு உருப்படாது தானே
என்று மிகவும் கடிந்து கொண்டார். அவர் கேட்பதிலும் ஒரு நேர்மை இருக்கத்தான் செய்கிறது.  என்ன செய்வது?

 நான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்குக் குறைந்தது கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
  1. கொலை, கொள்ளை செய்திருக்கக் கூடாது.  (கிண்டலுக்காகச் சொல்லவில்லை.  இதுதான் நாட்டு நடப்பு) (என்கவுன்டரில் யாரையாவது ”போட்டுத் தள்ளி” இருந்தாலும், அதுவும் கொலைதான்.)
  2. குண்டர்கள் சட்டத்தின் கீழுள்ள செயல்களைச் செய்திருக்கக் கூடாது
  3. தாதா வேலை செய்திருக்கக் கூடாது.  (இது குண்டர்கள் தலைவர் வேலைதான், இருந்தாலும் சொல்ல வேண்டிய தேவை)
  4. பொதுச் சொத்துகளைச் சேதப் படுத்தியிருக்கக் கூடாது (நல்ல கொள்கைக்காகப் போராடியிருந்தாலும் கூட)
  5. மக்களாட்சி நாட்டில் மன்னராட்சியை நினைவூட்டும் பட்டப் பெயர்களை வைத்திருக்கக் கூடாது (மன்னர், வேந்தர், தானைத்தலைவர், கேப்டன், நாயகன், தளபதி, சக்ரவர்த்தி, போன்றவை
  6. உறவுப் பெயர்களை எதையும் பட்டப் பெயராய் வைத்திருக்கக் கூடாது (ஐயா, தாத்தா, பாட்டி, தந்தை, அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை)
  7. என்னை உறவுப் பெயரால் அழைக்கக் கூடாது (உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம், போன்ற பசப்புச் சொற்கள் எப்போதோ காலாவதியாகி விட்டன).
  8. வானுயரக் கட் அவுட்களை எந்தக் காலத்திலும் வைத்திருக்கக் கூடாது.  சிலை வைத்திருக்கக் கூடாது.  பால் குடமுழுக்கு (பாலாபிஷேகம்) பண்ணியிருக்கக் கூடாது
  9. திரை, சின்னத்திரை உலகுகளோடு எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது.  (மன்னிக்கவும். திரைத்துறையினர் முதலில் ஒழுங்காகத் திரைப்படத்தை எடுக்கக் கற்றுக் கொள்ளட்டும்.  நடிக்கத் தெரியாதவர்கள் எல்லாம், ஏன் நடிக்கத் தெரிந்தவர்களும் கூடத்தான், நான் அடுத்த முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று சொல்லும்போது குமட்டிக் கொண்டு வருகிறது.)
  10. பெருஞ்செல்வந்தர்கள், நிலக்கிழார்கள், பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அவர்கள் அடியாட்கள், “நெருங்கிய” உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போட்டியிடக் கூடாது
  11. டாக்டர், எஞ்சினியர், லாயர், புரொபசர் என்ற பட்டங்களை எல்லாம் இருந்தாலும் விளம்பரப் படுத்திக் கொள்ளக் கூடாது.  அரசியலில் ஆய்வுப் பட்டம் பெற்றிருந்தாலும் கூட அதை விளம்பரப் படுத்தக் கூடாது
  12. வேட்பாளராகும் முன்னர் இருந்த செல்வத்தை விடப் பன்மடங்கு ( அதாவது ஒரு 25%க்கு மேல் வட்டி கிடைத்தால் கூட )  செல்வம் கூடினால், அவற்றில் 95%ஐ வரியாகக் கட்டி விட வேண்டும்.
  13. குடும்பமே அரசியலில் ஈடுபடக் கூடாது.  நான்கு தலைமுறைக்கு ஒருவர் மட்டும் போதும்.  அதுவும் தலைமுறையில் பதவி வகித்தவர் இன்னும் உயிரோடு இருக்கும் வரை அவரது வாரிசுகள் யாரும் போட்டி போடக் கூடாது. (அதாவது அமைச்சர் தட்சணாமூர்த்தி  உயிரோடு இருக்கும் வரை அவர் மகன் லெனின், அவர் மருமகன் தங்கம், ஒன்று விட்ட பேரன் அருட்செல்வம், பேத்தி மீனாட்சி, கொள்ளுப்பேரன் ராகுல் என்று யாரும் எந்த அரசியல் பதவியும் வகிக்கக் கூடாது.)
  14. ஒருவர் வாழ்க்கையில் இரண்டு முறை மட்டும் ஒரு பதவிக்குப் போட்டி போடலாம்.
  15. எந்த ஜாதிக் கட்சியிலும் எக்காலத்திலும் இருந்திருக்கக் கூடாது, கூட்டணி வைத்திருக்கக் கூடாது.  ஜாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தியிருக்கக் கூடாது.
  16. அறிவியல், தொழில்நுட்பம், அரசாங்கவியல், தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு பற்றிய நல்ல அறிவும் புலமையும் இருக்க வேண்டும்.
  17. எடுத்தவுடன் வருங்கால முதலமைச்சர் என்று போஸ்டர் போட்டால், என்னுடைய வாக்கு அறவே இல்லை.
  18. வாழ்க்கையில் ஒரு சில ஆண்டுகளாவது யாரிடமாவது ஊதியத்துக்கு வேலை பார்த்திருக்க வேண்டும்
  19. வாழ்க்கையில் ஒரு சில ஆண்டுகளாவது ஏதாவது ஒரு தொழில் தொடங்கி நாலு பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும்
  20. உள்ளூராட்சி, நகராட்சியில் அடிநிலை மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக அனுபவம் பெற்று மேலுக்கு வந்திருக்க வேண்டும்.
  21. அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், வரலாறு, ஆட்சித்துறை இவற்றைப் பற்றி மக்களுக்குத் தமிழில்  எளிமையாக எடுத்துச் சொல்லும் அறிவும் திறமையும் இருக்க வேண்டும்.
  22. இந்திய ஆட்சிப்பணியில் தேறி அரசுப்பணிக்கு வந்திருக்கும் அலுவலர்களை எதிர்கொள்ளும் அளவுக்குப் பட்டறிவும், படிப்பறிவும் இருக்க வேண்டும்.
  23. தப்பித் தவறிக் கூட எதிர்த்து நிற்கும் கட்சிகளையும், வேட்பாளர்களையும் தரக்குறைவான சொற்களால் தாக்கியிருக்கக் கூடாது.
  24. குறைந்தது உயர்நிலைப் பள்ளி வரைக்குமாவது தமிழ் வழிப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்
  25. தெற்கு மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவினிலே, தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் எனில் இவர் துடி துடிக்க வேண்டும்; உலகில் எந்த மூலையில் தமிழர்க்கு இன்னல் விளைந்தாலும் அவர்களைக் காப்பாற்றப் பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
  26. தற்காலத்தின் மிகப் பெரிய சிக்கல்களான புவி வெம்பல், சூழல் மாசு, உலக மயமாக்கலின் பின் விளைவுகள், பெரு நிறுவனங்களின் அத்து மீறல்கள், பெருநாடுகளின் ஆதிக்கப் போக்கு, அண்டை மாநிலங்களோடு ஆற்று நீர்ப் பங்கீட்டுச் சச்சரவுகள், போன்றவற்றைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் உறுதியான திட்டங்களும், அவற்றைச் செயலாற்றும் திறனும் ஆற்றலும் இருக்க வேண்டும்.
இவைதான் குறைந்த அளவு தகுதிகள்.

என் கண்ணுக்கு இந்தத் தகுதிகள் உள்ளவர்கள் யாரும் தட்டுப் படவில்லை. வருங்காலத் தலைவர்கள் இப்படி இருப்பார்களா என்றும் தெரியவில்லை.  இருக்க வேண்டும்.  அப்படி ஒருவர் தோன்றும் வரை, ஓ போடுவது எவ்வளவோ மேல்.

அப்படியே நான் விட்டு விட்ட தகுதிகளைப் பற்றி நீங்கள் சொல்லலாமே!

ஞாயிறு, ஜூலை 18, 2010

செந்தமிழும் தொல்பண்பாடும் - நீசமொழியுமில்லை, தேவ மொழியுமில்லை, மாந்தர் மொழி

முதலில் நாம் ஓர் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

அறிவியல் முறையாக நிறுவி உலக அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட செய்திகளைத்தான் நம்புவோம் என்போம்.

தமிழ் ஞாலத்தின் முதல் மொழி என்பது வெறும் நம்பிக்கை.  இதற்கு அடிப்படை ஏதும் இல்லை.

தமிழனின் பண்பாடு உலகின் முதல் பண்பாடு இல்லை. 

சிந்து சமவெளிப்பண்பாடு தமிழ்ப்பண்பாடு இல்லை.  அப்படியே இருந்திருந்தாலும், அதற்கும் முந்தைய பண்பாடுகள் உலகில் இருந்திருக்கின்றன.

ஏனைய திராவிட மொழிகள் தமிழிலிருந்து கிளைத்தவை அல்ல.  மலையாளம் மட்டுமே தமிழிலிருந்து அண்மைக்காலத்தில் பிரிந்தது.

தெலுங்கும் கன்னடமும் தமிழிலிருந்து பிரிந்தவை அல்ல. அல்லவே அல்ல.

கன்னடமும் தமிழும் மிக நெருங்கிய மொழிகள். இரண்டும் தென் திராவிட மொழிகள்.

தெலுங்கு நடு திராவிட மொழி..

லெமூரியா என்பது கட்டுக்கதை.  அதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை.  அறவே இல்லை.

லெமூரியா வேறு, குமரி நாடு வேறு.

குமரி நாடு என்பதைக் கடல்கோளால் நாம் இழந்திருக்கலாம்.  ஆனால் அப்படி இழந்திருந்தாலும் கூட, குமரி நாடு என்பதன் பரப்பளவு இன்றைய தென் தமிழ்நாட்டையும் விடச் சிறிதாகத்தான் இருந்திருக்கும்.

இலங்கையும் தமிழகமும் ஒட்டியிருந்த காலம் உண்டு.  அதனாலும் நாம் நிலத்தை இழந்திருக்கலாம்.

ஆனால், உயர்மொழிகள், கலைகள், நுட்பங்கள், என்பவை தான் தோன்றிகளாக இருக்கவே முடியாது.  அவை மக்களின் ஊடாட்டத்தில் பிறப்பவை.

இவை எவையுமே தெற்கில் தோன்றி வடக்குக்குச் செல்லும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

திராவிட இனமும் மொழிகளும் வடமேற்கிலிருந்து தெற்குப் பெயர்ந்ததற்கான செய்திகள் உள்ளன.  ஆனால், இவை மேலும் உறுதி செய்ய வேண்டியவை.

திராவிட மொழிகளுக்கும் சிந்து சமவெளிப் பண்பாட்டு மொழிக்கும் நெருங்கிய உறவுகள் இருந்திருக்கலாம்.  ஆனால் இவையும் உறுதி செய்ய வேண்டியவை.

நாம் நேரடியாக ஹரப்பா மொகஞ்சதாரோவிலிருந்து செந்தமிழ்ப் பேசிக் கொண்டு தென்னகத்துக்கு வந்ததாக நினைப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

குரங்கிலிருந்து படிநிலை வளர்ச்சி பெற்ற தொல்மாந்தர்கள் தமிழ் பேசியதாகச் சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

எகிப்தின் பிரமிடுகளையும், சீனர்களின் உயர் பண்பாட்டையும், நடு கிழக்கு நாடுகளின் பண்பாடுகளையும் ஒப்பிடும்போது, அவர்கள் சமகாலத்தில் தமிழர்கள் உயர் பண்பாட்டை அடைந்திருந்தால் அதற்கான எந்த விதத் தடயங்களும் நம்மிடம் இல்லை.

இவை ஏதும் இல்லாமல், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த குடி என்று நாம் சொன்னால், மற்றவர்கள் அப்படியா என்று கேட்டுக் கொண்டு வேறு வேலை பார்க்கப் போய் விடுவார்கள்.

