வியாழன், ஏப்ரல் 12, 2012

சித்திரைப் புத்தாண்டும் பை என்ற மாறிலியும்


சித்திரையில் புத்தாண்டா, தையில் புத்தாண்டா என்று வெட்டி மடிபவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே இப்படி ஆண்டுகளைக் கணக்கீடு செய்வது பற்றி ஆராய்ந்து பார்த்திருப்பார்கள்?  தமிழ் இலக்கியங்களில் எப்போது தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்று தேடிப்பார்த்தால், தேடுபவர்களைப் பொருத்து தை, சித்திரை, ஆவணி என்று வெவ்வேறு விடை கிடைக்கும்.  தமிழர்கள் ஆண்டுகளையும், மாதங்களையும், கிழமைகளையும், நாள்களையும் எப்படிக் கணக்குப் போட்டார்கள்?  நமக்குத் தெரியாது.

சித்திரைதான் புத்தாண்டு என்று வாதிடுபவர்களுக்க்குச் சித்திரை வேண்டும் என்பதை விட, தை வேண்டாம் என்பதுதான் முக்கியம்.  கருணாநிதி ஆணையிட்டால் அது நடந்து விடக் கூடாது என்பதற்காக மூர்க்கத் தனமாக எதிர்ப்பவர்களைப் பார்க்கிறேன்.  அதே போல், சித்திரை வேண்டாம் என்பவர்களுக்கும் இது சமஸ்கிருத வெறுப்பு, பார்ப்பன வெறுப்பு, ஜெயலலிதா மீது கடுப்பு என்பவைதான் உந்துதல்.

போகட்டும்.  ஆனால், சித்திரைப் புத்தாண்டைத் தாக்குபவர்கள் ஒரு புராணக் கதையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு இது அறிவியலுக்குப் புறம்பானது;  பழங்குப்பை;  ஆங்கில, திருவள்ளுவர் ஆண்டுகளைப் போலத் தொடர்ந்து வராமல், சுழற்சி முறையில் வருவது முட்டாள்தனம்; என்றெல்லாம் வாதிடுகிறார்கள்.

இயற்கையின் நிலை சுழற்சி நிலைதான்.  இதுதான் முற்கால மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு.  பருவங்கள் சுழல்கின்றன.  பருவநிலையை வைத்து, வானிலையை ஓரளவு கணிக்கலாம்.  அதை வைத்துப் பருவத்தே பயிர் செய்யலாம்.  கதிரவன், கோள்கள், விண்மீன்கள், நிலவு என்று விண்ணில் மிதக்கும் உருவங்களைப் பார்த்து வருங்காலத்தை ஓரளவுக்குக் கணிக்கலாம் என்று மனிதன் கண்டு பிடித்தது மிகப்பெரும் சாதனை.

மேலைநாட்டு (ஆங்கில) ஆண்டு முறை அல்லது கிறித்தவ ஆண்டு முறை ஒன்றும் மிகப்பெரிய அறிவியல் சாதனை அல்ல.  அதிலும் எண்ணற்ற பிழைகள் இருந்தன. 1582ம் ஆண்டில் போப் கிரெகொரி ஆட்சியில்தான் பிழைகளைத் திருத்தி இன்றைய நிலையை எட்டி இருக்கிறார்கள். (http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar)

தமிழ் ஆண்டு முறை நிச்சயமாக வடவர்களிடமிருந்து இரவல் வாங்கியதுதான்.  இதில் ஐயம் இல்லை.  இன்றைக்கு நாம் பெரும்பாலும் கிரெகொரியன் ஆண்டு முறையைத்தானே பின்பற்றுகிறோம்.  அது எப்படி நமக்கு வசதியாக இருக்கிறதோ, அதே போல்தான் பழங்காலத் தமிழர்கள் வடவர்களிடமிருந்து ஆண்டு முறையை வாங்கிக் கொண்டார்கள்.  அநத ஆண்டுப் பெயர்களுக்கு எவரோ புராணக் கதையைக் கற்பித்ததால் மட்டும் அது அறிவியலுக்குப் புறம்பானது ஆகாது.

திருவள்ளுவர் ஆண்டு முறை என்று சொல்லும் முறையும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது ஆகாது.  முதலில், திருவள்ளுவர் ஆண்டு முறை என்பதே 20ம் நூற்றாண்டில் படைத்ததுதான்.  இது வடவர்களின் சுழற்சி ஆண்டு முறையை மறுத்து, மேலையர்களின் தொடர்ச்சி ஆண்டு முறையைப் பின்பற்றி, திருவள்ளுவரின் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னால் என்று கணித்து, தை முதல் நாளை ஆண்டின் முதல் நாளாய்க் கொண்டு வருவது.  திருவள்ளுவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதற்குச் சரியான அறிவியல் சான்றுகள் ஏதும் நம்மிடம் இல்லை.  தமிழறிஞர்களுக்கும் தெரியாது.  தற்காலத் தமிழறிஞர்கள், திருவள்ளுவரின் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை எனக் கணிக்கிறார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு எப்படி ஒரு ஆண்டு முறையை அறிவியலின் அடிப்படையில் அமைக்க முடியும்?  சரி, திருவள்ளுவருக்கு முன்னர், சங்கத் தமிழர்கள் எந்த ஆண்டு முறையைப் பின்பற்றினார்கள்? இந்தத் தொடராண்டு முறையின் சிக்கலே அதுதான்.  ஏதாவது ஒரு புள்ளியில் இருந்து கணக்கிட வேண்டும்.  அந்தப் புள்ளிக்கு முன்னால் என்ன என்று கேட்டால் திணற வேண்டும்.

சரி அதை விடுங்கள்.  வடவரிடமிருந்து இரவல் பெற்ற இந்து ஆண்டு முறைக்கு வருவோம்.  அது என்ன பெரிய அறிவியல் முறையில் கணித்ததா என்று கேட்டால், ஆமாம், நிச்சயமாக என்று சொல்லலாம். தமிழர்கள் பின்பற்றும் இந்து ஆண்டு முறை, சூரிய சித்தாந்தம் என்ற நூலின் அடிப்படையில் அமைந்தது.  இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கூகிள் நூல் தொகுப்பில் கிடைக்கிறது. (http://books.google.com/books?id=bPUXKcHQw2EC&pg=PA2&dq=surya+siddhanta&hl=en&sa=X&ei=qUSHT5uwIcfniALh08CyAg&ved=0CFIQ6AEwBw#v=onepage&q=surya%20siddhanta&f=false) ஆர்வமுள்ளவர்கள் தரவிறக்கிப் படியுங்கள்.  ஆண்டு முறை வரிசையைப் பிழையில்லாமல் துல்லியமாகக் கணக்கிடுவது எளிதல்ல.  மேலை நாட்டவர்கள் 1500 ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த முறையை 1582ல்தான் திருத்தினார்கள்.  இந்து ஆண்டு முறையை வழி வகுக்கும் சூரிய சித்தாந்தம் ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் படைத்துப் பின்னர் பலர் அதைத் திருத்தி 12ம் நூற்றாண்டுக்குள் முறைப் படுத்தப் பட்டது என்கிறது விக்கிப்பீடியா (http://en.wikipedia.org/wiki/Surya_Siddhanta).

அதில் இருக்கும் குறிப்புகள் அது எழுதப்பட்ட காலத்தில் உலகின் அறிவியல் உச்சத்தைத் தொட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. காலக்கணக்கை மிகத் துல்லியமாகவே கணக்கிட்டிருக்கிறது.  அந்தக் கணக்குகள் அலுப்புத் தட்டுபவை என்பவர்களுக்கு வேறு ஒரு கொசுறு கொடுக்கலாம்.

உலகம் உருண்டையா தட்டையா என்று மேலைநாடுகள் வெகுகாலம் தடுமாறிக் கொண்டிருந்தன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  எகிப்தியர்களும், கிரேக்கர்களும் உருண்டையான உலகத்தின் சுற்றளவைப் பண்டைக்காலத்திலேயே அளவிடக் கற்றுக் கொண்டிருந்தாலும், இடைக்கால ஐரோப்பியர்களுக்கு அதெல்லாம் மறந்து விட்டிருந்தது.  உலகம் தட்டையானது என்று கிறித்தவப் பாதிரிமார்கள் கற்பித்ததை 16ம் நூற்றாண்டில் கலிலியோ பிறந்துதான் மறுதலிக்க வேண்டியிருந்தது. அப்படிச் சொன்னது தெய்வக் குற்றம் என்று கிறித்தவ மதகுரு அவரைத் தள்ளி வைத்தார்.

ஆனால், சூரிய சித்தாந்தம் கோள்களின் நிலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போகும் போது, போகிற போக்கில் பூமியின் விட்டத்தையும், சுற்றளவையும் கணக்கிடச் சூத்திரம் தருகிறது.  அதாவது பூமி உருண்டையானது என்பதை இயல்பாக எடுத்துக் கொள்கிறது. இது ஒன்றும் தெய்வக் குற்றம் இல்லை.

பூமியின் விட்டம்  = வி =
பூமியின் சுற்றளவு = சு =  வர்க்கமூலம் (_/10 * வி),

அதாவது பை என்ற மாறிலியை பத்தின் வர்க்க மூலம் அல்லது 1.3163 என்று எடை போட்டிருக்கிறார்கள்.  பிறகு, சைன், கோசைன் பட்டியல்களின் மூலம் இதை இன்னும் திருத்தி பை என்ற மாறிலி (10800/3438) அல்லது 3.14136 என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நீங்கள் கூகிளில் pi என்று தேடினால் 3.14159265 என்ற விடை வரும். பண்டைய இந்தியர்கள் இவ்வளவு துல்லியமாக சைன், கோசைன் பட்டியல் மட்டுமல்லாமல், பை என்ற மாறிலியையும் கணித்ததால்தான், அவர்களால் ஆண்டு முறையில் பிழை அவ்வளவாக இல்லாமல் கணக்கிட முடிந்தது.  இதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை என்று புறந்தள்ளுவது பொருத்தமற்றது.

சரி, சரி, இதெல்லாம், பாட்டி கதை.  இப்போதுதான் அணுக்கடியாரமே வந்து விட்டதே.  இன்னும் ஏன் இதைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று கேட்கலாம்தாம்.  இன்றைய தமிழ் ஆண்டு முறையும் இந்திய அரசின் ஆண்டு முறைக் கணக்கோடு இணங்கி அணுக்கடியாரக் கணக்கை எல்லாம் ஏற்றுக் கொண்டு பஞ்சாங்கம் பார்ப்பதுதான்!  பழைய பஞ்சாங்கத்தை விடுங்காணும்.  இந்தச் சுழற்சி முறையை ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும், அதிலும் ஏன் விக்கிரம, சக ஆண்டு என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று கேட்கிறீர்களா?  சரி, வடநாட்டு மன்னர்கள் பெயரில் இருக்கும் ஆண்டு முறை வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள்.  திருவள்ளுவர் போலச் சரியான காலம் கணக்கிட முடியாத தமிழ்ப் புலவர்களை விட்டு விட்டு, அதியமான், பாரி போன்ற தமிழ்ப் பெருவள்ளல்களின் காலக் கணக்கை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்களேன்?

அது என்ன 60 ஆண்டு சுழற்சி?  அது வியாழன் என்ற கோள் ஒரு முறை கதிரவனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்.  அதை இந்துக்கள் மட்டுமல்ல, சீனர்களும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்ப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.  பருவகாலம் போல், இந்தச் சுழற்சி முறையிலும் வானிலைக் குறிப்புகள் பொதிந்திருக்கின்றன.  “தாது வருஷப் பஞ்சம்” என்பது போல ஆண்டின் பெயரை வைத்து ஆண்டுப் பலன்களைச் சொல்பவர்கள், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடந்து வந்திருப்பவற்றை வைத்துப் பலன் சொல்லுகிறார்களா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தச் சுழற்சிகள், இன்னும் எத்தனை எத்தனை வட்டங்களுக்குள்ளோ, வெளியோ விரிந்து போகின்றன என்று பார்க்க வேண்டும். எல் நினோ(El Nino), லா நினா (La Nina) போன்ற பெருநீரோட்டங்கள் உலகளாவிய வானிலையைப் பாதிப்பது போல் இன்னும் என்னென்ன சுழற்சிகள் இருந்திருக்கின்றன என்று ஒப்பு நோக்க வேண்டும்.

தற்காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் சித்திரைத் திருநாளைக் கொண்டாடிவிட்டு, மேம்போக்காகப் பலன் பார்ப்பதோடு சரி.  சுழற்சி முறை, தொடர்ச்சி முறை, என்பதை எல்லாம் வேறுபடுத்திப் பார்ப்பதெல்லாம் மறந்தாகி விட்டது.  ஆங்கில ஆண்டு முறைதாம் நம் வாழ்க்கை என்றாகி விட்டதே.  நம்மவர்கள் முறைகள் எல்லாம் மூட நம்பிக்கை என்று புறந்தள்ளுகிறோம்.  புராணக் குப்பைகளுக்குள்ளும் வைரங்கள் ஏதாவது புதைந்திருக்கின்றனவா என்று பகுத்து அறிவோமே!

கொண்டாடுபவர்களுக்கு, இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

வியாழன், ஜனவரி 19, 2012

இந்தியா ஒரு வாழைக் குடியரசா?


"தினமலர் தொடர்ந்து கூடங்குளப் போட்டங்களுக்கு எதிரான நிலையை எடுத்துவருகிறது தெரிந்ததே. (பிற மக்கள் போராட்டங்களையும் அவர்கள் கொச்சைப்படுத்தி சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளனர்). எனவே தினமலரில் ‘மட்டும்‘ வரும் இத்தகைய செய்திகளை கவனத்துடன் வாசித்து அவற்றின் வரிகளுக்கிடையேயும் வாசிக்கக் கற்றுக்கொள்ளுவது அவசியம்." என்று எழுதுகிறார் சிறில் அலெக்ஸ்.

அவரது கட்டுரை (http://www.tamilpaper.net/?p=5425  ) சொல்லும் கருத்துகளை நாம் கவனிக்க வேண்டும்.


“மிக இயல்பாகவே இதுபோன்ற நிகழ்வுகளில் நாம் அதிகார பலம் பொருந்திய அரசின் பக்கம் நிற்க தலைப்படுகிறோம். ‘நாமே அரசு‘ என்பததைப் போன்றதொரு எண்ணம் நமக்குள்ளது. அதுவே, நம் அரசு தந்திரமாக வெளியிடும் இத்தகைய செய்திகளை நம்பவும் வைக்கிறது. உண்மையில் நாம் பொதுமக்களின் பக்கம் இருக்கும் நியாயங்களையும் புரிந்துகொள்ள முயலவேண்டும். இத்தகைய செய்திகளைப் பகிர்வதன் மூலம் ஒரு வீணான சந்தேகம் பரவ நாம் வழிவகுக்கிறோம். அதைவிட மேலாக இவற்றை அப்படியே நம்புவதன் மூலம் இதுபோன்ற சூழ்ச்சிகள் நிலைக்கவும், இன்னொரு தருணத்தில் நம்மையே குறிவத்து தாக்கவும் வழிவகுக்கிறோம். பல வேளைகளில் நமக்கு போதுமான தகவல்கள் கிடைப்பதில்லை என்பதும் உண்மையே. அப்படி இருக்குமேயானால் நாம் அமைதி காத்திருப்பதே நன்மை பயக்கும் என்பேன்.” என்று ஆணித்தரமாகத் தம் கட்டுரையை முடிக்கிறார்.

கூடங்குளம் போராட்டம் இந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் ஒரு புதிய ஏடு.

அணுசக்தி, அணுக்குண்டு, போன்ற செய்திகளில் 1960கள் முதல் இது ஏதோ மகத்தான சாதனை போன்ற ஒரு மலைப்பு மக்களுக்கு இருந்து வந்திருக்கிறது.  இந்திரா காந்தியின் ஆட்சியில் முதன்முதலாக இந்தியா அணுக்குண்டு வெடித்த போது ஏதோ ஒரு பிரம்மாஸ்திரத்தைப் பெற்று விட்டது போன்ற ஒரு பெருமகிழ்ச்சி ஏனைய மக்களைப் போலவே எனக்கும் இருந்தது.  கல்பாக்கம் அணு உலையைக் கட்டிக் கொண்டிருந்த போது, எங்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் ஏதோ புனிதத்தலத்துக்குப் போவது போல போய் வந்தேன்.  அவர்கள் அதில் என்னென்ன செய்யப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது படித்து முடித்தவுடன் இந்தியாவின் அணுசக்திக் குழுமத்தில் சேர்ந்து “தொண்டாற்ற” வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.  பட்ட மேற்படிப்புக்கு  நான் அமெரிக்கா சென்ற போது என் கல்லூரித் தோழன் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் போய்ச் சேர்ந்தான்.

நான் அமெரிக்கா சென்ற சில மாதங்களில் அணுநிலையத்தில் விபத்து பற்றிய  “சைனா சிண்ட்ரொம்” என்ற திரைப்படம் வந்தது.  அது வந்த இரண்டு வாரங்களுக்குள் அந்தப் படத்தில் காட்டிய படியே உண்மையிலேயே ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது.  திரீ மைல் ஐலண்டு என்ற இடத்தில் இருந்த அணு உலை கட்டுக்கடங்காமல் போகும் என்ற பரபரப்பு (http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident) அப்போது ஏற்பட்டது.  கல்லூரியில் எனது ஆய்வுக்கூடத்துக்குக் கீழே ஒரு ஆய்வு அணு உலையை வைத்திருந்தார்கள்.  அது அப்போது செயலிழந்த நிலையில் இருந்தது.  இருந்தாலும், திரீ மைல் ஐலண்டு வெடித்தால் நாங்கள் தப்பிச் செல்ல எங்கே போக வேண்டும் என்றெல்லாம் தொலைக்காட்சியில் அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்ததால், கல்லூரி அணு உலை பற்றியும் உள்ளூர் மக்களுக்கு ஐயம் ஏற்பட்டது.  அந்த உலையால் எந்த ஆபத்தும் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் பேராசிரியர்கள்.  உண்மையில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டால் அதைக் கட்டுப் படுத்தக் கொடுத்திருந்த அறிவும், பயிற்சியும் போதுமானதல்ல என்பது எனக்குப் பின்னால்தான் உறைத்தது.

தொழிற்சாலைகளில் விபத்துகள் நேரிடுவது பற்றிய அக்கறையும், அவற்றைத் தடுப்பது, அவற்றைக் கட்டுப் படுத்துவது, அவற்றிலிருந்து மீள்வது என்பதெல்லாம், பொறியியல் துறையிலும் ஒரு ஆழ்ந்த தனித்துறை.  விபத்துகள் நேரவே நேராது என்று நெருப்புக்கோழி போல மண்ணில் தலையைப் புதைத்து வைத்துக் கொண்டிருந்தால், ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய இயலாது.  ஒரு சாதாரண வேதித் தொழிற்சாலை விபத்துகளையே பொறுப்புடன் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளும், பயிற்சியும், அதற்கேற்ற எச்சரிக்கை மணிகளையும் வைத்துக் கொள்ளக் கவலைப் படாத நாடு இந்தியா.  போபால் தொழிற்சாலையில் விபத்து நேர்ந்த போது அதில் அன்று வேலை செய்து கொண்டிருந்த இளம் பொறியாளர்களில் ஒருவர் எனது வகுப்புத் தோழர்.

கல்லூரிகளில் படித்து, நாம் செய்யும் எதிலும் பிழையே இருக்காது, இருந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமை நம்மிடம் உண்டு என்ற திமிர்த்தனம் பெரும் பல்கலைகளில் நன்றாகப் படித்த என்னைப் போன்ற மாணவர்களுக்கு உண்டு.  இந்த அசைக்க முடியாத நம்பிக்கையை திரீ மைல் ஐலண்டும் போபாலும் அடியோடு தகர்த்து விட்டன.

மனிதர்கள் கட்டும் எதுவும் பிழையற்றதல்ல.  மனிதர்கள் கடவுளர்களல்லர்.  அவர்களால் எல்லாவற்றையும் எதிர்பார்த்து அதற்கேற்பக் கட்டுப் படுத்த முடியவே முடியாது.  முதலில் இதை ஏற்றுக் கொள்ளும் அடக்கத் தன்மை வேண்டும்.  இந்த அடக்கத்தன்மை இல்லாமல், குறை சொல்பவர்கள் முட்டாள்கள் என்று எங்கெங்கே பொறியாளர்களும், கம்பெனிகளும், அரசுகளும் பறை சாற்றுகின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் கவலைப் பட வேண்டும்,  நிரம்பக் கவலைப் பட வேண்டும்.

உலைகள் பழுதாகும்.  மனிதர்கள் பிழை செய்வார்கள்.  எதிர்பாராதவை நடக்கும்.  இவற்றைக் கண் குத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  ஆலைகளைச் சுற்றி எண்ணற்ற வளையங்களை வைத்திருக்க வேண்டும், ஒவ்வொரு வளையத்திலும் விபத்து நடந்தால் என்ன அடையாளம் வெளியே தெரியும் என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  அணு ஆலைக்கு அருகே ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால் அது எச்சரிக்கைகளையும் கடந்து ஏதோ நடந்திருக்கிறதா என்று தீவிரமாக ஆராய வேண்டும்.

அணு ஆலைக்கு அருகே உணவுப் பொருள்களைச் சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  வளையங்களுக்கு  இடையே நுண்ணிய வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  மக்களுக்கு புற்று நோய் வருகிறதா, அவர்களுக்கும் ஆலைக்கும் என்ன தொடர்பு என்று பார்க்க வேண்டும்.  இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளைச் செய்பவர்கள் அணு ஆலைக்குத் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.  ஆலைக்குள் பணியாற்றுபவர்களால் தாங்கள் செய்யும் பிழைகளை ஏற்றுக் கொள்ளவே இயலாது.  இது மனித இயல்பு.  அதிலும் அரசு நடத்தும் ஆலைகளுக்குத் தனிச்சிக்கல் என்னவென்றால் அவர்களால் என்றுமே தாங்கள் நடத்தும் ஆலைகள் நஞ்சைக் கக்குகின்றன என்று ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஆலை உரிமையாளர்கள் பெரும்பாலோரின் தன்மை.

விமானப் பறப்பின் விபத்துகள் பற்றிக் காரசாரமாக விவாதித்தார்கள் நண்பர்கள்.  அமெரிக்காவில் அரசு விமான நிறுவனங்களை நடத்துவதில்லை.  ஆனால், விமான நிலையங்களையும் விமானங்களையும் கண்காணிக்கும் பொறுப்பு காவல் துறையைப் போல அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.  இப்படிப் பொறுப்பைப் பிரித்து வைத்து பல்வேறு முறைகளில் கண்காணித்தாலும் விமான விபத்துகள் ஏற்படுகின்றன.  விபத்தின் பின் அதை ஆராய்ந்து பரிந்துரைகளைக் கொடுக்கும் துறை தனித்துறை.  இப்படி அவர்கள் கண்காணித்து வருவதால்தான் விமானப் பறப்பு ஓரளவுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறது.

ஆனால், அணு ஆலைகளைப் பற்றிய ஆய்வுகள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வந்து விட்டால், யாராலும் பிழைகளைக் கண்டறிந்தோ, அல்லது களைந்து திருத்தியோ செயல்பட முடியாது.  இது வரை இந்தியா கட்டியிருக்கும் அணு ஆலைகளின் முக்கிய நோக்கம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதல்ல.  அவை, இந்தியா அணுகுண்டு தயாரிக்கத் தேவையான எரிபொருள்களை உற்பத்தி செய்யும் நோக்கில்தான் கட்டப்பட்டன.  அதனால்தான், தேசியப் பாதுகாப்புச் சட்டம் அவற்றைப் பாதுகாக்கிறது.

கூடங்குளம் அப்படிப் பட்ட ஆலை அல்ல.

அதில் இருந்து கழிவுகளைக் கூட இந்தியாவால் கடத்த முடியாது.  கூடங்குளம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கென்றே உருவாக்கப் பட்ட ஆலை.  அதைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது அதைக் கட்டியவர்களையும், அதை நடத்துபவர்களையும் பாதுகாக்கும் வெற்றுத்திட்டம்தான்.  இது போன்ற ஆலைகளை அங்கு வாழும் மக்களின் எதிர்ப்புக்கு இடையே கட்டி நடத்துவது என்பது சர்வாதிகார நாடுகளிலும், மக்களைப் பற்றிக் கவலைப் படாத முதலாளித்துவ நாடுகளின் குடியேற்றப் பகுதிகளும் மட்டுமே நடக்கும்.  மக்களாட்சி என்று பறை சாற்றிக் கொண்டே மக்களின் உரிமையை மீறுவது அவர்களது போலி முகத்திரைகளைக் கிழித்து விடும்.

இந்தியா ஆதிக்க நாடுகளுக்கு ஏவல் செய்யும் வாழைக் குடியரசா இல்லை, இந்தியர்கள் நிம்மதியாக வாழும் குடியரசா என்பது கூடங்குளத்தில் அரசுகளின் நடவடிக்கைகளில் இருந்து தெரிந்து விடும்.

ஞாயிறு, ஜனவரி 15, 2012

சென்னைப் புத்தகக் காட்சி 2012ல் இதுவரை நான் வாங்கிய நூல்கள்:

சென்னை புத்தகக் காட்சி 2012க்கு நான் இதுவரை இருமுறை சென்றாயிற்று.

முதல்முறை கையில் தூக்கி வர முடிந்தவரையில் வாங்கினேன்.  இரண்டு மணி நேர நடையில் பாதிக் காட்சி கூடப் பார்க்க முடியவில்லை.  ஆங்கிலப் பதிப்பகங்களை முழுக்க முழுக்க ஒதுக்கி விட்டேன்.  பெருவணிகப் பதிப்பகங்களில் நெரிசல் கூடுதலாக இருந்ததால் எட்டிப் பார்த்து விட்டு ஒதுங்கி விட்டேன்.  அதிலும் நான் வாங்கக் கூடிய புத்தகங்களைப் பெருநிறுவனங்கள் வெளியிடத் தயங்கலாம்.  ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைப் பதிப்பகங்களையும் எட்டிப் பார்த்தேன்.  அவற்றோடு ஒப்பிடும்போது சென்னை, மதுரை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பகங்கள் எவ்வளவு பின் தங்கியிருக்கின்றன என்பதற்கு ஒரு அளவுகோல் வேண்டாமா?  அதுதான்.  நாம் பல நூற்றாண்டுகள் பின் தங்கியிருக்கிறோம் போலிருக்கிறது.

நல்ல ஆராய்ச்சி நூல்களைத் தக்க முறையில் பிழையில்லாமல் வெளியிட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களால்தான் முடிகிறது.  இந்திய அரசின் வெளியீடுகள் நல்ல தரத்தில் இருந்தாலும், பத்து இருபது ஆண்டுகளுக்குள் அவை நிலை குலைந்து போய் விடுகின்றன.  நான் அவர்களிடமிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அச்சடித்த, 30-50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட நூல்களைத்தான் வாங்க நேரிட்டது. இந்த நூல்களையும் வெளிநாட்டுப் பதிப்பகங்கள் போல் நல்ல தரமான பதிப்பில் வெளியிடும் நாள் வராதா என்று காத்திருக்க வேண்டியிருக்கிறது.

முன்னெப்போதையும் விட இப்போது படிப்பவர்களும், நூல்களைச் சொந்தமாக விலை கொடுத்து வாங்குபவர்களும் கூடியிருக்கிறார்கள்.  தமிழிலேயே உயர்ந்த விலையில் தரமான தாளில் அச்சிட்டு வெளியிடும் பதிப்பகங்கள் வந்துள்ளன.  அதனால், என் ஆசை நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இது வரை 50 நூல்களை வாங்கியுள்ளதாகப் பட்டியல் போட்டுள்ளேன்.  வீடு நிறையப் புத்தகங்களைக் குவித்து வைத்திருப்பதால், மேலும் புத்தகங்களை வாங்கிக் குவிக்கும்போது ஆராய்ச்சி மணி அடிப்பது கேட்கிறது. 

”சரி, சரி, வாங்கன புத்தகத்துல எத்தனை புத்தகத்தைப் படிச்சு முடிச்சிட்டீங்க? என்ன கேள்வி கேக்கலாமா? தேர்வுக்குத் தயாரா? எல்லோரும் அறிஞர், பொறிஞர்னு சொல்றாங்களாமே? எங்க என் டெஸ்ட்லே பாஸ் பண்ணுங்க பாப்போம்?”  என் வாழ்க்கைத்துணை நலம் அன்புடன் கேட்கிறார். :-)

”சரி, சரி, நீ இது வரை வாங்கிய துணியை எல்லாம் உடுத்துவதற்குள் நான் வாங்கிய புத்தகங்களைப் படித்து விடுவேன்!” என்று “நகைச்சுவை” ததும்ப புத்திசாலித்தனமாய்ப் பதில் சொன்னேன்.

“யோவ், இது உனக்கே ரொம்ப ஓவராய்த் தெரிய்ல?” என்று முறைத்து விட்டுக் கிளம்பினார் இல்லத்தரசியார்.

சூடு கொஞ்சம் கூடுதலாய் இருந்ததால், காப்பி போடக் கேட்கும் சமயம் இதுவல்ல என்று என் மரமண்டைக்கும் உறைத்து. :-)

சரி, சரி, உங்கள் வீட்டுச் சண்டை புராணம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம், என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று நீங்கள் கேட்பதும் காதில் விழுகிறது.

இதோ அந்தப் பட்டியல்.

சென்னைப் புத்தகக் காட்சி 2012ல் இதுவரை நான் வாங்கிய நூல்கள்:



1. காவல் கோட்டம், சு. வெங்கடேசன், தமிழினி பதிப்பகம்
2. அ. முத்துலிங்கம் கதைகள், அ. முத்துலிங்கம், தமிழினி பதிப்பகம்
3. சிலம்பின் காலம், இராம கி., தமிழினி பதிப்பகம்
4. பண்டைத் தமிழ் எழுத்துக்கள், தி. நா. சுப்பிரமணியன், உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
5. தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும், புலவர் கோவேந்தன், வேமன் பதிப்பகம்
6. தமிழ் எழுத்தின் வரிவடிவம், சி கோவிந்தராசனார், உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
7. இராசேந்திரசோழன் வெளியிட்ட எசாலம் செப்பேடுகள், ச கிருஷ்ணமூர்த்தி, உலகத்தமிழாராய்ச்சி நிலையம்
8. சோழர் காலச் செப்பேடுகள், மு. ராஜேந்திரன், அகநி வெளியீடு
9. தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதிகள் 1, 2, ச கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம்
10. கல்வெட்டுகள் கூறும் உண்மைகள், தி வை சதாசிவ பண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம்
11. கல்வெட்டுகளில் கன்னித்தமிழ், கவிக்கோ ஞானச்செல்வன், தென்றல் நிலையம்
12. கல்லெழுத்துக்கலை, நடன காசிநாதன், மணிவாசகர் பதிப்பகம்
13. கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி, சி கோவிந்தராசன், மதுரை காமராசர் பல்கலை
14. எழுத்தியல், சூ இன்னாசி, பாரி புத்தகப் பண்ணை
15. நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும், அ தாமோதரன், (இ)க்ரியா
16. கணக்கதிகாரம், Institute of Asian Studies
17. Build your Web Home, Nayyar and Sharma, NISCOM, Govt. of India
18. உங்கள் வெப் ஹோம் உண்டாக்குங்கள், ஷர்மாவும் நைய்யரும், இந்திய அரசு
19. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே கே பிள்ளை, உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
20. தமிழ்நாட்டு வரலாறு பாண்டியப் பெருவேந்தர் காலம், தமிழ் வளர்ச்சித்துறை
21. அரங்கேற்றுகாதை ஆராய்ச்சி, வெ மு ஷாஜகான் கனி, உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
22. தொல்லியல் நோக்கில் காஞ்சிபுர மாவட்டம், ச கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம்
23. சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், உ.வே.சா. நூல்நிலையம்
24. பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், உ.வே.சா. நூல்நிலையம்
25. குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சா. நூல்நிலையம்
26. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம்
27. தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு, இராசு பவுன் துரை, மெய்யப்பன் பதிப்பகம்
28. தஞ்சை இராஜராஜீஸ்வரம் விமானத் திருக்கற்றளி கட்டடக்கலை மரபு, இராசு பவுன் துரை, மெய்யப்பன் பதிப்பகம்
29. தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம், நடன காசிநாதன், மெய்யப்பன் பதிப்பகம்
30. சமணத்தடயம் (தொகுப்பு), பதிப்பாசிரியர்கள் நடன காசிநாதன், மா சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம்
31. நடுநாட்டுச் சமணக்கோயில்கள், த ரமேஷ், மெய்யப்பன் பதிப்பகம்
32. தமிழில் சொல்லாக்கம், ச இராசேந்திரன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
33. சங்கு, ந அதியமான், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
34. நிகமம், அதியமான், துளசேந்திரன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
35. A Glossary of Standardized Technical Terms in Linguistics English-Tamil, Rangan & Chandrasekaran, Tamil University, Thanjavur
36. Tamil Cultural Connections across the world, V Selvakumar, Tamil University, Thanjavur
37. ஊழிக்கூத்து, வெளி ரங்கராஜன், ஆழி பதிப்பகம்
38. காண முடியாக் கனவு, ரவிக்குமார், ஆழி பதிப்பகம்
39. எனது ஊர் நூல்வரிசை - வேலூர், மா குணசேகரன், ஆழி பதிப்பகம்
40. ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம், சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகம்
41. Devadasi System in Medieval Tamil Nadu, K Sadasivan, அகநி வெளியீடு
42. Foreign Notices of South India, K A Nilakanta Sastri, University of  Madras
43. சி என் அண்ணாதுரை - நவபாரதச் சிற்பிகள் தொடர், பி. சி. கணேசன், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்,  இந்திய அரசு
44. Ajanta Murals, Ed. Ghosh, Ph. Tiwari, Arch. Survey of India, 1996
45. South Indian Paintings, C Sivaramamurti, Publications Division,  Government of India, 1994
46. Some Aspects of Indian Culture, C Sivaramamurti, Publications Division,  GoI, 1994
47. Vijayanara Paintings, C Sivaramamurti, Publications Division, GoI, 1985
48. Guler Painting, Randhawa and Randhawa, Publications Division, GoI, 1982
49. Kangra Paintings on Love, Randhawa, Publications Division, GoI, 1994
50. பாலாவின் அரசியல் கருத்துப்படங்கள், கார்ட்டூனிஸ்ட் பாலா, குமுதம் பதிப்பகம்

ஞாயிறு, அக்டோபர் 23, 2011



முன்னொரு காலத்தில், இமயமலையருகே இதேகாசுரன் என்று ஓர் அசுரன் இருந்தான். அவன் சின்னம் கைச்சின்னம். அவன் இமயமலைக்கும் வடக்கே காக்கஸாசுரன் என்ற ஓர் அசுரனுடன் நட்பு வைத்திருந்தான். சுத்தியும் அரிவாளும் என்ற சின்னத்தை வைத்திருந்த காக்கஸாசுரனுக்குத் தம் மக்களைக் காக்க நிறைய செல்வம் தேவைப் பட்டது. அவன் தன் நாட்டில் நிறைய இடங்களில் அணுவாசுர பூதங்களைக் கட்டிப் போட்டு அவற்றின் சாற்றில் இருந்து சக்தி உருவாக்கித் தன் நாட்டை நடத்திக்கொண்டிருந்தான்.


செர்நோபில் என்ற இடத்தில் இருந்த பூதம் கட்டவிழ்ந்து விடவே அந்த இடத்தில் பெருத்த சேதம் ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, காக்கஸாசுரனின் அணுவாசுர பூதங்களைக் கட்டிப் போட முடியும் என்று யாருமே நம்பவிலலை. எனவே காக்கஸாசுரன் இதேகாசுரனோடு ஓர் ஒப்பந்தம் போட்டான். அந்த ஒப்பந்த்தின் படி இதேகாசுரன் இமயவானையும், குமரித்தாயையும் வேண்டி நீங்கள் இருவரும் கூடினால் ஓர் அசுரக் குழந்தையைப் பெற முடியும், அந்தக் குழந்தையின் சக்தியால், நாடே செழிப்புறும், எனவே எனக்கு இந்த வரத்தைத் தரவேண்டும் என்று காக்கஸாசுரன் கொடுத்த அணுவாசுரப் பூதத்தின் இரத்தத்தால் இமயவானை அர்ச்சித்தான்.