தமிழ் நீச மொழியும் இல்லை.  வடமொழி தேவ மொழியும் இல்லை.

இரண்டுமே மனித மொழிகள்.

வேதங்கள் மனிதர்களால் இயற்றப் பட்டவை.  இராமாயண மகாபாரதக் காப்பியங்களும் மனிதர்களால் இயற்றப் பட்டவை.  அவை சொல்லும் கதைகள் மனிதர்களைப் பற்றிய கதைகளாகத்தான் இருக்க வேண்டும்.

தமிழின் ஒப்பற்ற படைப்புகளான சங்கப் பாடல்கள் ஐயம் ஏதும் இல்லாமல் மனிதர்களைப் பற்றியே இருக்கின்றன.

சங்கப் பாடல்கள் உலக இலக்கியங்களின் வரிசையில் ஒப்பிட்டுப் போற்றத் தக்கவை.

அதனால் மட்டும் தமிழ்க்குடி உலகின் ஏனைய குடிகளை விட எட்டாத உயரத்துக்குப் போய் விட முடியாது.

தமிழ் தன் சுற்றத்தில் உள்ள மக்களோடு, மொழிகளோடு, கருத்துகளோடு உறவாடாமல் சங்க இலக்கியமும் எழுந்திருக்க முடியாது.

இவற்றை நாம் உணர்ச்சி வழியாக இல்லாமல் அறிவு வழியாகப் பார்த்தல் நமக்கும் நம் மொழிக்கும் நலம் தரும்.

ஞாயிறு, ஜூலை 04, 2010

தமிழ் இணைய மாநாட்டில் நான் தலைமை தாங்கிய அமர்வு

அண்மையில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டின் கூடவே, தமிழ் இணைய மாநாடு 2010ம் கூடியது.  இணைய மாநாட்டுக்கு முரசொலி மாறன் அரங்கில் ஒரு பொது நிகழ்வும்,  எழுத்தாளர் சுஜாதா அரங்கு, துபாய் உமர்தம்பி அரங்கு, சிங்கப்பூர் நா. கோவிந்தசாமி அரங்கு, யாழன் சண்முகலிங்கம் அரங்கு என்ற 4 அரங்கங்களில் இணை அமர்வுகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.

இதே நேரத்தில் செம்மொழி மாநாட்டிலும் 22 அரங்கங்களில் பல ஆய்வு அமர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தன.

செம்மொழி மாநாட்டின் பேராளர்களும் இணைய மாநாட்டின் பேராளர்களும் எல்லா அமர்வுகளிலும் கலந்து கொள்வதற்கு அனுமதித்திருந்தனர். இந்த மாநாட்டின் நிறைகுறைகளைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

தமிழ் மின் தரவு மற்றும் மின்னகராதிகள் என்ற தலைப்பில் இருந்த இரு அமர்வுகளில், ஜூலை 24 பிற்பகல் என் தலைமையில் நடந்த முதல் அமர்வில் திருமதி சுபாஷினி டிரெம்மல், முனைவர் இல. மறைமலை, தேனி சுப்ரமணி,  பி. அசதுல்லா ஆகியோர் கட்டுரை படித்தனர்.  மறுநாள் காலை திருமதி சுபாஷினி டிரெம்மல் தலைமையில் நடந்த இரண்டாம் அமர்வில், நான், முனைவர் கல்யாணசுந்தரம், மணியரசன் முனியாண்டி, முனைவர் துரையரசன் ஆகியோர் பங்கேற்றோம்.  இந்த அமர்வில் நான் வழங்கிய “மிரட்டலான” கட்டுரையை இதற்கு அடுத்த பதிவில் இணைக்க இருக்கிறேன்.

செம்மொழி மாநாட்டின் சிறப்பான செயல்களில் ஒன்று, மாநாட்டில் நடந்த அத்தனை அமர்வுகளையும் ஒளிப்பதிவு செய்து, யு-டியூபில் சூட்டோடு சூடாக வலையேற்றியது.  இதன் தரமும், இது நடந்த வேகமும், மிகவும் பாராட்டத் தக்கது.  ஆய்வரங்கில் என்ன நடந்தது என்று வியப்பவர்களுக்கும், ஆய்வரங்கில் தாம் கலந்து கொள்ள இயலாது போன நிகழ்வுகளைப் பார்க்க முயல்பவர்களுக்கும் இது மிக அரிய வாய்ப்பாகும். மாநாட்டுப் பதிவுகளை யு-டியூபில் ( youtube.com ) தேடும்போது  WCTC10, ”உலகத் தமிழ்ச் செம்மொழி” போன்ற சொற்களைத் தேடலாம்.  அப்போது பல அமர்வுகள் அந்தந்த அரங்கங்களின் பெயரோடு தொகுக்கப்பட்ட ஒளிப்பதிவுகள் கிடைக்கும். மாநாட்டின் அரங்கங்களின் பெயரிலும் தேடலாம்.  காட்டாக நான் கலந்து கொண்ட அமர்வுகள் அனைத்தும் உமர்தம்பி அரங்கில் நடந்தன.  அவற்றைத் தேட நான் ”உமர் தம்பி அரங்கம்” அல்லது ”Ummar thambi arangam" என்று தேடினால் போதும். யு-டியூபில் இருக்கும் ஒளிப்பதிவுகளைத் தரவிறக்க வேண்டும் என்றால் கீப்-விட் ( keepvid.com ) என்ற புலத்துக்குச் சென்று, நாம் மீட்க வேண்டிய தொடுப்பை அதில் கொடுத்தால் போதும்.

பல கட்டுரைகளின் தரங்கள் ஏறத்தாழ இருந்தாலும்,  கட்டுரையை அரங்கில் இருப்பவர்களுக்கு ஏற்ப வழங்குவதில் பலருக்குப் பட்டறிவு இல்லை என்பதே உண்மை.  இது ஆய்வரங்கு என்பதால், ஒவ்வோர் அறையிலும், கட்டுரையாளர்களை விஞ்சிய ஆய்வாளர்கள் ஒரு சிலராவது இருந்தார்கள்.  அதே நேரத்தில், அரிச்சுவடி கூடத் தெரியாதவர்களும் இருந்தார்கள்.  இருவரையுமே அணைத்துக் கொண்டு போவது என்பது எளிதல்ல.  இருப்பினும், பலர் உண்மையிலேயே  மேடைக்கு வந்து கட்டுரையை அப்படியே படித்தார்கள். கட்டுரை மாநாட்டு மலரில் ஏற்கனவே இருப்பதால், கட்டுரையின் கருப்பொருளை மட்டும் அரங்கில் கொண்டு வந்தால் போதும்.  இல்லையேல், பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அலுப்புத் தட்டி விடும்.

நான் தலைமை தாங்கிய அமர்வில் கலந்துரையாடலுக்கும் நேரம் இருந்தது.  பார்வையாளர்களும் நெடுநேரம் அமர்ந்து பல கேள்விகள் கேட்டார்கள். அவ்வப்போது தமிழ்.நெட்டின் இணை நிறுவனர்கள் பாலா பிள்ளை, முத்து நெடுமாறன், மற்றும் பாரதிதாசன் பல்கலைப் பேராசிரியையும், அறிஞர் வையாபுரிப் பிள்ளை அவர்களின் வழித்தோன்றலுமான முனைவர் இராதா செல்லப்பன், கனடா பேராசிரியர் “விக்கிப்பீடியா” செல்வகுமார் ஆகியோரும் இந்த அமர்வில் கலந்து கொண்டது சிறப்பு.

திருமதி சுபாஷினி டிரெம்மல் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளை நன்றாக விளக்கியது மட்டுமல்லாமல், இணைய அட்டவணையை  உருவாக்கிய தொழில்நுட்பத்தை விவரித்தார்.

தமிழ் மின்னணு பெட்டக மேலாண்மை  (Tamil e-archives management) என்ற தலைப்பில் ஆம்பூர் மஃசருல் உலூம் கல்லூரி நூலகர் அசதுல்லா அவர்கள் கல்லூரியில் பெட்டக மேலாண்மை செய்வதற்கான செயலி பற்றிக் கட்டுரையைப் படித்தார்.  அவர் ஆவணங்கள் செயலிகளின் பதிப்பு எண்ணுடன் உள்ள பிணைப்பு பற்றி ஆராயவில்லை என்பது ஒரு குறை என்றாலும், நல்ல முயற்சி.  முதன்முறையாக ஓர் ஆய்வரங்கில் கலந்து கொள்ள வந்தவர் இவர் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.  தெரிந்திருந்தால், ஆய்வரங்கில் கட்டுரை வழங்கும் உத்திகளைப் பற்றிக் கலந்து பேசியிருக்கலாம்.  அவரது பட்டறிவை மேலும் வெளிக் கொணர்ந்திருக்க முடியும்.
பேரா. மறைமலை அவர்கள் நல்ல நண்பர்.  சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மக்களுக்குத் தெரிந்தவர்.  1997-98ல், எங்கள் வீடுகளில் பல வார இறுதிகளில் இலக்கியச் சொற்பொழிவு ஆற்றி எங்களுக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர்.  அவர் அன்று விதைத்த விதைகளால் இன்று வளைகுடாப் பகுதியில் செவ்விலக்கிய ஆர்வமும் தமிழ்ப் பற்றும் கூடியிருக்கிறது என்றால் மிகையாகாது.

பேரா. மறைமலை அவர்கள் மின்னணு அருங்காட்சியகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  அருங்காட்சியகம் என்பது அரசுத் துறைகள் மட்டுமல்ல, தனியாரும் முயற்சி செய்தால் உருவாக்கக் கூடியது என்பது அவரது கட்டுரையில் தெளிவாகத் தெரிந்தது.  வரலாறுகள் மாற்றப் படக்கூடாது, மறைக்கப் படக் கூடாது என்ற தெளிவில் நாஜிக் கொடுமையால் அவதியுற்ற யூதர்கள் தம் வரலாற்று ஆவணங்களை மின்னணு அருங்காட்சியத்தில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.  அருங்காட்சியகம் என்பதன் நெறிமுறைகள் பல இருப்பினும், தனிமனிதர்கள் முனைப்பினால் அமைக்க முடியும்.  மதுரைத் திட்டம் போல், நூலகத் திட்டம் போல், உலகத் தமிழர் அருங்காட்சியகங்களும் தோன்ற வேண்டும்.  புலம் பெயர்ந்த தமிழர்கள், ஈழத் தமிழர்கள், மலேசிய, சிங்கைத் தமிழர்கள் வரலாறுகளும் பதியப் பட வேண்டும்.  தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், மொரீசியஸ், ரெ யூனியோன், பிஜித் தீவுகள், தென்னமெரிக்கா இங்கெல்லாம் பரவி இருக்கும் தமிழ்க் குடிகளின் வரலாறுகளும் பதிவாக வேண்டும்.  அதற்குப் பேராசிரியர் மறைமலை அவர்களின் கட்டுரை வித்திடும் என நம்புகிறேன்.

தேனி சுப்பிரமணி தமிழ் விக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியத்தைப் பற்றிக் கட்டுரை படித்தார்.  விக்கிப்பீடியா பற்றித் தெரியாதவர்களுக்கு நல்ல அறிமுகமாக இந்தக் கட்டுரை அமைந்திருந்தாலும், விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் பல படைத்திருக்கும் சுப்பிரமணி தம் பட்டறிவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார் என்றால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.  விக்கிப்பீடியாவில் இருந்து பேரா. செல்வகுமார், மயூரன், ரவிஷங்கர் போன்றோர் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தனர்.  விக்கிப்பீடியா போட்டியும் நடைபெற்றது.  இது பற்றிய கூடுதலான செய்திகளை வழங்கும் பேச்சாக இது இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.  இருப்பினும், இதுவும் ஒரு கன்னி முயற்சி என்பதால் பாராட்டுக்குரியது.