இதேகாசுரனின் பக்தியால் மகிழ்ச்சி அடைந்த இமயவான் என்ற தேவர் தலைவர் குமரி என்ற அசுர இளவரசியோடு கூடினார். அவர்கள் கூடிய குளத்தில் ஓர் அணுவாசுரக் குழந்தை பிறந்தது. அது செர்நோபில் பூதத்தின் மறுபிறவியாய் இருந்தது. அதை இதேகாசுரன் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தான். இதேகாசுரன் தூங்கும்போது அதைப் பாஜகாசுரன் பார்த்துக் கொண்டான். இவர்கள் இருவரும் அதை 23 ஆண்டுகள் வளர்த்து வந்த பின்னால், கூடங்குள அணுவாசுர பூதம் தன் முதல் எரிமூச்சை விடத் தயாராக இருந்தது. அதற்கு முன்னால் இந்தப் பூதத்தைக் கட்டி வைத்துக் காப்பாற்ற வந்த அசுரப் படையினர் இந்தப் பூதத்தோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அங்கு வாழ் மக்களுக்குக் கற்பித்தனர். 


அதே நேரத்தில் சூரியன் தோன்றும் கடலுக்கு அருகே, வெகு தொலைவில், நிப்பான் நாட்டில் புக்குசிமா நகரத்தில் கட்டிப் போட்டிருந்த அணுவாசுரனின் தொல்லை பொறுக்காமல் பூமாதேவி அதிர்ந்தாள். அவள் சீற்றத்தால் நடுங்கிய வருணபகவான் பெருங்கடலில் இருந்து அலை அலையாய்க் கிளம்பி புக்குசிமா பூதத்தைத் தாக்கினார். இந்தத் தாக்குதலைத் தாங்க முடியாத புக்குசிமா பூதம் வெடித்துக் கிளம்பியது. தன் ஆலகால விஷத்தைக் காற்றிலும் நில்த்திலும், நீரிலும் நிறைத்தது. அந்த விஷம் தாய்ப்பாலிலும் கலக்க, பச்சிளங்குழந்தைகளும் தாய்ப்பால் குடிக்க முடியாமல் திணறினார்கள். அவர்களின் அழுகை ஏழுகடல், ஏழு மலை, ஏழு நிலம் தாண்டி கூடங்குளத்திலும் எதிரொலித்தது.


கூடங்குளத்து மக்கள் அதிர்ந்து போனார்கள். அணுவாசுரக் குழந்தையால் தம் நாட்டில் பாலும் தேனும் பரவி நாடே செல்வச் செழிப்பாய் இருக்கும் என்று எண்ணி இருந்தவர்களுக்கு அணுவாசுரனின் நச்சுத்தன்மை புரியத் தொடங்கியது. ஊர்மக்கள் எல்லோரும் கூடித் தம்மைக் காப்பாற்ற வேண்டி நோன்பு நோக்கத் தொடங்கினார்கள். லலிதாம்பிகை கண் திறப்பாளா என்று தவம் கிடந்தார்கள். இதேகாசுரனிடமிருந்து விடிவு கிடைக்காது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். லலிதாம்பிகை கடைக்கண் காட்டினால் போதும் அணுவாசுரனை அடக்க முடியும் என்றும் அவர்களுக்குத் தெரியும். 


அம்மாவோ இரங்கவில்லை. ஆனால், மக்களின் தீவிரமான விரதம் அம்மாவின் மனத்தைச் சற்று இளக்கியது. அணுவாசுரனை உயிர்ப்பிப்பதற்குத் தடையாக அம்மாவின் கவசம் துணை புரிந்தது. மக்களுக்கு இது மட்டும் போதவில்லை. அணுவாசுரனை முற்றும் வதை செய்ய மாட்டாயா அம்மா என்று மன்றாடினார்கள் மக்கள்.


மக்கள் உறுதியாய் நிற்பதைக் கண்டு இதேகாசுரன் கலங்கினான். அணுவாசுரனை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள் என்று தூற்றத் தொடங்கினான் மோகனசிங்காசுரன். பாஜகாசுரன் உடனே அணுவை எதிர்ப்பவர்கள் காக்கஸாசுரனின் எதிரிகளான குருசுக் குலத்தார் என்று பரப்புரை செய்தான். அம்மாவைப் பார்ப்பன அக்ரஹாரத்துக்கு இழுத்து வந்து கட்டிப் போட்டார்கள். தமக்கு விடிவு காலமே இல்லையோ என்று கூடங்குளத்து மக்கள் அழுதார்கள், அரற்றினார்கள்.


மக்கள் அறியாமை இருளில் ஆழ்ந்திருக்கையில், தமிழன்னை கடைக்கண் திறந்தாள். நாட்டின் செழிப்புக்கு அணுவாசுரனின் சாறு மட்டும்தானே தேவை? அணுவாசுரனின் சாறு அனைத்தையும் திரட்டி ஒரு குப்பிக்குள் அடக்கினாள். தண்குழைத் தொழில்நுட்பத்தில் அணுவாசுரனை அடக்கினாள். உலகில் இருந்த அத்தனை அணுவாசுரர்களுக்கும் தேவையே இல்லாமல் போய்விட்டது. இந்த மாபெரும் வெற்றியை மக்கள் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடினார்கள். அதுதான் தீபாவளித் திருநாள். அதனால்தான் தி.ஆ. 2042 என்றென்றும் பொன்னாள் என்று போற்றப் படுகிறது. அதன் பின் மக்கள் சீரும் சிறப்புமாய்க் கொண்டாடி வாழ்ந்தார்கள்.


 
அணுவாசுரனை அடக்கியதன் நினைவாகத்தான் மக்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.  பழைய பூதங்கள் போம் போம் என்று எண்ணை தேய்த்துக் குளித்துப் பழையவற்றைக் கழித்து விடுகிறார்கள். புத்தாடை உடுத்திப் புதிய நற்காலத்தை வரவேற்கிறார்கள்.  தம்மைப் பூதங்களுக்கு அடிமையாக்கி விட அரும்பாடுபட்ட இதேகாசுரனின் கொடுங்கோல் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்.  தண்குழைமைத் தொழில்நுட்பத்தை வாராது வந்த மாமணியைப் போற்றுதும் என்று போற்றுகிறார்கள்.  தாம் கற்றுக் கொண்ட பாடத்தை என்றென்றும் மறவாமல் இருக்க வேண்டும் என்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள்.  நாமும் கொண்டாடுவோம்.

கதையும் முடிந்தது. கத்தரிக்காயும் காய்த்தது. இப்படியாகத்தானே புராணங்கள் உருவாகின்றன.

பார்க்க:


Hello-cheap-energy-hello-brave-new-world
http://www.forbes.com/sites/markgibbs/2011/10/17/hello-cheap-energy-hello-brave-new-world/
Cheap Power: An overnight revolution

செவ்வாய், மார்ச் 15, 2011

ஜப்பான் அணு உலைகள் விபத்தும் அணு உலைகள் குறித்த உலக நாடுகளின் பொறுப்பும்

நண்பர்களே,

ஜப்பானில் நடந்து கொண்டிருக்கும் அணு மின் நிலைய வெடிப்புகளும், கதிர்வீச்சுப் பேரிடர்களும், உலகெங்கும் அணு உலைகளுக்கு அருகில் வாழும் லட்சக் கணக்கான மக்களுக்கு மிகுந்த கவலை தரும் செய்திகள்தாம்.

எல்லாம் நன்றாகவே இருக்கிறது, சாலை விபத்துகளைவிட அணு உலை விபத்துகளால் உயிரிழக்கப் போகிறவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற வாதம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
பொறுப்புள்ள நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்.

ஜெர்மனியில் 1980க்கு முன் கட்டிய அணு உலைகளை மூடி விடுவதாக இன்று அறிவித்திருக்கிறார்கள்.

http://www.reuters.com/article/2011/03/15/germany-nuclear-idUSLDE72E17620110315

ஓர் அணு உலையின் வாழ்நாள் நிரந்தரம் அல்ல. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அவற்றை இயக்குவது சரியல்ல என்று அணு சக்தி நிபுணர்களே கூறுகிறார்கள்.

தற்போது கட்டத் தொடங்கும் அணு உலைகளின் பாதுகாப்புத் திட்டங்களையும் மிகுந்த எச்சரிக்கையுடன் மீள்பார்வையிட வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவின் திரீ மைல் ஐலண்டு விபத்துக்குப் பிறகு பல பத்தாண்டுகளாக எந்தப் புதிய அணு உலையையும் அமெரிக்கர்கள் தொடங்கவில்லை. இருக்கும் அணு உலைகளையும், தாங்கள் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து மேலும் எச்சரிக்கையுடன் தற்காப்புப் பணிகளை மேற்கொண்டார்கள். ( http://www.latimes.com/news/local/la-me-tsunami-california-20110315,0,7384994.story )

[ Since Three Mile Island in 1978, we have gone through several rounds of evaluation and analysis on how we can make things safer at all U.S. nuclear facilities," Dietrich said. "The severe accident analysis has not been done in Japan as it has here. That's just a fact."]

சுவிட்சர்லாந்தும் ஜெர்மனியும் புதிய அணு உலைகளைக் கட்டுவதற்கான அனுமதியை ஒத்தி வைத்துள்ளன.

http://www.latimes.com/news/nationworld/world/la-fg-europe-nuclear-20110315,0,679635.story

http://www.reuters.com/article/2011/03/14/nuclear-switzerland-idUSLDE72D1EJ20110314
கனடாவிலும் அமெரிக்காவிலும் இதே போன்ற நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.
இதனால், இவர்கள் அணு மின் சக்தியை வேண்டாம் என்று உதறி விடுவார்கள் என்று பொருளல்ல.
வேறு எதையும் விட அணுக் கதிர் வீச்சினால் ஹிரோஷிமாவும், நாகசாகியும் பட்ட பாட்டை அறிந்த மனிதர்கள், செர்னோபில் விபத்தால் புற்று நோய் வந்து பாடுபடும் மக்களைப் பற்றித் தெரிந்தவர்கள் இதில் வெறும் லாப நஷ்டக் கணக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
இருக்கும் ஆறு, ஏரி, குளங்களை மாசு படுத்தி விட்டு, அக்கறையில்லாமல் நீர்வளங்களையும், மின்சாரத்தையும், பெட்ரோலையும் செலவழித்துக் கொண்டு, உலகையும் வெம்ப வைத்து மேலும் அணு உலைகளைக் கட்டுவோம், கடலில் இருந்து குடிநீரைத் திரட்டுவோம் என்று திரிவது பொறுப்பற்ற செயல்.
நமக்கு மட்டுமல்ல, நமக்குப் பின் வரும் தலைமுறைகளுக்கும் நாம் நல்ல முறையில் இந்த உலகை வைத்து விட்டுச் செல்வது நம் கடமை.

கல் சுரங்கங்களை வெட்டுகிறேன் பேர்வழி என்று மலைகளை முழுங்கிக் கொண்டிருக்கும் மாமனிதர்களைப் பார்க்கும் நமக்கு, வருங்காலத்தைப் பற்றி அக்கறைப் படுபவர்கள் பைத்தியக்காரர்களாகத்தான் தோன்றும்.
எந்தத் தொழில்நுட்பமும் முழுக்க முழுக்க ஆபத்தற்றது என்று எண்ணுவது சரியல்ல. அதே போல் ஆபத்துகளுள்ள எந்தத் தொழில்நுட்பமும் வேண்டாம் என்றால் நாம் நெருப்பைக் கண்டு பிடித்தற்கு முன்பான கற்கால மனிதர்களைப் போல்தான் வாழ வேண்டும்.
இப்போது நடந்து கொண்டு இருக்கும் பேரிடரில் எத்தனை பேர் உயிரிழக்கப் போகிறார்கள் என்பதை மட்டும் யாரும் பார்க்கப் போவதில்லை. இந்தப் பேரிடரால் எத்தனை மில்லியன் டாலர்கள் இழந்தோம் என்று வணிகர்கள் லாப நஷ்டக் கணக்குப் போட்டுப் பார்த்து இனிமேல் அணு மின் நிலையங்களிலும், அணுசக்தியிலும் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்று பார்க்கப் போவது என்னவோ நிச்சயம் தான். எண்ணைக் கிணறுகள் வற்றத் தொடங்குவதால், அணு மின் நிலையங்கள் வேண்டவே வேண்டாம் என்றும் சொல்ல முடியாது.

இந்த விபத்திலிருந்து நல்ல படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு தம் மக்களைப் பாதுகாக்க முன் வருவது அறிவுடமை.

ஐரோப்பியர்கள் அந்த எண்ணத்தில் இயங்கத் தொடங்கி விட்டார்கள்.
இந்தியாவிலும் இத்தகைய கேள்விகள் எழத் தொடங்கி விட்டன. ஆனால், இந்த மீள் பார்வைகளைப் பொறுப்புடன் செய்ய வேண்டும். ஒன்றும் செய்யாமலேயே நமது அணு உலைகள் ஆபத்தற்றவை என்று அறிவிப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? (http://www.hindu.com/2011/03/15/stories/2011031562611400.htm)
மிகுந்த எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும், மீள்பார்வை செய்வோமா? அப்படிச் செய்ய வேண்டியது இன்னும் பிறக்காத குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.

வியாழன், பிப்ரவரி 03, 2011

காணாமல் போன ஒரு கவிதை

இணையத்தில் தமிழ் நுழைந்த தொடக்க நாட்களில், அதாவது 1995 முதல், எங்களில் பலர் தமிழில் உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் தமிழர்களோடு தமிழில் கருத்தாடல் செய்வதை ஒரு பெரும்பேறாக நினைத்தோம்.  அது வரை, தனித்தனிக் கிணறுகளுக்குள் இருந்த தமிழ் நண்பர்கள், ஒரு மாபெரும் தமிழ்ப் பெருங்கடலுக்குள் நீந்த முடிந்தது அப்போதுதான்.  தமிழ்.நெட் என்ற வலைத்தளமும், tamil@tamil.net என்ற மடலாடற்குழுவும்தான் இன்றைய தமிழ் இணைய முயற்சிகளுக்கெல்லாம் முன்னோடி.

முதன்முதலில் தமிழில் எழுதுகின்ற மகிழ்ச்சியாலோ என்னவோ, தொடக்க நாட்களில் கருத்துப் பரிமாற்றங்களில் ஒரு மென்மையும், மதிப்பும், வாஞ்சையும் இருந்தது.  மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் வரவேற்று அவருக்கும் தமிழில் தட்டச்சிடக் கற்றுக் கொடுத்துப் பின்னர் கருத்து வேறுபடும் பண்பாடு அப்போது இருந்தது.  தமிழ்.நெட் குழுவின் நிறுவனர்கள் பாலா பிள்ளையும், ”முரசு அஞ்சல்” புகழ் முத்து நெடுமாறனும் இணைந்து தமிழுக்கு வழங்கிய கொடை அது. தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருதுக்குத் தகுதியானவர்கள் பாலா பிள்ளையும் முத்து நெடுமாறனும்.  கோவையில் நடந்த தமிழ் இணையம் 2010 கருத்தரங்கில் இவர்கள் இருவரையும் ஒரே மேடையில் வைத்துத் தமிழின் தாயகத்திலேயே போற்றி மகிழலாம் என்று முயன்றேன்.  ஏனோ அன்று அது கை கூடி வரவில்லை.  ஆனாலும், தமிழ்.நெட் காலத்தின் முன்னோடிகளோடு கூடி ஓர் உணவரங்கில் சில மணி நேரம் பழையதை அசை போட முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

தமிழ் இணைய முன்னோடிகளும், நெடுங்கால நண்பர்களும் (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை. சூன் 26, 2010). இடமிருந்து வலமாக பேரா. செல்வகுமார், நாக. இளங்கோவன், தமிழ்.நெட் பாலா பிள்ளை,  “மதுரைத் திட்டம்” முனைவர் கல்யாணசுந்தரம், மணி மு. மணிவண்ணன், ”கேஎட்கிராப்”  இளங்கோவன்,  “தமிழ் மரபு அறக்கட்டளை” நா.கண்ணன், ”முரசு அஞ்சல்” முத்து நெடுமாறன் (பச்சை வரி சட்டை), ”வளவு” இராம.கிருஷ்ணன் (இராமகி),  பேரா. நாகராசன்

இந்தக் கூட்டத்தில் சிங்கை பேராசிரியர் டான் டின் வீ, மலேசிய நண்பர் இளந்தமிழ் மற்றும் விக்‌ஷனரி முரளீதரன் மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ்.நெட் மடலாடற்குழு பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம்.  “எழுதலாம், ஆனால், யாரும் படிக்க மாட்டார்கள்” என்று ஒரு பதிப்பாளர் என்னிடம் சொன்னார்!  இருக்கலாம்.  ஆனால், தமிழ் இணையத்தின் முன்னோடிகள் பற்றிய செய்திகள் தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாது.  இது வரை வந்த தமிழ் இணைய வரலாற்று நூல்களிலும் தமிழ்.நெட்டைப் பற்றிய குறிப்புகள் குறைவே.

வலைப்பூக்களுக்கு முற்பட்ட அந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் ஜியோசிட்டீஸ் (geocities.com) போன்ற தளங்களில் தனிப் பக்கங்களையும் வைத்திருந்தோம்.  தமிழ் இணையத்தின் தொடக்க நாட்களை அதில் பங்கேற்ற எங்களில் சிலர் அதைப் பொற்காலமாகவே போற்றி நினைவு கொள்கிறோம்.

தமிழ்.நெட்டில் எழுதிய அறிஞர்களில் பெரிதும் போற்றப் படுபவர் “அகத்தியர்” என்ற மடலாடற்குழுமத்தின் நிறுவனரும், மலேசியத் தமிழியல் அறிஞருமான மருத்துவர் ஜெயபாரதி அவர்கள்.  தமிழ் இலக்கியம், வரலாறு, சமூகவியல் என்று எண்ணற்ற பல தலைப்புகளில் மிகவும் அரிய தகவல்களை அவர் பகிர்ந்து வந்திருக்கிறார். அவை இன்று http://www.treasurehouseofagathiyar.net/ என்ற தளத்தில் தொகுக்கப் பட்டிருக்கிறது.  அவர் அவ்வப்போது தமிழ்.நெட் வலைஞர்களுக்கு ஏதாவது ஒரு புதிர், அல்லது போட்டி கொடுத்து ஊக்குவித்துக் கொண்டிருப்பார்.

அப்படித்தான் ஒரு முறை, 1998 வாக்கில், காலச்சக்கரம் என்ற தலைப்பில் ஒரு வங்காளக் கவிஞர் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றை அனுப்பி இதைத் தமிழில் மொழி பெயர்க்க முடியுமா என்று கேட்டார்.   நான் கல்லூரி நாட்களில் “கவிதை” எழுதிக் கவியரங்கங்களில் பங்கேற்றிருக்கிறேன்.  இன்று பெரும்புகழ் பெற்று விளங்கும் கவிஞர் வைரமுத்து அவர்களோடு ஒரே மேடையில் போட்டி போட்டதெல்லாம் ஏதோ பழங்கனவாய் நெஞ்சில் நிழலாடுகிறது.  ஆனால், அமெரிக்கா சென்ற பின்னர் பல ஆண்டுகளாய்த் தமிழோடு தொடர்பு அறுந்து போன பின்னால், தமிழில் எழுதுவதே பெரியது என்று எண்ணிக் கொண்டிருந்த நான் கவிதையை எல்லாம் மறந்து மனம் இறுகிப் போயிருந்தேன்.  அந்தக் கல்லுக்குள்ளும் ஈரம் இருந்தது என்பதைக் கொண்டு வந்தது அறிஞர் ஜெயபாரதியின் அறைகூவல்.  இது ஒரு பெரிய கவிதை என்பதற்காக எடுத்து எழுதவில்லை.  ஆனால், தமிழையே மறந்து போயிருந்தோம் என்ற நிலையில் இருந்த புலம்பெயர் தமிழர்களிடையே தமிழைக் கொண்டு வந்ததில் தமிழ்.நெட்டின் பங்கையும், அதில் கலந்து கொண்டு எண்ணற்ற புலம்பெயர்ந்த தமிழர்களைப் பெரிதும் ஊக்குவித்த அறிஞர் ஜெயபாரதி அவர்களின் தொண்டையும் அன்புடன் நினைவு கூர்கிறேன்.

அறிஞர் ஜெயபாரதி அவர்கள் கொடுத்த ஆங்கிலக் கவிதையையும், எனது தமிழாக்கத்தையும் ஜியோசிட்டீஸ் என்ற தளத்தில் பதித்து வைத்திருந்தேன்.  ஜியோசிட்டீஸ் தளம் பின்னால் மறைந்து விட்டது.  அதில் ஏற்றி வைத்திருந்தவையும் காற்றில் கலந்து விட்டது.  நான் எழுதிய “கவிதையும்” காற்றில் கலந்து விட்டது என்றே மறந்திருந்தேன்.  ஆனால், இன்று தற்செயலாக, வேறு எதையோ தேடிக் கொண்டிருந்த போது ஜியோசிட்டீஸ் தளத்தில் நான் ஏற்றியிருந்த கவிதை இன்று ”ரியோசிட்டீஸ்” என்ற ஒரு புதுத்தளத்தில் கிடைத்தது! 

காணாமல் போன கவிதை ஒன்றைப் பற்றி ”அம்பும் பாட்டும்” என்ற தலைப்பில் ஹென்றி லாங்ஃபெலோ எழுதிய பாட்டு நினைவுக்கு வந்தது.  அதையும் நான் தமிழ்.நெட்டில் மொழி பெயர்த்திருந்தேன்.


அம்பும் பாடலும்

அம்பொன்றைக் காட்டிலே விட்டெறிந்தேன்
விழுந்ததெங்கோ அதை நானறியேன்
காற்றினும் கடுகிப் பறந்ததம்பு
கண்ணிமை விரிக்குமுன் காணவில்லை

பாட்டொன்றைக் காற்றிலே மிதக்க விட்டேன்
பறந்ததெங்கோ அதை நானறியேன்
பாட்டொன்று பறந்திடும் பாதையைக் கண்
பார்த்திட வல்லவர் பாரிலுண்டோ?

ஆண்டு பல உருண்டோடிய பின் ஓர்
ஆலமரத்தில் அந்த அம்பு கண்டேன்;
அந்தப் பாடலும் முழுதாய் வாழ்ந்ததுவே
ஓர் அன்புடை நண்பனின் நெஞ்சினிலே!

Click here to see the English original of "The Arrow and the Song" by Henry Wadsworth Longfellow

இதோ காலச்சக்கரம் மொழிபெயர்ப்பு:

சுழல்

எப்படித் திரும்பிப் போவேன் நானும்
எங்கே தேடுவேன் நேற்றை
இன்றைக்கு வந்து சேர
ஏறி வந்த படிகள்
உருளும் காலச் சுழலால்
உடைந்து பொடியாய்ப் போச்சே!

பின்னால் திரும்புவது ஏது?
முன்னால் நகர வேண்டும்;
முன்னால், முன்னால், முன்னால்
முடிவில்லாத பயணம்.

இல்லை ஏதும் நோக்கம்
இல்லை பயணத்து எல்லை
உண்டே ஒரு நாள் ஓய்வு
அங்கும் பிரிப்பார் குடிசை
அணைத்துக் கட்டிய பின்பே!

ஏனோ இதைக்கண்டு அச்சம்
எல்லாம் மாயை தானே
குழப்பம் வாழ்வில் உண்டு
காப்போ வாழ்வில் இல்லை
காப்பைத் தேடி நிதமும்
செத்துப் பிழைப்பாய் தினமும்

யாருக்கு வேண்டும் ஓட்டம்
சாவைத் தேடி நிதமும்?
என்றோ ஒரு நாள் காலன்
வருவான் நம்மைத் தேடி!
வாழக் கற்றுக் கொள்வோம்
அதுதான் நல்ல பாடம்!

அதிசயம் என்னவென்றால்
வாழத் தெரிந்தவனைத்தான்
காலன் கூப்பிட மாட்டான்
அதுதான் உலகின் இயல்பு

வேண்டாம் என்றே உதறு
வெறுப்பும் தானே போகும்!
இருட்டில் ஒளியைத் தேடு
துயரில் மகிழ்வைத் தேடு!
அதுதான் உலகின் இயல்பு!

வாழ்வைப் பார்த்துச் சொல்நீ
”வேண்டாம் எதுவும் எனக்கு
உன்னால் முடிந்ததைச் செய் நீ”
சாவைப் பார்த்துச் சொல்நீ
”செத்தேன் என்றோ நானும்
செய்வதைச் செய்து கொள் நீ”
அன்றே விடுதலை கிடைக்கும்.

வாழ்வைத் துறந்தாலன்றோ
சாவையும் துறக்க முடியும்?
இரண்டையும் துறந்த பின்னே
வாழ்வுக்கு இல்லை எல்லை
என்றே அறிவாய் நீயும்
அதுதான் உலகின் இயல்பு

ஆங்கில மூலம்: சந்தீப் முகர்ஜீ
தமிழ் மொழிபெயர்ப்பு:  “நாமக்கல் கணிஞன் தமிழ்வளவன்”

”நாமக்கல் கணிஞன் தமிழ்வளவன்” என்பது என் அந்தக் காலத்துப் புனைபெயர்.

இணையக் காற்றில் பறந்த அம்பு இன்று இன்னொரு இணையத்தளத்தில் வாழ்வது குறித்து வியக்கிறேன்.

புதன், ஜனவரி 19, 2011

யூனிகோட்டில் கிரந்தம் சேர்ப்பது பற்றிய தமிழக அரசின் உயர்மட்டக் குழு அறிவிப்பு

யூனிகோட்டில் கிரந்தம் சேர்ப்பது பற்றிய தமிழக அரசின் உயர்மட்டக் குழுவைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.  அரசின் அறிவிப்பைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்: http://www.tn.gov.in/seithi_veliyeedu/pressreleases.php


அரசின் அறிவிப்பு தமிழ் யூனிக்கோடு குறியீட்டு வடிவத்தில் கீழே:

செய்தி வெளியீடு எண்: 56                                                                         நாள் : 18.01.2011


தமிழ் மொழி மற்றும் கிரந்த எழுத்துக்களை
கணினி வழிப் பயன்பாட்டிற்காக ஒருங்குறி அட்டவணையில்
அமைப்பது குறித்து அனைத்துக் கருத்துகளையும் ஆய்வு செய்திட


ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. மோகன் அவர்கள் தலைமையில்
உயர்மட்டக் குழு அமைத்து
முதலமைச்சர் கலைஞர் ஆணை!

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் 4-11-2010 அன்று நடைபெற்ற அமைச்சர் பெருமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் -

தமிழ் மொழி எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் ஆகியவற்றைக் கணினி வழிப் பயன்பாட்டிற்காக, யூனிகோட் சேர்த்தியம் (Unicode consortium) என்னும் நிறுவனம் ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து விரிவான விவாதம் தேவை எனவும், அதனை விரிவாக விவாதித்து அரசுக்குப் பரிந்துரை செய்யும் பொருட்டு உயர் மட்டக் குழு அமைக்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்திட, ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ச. மோகன் அவர்கள் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றினை அமைத்து, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இன்று (18-1-2011) ஆணையிட்டுள்ளார்கள்:-

1. பேராசிரியர் ம. ராஜேந்திரன், துணை வேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

2. முனைவர் வா.செ. குழந்தைசாமி, முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைவர், தமிழ் இணையக் கல்விக் கழகம்.

3. பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் (அறிவியல் நகரம், சென்னை)

4. பேராசிரியர் பொன். கோதண்டராமன் (பொற்கோ)

5. முனைவர் ஐராவதம் மகாதேவன், இ.ஆ.ப., (ஓய்வு)

6. பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

7. பேராசிரியர் கே. நாச்சிமுத்து, உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவை

8. பேராசிரியர் அ.அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

9. முனைவர் ப.அர. நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை

10. முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி, எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.

11. திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர் மற்றும் கவிஞர்

12. திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர்

13. திரு. மணி மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி), சீமேன்டெக் கார்ப்பரேஷன், சென்னை.

14. முனைவர் என். தெய்வசுந்தரம், சென்னை.
மேற்காணும் பொருள் தொடர்பாக ஆய்வு செய்து, தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கு ஏதுவாக, இக்குழு தனது அறிக்கையை விரைவில் வழங்கும்.


* * * *
வெளியீடு: - இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், செ-9.

============================================================

அரசு அறிக்கையில் என் பெயரைக் குறிப்பிட்டு நான் வேலை செய்யும் நிறுவனத்தையும் பட்டியலிட்டிருந்தாலும், இக்குழுவில் பணியாற்ற என்னைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என் வேலையோ அல்லது நிறுவனமோ அல்ல.  உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் என்ற பன்னாட்டு அமைப்பின் தமிழ் யூனிகோடு பணிக்குழுவின் தலைவர் என்ற பொறுப்பில் ஏற்கனவே கிரந்தம், யூனிக்கோடு குறியீடு பற்றிய ஆராய்ச்சி, அலசல்கள் ஆகியவற்றில் தொடர்பு இருப்பதாலும், தமிழக அரசின் தமிழ் யூனிக்கோடு குறியீட்டுக் குழுக்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்கேற்று வந்திருப்பதாலும், இது தொடர்பான தொழில்நுட்பக் கருத்துகளை நேரடியாகக் குழு உறுப்பினர் வாயிலாக அவ்வப்போது அறிந்து கொண்டால் குழு மேம்படச் செயல்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அரசின் குழுவுக்கு என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதைத் தமிழக முதல்வரும் ஏற்று என் பெயரை அறிவித்திருப்பது வருங்காலத்தில் தமிழ் வளர்ச்சியில் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கு கூட வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு இந்தக் கடமையைச் செயலாற்ற அளித்த நல் வாய்ப்பாகக் கருதுகிறேன்.

ஞாயிறு, ஜனவரி 16, 2011

தமிழ்மணம் திரட்டியின் வாசகர்களே, நன்றி, மீண்டும் வருக!

அன்பார்ந்த தமிழ்மணம் வாசகர்களே!


தமிழ்மணம் திரட்டி என்னைப் பொங்கல் வார நட்சத்திரமாக, தமிழ்மணத் தாரகையாகத் அறிவித்து நான் எழுதத் தொடங்கி அதற்குள் ஒரு வாரம் பறந்து விட்டது!

பொதுவாக மடலாடற்குழுக்களில் எழுதுவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் எனக்கு, வலைப்பதிவர்களின் நெருக்கமான உலகமும், அவற்றின் ஊடாடலும், கிட்டத்தட்ட வேறு உலகமாகவே தோன்றிற்று.  பொதுவாகப் பதிவர்கள் மடலாடற்குழுக்களில் எழுதுவதில்லை.  அப்படி எழுதினாலும், தங்கள் பதிவுகளைப் பற்றி மட்டும் எழுதுவார்கள்.  மற்ற கருத்தாடல்களில் கலந்து கொள்வதில்லை.  பதிவர்களின் கருத்தாடல்கள் வலைப்பூ உலகுக்குள் மட்டுமே பெரும்பாலும் இருக்கிறது.  மடலாடற்குழுக்கள் நாடக மேடை என்றால், பதிவர் உலகம் சின்னத் திரை போன்றது எனலாமா?  அப்போது பெரிய திரை என்ன என்று கேட்காதீர்கள்!  ஃபேஸ்புக்கோ, டுவிட்டரோ இன்னும் அந்த அளவை எட்டவில்லை. பெரிய திரை இன்னும் வலையிதழ்கள் என்றே சொல்லலாம்.

சோசியல் நெட்வொர்க் என்பதற்குத் தமிழ்ப் பெயர் சூட்டி விட்டாயிற்றா என்று தெரியவில்லை.  சோசியலைஸ் என்பதை உறவாடுதல் என்று கொண்டு பெயர் வைக்க வேண்டும்.  ஆனால், அது உறவாடு, கருவாடு என்று எங்கேயாவது கொண்டு போகும்!  தற்போதைக்குச் சமூகவலை என்று வைத்துக் கொள்வோம்.

சமூகவலைத் தொழில்நுட்பத் தாக்கங்களால் இணையத்துக்கு உள்ளேயே  இதற்குள்ளே பல பிரிவுகள் தோன்றத் தொடங்கி விட்டன.  திறந்த பரப்பாக, எல்லோரையும் இணைக்கும் மையமாக இருந்த இணையம் இன்று தனித்தனிக் குழுக்களாகப் பிரியத் தொடங்கி உள்ளது.  மனித சமூகங்கள் சிற்றூரிலும், பெருநகரிலும் வாழ்வது போல இந்தச் சமூகவலைகளும் ஃபேஸ்புக் போன்ற பெருநகரமும் ஏனைய சிற்றூர் குழுமங்களாகவும் சிதறத் தொடங்கி விட்டன.  மடலாடற்குழுமங்களும் அப்படித்தான் சிதறின.  தொடக்க நாட்களில் தமிழ்.நெட் தான் இணையம். இப்போது ஃபேஸ்புக்கில் இருந்தாலும், அதன் பண்பாடே தனி. டுவிட்டரில் இருப்பவர்கள் ஃபேஸ்புக்கில் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பதையும், ஃபேஸ்புக்கில் இருப்பவர்கள் டுவிட்டரைப் பொருட்படுத்தாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

ஆனால், எல்லாவற்றிலும் தமிழில் உறவாட முடிகிறது.  பிலாக்கரில் கூடத் தமிழ் இடைமுகம் வந்தாயிற்று.  இந்த வளர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியது.  தமிழ்மணம் திரட்டி 9000 வலைப்பூக்களைத் திரட்டுகிறது என்று அறிந்து மலைத்துப் போனேன்.  ஒரு சிலர் மட்டுமே எழுத, மற்றவர்கள் அதைப் படித்துக் கருத்து சொல்வது மட்டுமே இருந்த பதிப்புலகம் மாறி இன்று தம் கருத்துகளைப் பதிவு செய்யப் பல்லாயிரக் கணக்கான எழுத்தாளர்களால் முடிகிறது.  ஒரு சில நிறுவனங்களின் கையில் இருந்த கருத்துலகத்தை உடைத்து இன்று சிறுபான்மையினரும் தங்கள் கருத்துகளை உலகுக்குப் பரப்ப இணையம் வழி காட்டியிருக்கிறது.  இது பெரிதும் வரவேற்கத் தக்க வளர்ச்சி.  ஆயினும், அரசுகள் இவற்றைக் கட்டுப் படுத்தாமல் இருப்பதில்லை.

விக்கிலீக்ஸ் நமக்குக் காட்டியது என்னவென்றால், கருத்துச் சுதந்திரம் பேசும் நாடுகள் கூடத் தம் நாட்டின் பாதுகாப்புக்காக கருத்துகளுக்கு அணை கட்டத் தயங்குவதில்லை என்பதே.  இருந்தாலும், இணையம் என்பது ஒரு மாகடல்.  இதற்கு அணை போடுவது என்பது எளிதல்ல.  இதன் அடிப்படை அடவே (டிசைன்) என்ன தடை இருந்தாலும் அவற்றை மீறித் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதுதானே!

நிற்க.

கடந்த ஒரு வாரத்தில் தமிழ்மணம் திரட்டி எண்ணற்ற புது வாசகர்களுக்கு என் வலைப்பூவை அறிமுகப் படுத்தி இருக்கிறது.  மாத மும்மாரி பொழிவது போல் எப்போதாவது பதிந்து கொண்டிருந்த என்னை நாளுக்கொரு பதிவாவது செய்ய வைத்தது இந்த நட்சத்திரப் பதவி!  நான் எழுதும் தலைப்புகள்  தமிழ் தகவல் தொழில்நுட்பம், கலைச்சொல்லாக்கம், தமிழ் மொழி வரலாறு என்று ஒரு சிலருக்கு மட்டுமே சுவையாக இருக்கக் கூடிய தலைப்புகள்.  இவற்றை தமிழ்மணம் திரட்டி அனுப்பும் வாசகர்களுக்குச் சுவையாக எழுதிக் கருத்துப் பரிமாறிக் கொள்ள முடியுமா என்ற ஐயம் எனக்கு இருந்தது.  இது தவிர பொங்கல் வாரத்தில் மக்கள் பண்டிகை கொண்டாடுவார்களா இல்லை வலையில் மேய்வார்களா என்றும் ஒரு ஐயம்.  ஆனால், பல வாசகர்கள் வந்திருக்கிறீர்கள்.  பலர் கருத்துரைத்திருக்கிறீர்கள்.  வாசகர் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வந்திருக்கிறது.  மிக்க நன்றி.