இந்தப் பேச்சுகளின் காணொளித் தொடுப்புகள் கீழே உள்ளன:

Ummar Thambi 5.flv  to  Ummar Thambi 19.flv
(Ummar Thambi 5.flv) 
http://www.youtube.com/watch?v=0wgXm4aiRWI  (அறிமுகம்)



http://www.youtube.com/watch?v=s2Muux5vELs  (சுபாஷினி 2)
http://www.youtube.com/watch?v=luWaGrcUORM (சுபாஷினி 3)
http://www.youtube.com/watch?v=qSjE3LV8VOg ( சுபாஷினி 4)

http://www.youtube.com/watch?v=357wXJ-ruX4  (அசதுல்லா 1)
http://www.youtube.com/watch?v=scT4WnNt7XE (அசதுல்லா 2/பேரா. மறைமலை)
http://www.youtube.com/watch?v=HMFEc0AeXKc (பேரா. மறைமலை - 2 )
http://www.youtube.com/watch?v=hm11Oalf66U ( பேரா. மறைமலை - 3 )
http://www.youtube.com/watch?v=jsppmWDD_VU  (கலந்துரையாடல்)

http://www.youtube.com/watch?v=skoe5efq-9o (விக்கிப்பீடியா தேனி சுப்பிரமணி 1) 
http://www.youtube.com/watch?v=UBfrgA_hRlk (விக்கிப்பீடியா தேனி சுப்பிரமணி 2)
http://www.youtube.com/watch?v=8DSLSTuQCZo (விக்கிப்பீடியா தேனி சுப்பிரமணி 3) 

கலந்துரையாடல்கள்;

கலந்துரையாடல்கள் நன்றாக இருந்தன என்று சிலரும், தலைவர் நிறையப் பேசி விட்டார் என்று சிலரும் கூறினார்கள்.  5 மணிக்கு நிறைவாக வேண்டிய அமர்வு ஆறு மணி வரை தொடர்ந்தது.  பலரும் அரங்கில் இருந்து கலந்து கொண்டார்கள்.  இருப்பினும், பதிவில் பார்க்கும் போது அரங்கத் தலைவர் என்று அறிமுகப் படுத்தும் பொறுப்பைக் கடந்து, கலந்துரையாடல் நீண்டதற்கு முழுப்பொறுப்பும் நான் தான் ஏற்றுக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.  தலைப்பைப் பற்றிய கருத்தாடல்கள் தேவைதான் என்றாலும், அந்தப் பொறுப்பு உத்தம ஏற்பாட்டுக் குழுவுக்குத்தான்.  மைக் கையில் கிடைத்தால் பேசிக் கொண்டே போகும் நோய் எனக்கும் வந்து விட்டது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது! 

செவ்வாய், ஜூன் 22, 2010

இதுவும்தான் மொழிப்போர்!

தமிழ் இணைய மாநாடு 2010 கூட இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் 1999ல் தொடங்கிய குறியீட்டுச் சிக்கல்களுக்கு இன்னும் முழுவதும் விடிவுகாலம் வரவில்லை.  இந்த மாநாட்டுக்கு முன்னரே யூனிகோடு வேலை செய்யாத இடங்களில் அனைத்து எழுத்துக் குறியீடு (Tamil All Character Encoding 16 - TACE16) என்ற குறியீட்டை ஒரே மாற்றுக் குறியீடாக அறிவிக்கலாம் என உத்தமம் நிறுவனத்தின் பொது உறுப்பினர்கள் ஒரு ஒருங்கிணைந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.  இதை அரசு ஏற்குமா இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி.

இது தொடர்பாக அண்மை நாட்களில் ஊடகங்கள் தம் கவலையைப் பதிவு செய்துள்ளன.  இதோ அது தொடர்பான செய்திகள்:

ஞாயிறு, ஜூன் 06, 2010

எழுத்துச் சீரழிப்பு பற்றிய சிந்தனைகள் - 2

எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று வலியுறுத்துவோர் கூறும் காரணங்கள் என்ன?
  • இகர, ஈகார, உகர ஊகார வரிசைகள் ஒழுங்கில்லை
  • வரி வடிவ மாற்றங்கள் தமிழுக்குப் புதிதல்ல
  • பெரியார் சொன்னார், பெரியார் செய்தார்
  • எம்.ஜி.ஆர். சீர்திருத்தம் பாதிக்கிணறுதான் தாண்டியது,
  • தமிழறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள்
    • தெ.பொ.மீ., மு.வ.,கி.வா.ஜ., வ.சு.ப., ம.பொ.சி., சஞ்சீவி, 
  • கற்பதை எளிதாக்க உதவும்
  • புலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகளுக்கு உதவும்
  • கருவிகளுக்காக மாற்ற வேண்டு
  • எழுத்துக்கள் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
  • பிறமொழியினர் சீர் திருத்தத்தில் வெற்றி
    • மலையாளம், சீனம், துருக்கி, மலாய், ஜெர்மன், ருசியன்...
 இவ்வளவுதான்.

தமிழ் உயிர்மெய்யெழுத்துகள் வரிசையில் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகளில் மட்டும், உயிர்ககுறிகள் அகரமேறிய உயிர்மெய்க்குறியோடு கூடி, ஒரே கூட்டுக்குறியாக அமைகின்றன.  இதில் உகர, ஊகாரக் கூட்டுக்குறிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதது போல் தோன்றுவதால், இவற்றைக் கற்பவர்கள் தனித்தனியே மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும்.என்பது ஒரு வாதம்.  மேலும், இந்தத் தன்மையால் அச்சு செய்யும்போது இந்த உயிர்மெய்களுக்கு மட்டும் தனித்தனி அச்சுகள் செய்ய வேண்டியிருக்கும்.  இவற்றின் எண்ணிக்கை கூடுதல் என்பதால் இவை அடிக்கடி தேய்ந்து போகவும் வாய்ப்புண்டு.  எனவே, இந்தச் சிக்கல்களைத் தீர்க்க இந்தக் கூட்டுக் குறிகளை உடைத்து எழுதினால் என்ன என்பது பெரியாரின் கேள்வி.


இந்திய எழுத்துகளிலேயே தமிழுக்கு உள்ள சிறப்பே அதுதான்.  தமிழ் அசையெழுத்துகளைக் (orthographic syllables) கூட்டுக்குறியில் (conjunct consonant) எழுதுவதில்லை.  கிட்டத்தட்ட அகரவரிசை (alphabet) எழுத்துகள் போல் உயிர்மெய்யையும், உயிர்க்குறியீட்டையும் தனித்தனியே எழுதுகிறோம்.  இகர, ஈகார, உகர, ஊகார வரிசையின் விதி விலக்கை உடைத்து விட்டால், எல்லாத்தமிழ் எழுத்துகளும் அகர-அசையெழுத்து முறையிலிருந்து அகரவரிசை எழுத்து முறைக்கு மாறிவிடும்.  இது ஆங்கிலம் போல் மிகக்குறைவான குறியீடுகளில் ஒலிகளைக் குறிப்பிட உதவும் என்பது கூடுதல் வாதம்.

கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் மெல்ல மெல்ல மாறிக் கொண்டு வந்திருப்பதைச் சுட்டிக் காட்டும் சீர்திருத்த வாதிகள், மாற்றங்கள் தமிழுக்குப் புதிதல்ல என்று வாதாடுகிறார்கள்.  எம்.ஜி.ஆர். 1978ல் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பாதிக்கிணறு தாண்டியது போலத்தான் எனும் இவர்கள், எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்ததைக் கலைஞர் முடித்து வைக்கக் கோருகிறார்கள்.

இந்த மாற்றங்களால், அசையெழுத்துகளின் வரிசைகள் ஓரளவுக்குச் சீராகும்.  இதற்கு மேலும் சீர்மை செய்ய முடிந்தாலும், அத்தகைய சீர்மை தமிழ் எழுத்து வரிசைகள் அனைத்தையுமே மாற்றி, தற்போதைய தலைமுறையையே எழுத்தறிவில்லாத தற்குறிகளாக மாற்றிவிடும் என்பதால், அவற்றைத் தற்போதைய சீர்திருத்த முயற்சிகள் வலியுறுத்துவதில்லை.  இத்தகைய முயற்சிகளால் வரும் நெடுங்கணக்குப் பட்டியலின் ஒரு வடிவத்தைத் திரு. நாக கணேசன் அவரது வலைப்பூவில் காட்டுகிறார்;

எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று இவர்கள் கூறுவது தமிழ் நெடுங்கணக்கின் 247 எழுத்துகளைக் குறைப்பதல்ல.  அசையெழுத்துகளின் வரி வடிவங்களை மாற்றுவதால், கற்றுக் கொள்ள வேண்டிய குறியீடுகளின் எண்ணிக்கை குறையும் என்பது வாதம்.  அதாவது. இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகளைத் தனித்தனி எழுத்துகளாகக் கணக்கிட்டால்  72 ( 4 x 18) ) ஆகும்.  அவற்றைத் தனிக் குறிகளாக உடைத்தால்,  22 ( 4  + 18)  குறியீடுகள் ஆகின்றன.  எனவே 50 குறியீடுகளை மனனம் செய்யத் தேவையில்லை என்பது வாதம். இதனால் கற்பது எளிதாகும் என்பது நம்பிக்கை.  இதைச் சோதித்துப் பார்க்கத் தேவையில்லாத மிக எளிய செயல் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

உலக மொழிகளில் எழுத்துச் சீர்திருத்தம் என்பது புதியதல்ல. மலையாளம், சீனம், துருக்கி, மலாய், ஜெர்மன், ருசியன், வியட்நமீஸ், டாகலாக், கொரியன், என்று பல மொழிகளில் ஏற்கனவே செய்ததுதான்,

இந்தச் சீர்திருத்தத்தைச் செய்யாவிட்டால், புலம் பெயர்ந்த தமிழ்க் குழந்தைகள் தமிழைக் கற்பது மிகக் கடினம் என்று கல்லாமல் இருந்திடலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.  இது தமிழை என்றென்றும் வாழ வைக்கச் செய்ய வேண்டிய மிகச் சிறிய மாற்றம்.  இந்தச் சீர்திருத்தத்தை அறிவித்து ஒரு பத்து அல்லது இருபது ஏன் முப்பது ஆண்டுகளுக்குள் புது வரிவடிவத்துக்கு மாறி விட்டால், ஒரு புதிய தலைமுறைக்குப் புதிய எழுத்துகள் மட்டுமே தெரியும். பழைய தலைமுறை மறைய மறைய புதிய எழுத்துகள் வேரூன்றும் என்பது இவர்கள் வாதம்.

அச்சிலிருக்கும் நூல்களைத் தேர்ந்தெடுத்து நல்ல நூல்களை மட்டும் புதிய எழுத்துகளில் வலையில் மறுபதிப்புச் செய்வதால், நல்ல நூல்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.  இதனால் தமிழுக்குத் தேவையற்ற தீய நூல்களை எளிதில் களைய முடியும் என்கிறார் சீர்திருத்தவாதி வீரா. இராசகோபாலன்.

இவர்கள் ஆதரவாளர்களாகப் பட்டியலிடும் தமிழறிஞர்களில் ம.பொ.சி., வ.சு.ப. மாணிக்கனார் சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள்.  அவர்களே இந்தச் சிறு சீர்திருத்தத்தை இறுதியில் ஆதரித்தார்கள் என்கிறார்கள் இவர்கள். இவர்கள் சொல்லும் அறிஞர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு, வரதராசனார், கி.வா.ஜகந்நாதன்,  ந. சஞ்சீவி, ஐராவதம் மகாதேவன், வா. செ. குழந்தைசாமி, தினமலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பெரும் தமிழறிஞர்கள், பற்றாளர்கள், ஆய்வாளர்கள் அடங்குவர்.  இவர்கள் அரசுக்கு மிக நெருக்கமானவர்கள்.  இவர்கள் தமிழின் எதிரிகள் அல்லர், நெடுங்காலம் தமிழுக்குத் தொண்டு செய்து வந்திருப்போர்.  எனவே இவர்கள் கொள்கைகளைச் சிறுமைப் படுத்துவதோ, அல்லது தமிழுக்குத் தீங்கு செய்வோர் என்று சொல்வதோ பொருந்தாது என்பது சீர்திருத்தவாதிகளின் கருத்து.