பொங்கல் நாளன்று நான் எழுதிய பதிவை வெகு சிலரே படித்திருக்கிறார்கள். அதில் தமிழ் யூனிக்கோடு முயற்சிகளின் வெற்றி பற்றி எழுதியிருந்தேன்.  அதைப் படிக்காதிருந்தால் சற்று எட்டிப் பாருங்கள்.  (http://kural.blogspot.com/2011/01/blog-post_15.html )

இந்த வாரம் என்னோடு கருத்தாடல் செய்த வாசகர்களிடமிருந்து நான் பல கற்றுக் கொண்டேன்.  பழம்பெரும் பண்பாட்டின் வழித்தோன்றல்கள் எப்படி நாகரீகமாகத் தம் கருத்து வேற்றுமைகளைப் பற்றி எழுதலாம் என்பதற்குத் தமிழ்மணம் திரட்டி வந்த வாசகர்களே அடையாளம்.  என்னுடைய பதிவுகளில் நீங்கள் விரும்பிப் படித்தவற்றைக் கீழே வரிசைப்படி பட்டியலிடுகிறேன்:


குழந்தைகளை வேட்டையாடும் காமவெறியாளர்கள்

தமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவையா?

தமிழ் இணையம் - கனவும் நனவும்

 "ஏனோ என்னை எழுப்ப லானாய்மட மானே” - தெருக்கூத்தும் ...


பழைய புத்தகக் கடையில் கிடைத்த பொங்கல் பரிசு

கலைச்சொல்லாக்கம் - 1944ல் ஒரு கருத்தாடல்

ஔவைப் பாட்டிக்கு மினி-ஸ்கர்ட்?

தமிழ்மணம் திரட்டியின் வாசகர்களே வருக!

தஞ்சை ஒருங்குறி மாநாடு - சனவரி 9, 2011

சொல்வளம் - உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” வலைப்பூ இன்று தொடங்குகிறது...


இந்தப் பதிவுகளால் உங்களுக்குத் தெரியாத தகவல்களை அறிமுகப் படுத்தியிருந்தால் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கொள்கிறேன்.

வாரமொரு தமிழ்ப் பதிவுலகத் தாரகையை நமக்கு அறிமுகப் படுத்தும் தமிழ்மணம் திரட்டிக்கு மீண்டும் எனது நன்றி.  புழைக்கடைப் பக்கம்  வலைப்பூவுக்குப் புதிதாக வந்து படித்திருக்கும் தமிழ்மணம் திரட்டியின் வாசகர்களின் வருகைக்கு நன்றி.  மீண்டும் வருக!

இவண்,

மணி மு. மணிவண்ணன்

செம்மொழி மாநாட்டில் தமிழ் இணையம் அரங்கில் என் கட்டுரை

2010ல் நடந்த செம்மொழி மாநாட்டின் தமிழ் இணையம் 2010 அரங்கில் ஓர் அமர்வுக்கு நான் தலைமை தாங்கினேன்.  (அது பற்றிய பதிவை http://kural.blogspot.com/2010/07/blog-post.html  என்ற சுட்டியில் காணலாம்).  இன்னோர் அமர்வில் நான் கட்டுரை படித்தேன்.

தமிழ் தரவுத் தளங்கள் என்ற தலைப்பிலான இந்த அமர்வுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் திருமதி சுபாஷிணி டிரெம்மல் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்கள்.  இந்த அமர்வில் கட்டுரை வாசித்தவர்கள்:

1. திரு.மணி மணிவண்ணன் (கலிபோர்னியா & சென்னை) - தமிழ் ஆவணங்களுக்கான நீண்ட கால பராமரிப்பு வழி முறைகள்

2. திரு.மணியரசன் (மலேசியா) - இணையத்தில் தமிழ் மின் அகராதிகள்: ஒரு பார்வை

3. முனைவர்.கா.துரையரன் (சென்னை) - இணையத்தில் தமிழ் நூல்கள்

4. முனைவர்.கு.கல்யாண சுந்தரம் (சுவிஸ்லாந்து) - தமிழ் மின்னணு நூலகத்தின் ஆக்குமுறை

இந்த அமர்வுகளின் காணொளிப் படங்கள் கீழ்க்காணும் சுட்டிகளில் உள்ளன:

http://www.youtube.com/watch?v=47WcSQ35O7U   (Umar Thambi A1.flv - மணிவண்ணன் 1)

http://www.youtube.com/watch?v=78whvIXjgh0   (Umar Thambi A2.flv  - மணிவண்ணன் 2)

http://www.youtube.com/watch?v=OSbwnUXkE-Y  (Umar Thambi A3.flv  - மணிவண்ணன் 3)

http://www.youtube.com/watch?v=LuGl-pyr6Ww  ( Umar Thambi A4.flv - மணிவண்ணன் 4)

http://www.youtube.com/watch?v=uuEnaSA0DpU

http://www.youtube.com/watch?v=BgfVYDf7XlA  

http://www.youtube.com/watch?v=AN2UxOQvNPw

http://www.youtube.com/watch?v=pjjiXUvFEjQ

http://www.youtube.com/watch?v=UhR7mDWs1p8

http://www.youtube.com/watch?v=L6M09QmTx-A

http://www.youtube.com/watch?v=ztAxGntAwn4

http://www.youtube.com/watch?v=-8s9KyAsFtw

http://www.youtube.com/watch?v=X2wW1JpyeE4

http://www.youtube.com/watch?v=5MXm357UjIo

http://www.youtube.com/watch?v=5MXm357UjIo

http://www.youtube.com/watch?v=tgzKyEoUf84

எனது கட்டுரையை கூகிள் ஆவணக் களரியில் சேமித்திருக்கிறேன்.  கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கினால் படிக்கலாம்:

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B4QIwxkSE9aDOWVkZDE0NGQtYWE2My00M2U5LWFiOTQtOTU2NzJmOTVlYTgx&hl=en

கட்டுரையின் படக்காட்சியையும் அதே களரியில் சேமித்திருக்கிறேன்.  அதைக் கீழ்க்காணும் சுட்டியில் படிக்கலாம்:

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B4QIwxkSE9aDMTk4OGUyOWQtNzNlYi00NDY0LWIyZTItNWFkZThhZTZhNDM5&hl=en


எனது பேச்சைப் பார்த்து விட்டுக் கவிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் மின் தமிழ் மடலாடற்குழுவில் கருத்து தெரிவித்திருந்தார்.  அவர் எழுதிய முழுக் கடிதத்தையும் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்:

http://groups.google.com/group/mintamil/msg/ada1600576b3536d?

அதற்கு என் விடையைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.

http://groups.google.com/group/mintamil/msg/48d883ff2ce15aed?

இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து எழுத இன்னும் நிறைய செய்திகள் உள்ளன.  பொதுவாகவே நாம் நம் மரபுச் செய்திகளைப் போற்றுவதில்லை.  பழைய கல்வெட்டுகளைக் கற்சுரங்கக் காரர்கள் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  போகி பண்டிகையில் நாம் ஏடுகளை எரித்திருக்கிறோம் என்கிறார்கள்.  ஏட்டுச் சுவடிகளைப் பெயர்த்தெழுதும் பழக்கத்தை விட்டிருக்கிறோம்.  பழைய ஆவணங்களை எண்ணிமப் படுத்தினால் மட்டும் பழைய கெட்ட பழக்கங்கள் போய் விடுமா என்ன?

சொல்லப் போனால், ஏடுகளும் காகிதங்களும், ஏன் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூட பல ஆண்டுகளைக் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன.

இதோ இப்போது நான் எழுதியிருக்கும் இந்தப் பதிவு எத்தனை காலம் தாங்கும் என்பது கூகிளுக்குத்தான் வெளிச்சம்!

உங்கள் ஆவணங்களை அரசு எண்ணிமப் படுத்தப் போகிறது.  அதை எப்படிப்பாதுகாப்பீர்கள்?  அதை அரசு எப்படிப் பாதுகாக்கப் போகிறது?  இருவருக்கும் இடையில் ஒரு குழப்பம் வந்தால் அதை யார் தீர்க்கப் போகிறார்கள்?

மாநாட்டுப் பேச்சைக் கேளுங்கள்.  ரொம்பவே மிரட்டுகிறீர்கள் என்று திருமதி சுபாஷினியும் ஹரி கிருஷ்ணனும் சொன்னார்கள்.  என்ன பயன்?  இது வரை நான் சொன்னதை யாரும் கேட்டதாகவே தெரியவில்லையே?

தமிழ்.நெட்டில் 1997ல் நாங்கள் எழுதிய மின்னஞ்சல்களோ,  soc.culture.tamil இல் 1990 களின் தொடக்கத்தில் நாங்கள் எழுதிய கடிதங்களோ இன்று முழுவதும் கிடைப்பதில்லை.  கிடைத்தாலும் படிக்க முடிவதில்லை.  இதுதான் எண்ணிம ஆவணங்களின் நிலை.

உங்கள் வீட்டுப் பத்திரத்தை எப்படிப் பாதுகாக்கப் போகிறீர்கள்?

ஔவைப் பாட்டிக்கு மினி-ஸ்கர்ட்?

சில ஆண்டுகளுக்கு முன்னர் இணைய முன்னோடிகளில் ஒருவரான நண்பர் முத்து நெடுமாறன் என்னிடம் ஒரு கலைச்சொல் கேள்வி கேட்டார்.  அது ஏன் என்னைக் கேட்டார் என்பதே ஒரு தனிக்கதை.  தமிழ் இணையத்தின் தொடக்க நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிவோம் என்றாலும், உத்தமம் அமைப்பின் கலைச்சொல்லாக்கக் குழுவின் தலைவராக இருந்தேன் என்றாலும், அதனால் மட்டும் அவர் என்னைக் கேட்கவில்லை.

வெப்லாக் என்ற பிலாக் தொழில்நுட்பம் தமிழுக்குள் நுழைந்து கொண்டிருந்த போது அதைத் தமிழில் எப்படி அழைப்பது என்று காரசாரமாக ஒரு அலசல் நடந்து கொண்டிருந்தது.  வெப்லாக் (weblog) என்பது ஆங்கில இலக்கணப் படி வந்த ஒரு முழு சொல்.  பிலாக் (Blog) அப்படியல்ல.  அது அமெரிக்க வழக்கப் படி வரும் ஒரு குறும்புச் சொல்.  விளையாட்டுப் போக்காகச் சொற்களை உருவாக்கும் இயல்பு அது.  நாம் நம் குழந்தைகளைக் கொஞ்சுவோமே அது போல.  ஒரு நுட்பத்துக்கு நாம் இப்படி ஒரு கொஞ்சுமொழியில் பெயர் வைத்தால் அது நம்மை மிரட்டுவதில்லை.  நாம் அதை எடுத்துத் தாலாட்டிப் பேணி வளர்க்கத் தொடங்கி விடுகிறோம்.  இதற்குத் தமிழில் பெயர் சூட்ட வந்தவர்கள் பொருத்தமாக வலைப்பதிவு என்றே பெயர் சூட்டினார்கள்.  அதுவே பெரிதும் நிலைத்தும் நிற்கிறது.

ஆனால், எனக்கென்னவோ, வலைப்பதிவு என்பது வெப்லாக் என்பதற்கு இணையான சொல் என்றும் பிலாக் என்பதற்குக் குறும்பான பெயரைத் தமிழில் சூட்ட வேண்டும் என்று தோன்றியது.  ராயர் காப்பி கிளப் என்ற மடலாடற்குழுவில் மாலன் கேட்ட கேள்விக்கு மே 15, 2003 அன்று நான் அளித்த பதில் (http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/7994)

 Re: [RKK] Peyar soota vaarungkal

மதிப்பிற்குரிய மாலன் அவர்களுக்கு,

தமிழில் உவெ(ம்)ப் லா(ங்)க் அமைத்ததற்கும், திசைகள் வலையிதழுக்கு வியக்கத்தக்க எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்த்ததற்கும் உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.

t 5/14/03 08:56 PM, you wrote:

>"Blog என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்ன? Web Log என்ற சொல்லிலிருந்து

>தோன்றியது blog. எனவே இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை

>(அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை,

>அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா?"

பொதுவாக இணையம் என்ற சொல்லை இண்டர்நெட்டுக்கும் வலை என்ற சொல்லை உவெப், நெட் என்ற சொற்களுக்கும் புழங்கி வருகிறோம். உவெப் சைட் என்பது வலைத்தளம், இணையத்தளம் இல்லை. உவெப் பேஜ் என்பது வலைப்பக்கம். உவெப்ஸைன் என்பது வலையிதழ், இணைய இதழ் இல்லை.


எனவே உவெப் லாக் என்பதற்கு வலைக் குறிப்பு என்று சொல்லாக்கினால், ப்லாக் என்னும் குறும்(புப்) பெயருக்கு இணையாக வலைப்பு என்று சொல்லலாமா? வலைப்பு என்ற சொல் கொலோன் வலையகராதியில் இல்லை. அதனால் இந்தச் சொல் ஏற்கனவே வேறு பொருளில் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இல்லையேல் இன்னும் குறும்பாக, வலைப்பூ எனலாம். வலையிதழ் என்பது உவெப்சைன் என்பது போல வலைப்பூ என்பது உவெப்லாக் ஆகலாம். ஆனால், புலவர்கள் பொருட்குற்றம் காண்பார்கள்!

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்னும் இலக்கணத்தை மீறி இதற்கு இடுகுறிப்பெயரும் இடலாம். வலைக்குறிப்பு - வலைப்பு, வலைப்பூ, வறிப்பு, வலையரிப்பு(!), லைப்பு, லறிப்பு என்று விளையாடலாம்.


ஆனால், தமிழனுக்கு ஒரு கவிதையுள்ளம் உண்டு. இண்டர்நெட்டுக்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்னும் பொருள் தர இணையம் என்று சொல்லைப் படைத்தவன் தமிழன். பத்திரிக்கைகளுக்கு தினமலர், வார இதழ், ஆண்டு மலர், என்று பெயர் வைப்பவன் தமிழன். எனவே வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்

நூவர்க், கலி., அ.கூ.நா.

என்று எழுதியிருந்தேன்.  ஆனால், நாக கணேசன் அவர் பதிவில் குறிப்பிட்டிருப்பது போல,

வலைப்பூ, வலைத்தேனீ, குடில், ... என்பதெல்லாம் இலக்கியங்களில் பாவிக்கச் சிறப்பாக இருக்கும், ஆனால் தொழில்நுட்புக் கலைச்சொல்லாக இருக்க முடியாது என்றும் பதிவர்களால் உணரப்பட்டது. ஆகவே, “வலைப்பதிவு” என்ற சொல் இணையத்தில் வலம்வரலாயிற்று
.

இன்று பதிவர்கள், பதிவுகள் என்ற சொற்கள் பரவலாக இருந்தாலும், வலைப்பூ என்ற சொல் மறையவில்லை.

முத்துவுக்கு இணையம், கணினி என்ற சொற்களைப் போல் வலைப்பூ என்ற சொல் பிடித்திருந்தது.  ஒரு கலைச்சொல்லை மொழிபெயர்பதற்கும், ஒரு சொல்லுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது என்றார் முத்து.  (There is a big difference between 'translating' the names into Tamil and 'giving' them a name in Tamil. )
சிங்கப்பூர் கல்வித்துறை ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் தமிழ்க் கல்விக்கான புதுத் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் பேச ஆயத்தம் செய்து கொண்டிருந்த அவர் blogs, podcasts, video-podcasts, என்ற கலைச்சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்களைத் தேடிக் கொண்டிருந்தார். 
blog என்பதற்கு வலைப்பூ என்ற தனக்கு மிகவும் பிடித்த சொல்லைப் புழங்கப் போவதாகச் சொன்னவர் podcasts and video-podcasts என்ற சொற்களுக்கு ஏற்ற கலைச்சொற்களைப் பரிந்துரைக்கக் கேட்டுக் கொண்டார்.

நான் அவருக்கு எழுதினேன்:

Podcast is defined as "a digital recording of a radio broadcast or similar program, made available on the Internet for downloading to a personal audio player."

பாதம், பொதி என்ற சொற்களைப் பற்றிச் சிந்தித்தேன்.  ஆடியோ பாட்காஸ்ட் என்பதற்கு பொதியொலிபரப்பு ( packetized audio) பொருந்துமோ என்று எண்ணிப் பின் கைவிட்டேன்.

I settled on the following as direct, simple and in line with familiar words that convey the meaning to people that are not familiar with the term or the concept.

ஆடியோ பாட்காஸ்ட் என்பதற்கு வலையொலிபரப்பு அல்லது வலையொலி என்பது பொருந்தும்  (வானொலி, ஒலிபரப்பு என்ற பழக்கப் பட்ட சொற்களோடு ஒப்பிட்டு இவற்றையும் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.)

அதே போல், வீடியோ பாட்காஸ்ட் என்பதற்கு வலையொளிபரப்பு அல்லது வலைக்காட்சி பொருந்தும்.  (தொலைக்காட்சி, ஒளிபரப்பு போன்ற சொற்களிலிருந்து கிளைத்தவை இவை).

முடிவாக

audio podcast = ஆடியோ பாட்காஸ்ட் = வலையொலி
video podcast = வீடியோ பாட்காஸ்ட் = வலைக்காட்சி

என்ற சொற்களைப் பரிந்துரைத்தேன்.

இவை சரிநிகரான தொழில்நுட்பக் கலைசொற்களாக இல்லாமலிருந்தாலும், அன்றாடப் புழக்கத்துக்கு உகந்த சொற்கள் என்பது என் எண்ணம்.

நண்பர் முத்துவுக்கு இந்தச் சொற்கள் மிகவும் பிடித்திருந்தன.  அவர் 
"வலையொலி and வலைக்காட்சி are brilliant.  It hits the meaning and has a precedence.  I love these terms.  Let's use them wherever we can - and hope they gain acceptance like இணையம் and வலைப்பூ did."
 என்று விடையளித்தார்.