திரு. ஐராவதம் மகாதேவன் தினமணியில் ஆசிரியராக இருந்த போது, இந்தக் கருத்துகளை வெளியிட்டு  படிப்போர் கருத்துக்கணக்கு பார்த்தார்கள்.  அவர்கள் கணக்கில் சீர்திருத்தத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று செய்தி வெளியிட்டார்கள்.  இதைத்தவிர வேறு எந்த அறிவியல் முறைச் சோதனையோ, கணக்குகளோ சீர்திருத்தவாதிகள் செய்ததாகத் தெரியவில்லை.  குறிப்பாக, குழந்தைக்கல்விச் சோதனை செய்து உண்மையிலேயே சீர்திருத்தம் கற்பதை எளிதாக்குகிறதா, எப்படிப் பட்ட வரிவடிவம் அதற்குப் பொருத்தம் என்று யாரும் ஆய்ந்ததாகத் தெரியவில்லை.


இவர்களுக்கு மிகுந்த பக்க பலமாக இருப்பது திராவிடர் கழகம்.  அது தன் விடுதலை நாளேட்டில் சில பகுதிகளைத் தொடர்ந்து திருந்திய எழுத்துகளில் பதிப்பித்து வந்துள்ளது மட்டுமல்லாமல், அதை அரசாணை மூலம் செந்தரக் குறியீட்டாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சொல்லப் போனால், இந்தச் சீர்திருத்த முயற்சிக்குப் பெரியார் பெயர் மட்டும் இல்லையென்றால் யாரும் இதைக் கண்டு கொண்டிருந்திருக்க மாட்டார்கள்.

இவைதான் சீர்திருத்த ஆதரவாளர்களின் வாதம்.

அடுத்த பகுதிகளில், எப்போது சீர்திருத்தம் தேவை, எப்படிப் பட்ட சீர்திருத்தங்கள் பலனளிகின்றன, என்றும், இந்தப் பகுதியில் சீர்திருத்த வாதிகள் கொண்ட கருதுகோள்களுக்கு எத்தகைய ஆதரவு இருக்கிறது என்றும் பார்ப்போம்.

(தொடரும்).

சனி, ஜூன் 05, 2010

எழுத்துச் சீரழிப்பு பற்றிய சிந்தனைகள் - 1

அண்மைக்காலத்தில் எழுத்துச் சீரழிப்பு முயற்சிகளில் சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது போலத் தோன்றியது. இரவும் பகலும் விழிக்காமல் உலகெங்கும் உள்ள மடற்குழுக்கள், வலைப்பூக்கள், என்று எல்லா இடங்களிலும் இடையறாது சீரழிப்புப் பரப்புரை செய்து வந்து கொண்டிருந்தவர்கள் திடீரென்று அமைதியானார்கள்.  பின்னணியில் மும்முரமாகச் சீர்திருத்த முயற்சிகள் தொடர்கின்றன என்று செய்திகள் வேறு.  எனினும், சீரழிப்பை எதிர்த்து மலேசியாவில் குரல் கொடுத்திருந்த இளங்குமரனார் தமிழகம் திரும்பியதில் இருந்து புதுவை வலைப்பதிவர் சிறகம் சீரழிப்பை எதிர்த்து ஒரு மாநாடு கூட்ட முடிவு செய்தது. மே மாதம் 16 ம் நாள், ஞாயிறன்று ”தமிழ் எழுத்து வடிவ மாற்றம் - எதிர்ப்பு மாநாடு” என்ற தலைப்பில் மாநாடு கூட்ட ஏற்பாடுகள் தொடங்கின.

தமிழ்மணம் வலைப்பதிவு திரட்டியில் சீரழிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்த பதிவர்களை அவர்கள் தொடர்பு கொண்டார்கள்.  வாஷிங்டன் சங்கரபாண்டி, கனடா பேராசிரியர் செல்வகுமார், அரேபியாவிலிருந்து நாக. இளங்கோவன், மலேசியாவிலிருந்து சுப. நற்குணன்,  சென்னையிலிருந்து இராம.கி. ஐயா அவர்கள், மற்றும் நான் வலைப்பூவுலகிலிருந்து கலந்து கொண்டோம்.  பூவுலகிலிருந்து செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்,  புதுச்சேரி பேராசிரியர்கள் ம. இலெ. தங்கப்பா, மற்றும் நா. இளங்கோ ஆகியோரும் மற்றும் புதுவைப் பதிவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

ஞாயிறு காலையில் கூட்டம் திரட்டுகிறார்களே, அதிலும், எழுத்துச் சீரழிப்பு போன்ற சற்று நுட்பமான கருத்தாயிற்றே, கடற்கரைக்கு அருகே கூடுகிறார்களே,  கூட்டம் திரளுமா என்ற ஐயம் இருந்தது என்னவோ உண்மைதான்.  சான் பிரான்சிஸ்கோவில் கூட்டம் கூட்டினால், அவ்வளவு காலையில் கூட்ட மாட்டோம்.  ஞாயிறன்று சோம்பலாக எழுந்து, காலையில் தொலைக்காட்சி முன்னால் அமெரிக்கக் கால்பந்தாட்டத்தைப் பார்க்க உட்காருபவர்களை வலுக்கட்டாயமாகத் தமிழ்க் கூட்டத்துக்குக் கூட்டி வருவது அவ்வளவு எளிதல்ல.

ஆனால், புதுச்சேரித் தமிழர்கள் மொழியார்வமும், சமூகப் பார்வையும் கொண்டவர்கள்.  தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால் அவர்கள் விழிமலர்கள் வேலாகும், வாளாகும் தன்மை கொண்டவர்கள்.  என்ன இருந்தாலும் பாரதியும் பாரதிதாசனும் வாழ்ந்த மண்ணல்லவா!  அப்படித்தான் இருக்கும்.



பல கருவித் தடங்கல்களுக்கு நடுவிலும் கூட்ட்த்தை இனிதே தொடங்கினர்.  இளங்குமரனார் ஐயா தொகுத்த ”தமிழ் வடிவ சீர்திருத்தமா, சீரழிப்பா” என்ற நூலை வெளியிட்டனர்.  நமக்குத் தெரியாத பல அரிய கருத்துகளைத் திரட்டியுள்ளது இந்த நூல்.  தமிழ் ஆர்வலர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய நூல். மாநாட்டில் நடந்த பல செய்திகளைப் புதுவை வலைப்பதிவர் சிறகம் நன்றாகத் தொகுத்துள்ளது.

கூட்டத்தில் நான் சொன்ன சிலவற்றை இங்கே பகிர்ந்து கொண்டு எனது சிந்தனைத் தொடரைத் தொடங்குகிறேன்.

முதலில், சீர்திருத்தம் தேவையா என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

என்று வள்ளுவர் சொன்னது போல நடுநிலைமையுடன் இதை ஆய்வோம்

சீர்திருத்தம்
  • ஏன் தேவை, 
  • என்ன சீர்திருத்தம் தேவை, 
  • யாரெல்லாம் இதை வலியுறுத்துகிறார்கள், 
  • ஏன்
என்று பார்ப்போம்.

தமிழ் எழுத்துகள் தெய்வீக எழுத்துகள் என்று நாம் சொல்லவில்லை.

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து  பண்ணுறத் தெரிந்தாய்ந்த தமிழ் எழுத்துக்குச் சீர்திருத்தம் தேவையே இல்லை என்றும் நாம் வாதிட வரவில்லை.

பழைய காலத்தில் சீர்திருத்தம் செய்திருக்கிறார்கள்.  அவை என்ன, சரியா தவறா, அவற்றை ஏற்றிருக்கலாமா என்றும் பார்ப்போம். எப்போது சீர்திருத்தம் தேவை என்றும் ஆய்வோம்.

பின்னர் எப்போது சீர்திருத்தம் தேவையில்லை என்றும் பார்போம்.  சீர்திருத்தம் தேவை என்போர் கூறும் காரணங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.

வரிவ்டிவச் சீர்திருத்தம் குறித்து அரசியல் தலைவர்கள் என்ன கூறினார்கள் என்பதையும் கருத்தில் கொள்வோம்.

பின்னர் குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வோம்.

செவ்வாய், மார்ச் 02, 2010

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
                                   
சென்னை, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்திய எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? என்னும் தலைப்பிலமைந்த கருத்தரங்கம் மார்ச் 2, 2010, செவ்வாய்க்கிழமை மாலை 6-30 மணிக்கு நடந்தது.


[படம்: பேரா. மறைமலை, மணிவண்ணன், இராம.கி., இ. திருவள்ளுவன்]

கணிஞர் மணி மு.மணிவண்ணன் தலைமை தாங்கினார். அவர் தமது தலைமையுரையில் பேசியவற்றுள் சில:

“சீர்திருத்தம் என்பதை நாம் வெறுப்பதாகவோ எதிர்ப்பதாகவோ கருதிவிடக்கூடாது. பழமையைப் போற்றுவதாகவும் கருதிவிடக்கூடாது. காலத்தினால் மாற்றம் நிகழ்வது இயல்பே. ஆனால் அம்மாற்றம் படிப்படியாக, சிறிதுசிறிதாகவே ஏற்படும்.  தமிழ்க்கல்வெட்டு எழுத்துகளின் மாற்றநிலையைப் பார்த்தால் இவ்வுண்மை புலனாகும்.

இப்போது சீர்திருத்தம் என்பவர்கள் உடனடியாக ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவிழைகிறார்கள்.இம் மாற்றத்தினால் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது?

எழுத்துகள் குறைந்தால் கல்வி கற்கும் திறன் அதிகமாகும் என்னும் கூற்று உண்மையில்லை என்பதற்கு ஒரு சான்று கூறுகிறேன்.  தமிழ்நாட்டில் படிப்பறிவு 74%.தமிழைவிடக் குறியீடுகள் மிகுந்தும் தமிழில் இல்லாத கூட்டெழுத்துகள் நிறைந்தும் மொழி மலையாளம்.எனினும் தமிழ்நாட்டை விட அங்குப்படிப்பறிவு மிகுதி.(94%)

ஆயிரக்கணக்கான குறியீடுகளையும் எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ள சீனம்,சப்பான் மொழியினரின் கல்வியறிவு சாலச் சிறந்துவிளங்கவில்லையா?
எனவே பொய்யான தகவல்களையும் பொருந்தாத கூற்றுகளையும் அடிப்படையாகக் கொண்டுவிளங்கும் எழுத்துச்சீர்திருத்தக் கருத்துப்பரப்புரை ஏற்கத்தக்கதன்று.

தமிழ் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய மொழி எனக் கருதிவிடக்கூடாது.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா,  கனடா, அமெரிக்கா எனப் பல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மாற்றம் - எழுத்தமைப்பில் - ஏற்படுமாயின் அயல்நாட்டுத்தமிழுக்கும் இந்தியத் தமிழுக்கும் வேறுபாடு  தோன்றும். தமிழிலிருந்து மலையாளம் பிரிந்ததைப்போல பல மொழிகள் மீண்டும் உருவாகும் சூழல் ஏற்படும்.

ஏனைய நாட்டுத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் என்ன கருதுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதன்பின்னரே இத்தகைய செயல்களைப் பற்றிய சிந்தனைக்குச் செல்லவேண்டும்.”

பொறியாளர் இராமகி கூறியவற்றுள் சில:

நாக.இளங்கோவன் தகுந்த சான்றாதாரங்களுடன் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுவார் கூற்றின் பொருந்தாமையை விளக்கியுள்ளார்.அவற்றையே நான் இங்கு வலியுறுத்த விழைகிறேன்.

இ,ஈ,உ,ஊகாரக் குறியீடுகளை மாற்றினால் சென்னைப் பல்கலைப் பேரகராதியின்  59% சொற்கள் மாற்றம் பெற நேரலாம்.  கல்பாக்கம் சீனிவாசன் புள்ளிவிவரங்களின் படி இ-கர ஈகார, உகர ஊகாரக் குறியீடுகள் தமிழில் 24% சொற்களில் உள்ளன.  நான்கில் ஒரு சொல் மாறுவது என்பது மிகப் பெரிய மாற்றம்.

இளைய தலைமுறையினர் இம்மாற்றங்களால் இன்று அச்சிலிருக்கும் பல நூல்களைப் புரிந்துகொள்ளாது இடர்ப்படுவர்.  பழைய பதிப்புகள் படிப்பாரற்றுப் போகும்.  இப்பதிப்புகளில் 90%க்கு மறுபதிப்பு வாராமல் போகலாம்.

மேலும் இன்றைய குறியீடுகளால் தமிழைப் படிப்பதற்குத் துன்பமாகவுள்ளது என யாரேனும் முறைப்படி ஆராய்ந்தார்களா? இவர்கள் பள்ளிகளுக்குப் போய்க் கணக்கெடுத்துவந்தார்களா?  எத்தகைய ஆய்வும் நிகழ்த்தாமல் இவர்களாக ஒரு முடிவுக்கு எப்படிவரலாம்?

சீன மொழியிலோ சப்பானிய மொழியிலோ ஆயிரக் கணக்கான குறியீடுகள் உள்ளன என்றாலும் அவர்களே பண்பாட்டுத் தொடர்ச்சி கருதி அவற்றை மாற்றுவது பற்றித் தயங்குகிறார்களே!" என்றார்.

திரு.இலக்குவனார் திருவள்ளுவன் இலக்கணநூல்களை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றினார்.

“கி.மு.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியம் எழுத்துகளின் வடிவங்களை விளக்குகிறது.  அதன்பின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்று குறிப்பிடுவதன் மூலம் தொல்காப்பியர் கால எழுத்துவடிவமுறை மாற்றம் பெறவில்லை என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.  இதன் பின்னர் வந்த இலக்கணநூல்களும் இக் கருத்தையே வலியுறுத்துகின்றன. இதனால் தமிழில் எழுத்து வடிவங்கள் மாற்றம் பெறவில்லை என்பது புலனாகிறது.

கல்வெட்டு எழுத்து ஒரு சுருக்கெழுத்துப் போன்று தொழில்நுணுக்கமொழியே. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துகள் மாற்றம் பெற்றதாகக் கூறல் தவறு.”

மூன்று உரையாளர்களும் மிகவும் நடுநிலையாக, யாரையும் தனிப்பட்ட முறையில் குறித்துப் பேசாமல், தகுந்த சான்றாதாரங்களுடன் உரை நிகழ்த்தியமை அவையோரின் கவனத்தை ஈர்த்தது.

துணைமுதல்வர் நூல்வெளியீட்டுவிழாவையும் மீறி ஐம்பது பேர் கூட்டத்திற்கு வந்திருந்தமை மகிழ்வளித்தது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பரவலாக இனி இது போன்ற கூட்டங்கள் நடக்கவிருப்பதன் முன்னோடியாக இக்கூட்டம் அமைந்தது எனலாம்.

எழுத்துச் சீர்திருத்தம் தேவையா - சிறப்புக் கருத்தரங்கம்

இன்று மாலை சென்னை எசுப்பிளனேடு ஒய். எம். சி. ஏ. அரங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.  எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அக்கறை உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

திங்கள், மார்ச் 01, 2010

நயனம் - nayanam: எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1

நயனம் - nayanam: எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு கோணல் பார்வை


யூனிகோடு மூலம் அறிஞர்கள் வலியுறுத்தும் எழுத்துச் சீர்திருத்தத்தை உடனே நிறுவ இயலும் என்கிறார் அங்கிங்கு எனாதபடி வலை எங்கும் நிறைந்திருக்கும் "எலியப்பர் மேல் ஏறிவரும் ஒலியப்பர்" மரபுச்செல்வர்.
 
அறிஞர்கள் தற்போதைக்கு வலியுறுத்தாத, ஆனால் வேறு சிலர் பரிந்துரைத்த சீர்திருத்ததையும் யூனிகோடு மூலம் நாம் செயற்படுத்த முடியும்.
 
தமிழ்க்குழந்தைகள் தேவையில்லாமல் இரு வேறு குறியீடுகள் மூலம் தனி உயிரெழுத்துகளையும் உயிர்மெய்களின் உயிரெழுத்துக் குறீயீடுகளையும் தனித்தனியே கற்க வேண்டி இருப்பதாலும் நேரம் வீணாகிறது என்ற சாக்கில் உயிரெழுத்துகளையும், உயிரெழுத்துக் குறிகளையும் ஒன்றாக்கி விடலாம்.
 
தனித்தனி உயிரெழுத்துகளுக்குப் பகராக,  அகரத்தை மற்றும் கற்றுக் கொண்டு, அகரத்துடன் ஏனைய உயிரெழுத்துக் குறியீடுகளை இணைத்து ஏனைய தனி உயிரெழுத்துகளை எழுதலாம்.  ;-)
 
இதோ:
 
அ அ‍ா அ‍ி அ‍ீ அ‍ு அ‍ூ அ‍ெ அ‍ே அ‍ை அ‍ொ அ‍ோ அ‍ௌ
 
இதன் மூலம் 11 எழுத்துகளைக் கற்பதைத் தவிர்க்கலாம்.
 
இதில் அ‍ை   (பழைய ஐ) மற்றும் அ‍ௌ (பழைய ஔ) இவற்றைத் தவிர்த்து அய், அவ் என்று எழுதி விட்டால், இந்த ஐகார, ஔகார வரிசைகளைக் கற்கத் தேவையே இல்லை.
 
பத்து உயிரெழுத்துகளை ஓர் அகரம் மற்றும் ஒன்பது குறியீடுகளை மட்டும் வைத்துக் கற்றுக் கொள்ளலாம்.
 
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்  என்ற பதினெட்டு மெய்களையும் ஆயலாம்.
 
ங் தேவையற்ற மெய்.  அதை ன்க் என்ற கூட்டெழுத்தின் மூலம் எழுதலாம்.  இன்கு, நுன்கு, பன்கு, வன்காளம், மயன்குகிறாள், என்று எழுதலாம்.  ஆங்கிலம் பயின்றவர்களுக்கு இதன் வசதி நன்றாகப் புரியும்.
 
அதே போல், ஞ் என்பதும் தேவையற்ற மெய்.  அதை ன்ச் என்ற கூட்டெழுத்தின் மூலம் எழுதலாம்.  பன்சு, வன்சம், கன்சி, இன்சி,  என்று எழுதலாம்.  பழகப் பழக இது நன்றாக வரும்.
 
தமிழுக்கு ணகரம், நகரம், னகரம் என்று மூன்றும் தேவையில்லை.  டண்ணகரத்தைப் பெரும்பாலும் தவறாகப் பலுக்குகிறார்கள்.  எனவே அதைக் கழட்டி விட்டு விடலாம்.
 
தந்நகரத்துக்கும், றன்னகரத்துக்கும் வேறுபடுத்திக் காட்டுபவர்கள் வெகு சிலரே.
 
றன்னகரம் தமிழுக்கே உரியது என்பதால் வடமொழியில் இருக்கும் தந்நகரத்தைக் கைவிடுவதுதான் திராவிடக் கொள்கைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்.  எனவே தந்நகரத்தையும் கழட்டி விடலாம். 
 
தமிழன் வாயில் ழகரமும் வராது, ளகரமும் வராது.  சிறு குழந்தைகளை இப்படிப் போட்டு வறுத்தெடுப்பது சரியல்ல.  இவை இரண்டையும் கழட்டி விட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 
அதே போல் இந்த வல்லின றகரம் ஆசிரியர்கள் வாயிலேயே வருவதில்லை.  வேறு எந்த மொழியிலும் இல்லாத இந்த றகரத்தையும் வெட்டுவது நன்று.
 
இவற்றால் மெய்யெழுத்துகள் பதினெட்டிலிருந்து பதினொன்றுக்குக் குறைகின்றன.  உயிரெழுத்துக்களையும் பன்னிரண்டில் இருந்து ஒன்றாகக் குறைத்து, மேலும் ஒன்பது குறீயிடுகளை மட்டும் வைத்துக் கொள்வோம்.   மொத்தம் 21  குறியீடுகளை மட்டும் பயின்றால்  போதுமானது.  ஆங்கிலத்தின் 52 குறியீடுகளை விடத் தமிழில் குறைவு.  எழுத்தறிவு வளர, இனம் மலர இதை விடத் தேவையான சீர் திருத்தம் என்ன இருக்க முடியும்?
 
பாருங்கள், மேலெழுந்த வாரியான ஆய்விலேயே எத்தனை எழுத்துகளைக் களைந்தாயிற்று!  சீர்திருத்தம் என்பது வெகு எலிமையானது, கொன்சம் சின்தித்துப் பார்த்தால் வரும்.
 
அகர முதல எலுத்தெல்லாம் ஆதி
பகவன் முதர்ரே உலகு
 
கர்ரதனால் ஆய பயனென்கொல் வாலரிவன்
னர்ரால் தொலார் எனின்
 
மலர்மிசை ஏகினான் மானடி சேர்ன்தார்
னிலமிசை னீடு வால்வார்
 
வேன்டுதல் வேன்டாமை இலானடி சேர்ன்தார்க்கு
யான்டும் இடும்பை இல
 
பொரிவாயில் ஐன்தவித்தான் பொய்தீர் ஒலுக்க
னெரி னின்ரார் னீடு வால்வார்
 
வல்லுவனைப் பார்த்தோம்.  அடுத்தது கம்பன் மீது ஒரு கை வைப்போம்.
 
"பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியாள் ஆகி
அஞ்சொல் இளமஞ்சை எனஅன்னம் எனமின்னும்
வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்"
 
அடடா, எப்படிப்பட்ட பாடல் இது.  பாவம் தமிழ்க் குலன்தைகல்.  இதைப் பாடம் படிக்க முடியாமல் எலுத முடியாமல் மன்டையை உடைத்துக் கொல்லுகிரார்கல்.
 
எனவே, திருத்திய தமிலெலுத்துகலில் இதை எலுதலாம்.
 
"பன்சிஒலிர் வின்சுகுலிர் பல்லவம் அனுன்க
சென்செவிய கன்சம்நிகர் சீரடியால் ஆகி
அன்சொல் இலமன்சை எனஅன்னம் எனமின்னும்
வன்சிஎன னன்சம்என வன்சமகல் வந்தால்"
 
கவினயம் கொன்சம் கூடக் குரையாமல்  (ஏரத்தால) அதே ஒலிப்புடன் கம்பரசம் பருக முடிகிரதல்லவா?
 
கொன்சம் சிலம்பை எட்டிப் பார்ப்போம்.
 
வாழிஎம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி
 
இதைப் பாருங்கல், சின்னக் குலன்தைகலால் இதை எலுத முடியுமா?
 
வாலி எம் கொர்கை வேன்தே வாலி
தென்னம் பொருப்பின் தலைவ வாலி
செலிய வாலி தென்னவ வாலி
பலியொடு படராப் பன்சவ வாலி
 
பாருங்கல்.  இலன்கோவடிகலை னமது கவின்சர் வாலியைப் போல எலிதாகப் படிக்க முடிகிரதல்லவா?  என்ன எலுத்தில் எலுதினாலும் இப்படித்தான் படிக்கிரார்கல் என்னும்போது பேசுவது போல எலுதுவது தேவையான சீர்திருத்தமல்லவா?
 
இன்த  எடுத்துக் காட்டுகலில் உயிரெலுத்துச் சீர்திருத்தத்தைக் காட்டவில்லை.  அதர்குத் தேவையான கருவிகல் உருவான பின்னால் அதையும் செய்யலாம்.
 