ஆனால், இந்தச் சொற்களைப் பன்மையில் எப்படி எழுதுவீர்கள் எனக் கேட்டார்.

வானொலி, தொலைக்காட்சி இவற்றை நாம் பன்மையில் எப்படி எழுதுகிறோம்?  வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று எழுதலாம்.  வானொலி/தொலைக்காட்சி நிலையங்கள் என்பவை ஒலி/ஒளிபரப்பு நிலையங்களைக் குறிப்பன.

வலையொலிபரப்புகள், வலையொளிபரப்புகள் என்பவை பன்மைச் சொற்களாக அமையலாம்.  எனினும், வலையொலிகள், வலைக்காட்சிகள் என்ற சொற்கள் சுருக்கமானவை.  தமிழிலும்கூட சுருக்கமான சொற்கள் எளிதாகப் புழக்கத்துக்கு வந்து விடுவதை அண்மைக் காலத்தில் காணலாம்.

எனவே வலையொலிகள், வலைக்காட்சிகள் என்ற சொற்களைப் பரிந்துரைத்தேன்.

இணையம் என்ற சொல் தமிழ்.நெட் தொடக்க காலத்தில் மலேசியத் தமிழ் இதழாசிரியர் கோமகன் அவர்கள் உருவாக்கிய சொல்.  இணையம், இன்டர்நெட்  (Internet) என்பதற்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்ற பொருள்பட இணையம் என்று அழைக்கலாம் என்றார்.  கலைச்சொல்லிலும் கவிநயம் பார்க்கும் தமிழ் இதயங்களுக்கு இந்தச் சொல் மிகவும் பிடித்திருந்தது.

இணையம் என்பது இன்டர்நெட் (Internet) மட்டுமே.  Web அல்லது Net அல்ல.  இணையத் தொலைக்காட்சி என்பது பொருந்தாது.

இணையம் என்ற சொல்லாட்சி தமிழ்.நெட்டில் தொடங்கித் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் புழங்குவது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.  அப்படிப்பட்ட சொல்லாக்கம், ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிந்து கொண்டு, உள்வாங்கி, நம் உள்ளத்திலிருந்து எடுத்து நம் மொழியில் நம் வழியில் புதிய கருத்தைக் கூறும் தன்மையைத் தமிழர்கள் எய்திவிட்டார்கள் என்பதற்கு அடையாளம்.  அப்படிப் பட்ட சொற்கள் இரவற் சொற்களைவிட வலிமையானவை. ஆங்கிலச் சொற்களோடு ஒலியொப்புமை கருதி உருவாக்கும் சொற்களைவிட ஆழமானவை.

A word like that demonstrates to me that we Tamils have absorbed a new invention, taken it to our heart and start to identify it with our original expression.  Such coinages have power and they resonate better than a bland translation or a word that mimics the English sound.

இதற்கு முத்து எழுதினார்:
Dear Mani,


There is a big difference between 'translating' the names into Tamil and 'giving' them a name in Tamil.

Almost all people I've come in contact are quick to do the former. That's because, the second requires effort, skill, passion and the desire to propagate the usage of not only the name but also what it represents. Giving something a name is like branding. We need to think outside the box - something marketing people are trained to do :)

As you pointed out once, the names that came into existence with an original 'value' had successful imprints and had a direct impact on people. இணையம் is a classic example. When Tamils talk about இணையம், our minds don't translate the work to Internet or Web! It's just இணையம்! .... and the this word gets surrounded by different set of thoughts, action and content than the words like Internet or Web. (like to hear your thoughts on this!)

We don't need all words to have this impact -- we don't have sufficient material in our community to create or even desire for this impact :). However, words that prompt actions - like blogs, podcasts etc will be great if they have a name from a Tamil 'angle'. 'Angle' as it's used in PR :)

The names you gave for blog and podcasts are far better and has the values we desire in Tamil names :). For me, when I think வலைப்பூ or வலையொலி, different actions get trigged in my mind instead of resolving a pointer to blog or podcast. In programming talk, these words are no longer pointers but a different object inherited from the same base class -- hope I'm communicating this right.

While on this, I just completed the new generation of Sellinam - to be launched in this region free to all mobile subscribers. A large multinational has come forward to sponsor the service

I took your advice. It will have a complete menu navigation in Tamil. I took the liberty to coin some Tamil names -- and put it to test among the Indian expats who are working at shipyards and construction sites -- their only language is Tamil.

Some examples are: வந்தவை (Inbox), சென்றவை (Sent Items), செல்பவை (Outgoing), கோர்த்தவை (Drafts). Likewise, I thought through the 'status' messages purely from these users 'angle' instead of trying to impress them with a 'translation'. I'll send you the screen shorts later. Initial feed back -- they knew exactly what these words mean even without someone having to explain!
This subject is close to my heart -- thus the long email :)

anbudan,
~ MUTHU



முத்து தன் கருத்தரங்குக் கட்டுரையில்

வலைப்பூ, வலையொலி, வலைக்காட்சி
வலைப்பூக்கள், வலையொலிகள், வலைக்காட்சிகள்

என்ற சொற்களைப் புழங்கினார்.  சிங்கைத் தமிழாசிரியர்களிடையே இந்தச் சொல்லாக்கங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

இதே போல் தமிழில் டொமெய்ன் (domain) என்பதற்குக் கொற்றம் என்ற சொல்லைப் பரிந்துரைத்தபோது மின் தமிழ் மடலாடற்குழுவில் ஒரு நல்ல அலசல் நிகழ்ந்தது.  (பார்க்க:  http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/2426db23d511633f?fwc=1&pli=1 )



ஆனால் இன்னொரு முறை தமிழ் உலகம் மடலாடற்குழுவில் வேறு ஒரு சொல்லைப் பற்றி அலசிக் கொண்டிருந்தோம். 
இன்று ஒரு புதிய வலைச்சொல் கண்டேன்.

Bleg = A blog where one asks for donations; a cross between blog and beg.

இதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?

வலைப்பிச்சை

எனலாமா?  மாங்கல்யப் பிச்சை, மடிப்பிச்சை போல இந்தச் சொல்லும் வழக்கில் வரலாம்.

அல்லது ஆங்கிலச் சொல்லைப் போல, பிச்சை என்பதை அப்பட்டமாகச் சொல்லாமல்

வலைச்சை அல்லது வலைப்பூச்சை

என்று பூடகமாகச் சொல்லலாமா?

அல்லது இதற்கு ஏற்கனவே தக்க சொல் புழக்கத்தில் இருக்கிறதா?

நண்பர்களே, என்ன நினைக்கிறீர்கள்?

என்று கேட்டிருந்தேன்.  நண்பர் நியூ மெக்சிக்கோ வாசன் நல்ல பல சொற்களைப் பரிந்துரைத்திருந்தார்.  ஆனால், வலைப்பூ போன்ற இடுகுறிப் பெயர்கள் தமிழின் தன்மையச் சிதைப்பவை என்ற எண்ணம் கொண்ட நண்பர் நாக இளங்கோவனுக்குப் பொறுக்கவில்லை.  நகைச்சுவையுடன் அவர்,  பிச்சை எடு என்பதற்குப் பகராகப் பிச்சை கொடு என்ற எண்ணம் தொனிக்க ஈதல் என்ற அடிப்படையில் “ஈவலை” என்று பெயரிடலாமே என விடையளித்தார்.  அதற்கு நான்

அன்பின் இளங்கோவன்,

:-).  "ஈவலை" என்பது "கொசு வலை" போல் ஈயைப் பிடிக்கும் வலை என்று தவறாகக் கொள்ள நேரிடலாம்.  நகைச்சுவை உணர்வுள்ள சொல் "ஈவலை" என்று வாசன் மகிழ்வார்!

blog என்ற சொல்லே அமெரிக்கர்களின் மொழியியல்பிலிருந்து பிறந்த குறுஞ்சொல்.  bleg என்பது மேலும் நகைச்சுவை கொண்ட சொல்.  begging blog என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்கள் ஆனால், begging என்பதை மட்டம் தட்டவில்லை.  நல்ல செயலுக்குப் பிச்சை எடுக்கலாம், இல்லையா?  பௌத்த, சமணத் துறவிகள் பிச்சையெடுத்து உண்ணும் நோன்பு நோற்கவில்லையா?  இது போன்ற சொற்களைத் தமிழில் ஆக்கும்போது மொழி பெயர்ப்பதைவிடக் கருத்தை உள்வாங்கி தமிழின் தன்மைக்கேற்ப சொற்களைப் படைப்பது நல்லது என்பது என் கருத்து.  வலைப்பூ அப்படி எழுந்த சொல்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல!
என்று விடையளித்தேன்.  நண்பர் இளங்கோவன், ஏன் வலைப்பூ என்ற சொல் தக்கதல்ல என்பதற்கான வாதங்களை முன் வைத்தார்.


அன்பின் மணிவண்னன்,

நண்பர் வாசனுக்கு மட்டும்தானா? எனக்கும்
ஈவலை என்றால் சிரிப்புதான் வருகிறது :-)

ஓரெழுத்துச் சொல்லான பூவைத் தூக்கிப் பின்னால்
வைக்கிறீங்க. ஆனால் ஈ யைத் தூக்கி முன்னாடி
வைச்சா எல்லாம் சிரிக்கிறீங்க. சிரிக்கிறமாதிரி ஒரு பெயர் இருக்கட்டுமே :-) (அதுவும் ஒரு பொருளோடு இருக்கிறது; )

பூ என்பதனைப் பலரும் வெகுவாகப் பயன்படுத்தும்
போதெல்லாம் உங்கள் நினைவு வரும் எனக்கு. மகிழ்ச்சியும் வரும்.

ஆனால் பாருங்கள், பூ என்று வைக்கப் போய், அதுவே தற்போது வேர்ச் சொல் போல் ஆகி, பிச்சையோடு புணர்ந்து/கலந்து பூச்சை ஆகிறது.

இதுவே, பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கும்
Web என்ற இந்த மிடையத்திற்கு நிறைய பொருள் பொதிந்த
வேர்ச்சொற்கள் தேவை என்று காட்டுகிறது.

அதே நேரத்தில் நவ பெயர்களான பூ போன்றவற்றில் எனக்கு
மனத்தாங்கல் இல்லை; bleg என்பதற்கு ஒரு நவப்பெயர் சூட்டலாம்; அது வலைப்பூ போன்று நவமாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.ஆனால், பூவையும் பிச்சையையும் கலப்பது பொருள் சேர் உத்தி நவ உத்தி என்ற இரண்டு உத்திகளையும் கலந்து விடுவது போல இருக்கிறது. அதுதான் எனக்கு யோசனை :-))
அன்புடன்
நாக.இளங்கோவன்
கலைச்சொல் பற்றிய வாதங்கள் காரசாரமாய் முட்டி மோதிக் கொள்வது போல் இல்லாமல் நகைச்சுவையாய் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்த இந்தத் தொடரை எனது பின் வரும் வினாவோடு நிறைவு செய்தேன்.

நண்பர் ஈளங்கோவன் ;-)

வெகுநாட்களாக எனக்குள் ஓர் ஐயம்.

ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட இதைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள்.

மூத்த மொழி என்பதால் தமிழ் இறுகி உறைந்து விட்டதோ?

தொன்மையும் தொடர்ச்சியும் வேண்டுவதால், அதற்கு இளகத் தெரியாதோ?  தமிழில் விளையாட்டாகப் பேச முடியாதோ?

சரியோ தவறோ, அமெரிக்க ஆங்கிலச் சொல்லாக்கங்களைப் பாருங்கள்.  அதில் ஒரு விளையாட்டுத் தன்மை தெரியும். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் புத்தம் புதுச் சொற்கள் பல எழும்.  விழும். குழூஉக்குறிகள் வரும். போம்.  நல்ல படைப்பாளியின் கையில் இவற்றில் சில சாகா வரம் பெற்று நிலைத்து நிற்கலாம்.

எம்.டி.வி.யிலும், எஸ்.எம்.எஸ்.இலும், சொற்கள் சிதைந்து, அழிந்து,
கலந்து, குழம்பிப் பாகாகித் திரண்டு மீண்டும் மீண்டும் எழும், விழும்.

weblog வலைப்பதிவுதான்.  weblog எப்படி blog ஆகிற்று? weblogger என்ற
சொல் இல்லை, ஆனால் blogger வழக்கில் ஓங்கி நிற்கிறது.

blog -இலிருந்து bleg கிளைக்கிறது.

வேறு எந்த மொழியில் இது போன்ற சிதைவுகள் சொற்களாகும்?

செம்மொழிகள் உறைந்து போனவை என்பதால் இவை போன்ற ஒயிற் சொற்களைப் பிறமொழிகளிலிருந்து இரவல் வாங்க வேண்டியிருக்கிறதோ?

பாருங்களேன்.  உங்களுக்கு வலைப்பூ என்பது ஈவலைபோல் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.  வலைச்சை என்பதெல்லாம் தமிழில் எடுபடாது என்று தோன்றுகிறது.  டபிள்யூ டபிள்யூ டபிள்யூ என்பதையெல்லாம் டப் டப் டப் என்று சொல்லாடுவது போல் தமிழில் ஆடினால் ஔவைப்பாட்டிக்கு மினி ஸ்கர்ட் போடுவது போல் நகைப்புக்கிடமளிக்கிறதோ?

முந்திப் பிறந்தவள் செந்தமிழன்னைக்கு மூப்பு தட்டி விட்டதோ?
வினாவுடன்,
மணி மு. மணிவண்ணன்
வேறு மொழிகளில் கலைச்சொற்களை அன்றாடம் படைக்கிறார்கள்.  எங்கள் தொழிலில் மென் கலன்களைப் பிறமொழியில் மொழி பெயர்ப்பதற்குக் கொடுக்கும் நேரம் வெகு குறைவு.  அதற்குள் இருக்கும் சொல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இல்லையேல் கலைச்சொல்லைப் படைக்க வேண்டும்.  அந்தத் தொழில் செய்பவர்களுக்கு இவ்வளவு பொறுமையோ, அக்கறையோ இருக்காது.  அது தொழில் மட்டுமே.

டுவிட்டருக்குக்கும், ஃபேஸ்புக்குக்கும், கூகிளுக்கும், மைக்ரோசாஃப்டுக்கும் தமிழ்க் கலைச்சொற்கள் என்பவை வணிகத்துக்குத் தேவையானவை.  அவ்வளவே.  அவர்கள் கொச்சையாக, பச்சையாக இல்லாத எதைத் தேர்ந்தெடுத்தாலும்,  அவையே வழக்கில் வரும் வாய்ப்பு உள்ளது.

முன்னர் போல் இல்லாமல், தற்போதெல்லாம், தொழில்நுட்பங்கள் தமிழுக்குப் பரவுவதற்கு அவ்வளவு நேரம் பிடிப்பது இல்லை. கலைச்சொற்களைப் படைப்பதில் தமிழர்களுக்குள் வாக்குவாதம் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால், வணிக நிறுவனங்கள் எதையாவது முதலில் செய்வோம் என்று போடத் தொடங்குவார்கள்.  அதை சன் டிவி,  ரெட் ஜயண்ட் மூவீஸ், என்பது போல பெரிய இயக்கப் பின்னணியில் உள்ளவர்களோடு இணைந்து போட்டால் எதிர்ப்புகளைக் கட்டுப் படுத்தி விடலாம் என்பதும் ஊரறிந்த ரகசியம்.  இல்லாவிட்டால் நுணுக்குமென்மையும் அளிநட்பேயும் வந்து நின்று வணிக நிறுவனங்களை மிரட்டலாம்!

தமிழ் மரபையும் விட்டுவிடக்கூடாது.  அதே நேரத்தில் ஒயிலான, தற்காலப் பெயர்களையும் தமிழில் கொண்டு வரவேண்டும்.  இதற்கு ஒரே வழி ஆங்கிலப் பெயர்களை அப்படியே ஏற்பதுதானா?

இது ஔவைப் பாட்டி மினி ஸ்கர்ட் போடுவது போலவா?  அல்லது என்றும் இளமையாய் இருக்கும் தமிழால் இதையும் தாங்க முடியுமா?

கலைச்சொல்லாக்கம் - 1944ல் ஒரு கருத்தாடல்

தமிழில் கலைச்சொற்கள் படைப்பது பற்றிய காரசாரமான கருத்து வேற்றுமைகளைக் கடந்த பல ஆண்டுகளாகப் பார்த்து வந்திருக்கிறேன்.  கலைச்சொற்களைப் படைக்கும்போது தனித்தமிழ்ச் சொற்களைப் படைக்கலாமா கூடாதா என்பதில் உரத்த கருத்தாடல்கள் இன்னும் தொடர்கின்றன.  விஞ்ஞானம் என்றுதான் எழுத வேண்டுமா அல்லது அறிவியல் என்று எழுதலாமா என்று கனடாவின் ஜெயபாரதன் அவர்களும் பேரா. செல்வகுமார் அவர்களும் அடிக்கடி தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் மோதிக் கொள்வார்கள்.

தனித்தமிழில் எழுத வேண்டும் என்போர் தாலிபான்கள் என்றே குற்றம் சாட்டுவார் வன்பாக்கம் விஜயராகவன்.  அதை இப்போது ஜெயபாரதன் அவர்களும் வழிமொழிகிறார்.

தனித்தமிழில் கலைச்சொல் படைப்பது பற்றி(ப்) பாரதியாரும் எழுதியிருக்கிறார். மெம்பர் என்ற சொல்லுக்கு இணையான தனித்தமிழ்ச் சொல்லைப் படைக்கச் சற்றுத் தடுமாறியும் இருக்கிறார் பாரதி.  இன்று நாம் உறுப்பினர் என்று வெகு இயல்பாகச் சொல்லும் ஒரு சொல் பாரதியையே ஒருகாலத்தில் தடுமாற வைத்திருப்பது கலைச்சொல்லாக்கத்தைப் பற்றி நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.

ஆங்கிலத்தில் இருந்து கலைச்சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்க வந்த அறிஞர்கள் பெரும்பாலும் வடமொழிப் புலமையுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு வெகு இயல்பான மொழிபெயர்ப்பாக இருந்த சொற்கள் இப்போது நமக்குப் புரியாத சொற்களாக இருக்கின்றன.

எடுத்துக் காட்டாகப் பின்வரும் சொற்கள் 1944ல் பாடநூல்களில் இருந்திருக்கின்றன, ஆனால் இவை இன்றும் நம்மில் பெரும்பாலோர்க்குப் புரியாதவை:
சோக்‌ஷிகள், க்‌ஷாரம், ஆஹார சமீகரணம், யோகவாஹி, சஞ்சாயகி, வாஹகம், ஹரிதகிகாமலம்,  அப்ஜ இரத்தகிகாமலம், பாக்கியஜனக அனிஷ்கர்ஷம், சங்கோஜயத்வம், பிரதிலோம, விபாஜியத்துவம், பிரதி மாகேந்திரம், அவினா சத்வம், அவிபேத்யம், சமாந்திர சதுர்புஜம், அதிருசிய ரேகை, நிஷ்காசினி, வித்யுத்லகானிகம், வக்ர பாவித்வம், உஷத்காலம், ஆபாஸபிம்பம், ஜ்யாமிதி, கிருஷித் தொழில்
தனித்தமிழ்க் கலைச்சொல்லாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழார்வலர்கள் பெருமுயற்சி செய்திருந்தாலும், கலைச்சொல்லாக்கக் குழுவினர் வடமொழிச் சொற்களையோ அல்லது ஆங்கிலச் சொல்லையோ அப்படியே கையாள்வதையே 1940களில் முறையாக் கொண்டிருக்கிறார்கள்.

தனித்தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர், சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியின் தலைமை ஆசிரியராகவும் சென்னைப்பல்கலையின் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும்  விளங்கிய இராவ்சாகிப் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்.

”கலைச்சொல்லாக்கம் என்ற தொடர் இப்பொழுது எங்கும் முழங்குகிறது.  மாநாடுகள் கூட்டப் படுகின்றன. சாதிச் சச்சரவுகளை விளைத்துத் தம் ஆத்திரங்களைத் தீர்த்துக் கொள்ள இதுவே தக்க நேரம் என்று பலரும் இதில் சேர்ந்துள்ளார்கள்.  பலவகை முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன,” என்று சாடியிருக்கிறார் பேரா. வையாபுரிப் பிள்ளை.

இந்தக் கண்ணோட்டம் மிக முக்கியமானது.  தனித்தமிழ் இயக்கம் என்பது சாதிச் சச்சரவாளர்களின் ஆயுதமாகக் கருதப்படும் வரையில், அது முழுவெற்றி பெறுவது கடினம்.  மேலே குறிப்பிட்ட, மக்களுக்குச் சற்றும் விளங்காத, பிறமொழிச் சொற்களைத் திணிப்பதை விடத் தாய்மொழியில் கலைச்சொற்களைப் படைத்து அவற்றைப் பரப்புவதுதான் உயர்ந்த செயல்.  ஆங்கிலம் வெகுவாகப் பரவியிருக்கும் இக்காலத்தில் ஏன் ஆங்கிலச் சொற்களையே எடுத்தாளக் கூடாது என்பதற்கு, மேற்கண்ட எடுத்துக்காட்டு ஒரு நல்ல பாடம்.  1941ல் கற்றவர்களுக்கு, வடமொழிச் சொற்களே வெகுவாகப் பரவியிருப்பது போலத் தோன்றியிருக்கிறது.  அது அவர்கள் சுற்றத்தில் உண்மையாகவே இருந்திருக்கலாம்.  ஆனால்,  ஒரு காலத்தில் ஐரோப்பாவின் செவ்வியல் மொழிகளான லத்தீன, கிரேக்க மொழிகளின் வேர்ச்சொற்களைக் கொண்டு ஆங்கிலத்தில் கலைச்சொற்களைப் படைத்தது போலவே, இந்தியாவின் செவ்வியல் மொழியான சமஸ்கிருத வேர்ச்சொற்களைக் கொண்டு இந்திய மொழிகள் அனைத்துக்குமே கலைச்சொற்களைப் படைக்க முயன்றனர்.  இது சமஸ்கிருதம் பெரிதும் கலந்திருந்த ஏனைய இந்திய மொழிகளுக்கு வெகுவாகப் பொருந்தியிருந்தாலும், தனித்தியங்கும் தன்மை உள்ள இந்தியாவின் இன்னொரு செவ்வியல் மொழியான தமிழுக்குப் பொருந்தாது, தேவையற்றது.

வையாபுரிப் பிள்ளையின் இந்தக் கண்ணோட்டத்தைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார் சேலம் கல்லூரியின் தலைவர் அ. இராமசாமி கவுண்டர்.  இவர்கள் இருவரும் 1941ல் அமைக்கப் பட்ட, ஆங்கிலப் பேராசிரியர் சுவாமிநாத அய்யர் தலைமையில் அமைந்த, தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுவில் நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். அதைப் பற்றி  இராமசாமிக் கவுண்டர் “குடியரசு” இதழில் டிசம்பர் 4, 1943ல் எழுதியிருக்கிறார்.  அதைச் “செந்தமிழ்ச் செல்வி” என்ற தனித்தமிழ்த் திங்களிதழ் 1944 தைத் திங்கள் வெளியீட்டில் எடுத்து எழுதியிருக்கிறது

அவர்கள் உரையாடல் மிகச் சுவையாக இருந்திருக்கிறது.  நினைவிருக்கட்டும், இது இராமசாமிக் கவுண்டர் கண்ணோட்டம்.

இரா:  சாஸ்திரம் என்ற சொல்லைக் காட்டிலும் நூல் என்ற சொல்லே மிகப் பொருத்தமாக உள்ளது.  ஆதலால் நூல் என்ற சொல்லையே ஏற்றுக் கொள்ள உம்மை வேண்டுகிறேன்.

வை: அரிய விஞ்ஞான கருத்துக்களைத் தொகுத்தும், விரித்தும், ஒழுங்குபடுத்திச் சிறந்த வகையில் கூறுவது சாஸ்திரம் எனப்படும். ஆனால் நூல் என்பது ஏதேனும் ஒன்றைப் பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தக வடிவத்தைக் குறிப்பதாகும். ஆதலால் கணித நூல் என்பதைக் காட்டிலும் கணித சாஸ்திரம் என்பதே அதிகப் பொருத்தமுடையது.

இரா: தாங்கள் கூறிய இவ்விலக்கணத்திற்கு ஆதாரம் உளதோ?

வை: ஆதாரம் ஒன்றும் இல்லை.  யாமே இவ்வாறு வகுத்துக் கொண்டு அதன்படியே பிறவிடங்களிலும் கையாண்டு வருகின்றோம்.

இரா: இது உமது சொந்தக் கற்பனையெனின், சாஸ்திரத்தின் இலக்கணத்தை நூலுக்கும் நூலின் இலக்கணத்தைச் சாஸ்திரத்துக்குமாக மாற்றி அமைத்துக் கொள்ளலாமே?  நூல் என்ற சொல்லுக்குத் தாழ்ந்த பொருளும் சாஸ்திரம் என்ற சொற்கு உயர்ந்த பொருளும் கற்பிக்கப் படுவதன் நோக்கம் யாது?

வை: அது உலக வழக்கு.

இரா: நூல் என்பதும் சாஸ்திரம் என்பதும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்களாகவே உலகில் வழங்குகின்றன. வியாகரண சாஸ்திரம் என்பதும் இலக்கண நூல் என்பதும் ஒரு பொருளையே குறிக்கின்றன. மேலும், சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பதிப்பிக்கப் பட்ட (Tamil Lexicon) தமிழ் அகராதியில் நூல் என்ற சொல்லு க்கு,   "Systematic treatise, science சாஸ்திரம்” என்ற பொருள் குறிக்கப் பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளுவதா அல்லது தங்கள் புதிய பொருளைக் கொள்வதா?

வை: பல்கலைக் கழக அகராதியிலுள்ள பொருள் சரியன்று. அது அவசரத்தால் நேர்ந்த பிழையாகும்.


இரா: தொல்காப்பியத்தில் நூலுக்கு இலக்கணம் வகுக்கப் பட்டுள்ளது.

“ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை, மெய்ப்படக் கிளந்த வகையதாகி யீரைங்குற்றமும் இன்றி நேரிதின் முப்பத்திருவகை யுத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்கு மொழிப் புலவர்”

என்பது நூலின் இலக்கணமாயிருக்க உங்கள் விருப்பப்படியெல்லாம் தமிழர் மரபுக்கு முரண்படப் பொருள் கொள்ளுதல் முறையல்லவே?

வை: நூலும் சாஸ்திரமும் ஒரு பொருள் குறிப்பனவாயின் சாஸ்திரம் என்ற சொல்லை நீங்கள் ஏன் ஆட்சேபிக்கின்றீர்கள்?

இரா: சாஸ்திரம் என்பது வடசொல்.  நூல் என்ற தூய தமிழ்ச் சொல்லிருக்க அதே பொருளுடைய பிற சொல்லைப் புகுத்துதல் நீதியன்று.  மேலும், இது தமிழ்ச் சொல்லாக்கக் கமிட்டியேயன்றி வடசொல்லாக்கக் கமிட்டியல்ல என்பதைப் பணிவுடன் நினைப்பூட்டுகிறேன்.

வை: சாஸ்திரம் என்பதும் தமிழ்ச் சொல்லேயாகும். அது தேவாரம், திருவாசகம் முதலிய சமய நூல்களில் ஆளப்பட்டுள்ளது. தமிழில் இரண்டறக் கலந்த சொல்லெல்லாம் தமிழ்ச் சொல் என்பதே எமது துணிபு.

இரா: உங்கள் கொள்கை எனக்கு வியப்பைத் தருகிறது.  சாஸ்திரம் என்ற சொல் சமய நூல்களில் காணப் படலாம். ஆனால் அதனாலேயே அது தமிழ்ச் சொல்லாகாது. ஒரு சொல் தமிழ்ச் சொல்லா ஆரியச் சொல்லா என அறிவதற்குப் பல முறைகளுண்டு.  அவற்றுள் ஒன்றினாலாவது உங்களது கொள்கையை நிலைநாட்ட முடியாது.

வை: அடிப்படையான கொள்கையிலேயே உமக்கும் எமக்கும் கருத்து வேற்றுமையுண்டு.  ஆதலால் விவாதத்தை நிறுத்திக் கொள்வோம்.  கமிட்டித்தலைவர் திரு. கே. சாமிநாதன் தமது விருப்பப்படியே தீர்ப்புச் செய்துகொள்ளட்டும்.

இரா: அப்படியே ஆகட்டும்.  சாஸ்திரம் என்ற சொல்லே இக்கமிட்டியால் ஒப்புக்கொள்ளப்படும் என்பதை நான் அறிவேன். ஆனால், தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் நீங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறீர்கள் என்பதையும் பிற்காலத்தில் தமிழர்கள் வீறிட்டெழுந்து சீறுவாராயின் அவர்களுக்குச் சமாதானம் கூறும் பொறுப்பு உங்களுடையதாகும் என்பதையும் உங்கட்கு அறிவிக்கின்றேன்.”
[ மணி:  பேரா. வையாபுரிப்பிள்ளை பல்கலைக் கழக அகராதிக்குழுவின் தலைவர்.  அவர் நூலையே அவருக்கு எதிராகச் சான்றுக்கு அழைத்திருக்கிறார் இராமசாமிக் கவுண்டர்! ]
இந்த உரையாடலைப் பற்றிக் குடியரசு ஏட்டில் எழுதிய இராமசாமிக் கவுண்டர் வையாபுரிப் பிள்ளையின் கொள்கையைப் பொதுமன்றங்களிலும் எதிர்த்து விளம்பரப் படுத்தாதனால் அவரால் பெரும் தீங்கு விளைவிக்க முடிந்ததே என்று வேதனைப் பட்டு “உட்பகையை” வெல்ல வேண்டியதன் கட்டாயம் பற்றி எழுதித் தன் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார்.
“வடமொழியினின்றும் தமிழைக் காக்குமுன் உட்பகையுடைய தமிழரினின்றும் அதைக் காக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதைத் தமிழ் மக்களுக்குப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இதை 2011லிருந்து பார்க்கும் நமக்கு மலைப்பு மேலிடுகிறது.  அன்று வையாபுரிப் பிள்ளையின் கொள்கை வென்றிருந்தாலும், இன்று சாஸ்திரம் என்ற சொல் தமிழ் கலைச்சொற்களில் வெறும் அடிக்குறிப்பு மட்டுமே.  இயல், நூல் என்ற தனித்தமிழ்ச் சொற்கள் காலத்தால் நிலைத்து விட்டன.  விஞ்ஞானம் என்ற சொல் 1960களோடு உறைந்து விட்ட சொல்.  விஞ்ஞானி என்ற சொல் மட்டும் வழக்கில் இருக்கிறது. இன்று அறிவியல் என்ற சொல்லே பெரிதும் வழங்கும் சொல்.

ஆயிரம் குறைகள் இருந்தாலும், தனித்தமிழ் இயக்கம் தமிழ்நாட்டில் ஓரளவுக்காவது முந்தைய வடமொழி ஆதிக்கத்தைத் தணித்து இன்று ஆங்கிலத்தின் ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள முடிகிறது என்றால், 1967ல் நடந்த அரசியல் மாற்றங்களும் இதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வையாபுரிப்பிள்ளை மட்டுமே அறிவியல் முறைப்படி நடந்தவர் என்றும் அவரை எதிர்த்த தனித்தமிழ் இயக்கத்தினர் சாதி, இனக்காழ்ப்புணர்ச்சி மேலிட்ட சிறுமதியினர் என்றும் ஒரு தோற்றத்தை அண்மைக் காலத்தில் ஒரு சாரார் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த உரையாடலைப் படிக்கும்போது திரு வையாபுரிப் பிள்ளை ஒரு சட்டாம்பிள்ளை போன்று பேசியிருக்கிறாரே ஒழிய அறிவியல் சார்பான கொள்கைகள் எதையும் அவர் முன் வைத்ததாகத் தெரியவில்லை.  அதற்கு அவர் எழுதிய நூல்களைப் படித்தால்தான் விளக்கம் காணலாம்.

எது எப்படியோ, தனித்தமிழில் கலைச்சொற்கள் ஆக்கிவந்திருக்கும் அறிஞர்கள்  எத்தகைய கடும் எதிர்ப்புகளை எல்லாம் எதிர்கொண்டு வென்றிருக்கிறார்கள் என்பது மலைப்பு தருகிறது.

இது போன்ற எதிர்ப்புகள் எவையும் இல்லாமலேயே இணையம், கணினி போன்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பட்டிதொட்டி எல்லாம் பரப்ப முடிவதற்கு அந்த முன்னோடிகளுக்கே நன்றி சொல்ல வேண்டும்.

சனி, ஜனவரி 15, 2011

தமிழ் கொடிப் பாட்டு

நான்கு தமிழ்க் கொடி காணீர் - அது
வான்கண் உயர்ந்திடும் வகையினைப் பேணீர் (நான்கு)

மந்திர மன்னதோர் கம்பம் - முது
இந்திரன் தன்னைநேர் ஐவர் பூங்கொம்பில் (நான்கு)

மருத நிலந்தரு மாந்தர் - கொடை
எருது சிறந்த நல் ஏரது தேர்ந்த (நான்கு)

வாழைப் பழந்தரும் நாடு - பழஞ்
சோழர் திகழ்ந்தபோர்ப் புலிய்தன் கோடும் (நான்கு)

குறிஞ்சிப் புலத்துமுன் செல்லும் - திறம்
செறிந்துயர் சேரர்தம் வீரஞ்சேர் வில்லும்

நெயதல் நிலந்தலை செயலும் - கடல்
கொய்து பிறந்தநம் பாண்டியர் கயலும் (நான்கு)

நான்கு புறம்நூ றுடையீர் - தமிழ்
நான்கு அகம்நூ றுடையதென் றுரையீர் (நான்கு)

நாகரிகங் கண்ட பெரியீர் - தமிழ்
ஆகம் வேண்டுமென்றே ஆண்மையோ டெழுவீர் (நான்கு)

- முனைவர் எஸ். எம். நமசிவாயம்
செந்தமிழ்ச்செல்வி, மாசி, 1944, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

பழைய புத்தகக் கடையில் கிடைத்த பொங்கல் பரிசு

எனக்கு இன்று பொங்கல் பரிசு கிடைத்தது!  தமிழ் நூல்கள் படிப்பதிலும், பழந்தமிழ் இலக்கியத்திலும் எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து, எனது மருமகன் தன் ஊரான பொன்னேரிக்கு அருகில் இருக்கும் பழைய புத்தகக் கடையிலிருந்து பல அரிய நூல்களைக் கொண்டு வந்தான்.  உ. வே. சாமிநாதையர் அவர்கள் பதிப்பித்த சங்கநூல்கள் முதல் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட செந்தமிழ்ச் செல்வி என்ற திங்களிதழ்களின் தொகுப்பு நூல் வரை ஆறு நூல்கள் கைக்குக் கிட்டின.  செந்தமிழ்ச் செல்வியின் பதிப்புகளை வலையில் நான் பார்த்ததில்லை.  எனவே பொங்கல் விருந்துக்குப் பின்னர் இந்தப் பழைய நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 

நூல் வெகுவாகச் செல்லரித்துப் போயிருந்தது.  சில பக்கங்களில் எண்ணைக் கறை தெரிகிறது.  இருந்தாலும், பக்கங்கள் உதிரத் தொடங்கவில்லை.  எல்லா நூல்களிலும் ஒரே உரிமையாளரின் பெயர்தான் இருக்கிறது.  பெயர் பழைய காலத்துத் தமிழ் எழுத்தில் உள்ளது.  “நா. சட்டையப்பன், மதராஸ்” என்று உள்ளது.  ‘ர’ என்ற எழுத்து ‘ற’ போலும் உள்ளது.  தமிழாசிரியர் ஒருவரின் நூலகத்திலிருந்து பழைய புத்தகக் கடைக்குப் போட்டிருப்பார்கள் போலும்.  என்னைப் போன்ற புத்தகப் பைத்தியங்களுக்கு இதுதான் வேலை இல்லையா?  எங்கே போனாலும் கைக்காசைச் செலவழித்துப் புத்தகங்கள் வாங்குவது.  வீடெங்கும் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பது.  படுக்கை அறையிலும், தரையிலும், கண்ணுக்கெட்டிய இடங்களில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்.