காட்டாக, முதல் திருக்குரலை இப்படி எலுதலாம்:
அகர முதல அ‍ெலுத்தெல்லாம் அ‍ாதி
பகவன் முதர்ரே அ‍ுலகு 
 
எலுத்துச் சீர்திருத்தம் னம் இனத்தைக் காப்பார்ரத் தேவையானது.  காலத்தின் தேவை கருதி இதைச் செய்தால் னம்மிடம் இருக்கும் தேவையர்ர குப்பைகலைக் கலைய முடியும்,  னன்னூல் சொன்னது போல,
 
பலையன கலிதலும் புதியன புகுதலும்
வலுவல கால வகையினானே.
 
வால்க சீர்திருத்தம்.  வால்க தமில் மொலி.
 
:-((

சனி, பிப்ரவரி 20, 2010

பெரியார் சன்னதியும் அண்ணாசாமி, கலைஞ்சசாமி பரிவார தேவதைகளும்

தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் கிரந்தம் தமிழுக்குத் தேவையா? என்ற இழையில், இழைக்குச் சற்றும் தொடர்பில்லாமல், திருக்குறள் கடவுள் வாழ்த்து, கடவுள் மறுப்பு வாதம் பற்றி நண்பர்கள் வேந்தன் அரசும், ஜெயபாரதனும் பந்தாடிக் கொண்டிருந்தார்கள்.  இந்த ஆட்டம் அவ்வப்போது வெவ்வேறு களங்களில் வருவதுதான் என்றாலும்,  ஜெயபாரதனின் கீழ்க்காணும் கூற்று என்னைக் கொஞ்சம் உசுப்பி விட்டுவிட்டது.

சி. ஜெயபாரதன் எழுதினார்:


கடவுளைக் காட்டு, உயிரைக் காட்டு, ஈர்ப்பியலைக் காட்டு, மின்சக்தியைக் காட்டு, கருந்துளையைக் காட்டு, கருஞ் சக்தியைக் காட்டு !  இல்லாவிட்டால் அவை அனைத்தும் இல்லை என்பேன் என்று பகுத்தறிவுவாதி ஒருவதான் சொல்கிறான்.

அந்தத் தொடரில் தொடர்ந்து நான் எழுதியவற்றை இந்த வலைப்பூவிலும் பதிக்கிறேன்.

இது சற்று அலுப்புத் தட்டும் வாதம்.

கடவுள் மறுப்பு வாதங்கள் தொன்மையானவை.  வேத காலத்திலிருந்தும், பௌத்த, சமண காலத்திலும், மிகவும் கூர்மையான அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன.  சார்வாக, லோகாயத எண்ணங்கள் தலைமையானவை.  ஆசீவகர்கள் சிந்தனையும் தமிழ்நாட்டிலும் வேரூன்றி இருந்திருக்கிறது.

ஈர்ப்பியலை, மின்சக்தியை, கருங்குழியை, கருஞ்சக்தியை  அளவிட முடியும்.  அவை பற்றிய அளவைகள், கருத்துகள் பிழையானவை என்றால் அவற்றை மாற்றிக் கொள்ள முடியும். 

உயிர் வேறு, ஆன்மா வேறு.

உயிர் இருக்கிறதா இல்லையா என்று எளிதில் கண்டறிய முடியும்.  உயிரைக் கொடுக்க முடியாவிட்டாலும், எடுக்க முடியும்.

பகுத்தறிவுவாதிகள் இவற்றை எதிர்ப்பதில்லை.  எதிர்ப்பதாக நீங்கள் கூறுவதால் உங்களுக்குப் பகுத்தறிவுவாதம் பற்றி ஏதும் தெரியாது என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

கடவுள் என்ற பொதுக்கருத்து வேறு,  ஒவ்வொரு சமயங்களும் காட்டும் விதப்பான கருத்து வேறு.

மரங்களையும், நாகங்களையும், கற்களையும், குளங்களையும்,
மழையையும், காற்றையும், இடியையும், மின்னலையும், கடலையும்,
ஆற்றையும் வ்ழிபடுவது வேறு.  இந்தப் பேரண்டத்தைப் படைத்ததாகக்
 கருதப் படும் சக்தி என்பது வேறு.

இயற்கைப் பொருள்களை வழிபடும் மனிதன், அந்தப் பேராற்றல்
கொண்டிருக்கக் கூடிய மாபெரும் படைப்புக் கடவுளின் ஒரு பகுதியை
 வழிபடுகிறான் என்பதெல்லாம் சப்பைக் கட்டு.

தனக்கு இடைஞ்சல் தரக்கூடிய ஆற்றல்களுடன் சமரசம் செய்ய முயல்வது 
மனிதனின் இயல்பு.

அரசனுடன், அமைச்சனுடன், அரசியல் வாதிகளுடன், எதிரியுடன் சமரசம்
செய்து கொள்வதுபோல, மரத்துடன், கடலுடன், மற்ற சக்திகளுடன் 
சமரசம் செய்ய முயல்வது மனித இயல்பு.

ஏதோ ஒன்றைக் கொடுத்தால், தனக்கு வேண்டிய ஒன்றைத் தரும் சக்தி என்ற அளவில் மட்டும் பேரம் செய்ய முயல்பவன் மனிதன்.
அது செல்வமாக இருக்கலாம், மறு பிறவியாக இருக்கலாம், சுவர்க்கமாக இருக்கலாம், ஆனால், தன்னைத் தந்தோ, அல்லது ஏதாவது தானத்தைத் 
தந்தோ, தனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சக்தியைத்
தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும் மனிதனுக்குச் சமயங்கள் அந்தச் சமரசம் செய்ய வழிவகுக்கின்றன.
அத்தகைய சமயங்களுக்குள் இருக்கும் பொய், புளுகு, மனிதனுக்கு எதிரான கொள்கைகள் இவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதும் மனித இயல்புதான்.

"குற்றம் செய்தால் கண்ணைக் குத்தும் சாமி"  என்று மிரட்டும் சமயத்துக்கு எதிராக நான் சாமிக்குற்றம் செய்கிறேன் பார், என்னை அந்தச் சாமி என்ன செய்து விடும் என்று எதிர்த்துக் காட்டுவது பகுத்தறிவுதான்.

ஏ மனிதனே, உன்னைப் பிறப்புக்கு முன்னரே அடிமைப் படுத்தும் அமைப்புகளை நீ ஏற்க வேண்டியதில்லை.  உன் கருவிலேயே உனக்குப் பூட்டிய விலங்குகளை நீ உடைத்தெறி.  உன்னை அடிமைப்படுத்தும் எந்த அமைப்புகளையும் நீ ஏற்க வேண்டியதில்லை.

உன்னைப் பிறப்பிலேயே ஒரு தெய்வம் அடிமை எனச் சொல்கிறது என்றால், அது தெய்வமே இல்லை.  அதை நீ அச்சமின்றி எதிர்க்கலாம் என்று கலகக்குரல் கொடுப்பது பகுத்தறிவுவாதம் என்றால், அது மனிதநேயத்துக்கு ஏற்றதே.

தெய்வம், கடவுள் என்ற கொள்கைகள் எல்லாம், மனிதனிடமிருந்து தோன்றிய கருத்துகள்.  அவை உண்மையா பொய்யா என்று அறிய முடியாத கருத்துகள்.  யாரும் தன்னந்தனியே தன் இல்லத்துக்குள் தனக்குப் பிடித்த கடவுளை வணங்குவதைப் பற்றிச் சற்றும் கவலைப் படுவதில்லை.

ஆனால், கடவுளின் பெயரால், சமயத்தின் பெயரால், மனிதனைத் தாழ்த்தி, அவனுக்கு விலங்கிடும் அமைப்புகள் எவையையும் எதிர்ப்பதில் தவறே இல்லை.

கடவுள் கண்ணைக் குத்துவதில்லை என்பதைப் பகுத்தறிவுவாதிகள் அன்றாடம் காட்டிக் கொண்டே இருந்தாலும், நம்புபவர்கள் பலர் மாறுவதில்லை.

தம் இருப்பிடத்தை இடி, மின்னல், மழையிலிருந்தோ, மனிதரின் செயல்களிடமிருந்தோ காப்பாற்றக்கூட முடியாதவர் ஒரு வல்லமை படைத்த கடவுளா என்று கேட்பதில் தவறில்லை.

பேரண்டத்தைப் படைத்ததாகத் தாம் நம்பும் கடவுளுக்கு உலகில் தனியாக எண்ணற்ற இருப்பிடங்கள் தேவையில்லை என்று கொள்பவர்களும்
பகுத்தறிவுவாதிகள்தாம்.

"வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கைக்காகக் கூட நம்பி விடாதே!
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பிவிடாதே நீ வெம்பிவிடாதே!"

என்ற பாடலின் கருத்தை யார்தான் மறுக்கவியலும்?

"கடவுளை மற, மனிதனை நினை"  என்ற வாக்கின் மனிதநேயத்தை யார்தான் வெறுக்க முடியும்?
சிறு பிள்ளைத் தனமான வாதங்கள் அலுப்புத் தட்டுபவை.
இதற்கு விடையாக ஜெயபாரதன் எழுதினார்:
On 2/20/10, சி. ஜெயபாரதன்  wrote:
விஞ்ஞானம் நுழைய முடியாத பிரபஞ்சத்தின் தோற்றமும், அதன் பிறப்பின் காரணமும் விளைவுகளும் கடவுளைப் போல் ஊகிப்புகளே. 

நான் எழுதினேன்:
 ஆம்.  பிற்காலத்தில் தரவுகள் இந்த ஊகிப்புகள் பிழையானவை என்று காட்டினால், அறிவியல் சற்றும் தயங்காமல் தம் கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளும்.


ஆனால், கடவுள் சொன்னார், முனிவர்கள் எழுதினார்கள் என்று சொல்லும் சமயங்கள் தாங்கள் சொல்லியவற்றை மாற்ற முடியாது.
உலகைக் கடவுள் இப்படித்தான் படைத்தார், இத்தனை நாளில் 
படைத்தார் என்று எழுதியவர்களால், அறிவியல் அளவைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.  டார்வினின் படிவளர்ச்சிக் கொள்கையோடு சமரசம் செய்து கொள்ள முடியாது.  டைனசோர்களையும், பெரும்பழங்கால உயிரினங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
உலகம் தட்டையானது, ஆமையின் முதுகில் மிதப்பது என்று சொன்னவர்களால், உருண்டையான உலகுடன் சமரசம் செய்துகொள்வது கடினம்.

கலிலியோவைத் தண்டித்தது சமயக் கொள்கை.  பின்னர் அசடு வழிந்து சமரசம் செய்து கொண்டு சமாளித்துத் தொடர்கிறது.

பல சமயங்களால் அது முடிவதில்லை.

அறிவியலில் எதுவுவே மாற்ற முடியாத அடிப்படைக் கொள்கையில்லை.  சார்ல்ஸ் நூட்டனும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும், சார்ல்ஸ் டார்வினும் இறைத்தூதர்களல்லர்.  மனிதர்கள்.  அவர்கள் கோட்பாடுகளுகளைத் தகர்த்தெறியும் தரவுகள் கிடைத்தால், அறிவியல் அவர்களைப் புறக்கணிக்கத் தயங்காது.

அதுதான் சமயச் சிந்தனைக்கும், அறிவியல் சிந்தனைக்குமுள்ள அடிப்படை வேறுபாடு.

 நண்பர் ஜெயபாரதன் சற்றுப் பொறுமை இழந்து எழுதினார்:

On 2/20/10, சி. ஜெயபாரதன்  wrote:
////பேரண்டத்தைப் படைத்ததாகத் தாம் நம்பும் கடவுளுக்கு உலகில் தனியாக எண்ணற்ற இருப்பிடங்கள் தேவையில்லை என்று கொள்பவர்களும் பகுத்தறிவுவாதிகள்தாம்///
சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி கொண்டு பிளப்பதும் எக்காளம் ?
கடவுளுக்குக் கலைக் கோவிலான மதுரை மீனாட்சி ஆலயத்தைப் பீரங்கி கொண்டு பிளப்பவர் அடி முட்டாள்கள் !!!!
கடவுளை நம்பாதவர் மூர்க்கராய்ப் பீரங்கி கொண்டு ஏன் தாக்கப் போகிறார் ?
கடவுளை நம்பாத பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையார் சிலையை ஏன் உடைத்துக் காட்டினார் ?  
பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையாரை ஒழித்தாரா ?


அதற்கு என் விடை:

நீங்கள் மிகைப்படுத்திக் கூறுகிறீர்கள்.  தற்கால நெடுந்தொடர் பாணியில் கேட்டால் "இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய்த் தெரியலை?"

பெரியார் என்று சீரங்கநாதனையும், தில்லை நடராஜனையும், மதுரை மீனாட்சி ஆலயத்தையும் பீரங்கி கொண்டு பிளந்தார்?!

பகுத்தறிவுப் பெரியார் உடைத்த பிள்ளையார் சிலையை விடக் கூடுதலாக ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகளை இன்று மக்கள் வெவ்வேறு வடிவங்களில், வண்ணங்களில் கடலில் கொண்டு போய்க் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  சிலருக்கு அது ஒரு நாள் கூலி வேலை. பலருக்கு அதில் பக்திப் பரவசம்.

பெரியார் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் வந்தார்.

செருப்பு மாலை அணிவித்த பெரியார் கிட்டத்தட்ட நூறு வயது வாழ்ந்து விட்டதால், பிள்ளையாருக்குச் செருப்பு மாலையும் உகந்தது போலும் என்று ஆத்திகர்கள் கருதிக் கொண்டனர்.

யாரோ ஒரு ஆத்திகப் பெரியார், நாத்திகப் பெரியாரைப் பற்றிக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

"பக்தன் ராமனை மறந்தாலும், ராமசாமி மறக்க மாட்டார்.  பிள்ளையாருக்கு பக்தன் பூசை செய்யவில்லையென்றாலும், ராமசாமி செருப்புமாலை போடுவார்.  ஒவ்வொரு நொடியும் கடவுளைப் பழிக்கிறேன் என்று சொல்லி மறக்காமல் கடவுள் பெயரை நாவில் கொண்ட இவர் ஒரே பிறவியில் மோட்சம் அடையும் பாக்கியம் பெற்றவர்."

பெரியாரை இப்படியும் பார்க்கலாம் என்று அப்போதுதான் தெரிந்தது.

அதைப் பற்றியும் பெரியார் பொருட்படுத்தவில்லை.

இந்து சமயத்தில் ஆயிரக்கணக்கான குப்பைகள் உள்ளன.

எல்லா சமயங்களிலும் ஆயிரக்கணக்கான குப்பைகள் உள்ளன.

பெரியார் இயக்கமும், எந்த அரசியல் இயக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்து சமயம் தனக்குள்ளே இருந்து கொண்டு தன்னைச் சீர்திருத்த முயன்ற எல்லோரையும் விழுங்கிக் கொண்டு விட்டது.  சித்தர்கள் செய்யாத விளையாட்டா?  இராமானுசர் செய்யாத சீர்திருத்தமா?  கடைசியில் அவரும் எல்லோரையும் போல இன்னொரு கடவுள்.  பரிவார தேவதை. ஏவ்வ்வ்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக அசைக்க முடியாத, ஆட்டம் காணாத சமய மூட நம்பிக்கைகள் இந்து சமயத்தை அர்த்தமிழக்கச் செய்தன.

இதை விவேகானந்தர் உணர்ந்திருந்தார்.

காந்தி கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டிருந்தார்.  கேரளாவின் தீண்டாமைக் கொள்கைகளை ஒரு பைத்தியக்கார விடுதியென அவர் கருதியது இதற்கு ஒரு காட்டு.

பெரியார், அப்படிப் பட்ட மூட நம்பிக்கைகளைத் தோலுரித்துக் காட்டினார். அவர் கொள்கைகளை மூலைக்கு மூலை முழங்கத் தொடங்கிய காலத்தில், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வீதி இருந்தது.  பிராம்மணாள் மட்டும் சாப்பிடலாம் என்ற அறிவிப்புப் பலகை இருந்தது.  சில விடுதிகளில் "பிராம்மணர்கள் சாப்பிடும் இடம்" என்று தனி இடம் ஒதுக்கப் பட்டிருந்தது.

நாட்டு விடுதலைக்குப் போராடிய காங்கிரஸ் மாநாடுகளிலும் கூட சாதிகள் தனித்தனியாகச் சாப்பிட வசதி செய்திருந்தார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் நடத்திய குருகுலத்தில் பிராம்மணர்கள் மற்ற சாதியினரிடம் இருந்து விலகி இருந்தனர்.

நாட்டுக்கு விடுதலை வேண்டுமென்றால், விடுதலை வேண்டுபவர்கள் தமக்குள்ளே இத்தனை பாகுபாடு பார்த்தல் சரியா என்று பெரியார் கேள்வி எழுப்பினார்.  பாரதியாரும் அதையேதான் கேட்டார்.

ஆனால், பெரியாருக்குக் கிடைத்த விடை, அவருக்கு வேறு பாதையை வழி வகுத்துக் கொடுத்தது.

இன்று பிராம்மணர்கள் சாப்பிடுமிடமோ, பிராம்மணாள் விடுதியோ இல்லை.

அன்று ஒடுக்கப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று புறக்கணிக்கப் பட்ட பல சாதியினர் இன்று வாழ்வுத்தரத்தில் உயர்ந்திருக்கிறார்கள்.

தீண்டத்தகாதவர் என்று புறக்கணிக்கப் பட்ட சாதியினர் நடத்தும் சைவ உணவு விடுதிகளில் இன்று பிராம்மணரும், பலரும் அன்றாடம் சாப்பிடுகிறார்கள்.

அன்று எல்லோரும் சாதிப் பெயரைப் பட்டம் போல ஒட்டிக் கொண்டிருந்தனர். 

இன்று சாதிப் பெயரை ஒட்டிக் கொள்ளும் வழக்கம் வெகு குறைவு.

அன்று தீண்டத்தகாதவர், கீழ் சாதியினர் என்று கருதப் பட்டவ்ர்களைப் பள்ளிகளுக்குள்ளேயே விட மாட்டார்கள்.  இன்று அப்படிப்பட்ட சாதிகளில் தோன்றியவர்கள் நாட்டை ஆளுகின்றனர்.

இதற்கெல்லாம் அடி கோலியவர் பெரியார் என்று பலர் போற்றுகின்றனர்.

தமிழ்நாடு இயல்பாக எடுத்துக் கொள்ளும் பல முன்னேற்றச் சிந்தனைகள் இன்றும் வடநாட்டில் நடைமுறைப் படுத்த முடிவதில்லை.  தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்கள் சமூகத்தில் உயர்ந்த அளவுக்கு வட மாநிலங்களில், குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிகாரில் இல்லை.
அதனால்தான், உத்தரப்பிரதேசத்தில் பெரியாருக்குச் சிலை வைத்துப் போற்றினார்கள்.

பெரியார் கொள்கைகளை ஏற்காதவர்கள்கூட அவரது வாழ்நாளில் அவர் தூண்டிய மாற்றங்களை வரவேற்கிறார்கள். 

இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள், இந்து சமயம் பெரியாரை ஒரு பெரும் பக்தனாக, இந்து சமயத்தைத் திருத்த கடவுள் அனுப்பிய அரக்கனாக வழிபடுவார்கள்.

புத்தரை அப்படித்தான் இந்து சமயம் ஓர் அவதாரமாக எடுத்துக் கொண்டு பௌத்தத்தை ஸ்வாஹா செய்தது.  ஆதிசங்கரரையே ஒரு "ப்ரசன்ன பௌத்தர்" (மறைவான புத்த பிக்கு) என்று சிலர் குற்றம் சாட்டவில்லையா?  மகாயான பௌத்த சமயத்துக்கும் சங்கரரின் அத்வைதத்துக்கும் உள்ள வேறுபாடு ஒன்றும் பெரிதில்லை என்றார்கள் பல வைதீக அறிஞர்கள்.

எம்பெருமான் தடுத்தாட் கொண்ட பெரும் பக்தன் என்று பெரியாருக்குச் சன்னதிகள் வைத்து அதற்கு அண்ணாசாமி, கலைஞ்சசாமி பரிவார தேவதைகள் வைத்து, தமிழ்நாடெங்கும் உள்ள பெரியார், அண்ணா சிலைகளைக் கோவில்களாக்கினாலும் வியப்படைய மாட்டேன்.

செவ்வாய், பிப்ரவரி 16, 2010

இந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை - மறுபதிவு

 இந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை பற்றி மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழ்மன்றம் மடற்குழுவில் உரையாடிக் கொண்டிருந்தோம் (பார்க்க: இந்திய ஊடகங்களின் மீது வழக்கமான ஒரு குற்றச்சாட்டு ).  அப்போது நான் எழுதியதை, நண்பர்களின் பரிந்துரையை ஏற்று, சில மாற்றங்களுடன், இங்கே மறு பதிவு செய்கிறேன்.


 ++++++++++++++++++



இந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை பற்றிச் சென்ற சில ஆண்டுகளில் இந்து நாளேடு ஒரு தொடர் வெளியிட்டிருந்தது.  ஆங்கில ஊடகங்களில் வேலை செய்பவர்கள் பொதுவாக மேட்டுக்குடி மக்கள் (elite families) என்றும், ஆங்கில வழிப்பள்ளிகளில் படித்தவர்கள் என்றும், சாதாரண பொதுமக்கள் பற்றிய மேட்டுக்குடி சிந்தனை உடையவர்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

குறிப்பாக இட ஒதுக்கீடு பற்றிய செய்திகளிலும், அன்புமணி ராமதாஸ் பற்றிய செய்திகளிலும், தீவிர வலதுசாரி சாய்மானத்துடன் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  ஆனால், பொதுமக்களிடையே, குறிப்பாகத் தென் மாநிலங்களில் இட ஒதுக்கீடு பற்றி நடுவணரசு கொள்கைகள் எல்லாம் முப்பதாண்டுகளுக்கு முன்னதாகவே வழக்கில் வந்தவை. இதில் என்ன பெரும் கூப்பாடு என்று தென் மாநில மக்களுக்குப் புரியவில்லை என்று சொல்லியிருந்தார்கள்.

அதே போல், ஈழத்தமிழர்கள் வதைபடும் செய்திகள், மலேசியத் தமிழர்கள் பற்றிய செய்திகள், இவை எல்லாம் ஆங்கில ஊடகங்களில் சார்புத் தன்மையோடே பார்க்கப் படும்.  குறிப்பாக, ஈழத்தமிழர் பற்றிய செய்திகளில், ஆங்கில ஊடகங்கள், குறிப்பாக நாளேடுகள் ஈழத்தமிழர் வீழ்வதைக் கண்டு கொள்ளவில்லை. அப்படிக் கண்டு கொண்டால் சிங்களவர் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.  ஆனால், தமிழ் நாளேடுகளும், வார இதழ்களும் (ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து) தமிழர் வதைபடுவதைப் பற்றிப் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.  பெருநீரோட்ட நாளேடான தினமணி இதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு.  அதே குழுமத்தைச் சேர்ந்த ஆங்கில நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏனைய ஆங்கில ஊடகத்தின் சார்பைத்தான் எதிரொலித்தது.

இதே போல் அரசு நடத்தும் அனைத்திந்திய வானொலியிலும் சார்புத் தன்மை தெரிந்தது.  தமிழ்ச் செய்திகள்  ஓரளவு ஈழத்தமிழர் பற்றிய செய்திகளை ஒலிபரப்பின.  ஆங்கிலச் செய்தியில் அவ்வளவாக அனுதாபம் தெரிவிக்கவில்லை என்றாலும், நாளேடுகளை விட, ஏனைய ஆங்கில ஊடகங்களை விடக் கூடுதலாகவே செய்திகளை ஒலிபரப்பினார்கள்.