என் அப்பா இறக்கும் வரை அவரது புத்தகங்களைப் படிப்போமே ஒழிய, இரவல் கேட்கும் அளவுக்கு யாருக்கும் துணிச்சல் இல்லை.  கடைசி காலத்தில் அவரால் இரண்டாம் மாடியில் இருக்கும் நூலகத்துக்குப் படியேறிச் செல்ல முடியவில்லை.  மழைச்சாரலிலும், புழுக்கத்திலும் அவர் அருமை அருமையாகச் சேமித்து வைத்திருந்த பல புத்தகங்கள் நனைந்து, நைந்து செல்லரித்துப் போகத் தொடங்கி இருந்தன.  அவரைப் பார்க்க அமெரிக்காவிலிருந்து வந்த எனக்கு அவரது நூலகத்தைப் பார்த்துத் தூக்கி வாரிப் போட்டது.  நைந்து போன நூல்களைத் தூக்கிப் போட்டு விடலாமே என்றேன்.  அதுதான் சொன்னேனே!  யாருக்கும் துணிச்சல் இல்லை என்று!  திடீரென்று அவர் ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டுவா என்றால் என்ன செய்வோம் என்ற பயம்.

கடைசியில், அவர் நகரக் கூட முடியாமல் படுத்த படுக்கையாய் இருக்கும்போது,  அவரது படுக்கை அறையிலேயே குப்பையாய்க் கிடந்த பல புத்தகங்களையும், கோப்புகளையும் துப்புரவு செய்யத் துணிந்தேன்.  நான் என்ன செய்கிறேன் என்பதை ஓரக் கண்ணில் பார்த்தார்.  சிங்கம் போல அவர் தன் வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருந்த காலத்தில் அவரது அறைக்குள் நுழையக் கூட எவருக்கும் துணிச்சல் இருந்ததில்லை.  ஒரு புத்தகத்தைச் சற்று நகர்த்தி வைத்திருந்தால் கூட அவர் கண்டு பிடித்து விடுவார்.  உடனே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் அணி வகுப்பு நடக்கும்.

என்னுடன் பிறந்தவர்களும் நானும், அவர் முன்னால் வரிசையாக நிற்போம்.  அவர் கையில் குற்றவாளிகளை அடிக்கும் பிரம்பு ஒன்றை எடுத்துக் கொள்வார்.  சிவப்பு நிறத்தில் உள்ள ஒரு வகையான தோல் அந்தப் பிரம்பைச் சுற்றி இருக்கும்.  குற்றவாளிகளின் ரத்தத்தால் அந்தப் பிரம்பு சிவப்பானதா, அல்லது அதன் உண்மை நிறமே சிவப்பா என்று தெரியாது.  பழைய படங்களில் வரும் காவல்துறை கண்காளிப்பாளர் போல, வலது கையில் பிரம்பைப் பிடித்துக் கொண்டு அவரது இடது கை உள்ளங்கையில் மெல்லத் தட்டிக் கொண்டே “யார்ரா புத்தகத்தைத் தொட்டது” என்று விசாரணையைத் தொடங்குவார்.

தொண்டைக்குழியிலிருந்து வார்த்தை வந்தால்தானே பதில் சொல்ல முடியும்?  தேவர்மகன் படத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பின்னும் தூணுக்குப் பின்னால் நெளிந்து கொண்டு சிவாஜி அப்பாவிடம் அடிக்குரலில் பேசுவாரே கமல் ஹாசன்.  அது எங்கள் வீட்டுக்கும் அப்படியே பொருந்தும்.  நான் தான் மூத்தவன்.  அப்போதும் நான் புத்தகப் பைத்தியம்.  தம்பி தங்கையர் எல்லோரும் நடுநடுங்கிப் போய் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  எனக்கு யாரையுமே பார்க்கும் துணிச்சல் இருக்காது.  சமையலறையிலிருந்து கையில் கரண்டியோடு என் அம்மா வந்து கூடத்தின் ஒரு மூலையில் கவலையோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  புத்தகத்தைத் தொட்டது யாராக இருக்கும் என்று இதற்குள் அப்பாவுக்குத் தெரிந்திருக்கும்.  இருந்தாலும், குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் வரை அவர் சளைக்கப் போவதில்லை.

குற்றவாளிகளைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டார் அப்பா. எல்லோருக்கும் ஏதாவது ஒரு பட்டப் பெயர் இருக்கும்.  சில சமயம் என்னைப் போன்ற அதிசயப் பிறவிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் இருக்கும்.  கல்லூரி செல்லும் வரைக்கும் கூட இந்தப் பட்டப் பெயர்கள்தாம் நிலைத்திருந்தன என்பதை இன்று நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.  அப்பாவை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தக் கடைசி வரைக்கும் துணிச்சல் இல்லாமல் இருந்தாலும், இந்தப் பட்டப் பெயர் ஒழிப்புப் போராட்டத்தைத் தொடக்கி வைத்து அவற்றை வேரோடு அழித்த வீரன் நான் தான்.

இருப்பதிலேயே நடுநடுங்கிக் கொண்டிருப்பது யார் என்று பார்ப்பார் அப்பா.  “அம்மா, ஒண்ணுக்கு வருதும்மா” என்று ஒரு கோழை ரீங்காரம் வைக்கும். மடை திறந்த வெள்ளம் போல் அம்மாவின் பாசம் பொங்கி விடும்.  ”பாவம் குழந்தைங்க.  புத்தகம் ஒண்ணும் கிழியல இல்ல? விட்டுடுங்க!” என்று துணிச்சலாக அம்மா சொல்லி விட்டு அப்பாவின் ஆத்திரத்தைக் கிளப்பி விடுவார்.  அது வரைக்கும்,   சாம, தான, பேத, தண்ட முறைகளை ஒவ்வொன்றாய்க் கடைப்பிடிக்கலாம் என்று நினைத்திருந்த அப்பா, இந்த தான, பேத முறைகளைக் கை விட்டு விட்டு நேரடியாகத் தண்ட முறைக்குத் தாவி விடுவார்.

எனக்கு அடி விழுவது யாருக்கும் பிடிக்காது.  அது ஏன் என்று தெரியாது.  வீட்டுக்குத் தலைப்பிள்ளை என்பதால் இருந்த செல்லமோ என்னவோ.  என்னைக் காப்பாற்ற வேண்டும், ஆனால் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் முயல்வார்கள்.  ஆனால், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே யார் குற்றவாளி என்று அப்பாதான் தீர்மானித்து விட்டாரே.  “ஒண்ணுக்குப் போற நாயி போயிட்டுக் காலைக் கழுவிட்டு உடனே வா! இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடலாம்,” என்று கர்ஜிப்பார்.

உடனே அணிவகுப்பு கலைய முயற்சிக்கும்.  “ம்ம்ம்” கர்ஜனை வரும்.  “ஒரு நாயைத்தான் சொன்னேன்.  மத்ததுங்க எல்லாம் இங்கேயே நில்லுங்க!”  நிற்போம்.  பாவம் சின்னது, அதற்கு அடக்க முடியாது.  ஓடிப் போய் குளியறையில் பதுங்கிக் கொள்ளும்.  அம்மாவுக்கோ அழுகையும் ஆத்திரமுமாய் இருக்கும்.  “குரங்குங்க, எத்தனை அடி வாங்கனாலும் புத்தி வராது. அப்பா புத்தகத்தைத் தொடாதீங்கன்னா கேக்காதுங்க.”  உண்மைதான்.  தொடாமல் இருந்தால் இந்தக் குற்றவாளி அணிவகுப்பு தேவையிருந்திருக்காதுதான்.  ஆனால், நான் தான் தொடவே இல்லையே.  சத்தியமாய்!  ஆனால், எல்லோரும், அப்பா உட்பட, நான் தான் குற்றவாளி என்று முடிவு கட்டி விட்டார்கள்.  உண்மையிலேயே யார் புத்தகத்தைத் தொட்டிருப்பார்கள் என்று யோசித்தேன்.  இவ்வளவு பெரிய புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு வேறு யாரும் புத்தகப் பைத்தியம் இல்லை.

ஆனால், புத்தகம் நகர்ந்திருந்தது.

அது எங்கள் எல்லோருக்குமே தெரிந்திருந்தது.  ஏனென்றால், அப்பாவின் உடமைகள் எங்கே எப்படி இருக்கும் என்று எங்கள் எல்லோருக்கும் மனப்பாடம்.  தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டால் கூடச் சொல்லுவோம்.  அம்மா தப்பித்தவறிக் கூட அப்பாவின் புத்தகங்களைத் தொட மாட்டார்கள்.  சின்னத்தம்பி அப்போதுதான் படிப்பது பாவம் என்ற நம்பிக்கையைச் சற்றுத் தளர்த்தத் தொடங்கி இருந்தான்.  தங்கைகள் இரண்டும் பாவம்.  கோலம் போட்டு, வீட்டைப் பெருக்கி, காய்கறி நறுக்கி, வீட்டுப்பாடம் போட்டு, அம்மாவிடம் திட்டு வாங்கி, அவர்கள் உலகத்திலிருந்து மீண்டு வரவே நூற்றாண்டுகள் ஆகுமே அவர்கள் தொட்டிருக்க வாய்ப்பில்லை. குட்டித்தம்பி குளியலறையிலிருந்து இன்னும் வரவில்லை.  அவனாய் இருக்குமோ?

விசாரணை தொடரும்.  எங்களுக்கு ஒரு ஒற்றுமை இருந்தது.  காட்டிக் கொடுக்க மாட்டோம்.  தண்டனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வோமே ஒழிய காட்டிக் கொடுக்க மாட்டோம்.  அப்பாவின் பிரம்பு எல்லோருடைய பின்னங்காலிலும் விளையாடும்.  அம்மாவின் உரத்த குரல் எதிர்க்க எதிர்க்க பிரம்பின் வேகம் இன்னும் கூடும்.  வலியில் துடிதுடித்துப் போய் விடுவார்கள் என் இளையவர்கள்.  பொதுவாக, அடித்தால் அழுவதில்லை என்று நான் சின்ன வயதில் எப்போதோ ஒரு உறுதி பூண்டிருந்தேன். அதை எந்த அளவு கடைப்பிடித்தேன் என்று மற்றவர்களைக் கேட்டால்தான் தெரியும்.  ஆனால், எனக்குள்ளே நான் அழுததில்லை, அரற்றியதில்லை என்ற நினைப்பு.  அதனால், அடிகள் சற்றுக் கூடுதலாக, வலுவாகக் கிடைக்கும்.

அடிக்கும்போது நகரக் கூடாது.  ஓடக் கூடாது. நெளியக் கூடாது.  அப்பாவுக்குக் கை வலிக்கக் கூடாது. ஓடினால் அப்பா திட்டுவார்.  “சனியனே, ஓடாதே, இங்கே கிட்ட வந்து நின்னு அடி வாங்கிக்க.”  எங்களுக்கு அழுகை கூடக் கூட அம்மாவின் ஓலமும் கூடி விடும்.  மருந்தை எடுத்துக் கொண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஓடி வ்ந்து விடுவார்கள்.  அம்மாவின் மீது தப்பித் தவறி ஏதாவது அடி விழுந்து விடுமோ என்று நாங்கள் அம்மாவுக்கு அரண் வகுப்போம்.  அலறி அழுதவர்களை முன் கூட்டியே விடுதலை செய்து விடுவார் அப்பா.  “ஊரைக் கூட்டுதுங்க, சனியனுங்க.  வெச்சத வெச்ச எடத்தில இருக்க வேணா?  கொரங்குங்க.”  அப்பாவின் கர்ஜனையில் தெருவே அடங்கி விடும்.  குழந்தைகளுக்குப் பரிந்து பேச வரும் அக்கம்பக்கத்துக் காரர்களையெல்லாம் தனது சுடு சொல்லாலும், எரி பார்வையாலும், அப்பா எப்போதோ விரட்டியாயிற்று.  அத்தனையையும் மீறிப் பரிந்து பேச யாருக்குத் துணிச்சல் இருக்கும்?

பாட்டிக்கு.

ஆனால், பாட்டி வருவது எப்போதாவது ஒரு முறைதானே.  நான் பாட்டி செல்லம்.  அப்பாவையே அதட்டி வைத்து என்னைக் காப்பாற்ற முடிந்தது பாட்டியால் மட்டும் தான்.

வெளியே அழுகை இல்லாவிட்டாலும், உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருப்பேன்.   இறந்து போன பாட்டியைத் துணைக்கு அழைத்து மனதுக்குள் அப்பாவுக்குப் புத்தி கொடுக்கும்படி வேண்டிக் கொள்வேன்.  அது என்னவோ தெரியவில்லை, இந்த வேண்டுதல் வேண்டாமையெல்லாம் எனக்கு மட்டும் வேலை செய்ததில்லை.  அது கடவுளாகட்டும், பாட்டியாகட்டும்.  எது கிடைத்ததோ அது கிடைக்கக் கடுமையாக உழைத்ததைத் தவிரத் தப்பித் தவறிக்கூட கடவுளின் அருள் நான் கேட்ட போது கிடைத்ததில்லை.

ஏனைய பாளையக்காரர்களையெல்லாம் அடித்துக் களைத்துப் போய் எரிச்சலின் உச்சத்தில் இருக்கும் அப்பா “ஏண்டா, தடிமாடே, எடுத்தேன்னு சொன்னா கொறஞ்சா போயிடுவே” என்று என்னைப் பார்த்து உறுமுவார்.  “நான் எடுக்கலயே அப்பா” என்று அடி வயிற்றிலிருந்து சொல்லுவதற்கு ஒலி எழுப்ப முயற்சிப்பேன். எந்தச் சொல்லும் தொண்டைக் குழியைக் கூட எட்டியதாய் நினைவில்லை.  என்னைத் தொடர்ந்து அடிப்பதால் தனக்குத்தான் களைப்பு கூடும் என்று தீர்மானித்து எனக்குச் சிறப்புத் தண்டனை தருவார் அப்பா.

சில சமயம் முட்டிக்கால்.  சில சமயங்களில் ஒற்றைக்கால்.  பெரும்பாலும் சுவர் நாற்காலி.  இந்தச் சுவர் நாற்காலி என்பதை யார் கண்டு பிடித்தார்கள் என்று தெரியவில்லை.  நாற்காலியில் உட்காருவது போல சுவற்றில் சாய்ந்து கொண்டு அந்தரத்தில் மிதக்க வேண்டும்.    முதலில் சுகமாக இருக்கும். அதுதான் அடி நின்று விட்டதே.  பின்னங்கால் அடி வாங்கிக் கன்னிப் போய் இருக்கும்.  அம்மா உதவிப் படைக்குக் குற்றவாளிக்குக் களிம்பு தடவ அனுமதி மறுக்கப் பட்டிருக்கும். 

அப்பாவுக்கும் பசி.  எல்லோருக்கும் பசி.  ”வளத்து வச்சிருக்கா பாரு” என்று அம்மாவைத் திட்டிக் கொண்டே சாப்பாடு ரெடி பண்ணு என்று கட்டளையிட்டு விட்டுக் கைகால் கழுவப் போய் விடுவார் அப்பா.  “எடுத்தேன்னு சொல்லிடுடா கண்ணு” என்று அம்மா மன்றாடுவார்.  “நான் தொடலையே அம்மா!”  இப்போது மட்டும் இந்த ஒலி தொண்டையிலிருந்து எப்படியோ வெளியே வந்திருக்கும். 

அரை மணி நேரம், ஆடாமல் அசையாமல் சுவர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பேன்.  உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் வலி, வலி என்று முனகும்.  ஆனால், மனது இருக்கிறதே.  அது விட்டுக் கொடுக்காது.  உண்மையான குற்றவாளிகளைச் சிறையில் அப்பா எப்படி விசாரிப்பார் என்று தெரியாது.  துப்பாக்கிகளும் காக்கிச்சட்டைகளும் ஆண்ட அப்பாவின் உலகத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாது.  அடிக்கடி அவருக்கு ஏதாவது மேலிடத்து விருது வந்து கொண்டிருக்கும்.  ஏதாவது கடத்தல்காரனை அடக்கிப் பிடித்துச் சிறையில் அடைத்து வைப்பார்.  அவனும், மேலிடத்துப் புண்ணியத்தில் சிறிது காலம் சிறையில் இருந்து விட்டு வெளியே போவான்.  கடத்தல்காரர்களின் குழந்தைகள் எல்லோரும் என்னுடன் தான் படித்தார்கள்.  ஆனால், நாங்கள் யாருமே எங்கள் வீடுகளைப் பற்றிப் பேச மாட்டோம்.

‘இந்த வயசுலே எத்தன அழுத்தம் பாரு? தப்பை ஒத்துக்குதா பாரு!’ என்று திட்டிக் கொண்டே, அம்மாவைப்பார்த்து ‘ஏய், இந்தக் கொரங்குக்கும் சாப்பாடு போட்டுத் தூங்க வை!” என்று அப்பா ஆணையிடுவதோடு அன்றைய தண்டனை முடிவுக்கு வரும்.

பழைய புத்தகங்களைப் புரட்டும்போது பழைய நினைவுகளும் வருவது இயல்புதானே.  எப்போதோ வாங்கிய அடி.  இப்போதும் வலித்தது. அப்பாவின் பழைய புத்தகங்களைக் கிளறிக் கொண்டிருக்கையில், ஒரு பெரிய அட்டைப் பெட்டி கையில் கிடைத்தது.  அதைத் திறந்து பார்த்தேன்.  அமெரிக்காவிலிருந்து நான் அப்பாவுக்கு அனுப்பிய ஒரு கடிதம் விடாமல் எல்லாவற்றையுமே அழகாக, தேதி வாரியாகப் பிரித்து, பிளாஸ்டிக் உறையில் பாதுகாத்து வைத்திருந்தார். என்னுடைய பழைய கல்லூரி அடையாள அட்டை,  நான் எப்போதோ கல்லூரி மலருக்கு எழுதிய கதை, நான் மறந்து போய் விட்டிருந்த எனது கவிதை நோட்டு, எனக்குப் பல்கலைக் கழகத்தில் கிடைத்த தங்கப் பதக்கச் சான்றிதழ், என்று எனது இந்திய வாழ்க்கையின் ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்து வைத்திருந்தார்.  பழைய புத்தகங்களின் தூசோ என்னவோ கண்கள் கலங்கியிருந்தன.