என் டி டிவி போன்ற ஊடகங்கள், தமிழர் வீழ்ச்சியை தீபாவளி போல் கொண்டாடினார்கள்.  புலிகள் வீழ்ச்சி மட்டுமல்ல, மலேசியத் தமிழர்கள் கைது செய்தியும் ஆங்கில ஊடகங்களுக்குக் கொண்டாட்டத்தையே தருவன.  இவர்களைப் பொருத்தவரையில் தமிழர்கள் அடிமைகளாகக் கப்பலேறிப் போனவர்கள்.  அவர்களுக்கு என்று எந்த உரிமையும் கிடையாது. 

ஆஸ்திரேலியாவில் பொறுக்கித் தனமாக நடந்து கொண்ட இந்தியர்கள் செருப்படி வாங்கிய போது இந்திய ஊடகங்கள் போர்க்குரல் எழுப்பினார்கள்.  அமெரிக்காவில் தொடர்ந்து பல தெலுங்கர்கள் கொலை செய்யப்பட்டது இவர்கள் கவனத்தை ஈர்த்தது.  ஆனால் தமிழனுக்கு ஆதரவாக ஒரு மூச்சு கூட விட மாட்டார்கள்.

நானும் இந்த ஆங்கில நாளேடுகளைப் பார்த்துச் சலித்துப் போய்விட்டேன்.  அவற்றில் விளம்பரம் செய்யும் எவரையும் நான் ஆதரிப்பதில்லை.  இருக்கும் சந்தாவையும் நிறுத்தி விட்டு முழுக்க முழுக்கத் தமிழ் நாளேடு மட்டும் படிக்கிறேன்.  இந்தியாவில் ஒளிபரப்பாகும் எந்த ஆங்கிலச் செய்தியையும் நான் பார்ப்பதில்லை.  தமிழனைப் பற்றி அக்கறையுடன் செய்தி வெளியிடாத எவருக்கும் என்னுடைய ஆதரவு இல்லை.  வலையில் அமெரிக்க நாளேடுகள் வருவதால், உலகச் செய்திகளுக்கு அவற்றை மட்டுமே நம்பியிருக்கிறேன்.  இங்கிலாந்தின் கார்டியன், அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், சான் ஓசே மெர்க்குரி நியூஸ் இவற்றில் வெளியாகும் செய்திகள் ஓரளவுக்கு நம்பகமானவை.

சிங்களவரின் இன வெறியாட்டம் பற்றிய செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டுமென்றால் அமெரிக்க, இங்கிலாந்து ஊடகங்களைத்தான் நீங்கள் நாட வேண்டும்.  இந்தியாவில் அதைப் பார்க்க முடியாது.  இனி மேல் இந்திய ஆங்கில ஊடகங்கள் மனித உரிமையைப் பற்றி நாயாய்க் குரைத்தாலும் அவற்றை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

அதே நேரத்தில் தமிழ் ஊடகங்களைப் பற்றியும் எனக்கு வருத்தம் உண்டு.  சுனாமி சமயத்தில் வேலை மெனக்கெட்டு உடனுக்குடன் சன் டிவி வரவழைத்தேன்.  ஆனால், சுனாமி பற்றி அவ்வப்போது, துள்ளல் மகிழ்ச்சிக் குரலோடு இத்தனை பேர் சாவு என்று கான்வென்ட் கன்னிகள் புன்னகை செய்தார்களே ஒழிய, வழக்கமான நெடுந்தொடர் குப்பைகளும், குத்தாட்டங்களும் மட்டுமே ஒளி பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் நாளேடுகளோ, பிணங்களை அள்ளிக் குவிப்பதை முழு வண்ணப் படங்களோடு வெளியிட்டு மகிழ்ந்தனர்.  இவர்களின் எவனாவது தன்னுடைய தாய் தந்தையர், உடன் பிறந்தார், குழந்தைகளை அப்படிப் படம் காட்டி வெளியிட்டிருப்பானா?  அதென்ன ஊரார் பிணங்களை மட்டும் போட்டுக் காட்டும் காட்டுமிராண்டித்தனம்?

அதே போல் எப்போது யார் துன்பப்பட்டாலும் குத்தாட்டம் மட்டும் குறையாது.  தமிழ் மக்களுக்கு சீரியல் தொடர் இல்லையென்றால் தலல வெடித்து விடும்.

சீ, இப்படியும் இருக்கிறார்களே ஊடகங்களில் என்று நம்மை நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

எந்த மேலைநாட்டு ஊடகமாவாவது செப்டம்பர் 11ல் இறந்தவர்களின் பிணங்களைப் படம் பிடித்துப் போட்டார்களா?  அவர்களுக்குத் தம் மக்களை எப்படி மதிப்பது என்று தெரியும்.

நம்மை நாமே மதிக்கவில்லை என்றால் எப்படி ஊரானிடம் மதிப்பை எதிர்பார்க்க முடியும்?

சனி, பிப்ரவரி 06, 2010

மானமுள்ள உடன்பிறப்புக்குப் பணிவுள்ள தமிழனின் விடை

மலையாள நடிகர் ஜெயராம் பிதற்றியிருக்கிறார் (தமிழ்ப்பெண்களை அவதூறாக பேசிய நடிகர்).

நடிகர் ஜெயராமின் பிதற்றலில் எண்ணற்ற தவறுகள் உள்ளன.
  • ஒரு முதலாளி தன் வீட்டு வேலைக்காரியைப் பெண்டாள எண்ணுவது
  • ஒரு வேலைக்காரி தமிழ்ப்பெண் என்பதை இழிவாக எண்ணுவது
  • கருப்பான பெண் என்ற நிறவெறியைக் கொண்டிருப்பது
  • எருமை போன்றவள் என்று அவரைப் பழித்தது
என்ற எல்லாமே முட்டாள்தனமான முரட்டுச் செயல்கள்.

  • அப்படிப் பட்ட நடிகனுக்குத் தமிழ்நாட்டில் சென்ற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டலாம்.
  • அவன் படம் ஓடும் திரையரங்குகள் முன்பு மறியல் செய்யலாம்.
  • அவன் வீட்டுக்கு முன் தேர் உயரத்துக்குக் கருப்பு எருமை கட் அவுட் ஒன்றை அவன் முகச்சாயலில்  வைக்கலாம்.

ஆனால், ஒரு சில தமிழர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? ( பார்க்க: 
நடிகர் ஜெயராம் வீடு மீது தீப்பந்தம் ...‎ -

நடிகர் ஜெயராம் வீடு மீது நேற்று மாலை தீப்பந்தம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அலுவலகம் எரிக்கப்பட்டதுடன், காரும் .
... 8 பேர் கைது செய்யப் பட்டனர்.  அவர் டைரக்டரும், நடிகருமான சீமானின் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறினார்கள்...
)

 ஆனால்,  செய்ய வேண்டியதை எல்லாம் விட்டு விட்டு, பொறுக்கித்தனமாக அந்த நடிகன் வீட்டை, அவன் இல்லாதபோது தாக்கி, அலுவலறையை எரித்து, அவன் மனைவி மக்களை மிரட்டுவது தமிழனுக்குப் பெருமை தரும் செயலா என்ன?

இதைச் செய்த பொறுக்கிகள் சீமான் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தினத்தந்தியில் படித்தபோது  வேண்டுமென்றே சீமானின் இயக்கத்தைப் பழிக்கிறார்களோ என்றுதான் நான் முதலில் எண்ணினேன்.

ஆனால், பகலவன் என்பவரின் வலைப்பூவில் இன்று வந்த பதிவு (கருணாநிதிக்கு மானமுள்ள உடன்பிறப்பின் அவசர கடிதம்! ) என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பகலவனின்  சொல்லடிகளிள் சிலவற்றை இப்பதிவின் கீழே போட்டிருக்கிறேன்.

நம்முடைய தன்மானத்துக்குப் போராடுபவர்கள் மற்றவர்களைத் தூற்றுவதும், இழிவான சொற்களைக் கொட்டுவதும் நம் பண்பாட்டுக்கு ஒவ்வாதது என்று யாராவது இந்தப் பகலவனுக்குச் சொல்லவேண்டும்.

இவரது பதிவைப் பார்க்கும்போது, சீமானின் நாம் தமிழர் இயக்கம் இத்தகைய செயலைக் கொண்டாடுகிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

இதற்கும், மும்பையில் வந்தேறிகள் என்று சொல்லி மற்றவர்களை மிரட்டும் தாதாக்களின் செயலுக்கும் என்ன பெருத்த வேறுபாடு உள்ளது?  இப்படி மிரட்டிப் பணம் பறிக்கும் கூட்டம் என்றுதான் நாம் தமிழர் இயக்கத்தின் மீதும் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னர் தங்கபாலு, இப்போது ஜெயராம்.

இருவருமே கண்டிக்கத் தக்கவர்கள்தாம்.

ஆனால், இப்படிப் பட்ட பொறுக்கித்தனமான செயல்களால், அவர்கள் செய்த தவறு அடிபட்டுப் போய் தமிழர்கள் மதிப்புதான் கெடுகிறது.

சீமான், தன் இயக்கத்தின் பெயரை "நாம் தமிழர்" என்று வைத்துக் கொள்ள விரும்பினால், தமிழனுக்கே உரிய பண்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இல்லையேல், "நாம் குண்டர்கள்" என்று வைத்துக் கொண்டு குண்டர் செயலைத் தொடரட்டும்.

ஜெயராமின் சொற்களை விட சீமானின் குண்டர்கள் செயல் நம்மைத் தலை குனிய வைக்கிறது.

சீமானின் குண்டர்கள் செயலைப் போலவே சீமானின் பரப்புரையாளர்களின் தரம் குறைந்த சொற்கள் தமிழன் என்ற அடையாளத்தையே இழிவாக்குகிறது.
உண்மையிலேயே தமிழர்கள் எதிர்காலம் பற்றி அக்கறை கொள்பவர்கள் இவை போன்ற குண்டர் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

ஈழத்தமிழர்களின் நிலை கண்டு துடித்து ஆள்வோரின் சிறுமை கண்டு பொங்கியெழுந்தவர்களுக்குத் தலைமை வகுத்தவர் சீமான்.  அவர், இந்த இளந்தமிழர்களுக்கு நல்ல வழி காட்டாமால் கீழ்த்தரமான செயல்களைக் கண்டிக்காமல் இருப்பது வருந்தத்தக்கது.  தலைமைப் பொறுப்புக்கு ஒவ்வாதது.

இனமானம் வேறு, இனவெறி வேறு.

"தமிழர்கள் பல நாட்டில் வாழ்பவர்கள்...  எல்லா நாடுகளிலும் சிறுபான்மையினர்" என்பார் பேரா. வா. செ. குழந்தைசாமி.  பல நாடுகளில் தமிழர்களும் வந்தேறிகள்தாம்.  அதை உணர்ந்து பொறுப்பாக எழுதவேண்டும், பேசவேண்டும், நடந்து கொள்ளவேண்டும்.

சீமானின் கும்பல்களின் வெறியாட்டத்தையும், இழிசொற்களையும், பண்பாடுள்ள தமிழ் உலகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.



--- On Sat, 6/2/10, பகலவன் wrote:
தமிழ் நாடில் உள்ள உனக்கு முதுகு எலும்பு கிடையாது ,கருநாயே நீ என்னடா இந்த மலையாள நாயை மன்னிக்க. நீ என்ன தமிழர் பிரிதிநிதியா? சொட்ட கருநாய்நிதி. தமிழின துரோகி என எல்லோரும் உங்களை திட்டுவார்கள்.

        நாங்கள் மனமுள்ள சீமானாக இருக்க வேண்டாம்.ஆனால் எங்களை இலவசத்தின் பெயரில் கோமாளியாக அல்லவா வைத்து இருக்கிறிர்கள்.நீங்கள் வாழ்க நீடுடி வாழ்க.கடைசியாக உங்க வாயில் பால் ஊற்ற வேண்டும் என்று இந்த உடன்பிறப்புக்கு ஆசை.முடியுமா தறுதலை தலைவா!